search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேவரின் தங்க கவசம்"

    • தேவர் ஜெயந்தி கொண்டாட்டத்துக்கு இன்னும் 2 வாரங்களே உள்ளதால் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் வங்கி நிர்வாகத்திடம் தொடர்ந்து பேசி வருகிறார்கள்.
    • வங்கி அதிகாரிகள் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு இந்த பிரச்சினையில் அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகிறார்கள்.

    மதுரை:

    கடந்த 2014-ம் ஆண்டு பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு 13 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அ.தி.மு.க. சார்பில் வழங்கினார்.

    இந்த தங்க கவசத்தை ஒவ்வொரு தேவர் ஜெயந்தி விழாவுக்கும் அ.தி.மு.க. பொருளாளர் மற்றும் பசும்பொன் தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாள் ஆகிய 2 பேரும் கையெழுத்திட்டு மதுரை வங்கி லாக்கரில் இருந்து எடுத்துச் செல்வதும் பின்னர் விழா முடிந்ததும் வங்கியில் வந்து ஒப்படைப்பதும் வழக்கமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கடந்த 2017ம் ஆண்டு அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டபோது தங்க கவசத்தை எடுப்பதில் ஓ. பன்னீர்செல்வத்திற்கும், டி.டி.வி. தினகரனுக்கும் இடையே பிரச்சினை எழுந்தது. அப்போது அ.தி.மு.க. பொருளாளர் என்ற முறையில் ஓ. பன்னீர்செல்வம் உரிமை கோரினார்‌. ஆனாலும் இருதரப்பினரும் வங்கியில் முற்றுகையிட்டதால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஒரு வழியாக கலெக்டரிடம் தங்க கவசம் ஒப்படைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் பசும்பொன் எடுத்துச் செல்லப்பட்டு தேவர் நினைவிடத்தில் பொருத்தப்பட்டது.

    இதன் பின்னர் கடந்த 2018 முதல் 2021 வரை ஓ.பன்னீர்செல்வமே தங்க கவசத்தை வங்கியில் இருந்து பெற்று விழா கமிட்டியிடம் ஒப்படைத்து வருகிறார். ஆனால் தற்போது மீண்டும் இந்த பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது.

    அ.தி.மு.க.வில் தற்போது எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ. பன்னீர்செல்வத்துக்கும் இடையே தலைமை யுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில் இரு தரப்பிலும் தங்க கவசத்தை பெறுவதற்கு வங்கியில் கடிதம் அளித்துள்ளனர்.

    இந்த நிலையில் பசும்பொன் நினைவிட காப்பாளர் டிரஸ்டி காந்தி மீனாளின் ஒப்புதல் கடிதமும் இந்த விஷயத்தில் தேவைப்படுவதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர் பசும்பொனில் உள்ள காந்தி மீனாளை சந்தித்து ஒப்புதல் கடிதம் பெற முயற்சித்து வருகிறார்கள்.

    நேற்று முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், காமராஜ், விஜயபாஸ்கர் மற்றும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஏராளமானோர் பசும்பொன் சென்று தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அங்குள்ள காந்தி மீனாள் இல்லத்திற்கு சென்று அவரை நேரில் சந்தித்து அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய கடிதத்தை கொடுத்தனர். பின்னர் தங்க கவசத்தை பெற எங்களுக்கு ஒப்புதல் கடிதத்தை வழங்க வேண்டும் என்றும் கேட்டனர். அப்போது காந்தி மீனாள் உறுதியளிக்காததால் முன்னாள் அமைச்சர்கள் ஏமாற்றத்துடன் பசும்பொன்னில் இருந்து புறப்பட்டனர்.

    தங்க கவச விவகாரத்தில் காந்திமீனாள் அ.தி.மு.க.வில் எந்த தரப்பிற்கும் ஒப்புதல் கடிதம் கொடுக்க விரும்பவில்லை என்று தெரிகிறது. இந்த பிரச்சினையில் வங்கி நிர்வாகமே இறுதி முடிவு எடுக்கட்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

    தேவர் ஜெயந்தி கொண்டாட்டத்துக்கு இன்னும் 2 வாரங்களே உள்ளதால் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் வங்கி நிர்வாகத்திடம் தொடர்ந்து பேசி வருகிறார்கள்.

    இது தொடர்பாக வங்கி அதிகாரிகள் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு இந்த பிரச்சினையில் அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகிறார்கள்.

    டிரஸ்டி காந்தி மீனாள் ஒப்புதல் கடிதம் தராத பட்சத்தில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்தது போலவே தேவரின் தங்க கவசத்தை கலெக்டர்களிடம் முறைப்படி ஒப்படைக்கலாம் என்று வங்கி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பைச் சேர்ந்த நிர்வாகிகளை நேரில் அழைத்து விளக்கவும் வங்கி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

    தங்க கவசம் மாவட்ட கலெக்டர் வசம் ஒப்படைக்கும் பட்சத்தில் வருகிற 25-ந்தேதி ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் மற்றும் மதுரை மாவட்ட கலெக்டர் ஆகிய 2 பேரும் வங்கிக்கு வரவழைக்கப்பட்டு அவர்கள் வசம் தங்க கவசம் ஒப்படைக்கப்படும். பின்னர் பலத்த பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட்டு பசும்பொனில் உள்ள தேவர் நினைவிடத்தில் உள்ள தேவர் சிலைக்கு பொருத்தப்படும்.

    பின்னர் விழா முடிவடைந்ததும் மீண்டும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தங்க கவசம் எடுத்து வரப்பட்டு மதுரை அண்ணா நகரில் உள்ள வங்கி லாக்கரில் ஒப்படைக்கப்படும். இதற்கான பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாகவும் வங்கி அதிகாரிகள் மாவட்ட நிர்வாகத்துடன் ஆலோசித்து வருகிறார்கள்.

    • தங்க கவசத்தை பெற திண்டுக்கல் சீனிவாசன் தரப்பினர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
    • இன்னும் ஓரிரு நாளில் காந்திமீனாள் நடராஜன் ஒப்புதல் கடிதத்தை யாருக்கு அளிக்கிறாரோ அவரிடம் தங்க கவசம் ஒப்படைக்கப்படும்.

    மதுரை:

    கடந்த 2014-ம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பசும்பொனில் உள்ள தேவர் நினைவிடத்தில் உள்ள தேவரின் சிலைக்கு ரூ.3.5 கோடி மதிப்பிலான 13 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை வழங்கினார். இந்த தங்க கவசம் ஒவ்வொரு தேவர் ஜெயந்தியன்றும் தேவரின் நினைவிடத்தில் பொருத்தப்படும்.

    அ.தி.மு.க. பொருளாளராக இருந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் பெயரில் மதுரை அண்ணா நகரில் உள்ள வங்கி லாக்கரில் இந்த கவசம் வைக்கப்பட்டுள்ளது. அதனை அங்கிருந்து பசும்பொன்னுக்கு எடுத்து செல்வது வழக்கம்.

    இதற்காக ஓ.பன்னீர்செல்வம் ஒவ்வொரு தேவர் ஜெயந்தியன்றும் வங்கிக்கு வந்து லாக்கரில் உள்ள தேவரின் தங்க கவசத்தை எடுத்து விழா கமிட்டியுடன் ஒப்படைப்பார். விழா முடிவடைந்ததும் அதேபோன்று தங்க கவசத்தை முறைப்படி வங்கிக்கு வந்து ஓ.பன்னீர்செல்வம் பெற்று ஒப்படைப்பார்.

    கடந்த 2017-ம் ஆண்டு ஓ.பன்னீர் செல்வத்திற்கும் டி.டி.வி. தினகரனுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக தங்க கவசம் அ.தி.மு.க.வினர் வசம் ஒப்படைக்கப்படாமல் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

    தற்போது எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டும் வங்கியில் உள்ள தங்க கவசத்தை பெற அ.தி.மு.க. தரப்பில் திண்டுக்கல் சீனிவாசன், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே பலப்பரீட்சை நடந்து வருகிறது.

    இரு தரப்பிலும் தனித்தனியாக வங்கியில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் தேவரின் தங்க கவசம் யார் கையில் ஒப்படைக்கப்படும் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. இந்த நிலையில் தேவரின் நினைவிட பொறுப்பாளர் காந்திமீனாள் நடராஜன் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது.

    கடந்த 2 முறை மதுரை வந்த திண்டுக்கல் சீனிவாசன் வங்கியில் கடிதம் அளித்தும் வங்கி நிர்வாகத்தினர் தேவர் நினைவிட பொறுப்பாளரான காந்தி மீனாள் நடராஜனிடம் ஒப்புதல் கடிதம் வாங்கி வர கூறியதாக தெரிகிறது.

    இந்த நிலையில் காந்தி மீனாள் நடராஜனை சந்தித்து பேசுவதற்காக திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், நத்தம் விஸ்வநாதன், காமராஜ் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ராஜன் செல்லப்பா, பெரிய உள்ளான் உள்ளிட்ட தென் மாவட்ட அ.தி.மு.க.வினர் ஏராளமானோர் இன்று பசும்பொன் சென்றனர். பசும்பொனில் உள்ள தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு அருகில் உள்ள தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்திமீனாள் நடராஜன் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்தனர்.

    அப்போது குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவுக்காக தங்க கவசத்தை வங்கியில் முறைப்படி எடுப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது காந்தி மீனா நடராஜனிடம் ஒப்புதல் கடிதம் பெற ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனாலும் ஒப்புதல் கடிதம் வழங்குவதில் காந்தி மீனாள் நடராஜன் தொடர்ந்து தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

    தங்க கவசத்தை பெற திண்டுக்கல் சீனிவாசன் தரப்பினர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இன்னும் ஓரிரு நாளில் காந்திமீனாள் நடராஜன் ஒப்புதல் கடிதத்தை யாருக்கு அளிக்கிறாரோ அவரிடம் தங்க கவசம் ஒப்படைக்கப்படும். அவர் ஒப்புதல் கடிதம் அளிக்காத பட்சத்தில் மாவட்ட நிர்வாகத்திடம் தங்க கவசம் ஒப்படைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

    இன்று பசும்பொன்னில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் முகாமிட்டது தென் மாவட்ட அ.தி.மு.க.வினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×