search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் அடித்துக்கொலை"

    பாபநாசம் அருகே குடும்பத்தகராறில் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகிறார்கள்.

    பாபநாசம்:

    பாபநாசம் அருகே பண்டாரவாடை பார்வதிபுரம் அந்தோணியார் கோவில் தெருவைச் சேர்ந்த ஜோசப் மனைவி எலிசபெத்ராணி (வயது 51). இவருக்கு 3 மகன்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் அதே பகுதியில் வசித்து வரும் எலிசபெத் ராணியின் அண்ணன் மைக்கேல் தாசுக்கும், எலிசபெத் ராணி குடும்பத்தினருக்கும் குடும்ப பிரச்சனை காரணமாக முன் விரோதம் இருந்து வந்தது.

    கடந்த 7-ந் தேதி மைக்கேல்தாஸ், அவருடைய மனைவி ஜெயமேரி, மகன் பவுல்ராஜ், மகள்கள் ஜாய்ஸ்மேரி, கில்ட்டா மேரி ஆகிய 5 பேரும் எலிசபெத்ராணியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அவரை தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த எலிசபெத்ராணி கும்பகோணம் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று காலை அவர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.

    இதுகுறித்து எலிச பெத்ராணியின் மகன் செல்வமணி பாபநாசம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகரத்தினம், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலைச்செல்வன், உமாபதி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் ஆகியோர் வழக்குபதிவு செய்து மைக்கேல்தாஸ், ஜெயமேரி, பவுல்ராஜ், ஜாய்ஸ்மேரி ஆகிய 4 பேரையும் கைது செய்து பாபநாசம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் ராஜசேகர் அவர்கள் 4 பேரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். மேலும் தலைமறைவான கில்ட்டா மேரியை போலீசார் தேடி வருகிறார்கள்.

    மகள் பிரச்சினையில் பெண்ணை அடித்துக்கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே உள்ள பண்டாரபுரம் உதயாநகரை சேர்ந்தவர் ஜான்கென்னடி. கூலி தொழிலாளி. இவரது மனைவி மல்லிகா செல்வி(வயது 51). இவர்களுக்கு 4 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். ஜான்கென்னடிக்கு மதுகுடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று இரவு ஜான்கென்னடி குடித்துவிட்டு வந்து மனைவியுடன் வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த ஜான்கென்னடி அருகில் கிடந்த கம்பால் மல்லிகா செல்வியை சரமாரி தாக்கியுள்ளார். அப்போது இவர்களது மகன் ஜான்வாசிங்டன் தடுத்துள்ளார். அவரையும் ஜான் கென்னடி தாக்கியுள்ளார்.

    இதில் தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயமடைந்த மல்லிகா செல்வி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். இது குறித்து தகவலறிந்த சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ராஜாசுந்தர், சப்-இன்ஸ்பெக்டர் ஆழ்வார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலியான மல்லிகா செல்வி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய ஜான் கென்னடியை கைது செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. ஜான் கென்னடியின் மகள் சோனியா என்பவரை சங்கரன்குடியிருப்பில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். அங்கு கணவன்- மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சோனியா கணவருடன் கோபித்து கொண்டு தாய் வீட்டிற்கு வந்துவிட்டார். இது ஜான் கென்னடிக்கு பிடிக்கவில்லை. சோனியாவை கணவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கும்படி மனைவியுடன் கூறி வந்துள்ளார். இதே போல் நேற்று இரவும் கூறியுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறு காரணமாக கம்பால் தாக்கி மனைவியை கொலை செய்தது தெரியவந்துள்ளது.

    இதையடுத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஊத்தங்கரை அருகே பெண்ணை அடித்துக்கொலை செய்து, உடலை சாக்குமூட்டையில் கட்டி கிணற்றில் வீசி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    ஊத்தங்கரை:

    ஊத்தங்கரை அருகே பெண்ணை அடித்துக்கொலை செய்து, உடலை சாக்குமூட்டையில் கட்டி கிணற்றில் வீசி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தரப்பில் கூறப்பட்டதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே கல்லாவி மேட்டுத்தெருவில் பொது கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றில் நேற்று ஒரு சாக்கு மூட்டை மிதந்து கொண்டிருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இது தொடர்பாக கல்லாவி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    பின்னர் போலீசார், ஊத்தங்கரை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று கிணற்றுக்குள் இறங்கி அந்த சாக்குமூட்டையை மேலே கொண்டு வந்தனர். அந்த சாக்கு மூட்டையை போலீசார் பிரித்து பார்த்த போது உள்ளே பலத்த காயத்துடன் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் பிணம் இருந்தது.

    போலீசாரின் விசாரணையில், அந்த பெண்ணை மர்ம நபர்கள் அடித்துக்கொலை செய்து, உடலை சாக்குமூட்டையில் கட்டி, பின்னர் கல்லை கட்டி கிணற்றில் வீசி சென்றிருப்பது தெரியவந்தது. மேலும் பெண்ணின் உடல் ஆடையின்றி இருப்பதால் மர்ம நபர்கள் அவரை கற்பழித்து கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். ஆனால் கொலை செய்யப்பட்ட பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. 

    இதைத் தொடர்ந்து உடலை பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையுண்ட பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவரை கொலை செய்த மர்ம நபர்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என விசாரணை நடத்தி வருகின்றனர். பெண்ணை கொலை செய்து சாக்குமூட்டையில் கட்டி கிணற்றில் வீசி சென்ற சம்பவம் கல்லாவி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ×