search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செவிலியர் கொலை"

    ஆண்டிபட்டி அருகே அரசு ஆஸ்பத்திரி செவிலியர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே பாப்பம்மாள்புரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது44). இவர் திண்டுக்கல்லில் தங்கி கேட்டரிங் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி செல்வி (43). இவர் ஆண்டிபட்டி அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 17 ஆண்டுகளாக செவிலியராக பணிபுரிந்து வருகிறார்.

    இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக சுரேஷ் தனது மனைவியை பிரிந்து திண்டுக்கல்லில் தனியாக வசித்து வருகிறார். அவருடன் குழந்தைகளும் வசித்து வருகின்றனர். ஆண்டிபட்டி பாப்பம்மாள்புரம் பகுதியில் செல்வி தனியாக வசித்து வந்தார். இருந்தபோதும் கணவன்-மனைவி 2 பேரும் தனது குழந்தைகள் குறித்து அடிக்கடி செல்போனில் பேசிக்கொள்வது வழக்கம்.

    இந்நிலையில் நேற்று இரவு சுரேஷ் அவரது மனைவி செல்விக்கு செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் நீண்ட நேரமாக செல்போன் சுவிட்ச்ஆப் ஆன நிலையில் இருந்தது. இதனையடுத்து அவரது உறவினர்களிடம் தெரிவித்து வீட்டிற்கு சென்று செல்வியை பார்த்து வருமாறு கூறி உள்ளார்.

    வீடு பூட்டி இருந்த நிலையில் நீண்ட நேரத்திற்கு பிறகு கதவை உடைத்து உள்ளே சென்று அவர்கள் பார்த்தனர். அப்போது செல்வி வீட்டில் உள்ள பூஜை அறையில் முகம் மற்றும் தலையில் பலத்த காயங்களுடன் கொடூரமாக இறந்து கிடந்துள்ளார். உறவினர்கள் செல்வி இறப்பு குறித்து சுரேசிடம் தெரிவிக்கவே அவர் அலறி துடித்து குழந்தைகளுடன் ஓடி வந்தார்.

    இதுகுறித்து ஆண்டிபட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் கொலை நடந்த இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே நேரில் வந்து விசாரணை நடத்தினார்.

    தடயவியல் நிபுணர் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் விசாரணை நடத்தப்பட்டது. டி.எஸ்.பி. தங்ககிருஷ்ணன் மற்றும் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? குடும்ப பிரச்சனையால் கொலை செய்யப்பட்டாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ×