search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஸ்கள் ஓடவில்லை"

    முழு அடைப்பு போராட்டம் காரணமாக புதுவையில் பஸ்கள் ஓடவில்லை. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. #BharatBandh
    புதுச்சேரி:

    விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ.21 ஆயிரம் வழங்க வேண்டும், தொழிலாளர்களுக்கு பாதகமாக சட்டங்களை திருத்தக்கூடாது.

    பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக்கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் இன்றும்( செவ்வாய்க்கிழமை), நாளையும் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் பொது வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    புதுவையில் ஐ.என்.டி.யூ.சி., ஏ.ஐ.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ., தொ.மு.ச., ஏ.ஐ.சி.சி.டி.யூ., எல்.எல்.எப். உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று ஒரு நாள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த போராட்டத்திற்கு பிற தொழிற்சங்கங்கள், அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு, வணிகர்கள் சங்கம் உள்ளிட்டவை ஆதரவு தெரிவித்தது.

    இந்த நிலையில் இன்று காலை முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது. போராட்டத்தால் புதுவையில் பஸ்கள் ஓடவில்லை. தனியார் பஸ்கள் மட்டுமின்றி புதுவை அரசு போக்குவரத்துக்கழக பஸ்களும் ஓடவில்லை. தமிழகத்தில் இருந்து புதுவைக்கும், புதுவை வழியாக செல்லும் தமிழக அரசு பஸ்களும் குறைந்தளவில் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டது.

    இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. வெளியூரில் பணி செய்யும் ஊழியர்கள் பஸ் நிலைய வாசலில் நூற்றுக்கணக்கில் பஸ்களுக்காக காத்திருந்தனர். தனியார் என்ஜினீயரிங், மருத்துவக்கல்லூரி மாணவர்களை அழைத்து செல்வதற்காக சில பஸ்கள் மட்டும் இயங்கின. போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்ததால் ஆட்டோ, டெம்போக்களும் முழுமையாக இயங்கவில்லை.

    நகரின் பெரிய வணிக நிறுவனங்கள் முதல் சிறிய கடைகள் வரை அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தது. இதனால் காலை நேரத்திலேயே சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. பெரிய மார்க்கெட், சின்ன மார்க்கெட், நெல்லித்தோப்பு, முத்தியால்பேட்டை மார்க்கெட் வளாகத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.

    நகர பகுதி மட்டுமின்றி கிராமப்பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. சேதாரப்பட்டு, மேட்டுப்பாளையம், தட்டாஞ்சாவடி, திருபுவனை உள்ளிட்ட தொழிற்பேட்டைகளில் தொழிற்சாலைகள் இயங்க வில்லை. புதுவையில் பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

    அரசு பள்ளிகள் இயங்கினாலும் மாணவர்களின் வருகை குறைவாக இருந்தது. மத்திய-மாநில அரசுகளின் அலுவலகங்கள் இயங்கினாலும் ஊழியர்களின் வருகை குறைவாக இருந்தது. ஒட்டுமொத்தமாக பந்த் போராட்டத்தால் புதுவையில் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

    போராட்டத்தையொட்டி புதுவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்திருந்தனர். பஸ் நிலையம், ரெயில்வே நிலையம் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு ரோந்து சென்றனர். #BharatBandh
    பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் கேரளாவில் பஸ்கள் ஓடவில்லை. பெரும்பாலான கடைகள் மூடிக்கிடந்தன. #BharathBandh #PetrolDieselPriceHike
    திருவனந்தபுரம்:

    பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது.

    கேரள மாநிலத்தில் இன்று நடந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன. தொழிற்சங்கங்களும் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தது.



    இதன் காரணமாக மாநிலத்தில் பெரும்பாலான அரசு பஸ்கள் ஓடவில்லை. வாடகைக்கார்கள், ஆட்டோக்களும் இயக்கப்படவில்லை.

    திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம், திருச்சூர், கோழிக்கோடு, மலப்புரம் பகுதிகளில் பெரும்பாலான கடைகள் மூடிக்கிடந்தன. வணிக நிறுவனங்களும் செயல்படவில்லை.

    திருவனந்தபுரம் தம்பானூர் பஸ் நிலையத்தில் ஒரு சில தனியார் பஸ்கள் மட்டும் பயணிகளை ஏற்றிச்சென்றது. பா.ஜனதா ஆதரவு தொழிற்சங்கத்தினரின் ஆட்டோக்கள் இயக்கப்பட்டது. ஆனால் பஸ் நிலையங்கள், தெருக்களில் மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படவில்லை.

    கேரளாவில் உள்ள கல்லூரிகளில் இன்று பல்கலைக்கழக தேர்வுகள் நடக்க இருந்தது. முழு அடைப்பு காரணமாக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கண்ணூர், கோழிக்கோடு பல்கலைக்கழகங்கள், கொச்சின் அறிவியல் தொழில் நுட்ப பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இன்று நடக்க இருந்த தேர்வு மட்டும் ஒத்திவைக்கப்பட்டது. மகாத்மா காந்தி மற்றும் கேரள பல்கலைக்கழகம் வருகிற 15-ந்தேதி வரையிலான தேர்வுகளை தள்ளி வைத்துள்ளது.

    கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு நிவாரண பொருட்கள் ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் பாதுகாப்பு அளித்து அனுப்பி வைத்தனர். இது போல ஆஸ்பத்திரி வாகனங்கள், விமான நிலையங்களுக்குச் செல்லும் வெளிநாட்டு பயணிகள் வாகனங்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.  #BharathBandh #PetrolDieselPriceHike

    ×