search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புயல் நிவாரணம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விண்ணப்பதாரர்களின் வீடுகளில் தண்ணீர் தேங்கி வெள்ளத்தால் உண்மையில் பாதிக்கப்பட்டிருந்ததா? என்பதையும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
    • தகுதியான விண்ணப்பதாரர்கள் பட்டியலை 4 மாவட்ட கலெக்டர்களும் அரசுக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.

    சென்னை:

    மிச்சாங் புயலால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கடந்த டிசம்பர் மாதம் கனமழை பெய்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

    வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.6 ஆயிரம் நிவாரண உதவி நியாய விலைக்கடை மூலம் வழங்கப்பட்டது.

    இதில் சென்னை மாவட்டத்தில் மட்டும் 13.72 லட்சம் பேருக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டது. சர்க்கரை கார்டு, எந்த பொருளும் வாங்க முடியாத கார்டுதாரர்கள், வருமான வரி செலுத்துபவர்கள், அரசு ஊழியர்கள், வெளியூரில் இருந்து இங்கு தங்கி வேலை செய்வோருக்கு பாதிப்பு ஏற்பட்டால் அவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி அந்தந்த பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று பொதுமக்கள் விண்ணப்பம் எழுதி கொடுத்திருந்தனர். ரேஷன் கார்டு இல்லாதவர்களும் எழுதி கொடுத்தால் அவர்களது விண்ணப்பமும் நிவாரணம் வழங்க பரிசீலிக்கப்படும் என்று அரசு அறிவித்து இருந்தது.

    அதனை தொடர்ந்து 5.5 லட்சம் பேர் ரூ.6 ஆயிரம் கேட்டு விண்ணப்பித்து இருந்தனர். இதில் ரேஷன் கார்டு இணைத்து 2 லட்சத்து ஆயிரம் பேரும், ரேஷன் கார்டு இல்லாமல் 3 லட்சத்து 5 ஆயிரம் பேரும் மனு கொடுத்து இருந்தனர்.

    இந்த விண்ணப்பங்கள் தமிழ்நாடு மின் ஆளுமை முகமைக்கு அனுப்பி வைக்கப்பட்டு பரிசீலிக்கப்பட்டு வந்தது.

    அது மட்டுமின்றி அந்தந்த வார்டு வருவாய், சுகாதாரம், பொறியியல் உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகளும் வீடு வீடாக சென்று கள ஆய்வு செய்து வந்தனர்.

    விண்ணப்பதாரர்களின் வீடுகளில் தண்ணீர் தேங்கி வெள்ளத்தால் உண்மையில் பாதிக்கப்பட்டிருந்ததா? என்பதையும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

    அதே போல் ரேஷன் கார்டு இல்லாதவர்களின் விண்ணப்பங்களுடன் ஆதார் மற்றும் முகவரி சான்றுக்கான வாடகை ஒப்பந்தம், கியாஸ் பில், வங்கி கணக்கு புத்தகம், ஓட்டுனர் உரிமம் போன்ற ஆவணங்களும் சரிபார்க்கப்பட்டு வந்தது.

    இதில் தகுதியான நபர்களை கண்டறிந்து கணக்கெடுக்கப்பட்டு வந்தது. ஆய்வு நடத்திய அதிகாரிகள் தகுதியான விண்ணப்பதாரர்களை வீட்டின் முன்பு போட்டோவும் எடுத்து பதிவு செய்தனர்.

    இந்த பணிகள் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வந்தது. இப்போது இந்த கள ஆய்வு அனைத்தும் நிறைவடைந்துவிட்டது.

    தகுதியான விண்ணப்பதாரர்கள் பட்டியலை 4 மாவட்ட கலெக்டர்களும் அரசுக்கு அனுப்பி வைத்து உள்ளனர். இந்த பட்டியலில் சுமார் 5 லட்சம் பேர் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது.

    எனவே விரைவில் 5 லட்சம் பேருக்கு ரூ.6 ஆயிரம் பணம் கிடைக்க உள்ளது. முதலமைச்சரின் அனுமதி பெற்று நிதித்துறையில் இருந்து பணம் ஒதுக்கப்பட்டதும் ரூ.6 ஆயிரம் பெறுவதற்கான முறையான அறிவிப்பை தமிழக அரசு வெளியிடும் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×