search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பழனி பெரியநாயகி அம்மன்"

    பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    சைவ சமய குரவர்களில் நால்வரில் ஒருவரும், திருநீற்றின் பெருமையை உலகுக்கு உணர்த்தியவருமான திருஞானசம்பந்தர் வைகாசி மாதம் மூலநட்சத்திர நாளன்று அவதரித்தார். சிவபெருமானும், உமாதேவியும் ஞானப்பால் ஊட்டியதால் அவர் தேவாரம் பாடினார். அந்த நாளை திருஞான சம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழா ஆண்டுதோறும் சித்தனாதன் விபூதி நிறுவனத்தின் சார்பில் பெரியநாயகி அம்மன் கோவிலில் கொண்டாப்பட்டு வருகிறது.

    அதன்படி இந்த ஆண்டு பெரியநாயகி அம்மன் கோவிலில் நேற்று காலசந்தி பூஜைக்குபின் காலை 9 மணியளவில் முத்துக்குமாரசுவாமி மண்டபத்தில் திருஞானசம்பந்தருக்கு 16 வகை அபிஷேகமும், மலர்களால் சிறப்பு அலங்காரமும், தாமரை மலர்களால் அர்ச்சனையும் நடந்தது.

    இதைத்தொடர்ந்து 16 வகை தீபாராதனையும், மகா தீபாராதனையும் நடந்தது. ஓதுவார்கள் தேவாரப்பாடல்களை பாடிய பின்னர் திருஞானசம்பந்தர் வழிபாடு நடைபெற்றது. பின்னர் சப்பரத்தில் திருஞானசம்பந்தர் எழுந்தருளினார். சிவன், உமா தேவியுடன் நந்தி வாகனத்தில் எழுந்தருளி பெரியநாயகி அம்மன் கோவில் உட்பிரகாரத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.

    இதையடுத்து விநாயகர் சன்னதி முன்பு திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக கோவில் குருக்கள் செல்வசுப்பிரமணியம் பொற்கின்னத்தில் ஞானப்பாலை திருஞானசம்பந்தருக்கு ஊட்டினார். மேலும் திருஞானசம்பந்தர், சிவன், பார்வதிக்கு தீபாராதனை நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு ஞானப்பால் பிரசாதம் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் உபயதாரர்களான சித்தனாதன் சன்ஸ் சிவனேசன், பழனிவேலு, அசோக், செந்தில், கார்த்திகேயன், குமரகுரு மற்றும் குடும்பத்தினர், கொங்கு வேளாளர் சங்க பிரமுகர் மாரிமுத்து, அரிமா சுப்புராஜ் உள்பட முக்கிய பிரமுர்களும், பக்தர்களும் கலந்து கொண்டனர்.
    பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் வருடாபிஷேகம் மற்றும் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    பழனி முருகன் கோவிலின் உப கோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதையொட்டி நேற்று வருடாபிஷேக விழா நடைபெற்றது. காலை 10 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவில் மண்டபத்தில் 6 பிரதான கலசங்கள் மற்றும் 10 உப கலசங்களுடன் 16 கலசங்கள் வைத்து சிறப்பு யாகம் நடைபெற்றது.

    வருடாபிஷேக விழாவையொட்டி நேற்று இரவு 6 மணிக்குமேல் பெரியநாயகி அம்மன்கோவில் தெற்கு வெளிப்பிரகாரத்தில் அமைக் கப்பட்டிருந்த திருமண மேடையில் திருக்கல்யாணம் நடந்தது. அதையொட்டி பெரியாவுடையார், பெரியநாயகி அம்மன், பிரியநாயகி அம்மன் ஆகியோருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    பின்னர் திருமண மேடையில் வைதீக முறைப்படி யாகம் வளர்த்து பல்வேறு சடங்குகள் நடத்தப்பட்டு, பெரியாவுடையார், பெரியநாயகி அம்மன், பிரியநாயகி அம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார், திண்டுக்கல் அறநிலையத்துறை உதவி ஆணையர் சிவலிங்கம், மேலாளர் உமா, கண்காணிப்பாளர் முருகேசன், சித்தனாதன் சன்ஸ் செந்தில், கண்பத் கிராண்ட் உரிமையாளர்கள் ஹரிகரமுத்து, செந்தில்குமார், திருப்பூர் லாட்ஜ் மகேஷ் மற்றும் ஏராளமான முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    திருக்கல்யாண நிகழ்ச்சிக்கு பின் பெரியாவுடையார், பெரியநாயகிஅம்மனுடன் வெள்ளி ரிஷப வாகனத்திலும், பிரியநாயகி அம்மன் அன்னப்பிச்சை வாகனத்திலும், முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானையுடன் பெரியதங்கமயில் வாகனத்திலும், விநாயகர் வெள்ளி மூஞ்சுறு வாகனத்திலும், வீரபாகு வெள்ளி ஆட்டுக்கிடா வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் சின்ன ரிஷப வாகனத்திலும் எழுந்தருளி நான்கு ரதவீதிகளில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.

    விழா ஏற்பாடுகள் பழனி கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது.
    ×