search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனிச்சட்டம்"

    வெளிநாட்டு மாப்பிள்ளை எனக்கூறி சில மாதங்கள் சுகம் அனுபவித்துவிட்டு விவாகரத்து செய்யும் கணவர்களை நாடு கடத்தி இந்தியாவில் வழக்கு தொடர தனிச்சட்டம் தேவை என பாதிக்கப்பட்ட பெண்கள் வலியுறுத்துகின்றனர். #Agonisedwomen #NRIhusbands
    புதுடெல்லி:

    எழுத்தாளர் சிவசங்கரி எழுதிய பிரபல நாவல்களில் ஒன்று ‘47 நாட்கள்’. பிரான்ஸ் நாட்டில் ஒரு வெள்ளைக்காரப் பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டு தாம்பத்தியம் நடத்திவரும் கதாநாயகன், இந்தியாவுக்கு வந்து ஒரு நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண்ணான விஷாலியை திருமணம் செய்துகொண்டு பிரான்சுக்கு அழைத்து செல்கிறான்.

    இரண்டாவதாக கட்டிய மனைவியான இந்தியப்பெண்ணை தனது சகோதரியாக நடிக்குமாறு வலியுறுத்தும் அவன், அவள் கண்ணெதிரே தனது முதல் மனைவியுடன் கும்மாளம் அடிக்கிறான். சிகரெட்டால் சுட்டும், ஸ்டவ் அடுப்பில் வைத்து உள்ளங்கையை எரித்தும் விஷாலியை கடும் சித்திரவதைக்கும் உள்ளாக்குகிறான்.

    அவளை பைத்தியமாக மாற்றும் அளவுக்கு கொடுமைப்படுத்தும் அந்த வஞ்சகனிடம் இருந்து கதாநாயகி எப்படி தப்பிக்கிறார்? அவர் தனது தாய்நாடான இந்தியாவுக்கு திரும்பிவர முடிந்ததா, இல்லையா? என்பதுதான் ‘47 நாட்கள்’ நாவலின் கதைக்களம். திருமணமான 47 நாட்களில் கதாநாயகி சந்தித்த அனுபவங்களின் கோர்வைதான் கதையின் முழுப் பயணமும்.

    இந்த நாவலை இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் இதே பெயரில் திரைப்படமாக எடுத்திருந்தார். சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த இந்தப்படம் ‘வெளிநாட்டு மாப்பிள்ளை மோகம்’ என்னும் வறட்டு கவுரவத்தை சற்று அசைத்துப் பார்த்தது எனலாம்.



    இந்தப் படத்தின் கதாநாயகியாக ஜெயப்பிரதாவும், கொடுமைக்கார கணவனாக தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியும் தங்களது கதாபாத்திரங்களை கனக்கச்சிதமாக செய்திருந்தனர்.

    எனினும், எல்லோருக்கும் இதேபோல் ஆகி விடுமா? இப்படி எல்லாம் நடக்குமா? என்னும் இருதரப்பு வாதத்துக்கு இந்தப்படம் திரி கொளுத்திப் போட்டது.

    ஆனால், 40 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது இந்த விவாதத்தின் தீர்ப்பு 50-50 ஆக உள்ளதாக தெரியவந்துள்ளது. வெளிநாட்டு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு செய்யப்படும் இதுபோன்ற திருமணங்களில் சரிபாதி அளவுக்கு திருப்திகரமாக அமையாமல், ஏதோ ஒரு வகையில் விரக்தியிலும், சோகத்திலும், தோல்வியிலும் முடிவதாகதான் கருத வேண்டியுள்ளது.

    இந்நிலையில், வெளிநாட்டு மாப்பிள்ளை எனக்கூறி திருமணம் செய்து அழைத்துச் சென்று தங்களிடம் சில மாதங்கள் சுகம் அனுபவித்துவிட்டு, வேறொருத்தியை திருமணம் செய்துகொள்ளும் நோக்கத்தில் விவாகரத்து செய்யும் கணவர்களை நாடு கடத்தி இந்தியாவில் வழக்கு தொடர தனிச்சட்டம் தேவை என பாதிக்கப்பட்ட பல பெண்கள் பலமாக வலியுறுத்த தொடங்கியுள்ளனர்.

    47 நாட்கள் படத்தின் கதைக்களம்கூட சற்று நீளமானது என்னும் அளவுக்கு சில பெண்களின் வாழ்க்கையில் தங்களது கணவர்களுடனான திருமண பந்தம் 40 நாட்களுக்குள் முடிந்துள்ளது.

    டெல்லியை சேர்ந்த 19 வயது இளம்பெண் பரமிந்தர் கவுர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஏராளமான பணத்தை வரதட்சணையாக தந்து பரமிந்தர் கவுரை அவரது பெற்றோர் ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தனர். ஆசை கனவுகளுடன் தொடங்கிய இல்லற வாழ்க்கை பரமிந்தர் கவுருக்கு ஆரம்பத்தில் தேனாக இனித்தது.

    இந்நிலையில், அவரது கணவர் திருமணமான நாற்பதாவது நாளில் மேல்படிப்புக்காக கனடா சென்றார். அதன் பின்னர், மாமனார்-மாமியாரின் வசைபாடல்களுக்கும், அடி, உதை,சித்ரவதைக்கும் இலக்கானார், பரமிந்தர் கவுர்.

    நாங்கள் உன்னை வைத்துக்கொண்டு சாப்பாடு போட வேண்டும் என்றால் உன் பெற்றோரிடம் இருந்து மாதந்தோறும் ஒரு லட்சம் ரூபாயை வாங்கிவர வேண்டும். இல்லாவிட்டால் எங்கள் வீட்டில் இருக்கக்கூடாது என்று விரட்டி விட்டனர்.

    நிற்க நிழலில்லாமல் தாய்வீட்டில் அவர் ஒதுங்கி இருந்த வேளையில் மாமனாரும் மாமியாரும் ரகசியமாக கனடாவுக்கு பறந்து விட்டனர். சில நாட்களில் பரமிந்தர் கவுரை அங்கிருந்தபடியே ஒருதலைபட்சமாக விவாகரத்து செய்த அவரது கணவர் சில மாதங்களுக்கு பின்னர் மற்றொரு திருமணம் செய்து கொண்டார்.

    இதேபோல், ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்துவந்த ஷில்பா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இளம்பெண் கடந்த 2010-ம் ஆண்டில் அமெரிக்க மாப்பிள்ளையை திருமணம் செய்துகொண்டு, பல்லாயிரம் எதிர்கால கனவுகளுடன் புதுக்குடித்தனம் நடத்துவதற்காக கணவருடன் கலிபோர்னியா நகருக்கு சென்றார்.

    ஆனால், அங்குபோய் சேர்ந்ததும் ஷில்பாவிடம் இருந்த பணத்தையும் சில முக்கியமான ஆவணங்களையும் பறித்துக்கொண்ட அவரது கணவர், ஒரு செக்ஸ் அடிமையைவிட மோசமான முறையில் தனது உடல் சுகத்துக்கு பயன்படுத்தி கொண்டார்.

    ‘ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்’ என்பதுபோல் தனது ஆசையும், மோகமும் தீர்ந்த பின்னர் மூன்று மாதங்களுக்கு பிறகு வீட்டிலிருந்து விரட்டி விட்டார். எதிர்காலம் பற்றிய கேள்விக்குறியுடனும் 8 வயது பெண் குழந்தையுடனும் தற்போது டெல்லியில் பெற்றோர் வீட்டில் வாழ்ந்துவரும் ஷில்பா, முன்னர் தனது கணவர்மீது டெல்லி போலீசில் புகார் அளித்திருந்தார்.

    ஆனால், அவர் இதுவரை ஒருமுறைகூட இந்தியாவுக்கு வராததால் ஷில்பாவின் புகார் கிணற்றில் போட்ட கல்லாக காவல் நிலையத்தில் புதைந்து கிடக்கிறது. தன்னை கைவிட்ட கணவர் சமீபத்தில் இன்னொரு பெண்ணை திருமணம் செய்துகொண்ட விபரத்தை சமூக வலைத்தளம் மூலம் அறிந்த ஷில்பாவை போல பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பெண்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

    இதுபோல் மனைவிக்கு துரோகம் செய்து இன்னொருத்திக்கு ஆசைப்பட்டு விவாகரத்து செய்யும் கணவர்கள்மீது இன்றுவரை பெண்களை கொடுமைப்படுத்தும் இ.பி.கோ.498A மற்றும் 406 (நம்பிக்கை துரோகம்) ஆகிய சட்டப்பிரிவின்கீழ் மட்டுமே வழக்குப்பதிவு செய்யப்படுகிறது.

    இதனால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிவாரணம் அளிக்கவோ, வெளிநாடுகளில் இருந்தபடி விவாகரத்து செய்துவிட்டு, அங்கேயே பதுங்கியவாறு உல்லாசமாக வாழ்ந்துவரும் நபர்களை நாடுகடத்தி இந்தியாவுக்கு அழைத்துவந்து சட்டரீதியாக வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கவோ தகுந்த சட்டங்கள் ஏதும் இதுவரை உருவாக்கப்படவில்லை.

    கற்பழிப்பு, கொலை செய்யும் முயற்சியுடன் மூர்க்கத்தனமாக தாக்குவது, மோசடி ஆகிய கிரிமினல் சட்டப்பிரிவுகளின்கீழ் இதைப்போன்ற கயவர்களை தண்டிக்க வேண்டும். இந்த குற்றச்சாட்டுகளின்படி வழக்கு தொடர்ந்தால் அவர்களை சுலபமாகவும், விரைவாகவும் இந்தியாவுக்கு அழைத்துவந்து தண்டிக்க முடியும் என பாதிக்கப்பட்டவர்கள் விரும்புகின்றனர்.

    சில கடுமையான நிபந்தனைகளுடன் வெளிநாடுவாழ் இந்தியர்கள் திருமண சட்டம் தொடர்பாக பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் புதிய மசோதா முன்வைக்கப்படும் என மத்திய அரசின் மகளிர் மட்டும் குழந்தைகள் நல அமைச்சகம் முன்னர் தெரிவித்திருந்தது.

    ஆனால், அப்படி எந்த மசோதாவும் இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை என பாதிக்கப்பட்ட பெண்கள் புலம்புகின்றனர்.

    இவர்களின் குமுறல்கள் தொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய அரசின் உயரதிகாரி ஒருவர், இப்படி பாதிக்கப்படும்பெண்களைப்பற்றி மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. மனைவிகளை கைவிட்டதாக குற்றம்சாட்டப்பட்ட 33 பேரின் பாஸ்போர்ட்களை வெளியுறவுத்துறை அமைச்சகம் முடக்கி வைத்துள்ளது. 8 பேரை தேடப்படும் நபராக அறிவித்து நோட்டீஸ்கள் விட்டிருக்கிறோம் என தெரிவித்தார்.

    மேலும், வெளிநாடுவாழ் இந்தியர்கள் தொடர்பான திருமண சட்டத்திலும் சில மாற்றங்களை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. திருமணமான ஒருவாரத்துக்குள் கட்டாயமாக அந்த திருமணங்கள் பதிவு செய்யப்பட வேண்டும். அப்படி பதிவு செய்ய தவறினால் அபராதம் விதிப்பது உள்ளிட்ட பரிந்துரைகள் மத்திய மந்திரிசபையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

    ஆனால், பெண்ணுரிமைவாதிகள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கருத்து வேறுவிதமாக உள்ளது. பெண்கள் தொடர்பான விவகாரங்களை கையாளுவதில் மத்திய அரசு வெவ்வேறு நிலைப்பாடுகளை கொண்டுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

    இஸ்லாமிய பெண்களை முத்தலாக் முறையில் திடீரென்று விவாகரத்து செய்வதை தடுக்கும் சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியே தீருவோம் என்று முரண்டுபிடிக்கும் மத்திய அரசு, வெளிநாடுவாழ் கணவர்களால் விவாகரத்து செய்யப்படும் எங்களைப்போன்ற பெண்கள் விவாகரத்தில் எந்த அக்கறையும் காட்டாதது ஏன்? என அவர்கள் கொந்தளிக்கின்றனர்.

    பாதிக்கப்பட்ட பெண்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள்தான் என இந்த அரசு கருத வேண்டும். அவர்களை அரசும் கைவிட்டு விடக்கூடாது.

    இதைப்போன்ற பெண்களுக்கு நிவாரணம் கிடைக்கும் வகையில் இந்திய அரசும் வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களும் இணைந்து செயலாற்றி, குற்றம் செய்தவர்களை இங்கு அழைத்துவந்து நடவடிக்கை எடுக்கும் வகையில் அனைத்து நாடுகளுக்கும் பொருந்துமாறு பலமான தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும் என அவர்கள் தீவிரமாகவும் பலமாகவும் வலியுறுத்த தொடங்கியுள்ளனர். #Agonisedwomen #NRIhusbands
    தமிழ்நாட்டில் ஜாதிய ஆணவப்படுகொலைகள் அதிகரித்து வரும் நிலையில் இதனை தடுக்க தனிச்சட்டம் கொண்டு வரவேண்டும் என திருமுருகன் காந்தி கூறியுள்ளார். #ThirumuruganGandhi #May17
    நெல்லை:

    மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி நெல்லையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ராஜீவ்காந்தி கொலையில் கைதாகி 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் 7 தமிழர்களை விடுதலை செய்ய தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதை கவர்னருக்கு அனுப்பியுள்ளது. ஆனால் கவர்னர் அதில் முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவது கண்டிக்கத்தக்கது.

    மாநிலங்களுக்கு கவர்னர் பதவி தேவையில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசே முடிவு செய்து கொள்ளலாம் என்ற நிலைப்பாட்டை கொண்டு வரவேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு முறையான உதவி செய்யவில்லை. மத்திய அரசிடம் இழப்பீட்டு தொகையை குறைவாக கேட்டுள்ளது.

    மேலும் 8 வழிச்சாலைக்காக கையகப்படுத்தப்படும் ஒரு தென்னைக்கு ரூ.50 ஆயிரம் நிதி கணக்கிட்டு கொடுக்கப்போவதாக முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி கணக்கிட்டால் கஜா புயலில் முறிந்து விழுந்த தென்னை மரங்களுக்கு மட்டும் ரூ.20 ஆயிரம் கோடி வழங்க வேண்டும். தோராயமாக டெல்டா மாவட்டங்கள் ரூ.80 ஆயிரம் கோடிக்கு சேதமடைந்துள்ளது. எனவே மாநில அரசு மத்திய அரசிடம் கூடுதலாக நிதி கேட்கவேண்டும்.

    தமிழ்நாட்டில் ஜாதிய ஆணவப்படுகொலைகள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க தனிச்சட்டம் கொண்டுவரவேண்டும். ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகவே போலீசார் செயல்பட்டு வருகின்றனர். அங்கு ஆலைக்கு எதிராக போராடுபவர்களுக்கு தங்கும் விடுதி அறைகள் கொடுக்கக்கூடாது என போலீசார் கட்டுப்பாடு விதித்துள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.



    எங்கள் அமைப்பு சார்பாக எந்த போராட்டம் நடைபெற்றாலும் அதற்கு போலீசார் அனுமதி கொடுப்பதில்லை. நீதிமன்ற அனுமதி பெற்றே பொதுகூட்டம் உள்ளிட்ட அனைத்தும் நடக்கிறது.

    தமிழகத்தில் அ.தி.மு.க. அரசு பா.ஜ.க. சொல்படியே செயல்பட்டு வருகிறது. வடமாநிலங்களில் பா.ஜ.க. தோல்விகளுக்கு பிறகாவது தன் நிலைப்பாட்டை மாற்றி கொள்ள வேண்டும். இல்லையெனில் தேர்தலில் மிக மோசமான நிலையை அடையும்.

    மேகதாது அணை பிரச்சினையில் மத்திய பா.ஜ.க. அரசும், கர்நாடக காங்கிரஸ் அரசும் தமிழகத்திற்கு எதிரான நிலையை எடுத்து வருகிறார்கள். காவிரி படுகையில் மீத்தேன் எரிவாயு மற்றும் எண்ணெய் எடுப்பதற்காக காவிரி பாசன பகுதியை மத்திய அரசு வேண்டும் என்றே வறண்ட பூமியாக்க முயற்சிக்கிறது.

    இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 23-ந் தேதி திருச்சியில் பெரியார் நினைவு தின கருப்பு சட்டை பேரணி நடத்த இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது நிர்வாகி புருஷோத்தமன் உடனிருந்தார். #ThirumuruganGandhi #May17
    பசு பாதுகாவலர்கள் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துவதை தடுக்க தனிச் சட்டம் இயற்றவேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு யோசனை தெரிவித்தது.
    புதுடெல்லி:

    வடமாநிலங்களில் பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் செயல்படும் சில வன்முறைக் கும்பல் மாட்டிறைச்சி சாப்பிடும் அப்பாவி மக்களை குறி வைத்து கடுமையாக தாக்குவது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து உள்ளது. இவர்கள் பலரை அடித்துக் கொன்றும் உள்ளனர். இதுபோன்ற சம்பவங்களுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

    இப்படி வன்முறைக் கும்பல் சட்டத்தை கையில் எடுத்துக் கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இத்தகைய தாக்குதல்களை தடுக்க தகுந்த வழிகாட்டுதல் நெறிமுறை களை பிறப்பிக்கவேண்டும் என்று கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் மகாத்மா காந்தியின் கொள்ளுபேரன் து‌ஷார் காந்தி உள்பட பலர் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவில் கூறியதாவது:-

    பசு பாதுகாவலர்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொள்வதை மத்திய, மாநில அரசுகள் அனுமதிக்கக் கூடாது. திரளானவர்கள் ஒன்று கூடி அப்பாவி மக்கள் மீது பயங்கரமாக தாக்குதல் நடத்துவது புதிய சட்டவழி முறையாக மாறுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இதை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கவேண்டும்.

    இதுபோன்ற குற்றங்களை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை, தீர்வு காணும் முறைகள், தகுந்த தண்டனை ஆகியவற்றை மேற்கொள்ளவேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடுகிறோம்.

    இதை மத்திய, மாநில அரசுகள் 4 வாரங்களுக்குள் செயல்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். எந்த மாநில அரசும் இந்த வி‌ஷயத்தை கண்டு கொள்ளாமல் அலட்சியமாக விட்டுவிடக் கூடாது. யாராவது அராஜகத்தில் ஈடுபட்டால் அவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும். ஏனென்றால் எந்த வகையிலும் வன்முறையை அனுமதிக்க இயலாது. தனி நபர்கள் யாரும் சட்டத்தின் காவலர்களாக ஆகி விடவும் கூடாது.

    பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் தாக்குதல் நடத்துபவர்கள் மற்றும் கொலை செய்யபவர்களை தண்டிக்கவும், அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கவும் தனிச் சட்டம் இயற்ற மத்திய அரசு பரிசீலிக்கவேண்டும்.

    இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    பின்னர் வழக்கு விசாரணையை அடுத்த மாதம்(ஆகஸ்டு) 28-ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

    இப்பிரச்சினை தொடர்பாக கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு அனைத்து மாநில அரசுகளுக்கும் பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் அப்பாவி மக்களை தாக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவரை நியமிக்கவேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது, நினைவு கூரத்தக்கது.  #Tamilnews #CowVigilantism #SupremeCourt
    ×