search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறப்புக்கட்டுரை"

    • குரு பூர்ணிமா என்பது வேத வியாசரின் கொள்கைகளைப் பின்பற்றுவதாகும்.
    • வேதத்தைத் தொகுத்து நான்காகப் பிரித்து நமக்கெல்லாம் எளிமையாக வழங்கி, சனாதனதர்மத்தை வேரூன்றச் செய்த வேத வியாசர் நமக்கெல்லாம் ஆதி குருவாக விளங்குகிறார்.

    ஒவ்வொரு மாத பவுர்ணமிக்கும் ஒரு தனி சிறப்பு உண்டு. பவுர்ணமியில் எந்த மாதம் கிரிவலம் வருகிறோமோ அதற்கு ஏற்ப பலன் கிடைப்பதாக சொல்வார்கள். குறிப்பாக பவுர்ணமி தினத்தில் பித்ருக்கள் வழிபாடு, சித்தர்கள் வழிபாடு செய்வதற்கு மிகவும் ஏற்றது என்பார்கள். ஒவ்வொரு மாதத்திற்கும் ஏற்ப பவுர்ணமி வழிபாடுகளில் மாறுபாடு உள்ளது.

    அந்த வகையில் தற்போதைய ஆனி மாத பவுர்ணமி குரு பவுர்ணமி என்றும், வியாசர் பவுர்ணமி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பவுர்ணமியில் குருவை வழிபட வேண்டும் என்பது முக்கியமான நோக்கமாகும்.

    ஆதிகாலத்தில் ஆசிரமத்தில் இருக்கும் சன்னியாசிகள் தங்களது முதன்மையான குருவான வியாசரை வணங்கி பூஜை செய்வார்கள். எனவேதான் ஆனி மாத பவுர்ணமியை வியாசர் பூர்ணிமா என்றும் அழைக்கிறார்கள்.

    தமிழர்கள் கலாச்சாரத்தில் குரு அல்லது ஆசிரியர் கடவுளுக்கு நிகராக கருதப்படுகிறார். அந்த அடிப்படையிலும், ஆனி மாத பவுர்ணமி தினத்தை குரு பவுர்ணமி தினமாக கொண்டாடி வருகிறோம். இந்த ஆண்டு குரு பவுர்ணமி ஞாயிற்றுக்கிழமை இரவு 7.45 மணிக்கு சதுர்த்தசி திதி முடிந்ததும் தொடங்குகிறது. நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மாலை 5.49 மணி வரை பவுர்ணமி இருக்கிறது.

    எனவே இந்த ஆண்டுக்கான குரு பவுர்ணமி வழிபாடுகள் நாளை இரவே தொடங்கி விடுகிறது.

    குரு பூர்ணிமா என்பது வேத வியாசரின் கொள்கைகளைப் பின்பற்றுவதாகும். வியாசர் பண்டைய இந்தியாவில் மிகவும் மதிக்கப்படும் குருக்களில் ஒருவராக அறியப்படுகிறார். வேத வியாசர் நான்கு வேதங்களை இயற்றினார், மகா பாரத இதிகாசத்தை இயற்றினார், பல புராணங்கள் மற்றும் இந்து புனிதக் கதைகளின் பரந்த கலைக்களஞ்சியங்களுக்கு அடித்தளம் அமைத்தார் என்பதையும் நவீன ஆராய்ச்சி வெளிப்படுத்துகிறது.

    குரு பூர்ணிமா என்பது, சிவபெருமான், ஆதி குரு அல்லது அசல் குரு வடிவில், வேதங்களின் ஞானிகளான ஏழு முனிவர்களுக்கு கற்பித்த தேதியைக் குறிக்கிறது. யோகா சூத்திரங்களில், பிரணவ அல்லது ஓம் வடிவில் உள்ள கடவுள் யோகாவின் ஆதி குரு என்று அழைக்கப்படுகிறார். புத்தர் சாரநாத்தில் தனது முதல் பிரசங்கத்தை இந்த நாளில் வழங்கியதாக நம்பப்படுகிறது. இது இந்த புனித நாளின் சக்தியைக் காட்டுகிறது

    குரு பூர்ணிமாவுடன் தொடர்புடைய விஷ்ணு வழிபாட்டின் முக்கியத்துவம் உள்ளது. இந்த நாளில், விஷ்ணுவின் ஆயிரம் நாமங்கள் என்று அழைக்கப்படும் விஷ்ணு சத்ரநாமத்தை உச்சரிக்க வேண்டும். இந்த நல்ல நாளில், உங்களுடன் இணக்கமாக இருங்கள் மற்றும் உங்கள் ஆற்றலைச் செலுத்துங்கள்.

    அமைதியும் செழிப்பும் உங்களுக்கு தொலைதூரக் கனவாகத் தோன்றினால், தனிப்பயனாக்கப்பட்ட நேரடி விஷ்ணு பூஜையை முழு-ஆதார தீர்வாக பதிவு செய்யவும்.

    இந்த நாளில், அதிகாலையில் எழுந்து, குளித்தல், பூஜை போன்ற உங்கள் அன்றாட வழக்கமான கடமைகளை மேற்கொள்ளுங்கள்; மேலும், நீங்கள் சரியான ஆடை அணிந்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

    அதன் பிறகு, வியாசர் திருவுருவப் படத்திற்கு மலர்கள் மற்றும் நறுமண மாலையை வைத்து, பின்னர் உங்கள் சொந்த குருவிடம் ஆசீர்வாதம் பெறுங்கள்.

    உங்கள் குருவை ஒரு நாற்காலியில் அல்லது வேறு எங்காவது உட்கார வைத்து, பின்னர் அவருக்கு ஒரு மாலையை வழங்குங்கள்.

    அதன்பிறகு, உங்கள் குருவுக்கு வஸ்திரம், பழங்கள், மலர்கள், மாலைகள், தட்சிணை போன்றவற்றைப் பணமாக அளித்து, அவர்களின் ஆசிகளைப் பெறுங்கள்.

    உங்கள் ஜாதகத்தில் வலுவான வியாழன் இருந்தால் நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் வாழலாம் என்று வேத ஜோதிடம் வெளிப்படுத்துகிறது. இது உங்கள் ஜாதகத்தில் உள்ள நல்ல பலன்களான குரு அல்லது கடவுள் வியாழனை வலுப்படுத்த உதவும். உங்கள் ஜாதகத்தில் வியாழன் வலுவிழந்த ராசியான 9-ல் (அதாவது மகரம் ) இருந்தால், நீங்கள் தவறாமல் குரு யந்திரத்தை வழிபட வேண்டும்.

    உங்கள் ஜாதகத்தில் வியாழன்-ராகு, வியாழன்-கேது அல்லது வியாழன்-சனியின் சேர்க்கை இருந்தாலும் குரு யந்திரத்தை வழிபடுவது உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் ஜாதகத்தில் வியாழன் பலவீனமான வீட்டில் அதாவது 6, 8 அல்லது பன்னிரண்டாம் வீட்டில் இருந்தால், நீங்கள் ஆற்றல் மிக்க குரு யந்திரத்தை வணங்க வேண்டும் .

    தனியாக ஒரு மனிதன் சிந்தித்து, பரம்பொருளை உணர்ந்து, ஞானம் அடைவது கடினம். அதற்கு குருவின் துணை இன்றியமையாதது.

    குரு என்பவர் யார்?. "கு' என்றால் "இருள்'. "ரு' என்றால் "போக்குபவர்'. அஞ்ஞானம் என்ற இருளை அகற்றி ஞானமாகிய ஒளியைத் தருபவரே குரு ஆவார். தன் சீடர்களுக்கு ஆன்மிக முன்னேற்றம் ஏற்பட, யார் அவர்களுக்கு சாதனையைக் கற்றுத் தந்து, ஆன்மிக அனுபவங்களை அருள்கின்றாரோ அவரே குரு எனப்படுகிறார்.

    தன்னை நம்பி வருகின்றவர்கள் நல்ல வழியில் செல்ல வேண்டும் என்று எந்தவொரு குருவும் நினைப்பார். அவர்களிடமிருந்து எவ்விதப் பிரதி பலனையும் எதிர்பார்க்காமல் நல்வழிப்படுத்தி இறையின்பத்தை அனுபவிக்கச் செய்கின்ற பெருந்தன்மையை குருவைத் தவிர வேறு யாரிடமும் காணமுடியாது.

    குருவே தெய்வம். குருவே பிரம்மா. குருவே விஷ்ணு. குருவே மகேஸ்வரன். குருவே தேவர்கள். குருவே சாட்சாத் பரப் பிரம்மம். இத்தகைய பெருமை வாய்ந்த குருவைப் போற்றும் திருநாளான "குரு பூர்ணிமா' இவ்வருடம் நாளை (ஞாயிறு) இரவு தொடங்குகிறது.

    வேதத்தைத் தொகுத்து நான்காகப் பிரித்து நமக்கெல்லாம் எளிமையாக வழங்கி, சனாதனதர்மத்தை வேரூன்றச் செய்த வேத வியாசர் நமக்கெல்லாம் ஆதி குருவாக விளங்குகிறார்.

    அவர் வடக்கில் "நைமி சாரண்யம்' என்ற இடத்தில் அமர்ந்து வேதங்களைத் தொகுத்து புராணங்களை இயற்றியதாகக் கூறப்படுகிறது. அவரைப் போற்றும் வகையில் இந்த பவுர்ணமி "வியாச பவுர்ணமி' என்றும் அழைக்கப்படுகிறது.

    தென்னகத்தில், சென்னை மாகாணத்தில் மகரிஷி வியாசரும், அவரது சீடர்களும் வாழ்ந்த ஒரு பகுதி "வியாசர் பாடி' என்றழைக்கப்படு கிறது.

    இவ்வூரில் அமைந்துள்ள ஸ்ரீமரகதாம்பாள் சமேத ரவீஸ்வரர் திருக்கோயிலில் சிவன் சந்நிதிக்குப் பின்புறம் வியாசருக்குத் தனி சந்நிதி அமைந்துள்ளது. இங்கு, வியாசர் புலித்தோல் மீது பத்மாசனத்தில் அமர்ந்து அருள் புரிகிறார். கல்வி, கேள்விகளில் தங்கள் குழந்தைகள் சிறந்து விளங்க இவரிடம் வேண்டிக் கொள்கின்றனர்.

    வியாச பவுர்ணமியன்று நாமும் வியாசரைத் துதித்து அவர் அருள் பெறுவதோடு நமக்கு குருவாய் அமைந்த அனைவரையும், அவர்கள் எங்கிருந்தாலும் அவர்களை மனதில் தியா னித்து வேண்டிக் கொண்டால் அவர்கள் அருளால் நம் வாழ்வு சிறக்கும்.

    • எனக்கு விடுதலை அளித்த வள்ளலே! உமக்கு ஒரு வரம் தந்தேன்! என்ன வேண்டும் கேளுங்கள்!
    • ரிமோட் செயலி உன்னோட மொபைல் போனிலயே வீட்ல இருக்கும் எல்லா சாதனங்களையும் தொடர்பு கொள்ளச்செய்துவிடும்.

    "தீபாவளி வருது! அந்த பழைய வெள்ளி விளக்கத்தொடச்சு வெய்ங்களேன்! நான் தான் காலையிலேர்ந்து பட்சணம் செய்திட்டு இருக்கேன்ல?"

    "அட என்னம்மா! மாலை மலரை முழுசாப்படிக்க விட மாட்டேங்கற! இரு வரேன்!"

    புகை எங்கும் புகை!

    "அய்யோ! யார் நீ? பூதமா?"

    "எனக்கு விடுதலை அளித்த வள்ளலே! உமக்கு ஒரு வரம் தந்தேன்! என்ன வேண்டும் கேளுங்கள்!"

    "நெஜம்மாவே நீ பூதமா? சரி, எனக்கு ஆபீஸ் போய் வர ஒரு கார் தாயேன்!"

    "அடசே! என்னய்யா மனுஷன் நீ? அங்க உள்ள உன் ஒய்ப் வீட்டு வேல செஞ்சு கஷ்டப்படறா! வீட்டுக்குத்தேவையான பொருளா எதுனா கேளு!"

    "அப்படி என்ன பொருள் இருக்கு ஸ்பெஷலா?"

    நானே சொல்றேன் கேட்டுட்டு முடிவு பண்ணு!"

    பாண்டல்லிஜெண்ட் (Pantelligent) ன்னு ஒரு வாணலி இருக்கு. அத அடுப்புல வெச்சு புளூ டூத்ங்கற டெக்னாலஜி கொண்டு உன் மொபைல் போனிலேர்ந்து வித விதமா சமையல் பண்ண உதவும்!"

    "என்னது புளூ டூத் வாணலியா?'

    "ஆமா! ஒரு செயலி மூலம் வேணுங்கற ரெஸிப்பிய உன் மொபைலில டவுன்லோட் பண்ணிட்டா, அத வெச்சு அந்த ரெஸிப்பி சொல்லும் ஒவ்வொரு ஸ்டெப்பையும் தானா செயல்படுத்தி உனக்கு வேணுங்கற பதார்த்தத்தை அமர்க்களமா சமைச்சுக்கொடுத்துடும்! எப்போ சூடு அதிகரிக்கணும் எப்ப குறைக்கணுமெல்லாம் அந்த செயலியே பாத்துக்கும்!"

    "அடேயப்பா!"

    "அடுத்து இன்னொரு ஐட்டம் இருக்கு! வீட்டம்மா கடுமையா வேலை செஞ்சுட்டு நிம்மதியா டீவியில் சீரியல் சினிமான்னு பாக்கறாங்க இல்ல? அந்த அனுபவத்தை அவங்களுக்கு மேம்படுத்திக்கொடுத்தா எத்தன சந்தோஷப்படுவாங்க!"

    "ஆமா கரெக்டுதான்! சொல்லு சொல்லு!"

    " சாம்சங் கம்பெனியில வளைந்த திரையுடன் ஒரு 4K Ultra HD smart LED TV கொண்டு வந்திருக்காங்க! சும்மா இல்லை, 88 இஞ்ச் ஸ்கிரீன், அப்படியே சினிமா தியேட்டர் கணக்கா இருக்கும் பார்க்கும் அனுபவம்! படம் பார்க்கும்போது ரஜினி அப்படியே நம்ம வீட்லயே வந்து வசனம் பேசறாமாதிரி நெருக்கமான எக்ஸ்பீரியன்ஸ்!" கிடைக்கும்.

    "அப்ப அது ஒண்ணு நோட் பண்ணிக்க!" வேறேன்ன?"

    "புராண்டோ (Pronto) என்னும் செயலிக்கம்பெனி Peel Smart Remote என்னும் கம்பெனியோடு ஜோடி போட்டுத்தயாரித்துள்ள ரிமோட் ஒண்ணு வந்திருக்கு."

    "ரிமோட்ட வெச்சுக்கிட்டு…?"

    "முழுசா கேளு! இந்த ரிமோட் செயலி உன்னோட மொபைல் போனிலயே வீட்ல இருக்கும் எல்லா சாதனங்களையும் தொடர்பு கொள்ளச்செய்துவிடும். அவ்வளவுதான்! உன்னோட மொபைல் ஒண்ணை வெச்சுண்டு எதையும் இயக்கலாம். அமெரிக்காவுல செய்வது போல நீயும் இதை வாங்கினதோட ஒரு ரோபோவையும் வாங்கி வெச்சுடு. மொபைல் போன் மூலமா என்ன டி.வி. புரோகிராம் இருக்குன்னு தெரிஞ்சு, அப்படியே அந்த டைமுக்கு டி.வி. ஆன் பண்றாமாதிரி செட் பண்ணிட்டு, கூடவே உனக்கு ஞாபகப்படுத்த அலாரமும் வெச்சுட்டா போதும், அந்த டைமுக்கு அலாரம் அடிக்க, நீ வந்து சோபாவுல உட்கார்ந்தா, டி.வி. தானா ஆன் ஆகி அந்த புரொகிராம் ஓட ஆரம்பிக்கும். மொபைல் அழுத்தி ரோபோவைக்கூப்பிட்டு பிரிட்ஜ்ஜிலேர்ந்து ஒரு சிப்ஸ் பாக்கெட்டும் கோலா பாட்டிலும் கொண்டு வரச்சொல்லிட்டா, நீ பாட்டுக்கு ஹாய்யா உட்கார்ந்துண்டு டி.வி. பார்க்கலாம்!"

    "அடடா கேட்கவே சொகம்மா இருக்கே! அப்புறம்?"

    "போன மாசம் ஏதோ டாகுமெண்ட்டைக்காணும்னு ஒய்ப்கிட்ட சத்தம் போட்டுண்டு இருந்தியே?"

    ஆமா! உனக்கெப்படி தெரியும்?'

    "நான் இந்த விளக்குலதானே இருந்தேன், ஏன் தெரியாம! இன்னமே அந்த கஷ்டமெல்லாம் இல்லாம இருக்க ஒரு சேப் லாக்கர் வந்திருக்கு. பூட்டு எங்க சாவி எங்கன்னு அல்லாட வேண்டாம். (Wi Fi) ஒய் பை இணையம் மூலம் தொடர்பு கொண்டு உன் குரலை வெச்சே லாக்கரைத்திறக்கலாம், மூடலாம்! First Alertன்னு ஒரு கம்பெனி இந்த மாதிரி ஒய் பை அலமாரி செய்யறாங்க!"

    "டெக்னாலஜி என்னவெல்லாம் பண்ணுது!"

    "இதையும் கேளு! நம்ம பிலிப்ஸ் கம்பெனி இருக்கு பாரு அவங்க கூட நுண்ணறிவு கொண்ட லைட்டெல்லாம் தயாரிக்க ஆரம்பிச்சாச்சு!"

    "என்னது நுண்ணறிவு கொண்ட விளக்கா?"

    "ஆமா! இந்த லைட்டை ரிமோட் வெச்சு பிரைட்டாகவோ இல்லை டிம்மாகவோ ஆக்கலாம். நீ ஆபீஸ்லேர்ந்து ஒரு ஜாலி மூடுல வரும்போது உன்னோட மொபைல் போன்லயே மூடை செட் பண்ணிட்டா, ஸ்விட்ச் போட்டவுடனே லைட் உன் மூடுக்கேத்தா மாதிரி எரியும்!"

    "இந்த ஒரு டெக்னாலஜி எனக்கு சரிப்பட்டு வராதே பூதமே!"

    "அது ஏன்?"

    "இப்படிதான் போன வாரம் வந்து ஆரஞ்சு பல்பைப்பொருத்தி ரொமாண்டிக்கான மூடுக்காக போட்டு வெச்சேன்!"

    "என்னது ஆரஞ்சு பல்பு ரொமாண்டிக்காவா? அடக்கஷ்டமே!

    "அதேதான்! என்ன அழுது வடிஞ்சுண்டுன்னு ஒரு விளக்குன்னு அவ உடனே ஆப் பண்ணிட்டா!"

    " உன்னையும் சேர்த்தா?'

    " ஏய் பூதமே! என்ன கேலியாபண்றே? இப்ப நீ சொன்ன ஐட்டம் எல்லாத்தையும் இங்க வீட்ல பொருத்து! ம் க்விக்!"

    "முடியாது எஜமானனே! நீ வெளக்கை தேய்ச்ச தேய்ப்புக்கு ஒரு வரம்தான் அனுமதி!"

    "சரி அந்த ஒரு வரத்தை தா!"

    "கொடுத்தாச்சே!

    "எப்பய்யா கொடுத்தே? அழுகுணி ஆட்டமா இருக்கே! பூதங்கள்ள கூட இந்த தப்பாட்டம் உண்டா?"

    "இல்லை எஜமான்னே! இந்த டெக்னாலஜி விஷயங்கள்ளாம் உனக்கு தெரிவித்து உன் பொது அறிவை மேம்படுத்தியதுதான் நான் அளித்த வரம்!. உங்க சான்ஸ் ஓவர்! வர்ட்டா!"

    "ஒரு வெளக்க துடைச்சு வெக்கச்சொன்னா என்ன வெட்டியா உட்கார்ந்துண்டு இருக்கீங்க?"

    "இல்ல பூதம்…?"

    "என்னது என்னைப்பார்த்தா பூதம் மாதிரி இருக்கா? இருக்காதா பின்னே? உங்க வீட்டு வேலையெல்லாம் மாஞ்சு மாஞ்சு இடுப்பொடிய செய்யறேனே! அதுக்கு எனக்கு பூதம்னு பேர் வெச்சுறதா?''

    லொட்!

    கடைசிச்செய்தியின் படி அரை மணிக்குப்பிறகு அந்த வீட்டு வாசலில் ஒரு ஆம்புலன்ஸ் வந்ததாக அறிகிறோம்!

    • 164 கிளைகள் இந்தியா முழுவதும் ஆடிட்டர் படிப்பை சிறப்பாக நடத்துவதற்கு வசதியாக இயங்குகின்றன.
    • சார்டர்ட் அக்கவுண்டன்சி கோர்ஸ் என்பது பிளஸ் டூ மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கான ஆடிட்டர் படிப்பு ஆகும்.

    "தி இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்ட் அக்கவுண்ட்டென்ட்ஸ் ஆப் இந்தியா

    என்னும் நிறுவனம் வழங்கும் படிப்பு தான் "ஆடிட்டர்" என சமூகத்தில் அந்தஸ்து பெற்ற பதவியை வழங்கும் ஆடிட்டர் படிப்பு ஆகும்.

    இந்த நிறுவனம் மத்திய அரசின் "மினிஸ்ட்ரி ஆப் கார்ப்பரேட் அப்பையர்ஸ்" என்னும் துறையின் கீழ் இயங்குகிறது. 1949 -ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட "தி சார்ட்டர்ட் அக்கவுண்ட்டென்ட்ஸ் ஆக்ட்" என்னும் சட்டத்தின் மூலம் இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டது. இதன் தலைமை அலுவலகம் டெல்லியில் இயங்குகிறது.

    இந்த நிறுவனத்தின் மண்டல அலுவலகங்கள் மும்பை, சென்னை, கொல்கத்தா, கான்பூர் மற்றும் புதுடெல்லி ஆகிய முக்கிய நகரங்களில் உள்ளன. இவை தவிர 164 கிளைகள் இந்தியா முழுவதும் ஆடிட்டர் படிப்பை சிறப்பாக நடத்துவதற்கு வசதியாக இயங்குகின்றன.

    அபுதாபி, மெல்போர்ன், சிட்னி, பக்ரைன், பிரிட்டிஷ் கொலம்பியா, கனடா, தோகா, துபாய், இந்தோனேசியா, ஜெட்டா, கென்யா, குவைத், நியூசிலாந்து, நைஜீரியா, சிங்கப்பூர், தாய்லாந்து, உகாண்டா, லண்டன், நியூயார்க், யு .எஸ். ஏ, சாம்பியா உட்பட 35க்கும் மேற்பட்ட இடங்களில் இந்நிறுவனத்தின் அலுவலகங்கள் ஆடிட்டர் படிப்பை நடத்துவதற்கு உதவியாய் இயங்குகின்றன.

    இந்த நிறுவனம் மூன்று வகையான முக்கிய படிப்புகளை நடத்துகிறது.

    அவை:

    1. சார்ட்ர்ட் அக்கவுண்டன்சி கோர்ஸ்.

    2. போஸ்ட் குவாலிபிகேஷன் கோர்சஸ் பார் மெம்பர்ஸ்

    3. சர்டிபிகேட் கோர்சஸ் பார் மெம்பர்ஸ் என்பன ஆகும்.

    இவற்றுள் சார்டர்ட் அக்கவுண்டன்சி கோர்ஸ் என்பது பிளஸ் டூ மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கான ஆடிட்டர் படிப்பு ஆகும்.

    ஆடிட்டர் படிப்பை படிப்பவர்களுக்கு தேவையான அனுபவ அறிவும் ஆழ்ந்த நூல் அறிவும் பெறுவதற்கு வசதியாக இந்த படிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

    சி .ஏ (ஆடிட்டர் ) படிப்பில் சேர்வது எப்படி?

    சி.ஏ படிப்பில் நேரடியாக சேர்வதற்கு இரண்டு வழிகள் உள்ளன.

    அவை,

    1. பவுண்டேஷன் கோர்ஸ் ரூட்

    2. டைரக்ட் என்ட்ரி ரூட்.

    1. பவுண்டேஷன் கோர்ஸ் ரூட் ( FOUNDATION COURSE ROUTE)

    பவுண்டேஷன் கோர்ஸ் எனப்படும் அடிப்படை படிப்பில் சேர பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்றவர்கள் தகுதியானவர்களாக கருதப்படுவார்கள்.

    இருந்தபோதும், இவர்கள் பத்தாம் வகுப்பு படிக்கின்ற பொழுதே தங்களது பெயரை இந்நிறுவனத்தில் பதிவு செய்து கொள்ளலாம். ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் ஒன்றாம் தேதிக்கு முன்பும், ஜூலை மாதம் ஒன்றாம் தேதிக்கு முன்பும் தங்கள் பெயரை பதிவு செய்யலாம்.

    இப்படி பத்தாம் வகுப்பு தகுதியை வைத்து முன்கூட்டியே பெயரை பதிவு செய்தவர்கள்,பிளஸ் டூ தேர்வு முடிந்தவுடன் பவுண்டேஷன் கோர்ஸ் தேர்வு எழுதலாம். அதாவது, மே /ஜூன் மாதம் அல்லது நவம்பர் /டிசம்பர் மாதங்களில் இந்த தேர்வு எழுதலாம்.

    பிளஸ் டூ மற்றும் பவுண்டேஷன் கோர்ஸ் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள், அடுத்த கட்ட தேர்வான இன்டர்மீடியட் கோர்ஸ் என்னும் தேர்வு எழுத தகுதி பெற்றவர்கள் ஆவார்கள்.

    இருந்தபோதும், இன்டர்மீடியட் கோர்ஸ் என்னும் அடுத்த கட்ட தேர்வு எழுதுவதற்கு குறைந்தபட்சம் எட்டு மாதங்கள் அவர்கள் தங்கள் படிப்பை தொடர வேண்டும்.

    பவுண்டேஷன் மற்றும் இன்டர்மீடியட் கோர்ஸ்களில் வெற்றி பெற்றவர்கள் கண்டிப்பாக நான்கு வாரங்கள் "கிரியேடிவ் கோர்ஸ் ஆன் இன்பர்மேஷன் டெக்னாலஜி அண்ட் சாப்ட் ஸ்கில்ஸ்" என்னும் படிப்பை முடித்து, சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

    ஆடிட்டர் படிப்பில் தேவையான அனுபவ அறிவு பெறுவதற்கு கண்டிப்பாக மூன்று வருடங்கள் "பிராக்டிகல் டிரெனிங்" என்னும் பயிற்சியை பெற வேண்டும். இந்த பயிற்சியை ஆடிட்டர்கள் இடம் பெற்றிருக்க வேண்டியது அவசியம் ஆகும்.

    ஆடிட்டரிடம் அனுபவ பயிற்சி பெறுவதற்கு முன்பே, இந்த நான்கு வார "இன்டர்கிரேட்டட் கோர்ஸ் ஆன் இன்பர்மேஷன் டெக்னாலஜி அண்ட் சாப்ட் ஸ்கில்ஸ்" என்னும் பயிற்சியை தனியாக பெற்று சான்றிதழ் பெறுவது நல்லது.

    ஆடிட்டரிடம் அனுபவ பயிற்சியை பெறுவதற்கு, இன்டர்மீடியட் கோர்ஸ் படிக்கும்போதே சேர்ந்து கொள்ளலாம் அல்லது இன்டர்மீடியட் கோர்ஸ் மற்றும் பைனல் கோர்ஸ் இரண்டிலும் வெற்றி பெற்ற பின்பும் சேர்ந்து கொள்ளலாம்.

    பொதுவாக, ஆடிட்டர் படிப்பில் இறுதித் தேர்வு எனப்படும் பைனல் எக்சாம் எழுதுவதற்கு முன்பே ஆடிட்டரிடம் அனுபவப் பயிற்சி பெற்றுக் கொள்வது சிறந்ததாகும்.

    போதுமான அனுபவ பயிற்சி பெற்ற பின்பு இரு தேர்வுகளிலும் வெற்றி பெற்ற பின்பு ஆடிட்டராக பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.

    2. டைரக்ட் என்ட்ரி ரூட்.

    "டைரக்ட் என்ட்ரி ரூட்"என்னும் முறையில் சி. ஏ படிக்க விரும்பும் மாணவ மாணவிகள் கண்டிப்பாக வணிகவியல் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

    பட்டப் படிப்பில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பட்ட மேற்படிப்பு படித்தவர்களும் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டியது அவசியம் ஆகும்.

    வணிகவியல் பாடம் அல்லாத மற்ற பாடங்களில் படிப்பை பட்டப் முடித்தவர்கள், கண்டிப்பாக பட்டப்படிப்பில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டியது அவசியம் ஆகும். இதேபோல், வணிகவியல் பாடம் அல்லாத பட்டப் மேற்படிப்பை முடித்தவர்களும் குறைந்தபட்சம் 60 சதவீதம் மதிப்பெண்கள் பெற வேண்டியது அவசியமாகும்.

    "இன்ஸ்டிடியூட் ஆப் கம்பெனி செகரட்டரிஸ் ஆப் இந்தியா" நடத்துகின்ற "இன்டர்மீடியட் லெவல் "தேர்வில் வெற்றி பெற்றவர்களும் இந்த படிப்பில் சேர்ந்து படிக்கலாம்.

    தேர்வு திட்டம்.

    பவுண்டேஷன் கோர்ஸ்.

    பவுண்டேஷன் கோர்ஸ் எனப்படும் தேர்வில்,

    1. பிரின்ஸ்பில்ஸ் அண்ட் பிராக்டிஸ் ஆப் அக்கவுண்டிங்

    2. பிசினஸ் லாஸ் & கரஸ்பாண்டன்ஸ் பிசினஸ் அண்ட் ரிப்போர்ட்டிங் .

    3. பிசினஸ் மேத்தமேடிக்ஸ் & லாஜிக்கல் ரீசனிங் மற்றும் ஸ்டாடிஸ்டிக்ஸ்,

    4. பிசினஸ் எக்கனாமிக்ஸ் & பிசினஸ் அண்ட் கமர்சியல் நாலெட்ஜ் ஆகிய பாடங்களில் தேர்வு நடத்தப்படும்.

    இன்டர்மீடியட் கோர்ஸ்.

    இன்டர்மீடியட் கோர்ஸ் என்னும் தேர்வில் குரூப் 1 குரூப் 2 ஆகிய பிரிவுகளாக தேர்வுகள் நடத்தப்படுகின்றன

    குரூப்-1 தேர்வில்,

    1. அக்கவுண்டிங்

    2. கார்ப்பரேட் அண்ட் அதர் லாஸ்

    3. காஸ்ட் அண்ட் மேனேஜ்மென்ட் அக்கவுண்டிங்

    4. டேக்ஸ்சேசன்

    பாடங்களில் தேர்வுகள் நடத்தப்படும்.

    குரூப் 2 தேர்வில்,

    1. அட்வான்ஸ் அக்கவுண்டிங்

    2. ஆடிட்டிங் அண்ட் அசுரன்ஸ்

    3. என்டர்பிரைஸ் இன்பர்மேஷன் சிஸ்டம் அண்ட் ஸ்ட்ராட்டஜிக் மேனேஜ்மென்ட்,

    4. பைனான்சியல் மேனேஜ்மென்ட் அண்ட் எகனாமிக்ஸ் பார் பைனான்ஸ் ஆகிய பாடங்களில் தேர்வுகள் நடத்தப்படும்.

    பைனல் கோர்ஸ்

    பைனல் கோர்ஸ் எனப்படும் இறுதி தேர்வில் குரூப் -1 மற்றும் குரூப் -2 ஆகிய பிரிவுகளில் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

    குரூப் -1 தேர்வில்,

    1. பைனான்சியல் ரிப்போர்ட்டிங்

    2. ஸ்ட்ராட்டஜிக் பைனான்சியல் மேனேஜ்மென்ட்

    3. அட்வான்ஸ் ஆடிட்டிங் அண்ட் புரொபஷனல் எத்திக்ஸ்,

    4. கார்ப்பரேட் அண்ட் எகனாமிக் லாஸ்

    ஆகிய பாடங்களில் தேர்வுகள் நடத்தப்படும்.

    குரூப் 2 பிரிவில்

    1. ஸ்ட்ராட்டஜி காஸ்ட் மேனேஜ்மென்ட் அண்ட் பெர்பார்மன்ஸ் எவாலுவேசன்,

    2. விருப்ப பாடம் (கீழே குறிப்பிட்டுள்ள பாடங்களில் ஏதேனும் ஒரு விருப்ப பாடத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்)

    a) ரிஸ்க் மேனேஜ்மென்ட்

    b) பைனான்சியல் சர்வீசஸ் அண்ட் கேப்பிட்டல் மார்க்கெட்ஸ்,

    c) இன்டர்நேஷனல் டேக்ஸ்சேசன்,

    d) எக்கனாமிக் லாஸ்

    e) குளோபல் பைனான்சியல் ரிப்போர்ட்டிங் ஸ்டாண்டர்ட்ஸ்

    f) மல்டி டிசிப்ளினரி கேஸ் ஸ்டடி

    3. டைரக்ட் டாக்ஸ் லாஸ் அண்ட் இன்டர்நேஷனல் டேக்ஸ்சேசன்

    4. இன்டைரக்ட் லாஸ்

    ஆகிய பாடங்களில் தேர்வுகள் இடம் பெறும்.

    ஏராளமான வேலை வாய்ப்புகள்

    "சார்ட்டட் அக்கவுண்டன்ட்" படிப்பை முடித்தவர்கள் மிகச்சிறந்த திறமைகளை கொண்டவர்களாக இருப்பதால், இவர்களுக்கு பைனான்சியல் ரிப்போர்ட்டிங், நேஷனல் அண்ட் இன்டர்நேஷனல் டேக்ஸ், பைனான்ஸ் அண்ட் கார்ப்பரேட் லா போன்ற துறைகளில் நல்ல வேலை வாய்ப்புகள் உள்ளன.

    இவர்கள் ஆடிட்டராகவும் சொந்தமாக தொழில் செய்யலாம். மேலும், அரசுத்துறை கூட்டுறவு சங்கங்கள் தனியார் நிறுவனங்கள் போன்றவற்றில் அதிக வேலை வாய்ப்புகள் இவர்களுக்கு உள்ளன.

    இந்தியாவில் ஜி.எஸ்.டி எனப்படும் "கூட்ஸ் அண்ட் சர்வீசஸ் டேக்ஸ்" அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு, தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், சேவை அமைப்புகள் போன்றவற்றில் வரிகளின் தாக்கத்தை அறிந்து கொள்வதற்கு ஆடிட்டர்களின் உதவி கண்டிப்பாக தேவை.

    பல நிறுவனங்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை சட்டபூர்வமாக செலுத்துவதற்கு, ஆடிட்டர்களின் உதவியை நாடுகிறார்கள். இவை தவிர, ஒரு நிறுவனத்தின் நிதி நிலைமையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்கும், தொழில் முனைவோருக்கு ஆலோசனைகள் வழங்கவும், துறை தணிக்கைகளுக்கு துணை நிற்கவும் ஆடிட்டர்களின் சேவை பெருமளவில் உதவியாய் அமைகிறது.

    மேலும் விவரங்களுக்கு,

    1. தி இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்ஸ் ஆப் இந்தியா ஐ.சி.ஏ.ஐ. பவன், 29, செக்டார் 62 நொய்டா-201 309.

    இணையதள முகவரி : www.icai.org.

    2. தி இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்ட் அக்க வுன்டன்ட்ஸ் ஆப் இந்தியா ஐ.சி.ஏ.ஐ. பவன், 122 மகாத்மா காந்தி ரோடு, நுங்கம்பாக்கம், சென்னை-600 034.

    தொடர்புக்கு: nellaikavinesan25@gmail.com

    • பல்வேறு துன்பங்களைத் தாங்கிக் கொண்ட தாயின் அருமையை எத்தனைபேர் உணர்ந்திருக்கிறோம்.
    • தன் மகனோ, மகளோ வெறுப்புக்குரியவர்களாகவே இருந்தாலும் எந்தத் தாயும் அவர்கள் பசிபொறுக்கமாட்டாள் என்பதை மட்டும் உணருங்கள்.

    இந்த உலகில் கலப்படம் இல்லாத ஒரே பொருள் உயிர் அமுதமாகிய தாய்ப்பால். நம்மிடம் கலப்படம் இல்லாமல் அன்பு செலுத்தும் ஒரே சொந்தமும், நாம் நேரில் காணும் தெய்வமும் நம் தாய்தான். பாலூட்டி, தாலாட்டி, தன்னை இழைத்து உருக்கி நம்மை வளர்த்த தாயின் அன்பிற்கும், தியாகத்திற்கும் ஈடு இணையோ, விலைமதிப்போ கிடையாது.

    உலகிற்கெல்லாம் ஒளிதந்து உயிர்களைக் காக்கின்ற கதிரவனையே "தாய்" என்று ரிக்வேதமும், இதர இலக்கியங்களும் கூறுகின்றன. கவியரசு கண்ணதாசனும் எழுகதிராய் தோன்றி விரிகதிராக ஒளியால், வாழ்வு தரும் கதிரவனை "ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி" என்று பாடுகின்றார் என்றால் அனைத்திற்கும் மேலானவள் தாய் என்பதை அனைவரும் உணரவேண்டும்.

    நாட்களைக் கொண்டாடுகின்ற நாம் மனிதர்களைக் கொண்டாடத் தவறிவிடுகிறோம். யாரை வேண்டுமானாலும் நாம் மறந்துவிடலாம். ஆனால், நம்மைப் பெற்று வளர்த்து ஆளாக்கி இவ்வுலகில் வாழவைத்துள்ள நம் தாய்-தந்தையை மறந்து தன்னலமாய் வாழ்கின்றோம் என்றால் நமக்கு அந்தப் பாவத்தில் இருந்து உய்வே இல்லை என்கின்றார் திருவள்ளுவர்.

    "எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

    செய்ந்நன்றி கொன்ற மகற்கு''

    என்ற குறட்பாவில் நேரடியாக செய்நன்றி மறந்த பிள்ளைகளைத்தான் சொல்கின்றார். இங்கே பிள்ளைகள் என்றால் அது ஆண், பெண் இருவரையுமே குறிக்கும்.

    பத்துகிலோ அரிசியை இரண்டு பைகளில் பிரித்து அவற்றை இரண்டு கைகளில் சுமந்து கொண்டு நடந்துவர வேண்டுமென்றால் இரண்டு தெரு நடப்பதற்குள் பத்து இடத்தில் அப்பைகளை கீழே வைத்து வைத்து எடுத்து வர வேண்டியிருக்கும்.

    ஆனால் வயிற்றில் பத்துமாதம் சுமந்து, படாதபாடுபட்டு, உயிர்போய் மீண்டுவரும் வலியை அனுபவித்து, மயக்கம் தெளிந்த நொடிமுதல், தன்இறுதி மூச்சுவரைக்கும் தான்பெற்ற பிள்ளைகளின் நலன் ஒன்றையே தன் வாழ்நாள் லட்சியமாக கொண்டு வாழும் அன்னைக்கு ஈடாக ஒருவரைச் சுட்டிக்காட்ட முடியுமா இந்த உலகில்!

    உலகில் மிகக் கடினமான வேலை எது தெரியுமா? ஒரு குழந்தையை வளர்த்து, நல்ல பண்புகள், குணநலன்களை கற்றுத்தந்து, சோர்வடையும்போது தட்டிக்கொடுத்து, அப்பிள்ளை விரும்புகின்றதை தேடித்தந்து, கல்வியும், சுயசார்பும் கொடுத்து, நல்ல மனிதனாகவோ, நல்ல பெண்ணாகவோ உருவாக்குவதுதான்!

    இக்கடினமான பணியை மிக இயல்பாக ஏற்றுக்கொண்டு தன் பசி, தேவைகள் அனைத்தையும் துறந்து தன் பிள்ளைகளுக்காக பல்வேறு துன்பங்களைத் தாங்கிக் கொண்டு செய்கின்ற தாயின் அருமையை எத்தனைபேர் உணர்ந்திருக்கிறோம் என்று நாம் எண்ணிப் பார்க்கவேண்டும்!

    "மாதா உடல் சலித்தாள்" என்று பிள்ளையின் வளர்ப்பில் தாய் எத்தனை துன்பமடைகிறாள் என்பதை பட்டினத்தார் பாடுவார்.

    வரலாறு முழுக்க வெற்றி பெற்றவர்களில் பலபேர் அவர்களின் அன்னையின் தியாகத்தால் உருவானவர்கள். கணவனால் கைவிடப்பட்ட பின்னரும் தன் பிள்ளையின் நல்வாழ்விற்காக அத்தனை துயரங்களையும் தாங்கிக்கொண்டு வீரம் செறிந்த மகனாக அவனை வளர்த்து ஆளாக்கி, ஒரு புதிய சாம்ராஜ்ஜியத்தையே தன் மகன் உருவாக்க காரணமாக இருந்தவர் மராட்டிய மாமன்னர் வீரசிவாஜியின் தாயான ஜீஜாபாய் ஆவார்.

    பெற்றெடுத்த மகன் கூட அல்ல, இறந்துபோன தன் கணவர் தத்து எடுத்த மகன் மீதும் அளவு கடந்த பாசத்தை வைத்ததோடு, அரசனாக வேண்டிய அச்சிறுவனுக்காக ஆங்கிலேயர்களின் கொடூரமான தாக்குதல்களையும் முறியடித்து தன் மண்ணையும், மகனையும் காத்தவர் கர்நாடகாவின் கிட்டூர் ராணி சென்னம்மா.

    இப்படி வரலாற்றில் சாதனை புரிந்த தாய்மார்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகும். அரசியல் என்றில்லை சாதாரண குடும்பத்துப் பெண்களும் தன் பிள்ளைகளுக்காக எந்த அளவிற்கு தியாகம் புரிந்தவர்கள் என்பதை அந்த பிள்ளைகள் பேரும் புகழும் பெற்ற பிறகும் கூட எப்போதும் தன் அன்னையை போற்றி வாழ்ந்தவர்கள் என்பதற்கு எடுத்துக்காட்டு முத்தமிழறிஞர் கலைஞர், மக்கள்திலகம் எம்ஜி.ஆர், நடிகர்திலகம் சிவாஜிகணேசன் என்று பட்டியல் உள்ளது.

    "அம்மா என்றழைக்காத உயிரில்லையே

    அம்மாவை வணங்காமல் உயர்வில்லையே"

    என்ற பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட திரைப்பாடல் காவியக்கவிஞர் வாலியின் அற்புதப்படைப்பு. கண்ணை மூடி அப்பாடலைக் கேட்கும்போதெல்லாம் நம்முடைய தாயின் தியாகம் நினைவுக்கு வருவதை நம்மால் தடுக்க இயலுமா?

    நீங்கள் உங்களை பெற்று வளர்த்த அன்னையை மிகப் பெரிதாக கொண்டாட வேண்டும் என்றெல்லாம் அவள் எதிர்ப்பார்ப்பதில்லை. மாறாக, வளர்ந்து ஆளான பிள்ளைகள் அது ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் பெற்றவர்களுக்கான அடிப்படைத் தேவைகளை அவர்கள் உயிருடன் இருக்கும் காலம்வரை நிறைவேற்றி வருவதும்,

    வயதான காலத்தில் நோய்வாய்ப்பட்டு துன்பப்படும் வேளையில், "கலங்காதீர்கள் நான் இருக்கிறேன்; எதுவாக இருந்தாலும் நான் செய்கிறேன், கடைசிவரை நான் பார்த்துக்கொள்வேன்" என்று அவர்களின் கரங்கைளப் பற்றி ஆறுதல் வார்த்தைகளைத் தந்து அவர்களை மனக்காயம் ஏதுமில்லாமல் வைத்துக்கொள்வதையும்தான் எல்லாப் பெற்றோரும் எதிர்பார்க்கிறார்கள்.

    தாய்க்கும் தந்தைக்கும் செய்ய வேண்டிய வாழ்நாள் கடமைகளை நாம்தான் முன்னிருந்து, பொறுப்புகளை முழுமனதுடன் ஏற்றுக்கொண்டு செய்யவேண்டுமே தவிர, நம்முடன் வாழவந்தவர்கள் அதாவது நம்முடைய வாழ்க்கைத் துணை செய்யவேண்டும் என்று எதிர்பார்ப்பது முற்றிலும் தவறு. ஏனென்றால் நம் தாய்-தந்தை நமக்குத்தான் எல்லாத் தியாகங்களையும் செய்து நம்மை உருவாக்கி இருக்கிறார்கள்.

    எங்கோ பிறந்து வளர்ந்து நம்மைத் திருமணம் செய்துகொண்டு நம்முடன் வாழவந்தவர்கள் மீது நம்முடைய கடமைகளை திணிப்பது மடத்தனம். அதனால்தான் பல பிரச்சினைகள் உருவாகி முதியோர் இல்லங்கள் பெருகி வருவதும், வயதானவர்கள் பலர் தான்பெற்ற மக்களாலேயே கைவிடப்பட்டு கோயில் வாசல்களிலும், சாலைகளிலும், பேருந்து நிலையங்களிலும் மானம், சுயமரியாதையை விட்டு கைநீட்டி பிச்சைவாங்கி பிழைக்கிறார்கள். தன் வாழ்வை முடித்துக் கொள்ள தனக்கு உரிமையுண்டு என்ற சட்டமிருந்தால் பல முதியோர் இல்லங்களும், பிச்சைக்காரர்களும் இங்கே இருக்கமாட்டார்கள் என்பதை நினைவில் வையுங்கள்.

    "பெற்றோரைக் கவனிப்பதற்கு எனக்கு நேரமில்லை; என்னுடைய வேலைப்பளுவால் என்னுடைய கடமையை செய்யமுடியவில்லை; என் குடும்பத்திற்கே என்னுடைய வருவாய் போதவில்லை, என் பிள்ளைகளை படிக்கவைக்க வேண்டும், என் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும், இதில் தாய்-தந்தையை பராமரிக்க, மருத்துவம் உள்ளிட்ட செலவுகளைச் செய்ய பணமோ, நேரமோ என்னால் ஒதுக்க முடியவில்லை" என்றெல்லாம் பல்வேறு காரணங்கள், சாக்குபோக்குகள் சொல்லி தாய்-தந்தையை கைவிட்டுவிடுவோர் தன் வாழ்நாளிலேயே நரகத்தை சந்திக்கவேண்டிவரும் என்பதையும், நாம் நம் சூழ்நிலையை காரணம் காட்டி பெற்றவரை நிராகரித்து விடுவதுபோல் தன் சுகத்தையும், தன் நலத்தையும் பெரிதாக நினைத்து குழந்தைப் பருவத்தில் நம்மை அவர்கள் கைவிட்டிருந்தால் நாம் என்ன ஆகியிருப்போம் என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

    இருக்கும்போது கவனிக்காமல் விட்டுவிட்டு, இறந்தபின்னர் கலங்கி என்னசெய்வது? தற்காலத்தில் சிலர் கலங்குவதுகூட இல்லை. அப்பாடா! தொல்லைவிட்டது என்றல்லவா நினைக்கிறார்கள்!

    பிள்ளைப்பேற்றின் போது ஆண்கள் உடன்இருப்பதை நம்சமூகம் அனுமதிப்பதில்லை. காலப்போக்கில்ஆண் மருத்துவர்கள் பிரசவம் பார்ப்பதை ஏற்றுக்கொண்டுவிட்டார்கள்.

    இப்போதெல்லாம் மேலைநாடுகளில் குழந்தை பிறக்கும்போது பிரசவம் நடைபெறுவதை பார்க்க வேண்டும் என்று கணவன் விரும்பி கூட இருப்பதை அனுமதிக்கிறார்கள்.

    வலியால் தாயின் உயிர்போய் மீண்டு வந்துதான் ஒரு குழந்தை இந்த மண்ணிற்கு வந்துள்ளது என்பதை உணர்கின்ற கணவன், அடுத்த பிரசவத்திற்கு தன் முதல் குழந்தையும் கூட இருந்து பார்க்கவேண்டும் என்று, தன் தாய் தன்னை எப்படிப் பெற்றெடுத்தாள் என்பதை அப்பிள்ளையும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதையும் புலப்படுத்தி அழைத்து வருகின்றான். இது மேலைநாடுகளில் சாதாரண நிகழ்வாகி அதையும் சமூகவெளிகளில் காட்சிப்படுத்தி வருகிறார்கள்.

    நம் நாட்டில் எல்லா தினங்களைப் போல் "அன்னையர் தினம்" என்கின்ற அற்புதமான நாளும் அம்மாவுடன் எடுத்துக் கொள்ளும் நிழற்படம், காணொளிப் பதிவு, ஏதாவது ஒரு கதை போன்றவற்றை சமூக வலைதளங்களில் பதிவிடுவதும் அல்லது மற்றவர்கள் பதிவிட்டதைப் பார்த்து தன் பங்குக்கு தானும் எதையாவது காப்பி எடுத்து பதிவிடுவதோடும் சரி என்றாகிவிட்டது.

    குறைந்தபட்சம் அன்னையர் தினத்திலாவது தன் அம்மாவிற்கு பிடித்தமானது எது என்பதை அறிந்து அதனை நிறைவேற்றித்தருவது, அம்மாவை வெளியில் எங்காவது அழைத்துச் சென்றுவருவது, அன்னையின் மனதில் ஏதேனும் வேதனைகள், ஏக்கங்கள், கவலைகள் இருந்தால் அவற்றை மிக மென்மையாகவும், பொறுமையாகவும் கேட்டறிந்து நம்மால் எதை தீர்க்கமுடியும் என்பதை உணர்ந்து தீர்ப்பதற்கு முயற்சி செய்வதும், அன்னையர் தினம் மட்டுமல்லாமல், அன்னையின் வாழ்நாள் இறுதிவரை அவரை மகிழ்ச்சியாக, நிம்மதியாக வைத்துக்கொள்வது என்பதையும் பின்பற்ற வேண்டும்.

    அவரவர் வாழ்க்கைச் சூழலைப் பொறுத்து எங்கோ ஒருசிலருக்கு தன் பெற்றோரின் மீது சில கசப்பான நினைவுகள், மனவேதனைப்படும் அனுபவங்கள் வாய்த்திருக்கக் கூடும். அவற்றின் காரணமாக தாய்-தந்தையை நினைத்தாலே வெறுப்பு ஏற்படவும் கூடும். எல்லாவற்றிலும் சில விதிவிலக்குகள் இருக்கும்தான். அப்படிப்பட்டவர்களும் தன் வாழ்நாளில் ஏதேனும் நன்மை செய்து மனநிம்மதி தேட வேண்டுமென்றால் தன் பெற்றோர் மீதான வெறுப்பை தள்ளிவைத்துவிட்டு அவர்களின் இறுதிமூச்சுவரை அவர்களை கவனிக்கவேண்டும் என வலியுறுத்த விரும்புகிறேன். தன் மகனோ, மகளோ வெறுப்புக்குரியவர்களாகவே இருந்தாலும் எந்தத் தாயும் அவர்கள் பசிபொறுக்கமாட்டாள் என்பதை மட்டும் உணருங்கள்.

    வசதியான குடும்பமாக இருந்தாலும், ஏழ்மையான குடும்பமாக இருந்தாலும் இந்த மண்ணிலே ஒவ்வொரு தாயிடமும் அவள் பிள்ளைகளை வளர்த்தெடுத்ததில் ஒரு ஆழ்ந்த, அழுத்தமான பல துன்பங்கள் நிறைந்த உண்மைக் கதை உள்ளது என்பதை மறந்துவிடாதீர்கள். உங்கள் தாயால் நீங்கள் வளர்க்கப்படடிருக்கிறீர்கள் என்றால் உங்களிடம் சொல்லப்படாத துன்பக் கதையும் உங்கள் தாயிடத்தில் இருக்கும் என்பதை நினைவில் கொண்டு தாயைப் போற்றுங்கள். தாய்மையைப் போற்றுங்கள். திருக்கோயில் தெய்வங்கள் எல்லாம் நம் அம்மாதான் என்பதை மனதில் இருத்தி செயல்பட்டால் எல்லா நாளும் அன்னையர் தினமே!

    தொடர்புக்கு-ruckki70@yahoo.co.in

    • தை முதல் நாள் இந்தத் திருவிழா நிறைவடைந்த பின்னர், தை இரண்டாம் நாள் திருவூடல் திருவிழா நடைபெறும்.
    • அர்த்தநாரீஸ்வரர் என்று சிவனாருக்குப் பெருமை சேர்த்தாலும், அர்த்தநாரீஸ்வரத் தத்துவத்திற்கு அம்பிகையே காரணம்.

    ஞானத் தபோதனரை வாவென்று அழைக்கும் திருவண்ணாமலைத் திருத்தலத்தில் அம்பாள் எழுந்தருளித் திருக்கோலம் காட்டுகிறாள். இவளுக்கு உண்ணாமுலை அம்மன் என்றே திருநாமம்.

    அம்பாள் இத்தலத்தில் எழுந்தருளியதே வெகு சிறப்பானதாகும். திருக்கைலாயத்தில் ஐயனும் அம்பிகையும் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, விளையாட்டாக ஐயனின் திருக்கண்களைத் தன்னுடைய கைகளால் அம்பிகை பொத்திவிட்டாள். விளையாட்டு என்றாலும் எந்தச் செயலுக்கும் எதிர்வினை உண்டல்லவா! அதன்படி, உலகம் இருண்டது. உயிர்களெல்லாம் நடுங்கின. பிரளயம் சூழ்ந்தது. தன்னுடைய செயலால், அகாலத்தில் பிரளயம் வந்ததை உணர்ந்த அம்மை, தன் செயலுக்குப் பரிகாரம் தேட விழைந்தாள். பூவுலகம் அடைந்து காஞ்சிபுரத்தில் மணலால் சிவலிங்கம் அமைத்து தவம் செய்து இறைவனை வழிபட்டாள். இறைவனும் காட்சி கொடுத்து அம்பிகையை ஏற்றார்.

    இந்நிலையில், சில காலம் முன்னர், பிருங்கி முனிவர் செய்ததொன்று அம்பிகையின் நினைவில் ஊசலாடியது. சிவனை மட்டுமே பிருங்கி வணங்குவார். அம்பிகை அருகில் இருந்தாலும் ஒதுக்கிவிட்டுச் சிவனை மட்டுமே சுற்றிவருவார். ஒருமுறை, பிருங்கி திருக்கைலாயம் வந்தபோது, வேண்டுமென்றே சிவனாரின் அருகில் அன்னை நின்றுகொண்டாள். ஐயனோடு ஒட்டி நின்றுவிட்டால், 'வலம் வரும்போது தன்னையும் சேர்த்துத்தானே வலம் வரவேண்டும்; பிருங்கி என்ன செய்கிறார் பார்க்கலாம்' என்று அம்பிகை எண்ண, பிருங்கியோ இன்னும் வேறு விதமாக எண்ணினார். மானுட உருவில் இருந்தால்தானே, அருகருகே நிற்கும் ஐயனுக்கும் அம்பிகைக்கும் இடையில் நுழையமுடியாது? என்று வண்டு வடிவம் எடுத்தார். இடையில் புகுந்தார். சிவனாரை மட்டுமே வலம் வந்தார்.

    இப்போது அம்பிகைக்கு இந்நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது. என்னதான் ஐயனுக்கு அருகில் நின்றாலும், தனியாக இருந்ததால்தானே பிருங்கியால் இடைபுக முடிந்தது? ஐயனிடமிருந்து பிரிக்கமுடியாத நிலையை அடைந்துவிட்டால்......? சிவனாரிடமே இதைக் கேட்க...... திருவண்ணாமலை சென்று தவம் செய்யச் சொன்னார் அவர். ஆமாம், திருவண்ணாமலையில் தவம் செய்தால், தாம் எழுந்தருளி இடப்பாகத்தில் அம்மையை அரவணைப்பதாகவும் கூறினார்.

    இதன்படியே அம்பிகையும் செய்ய, தம்முடைய வாம பாகத்தில் அம்பிகையை ஏற்றுக்கொண்டு, மாதொரு பாதியனாக, அர்த்தநாரீஸ்வரர் என்னும் புதிய திருநாமம் கொண்டார்.

    அண்ணாமலையாரின் திருவாட்டியாக, உண்ணாமுலை என்னும் திருநாமத்தோடு அம்பிகையும் இங்கே நிலைகொண்டாள்.

    வாமபாகத்துக்குரியவள் என்னும் பெருமையை அம்பிகையின் கோவில் அமைப்பிலும் காணலாம். திருவண்ணாமலைத் கோவிலில், ஐயன் சந்நிதிக்கு இடது பக்கத்தில், மூன்றாம் பிராகாரத்தின் வடமேற்குப் பகுதியில் இருக்கிறது உண்ணாமுலையம்மன் சந்நிதி.

    அம்பிகைக்கு அபீதகுசாம்பாள், திருக்காமகோட்டமுடைய தம்பிராட்டி, உலகுடைப்பெருமான் நம்பிராட்டி, காமகோட்டமுடைய உண்ணாமுலையாள் என்னும் திருநாமங்களும் உண்டு.

    அம்பாள், நின்ற கோல நாயகி. திருக்கரங்களில் தாமரை மலர் ஏந்தி நிற்கிறாள். சின்னஞ்சிறு பெண்போல திருப்பாதங்களைச் சேர்த்து வைத்துக் கொண்டிருக்கிறாள். சாந்தம் நிறைந்த முகம், எல்லையற்ற கருணையைக் கொட்டும் விழிகள்:

    சித்தாந்தத்தெருளே வருக சிவஞானத் தேனே வருக திருவாளர்

    தேடி வைத்தப் பேரின்பத் திரளே வருக சன்மார்க்க

    அருளே வருக திருவருணை அருந்தாமுலையாய் வருக

    அலகில் விளையாட்டு அயரும் எங்கள் அம்மே வருக வருகவே என்று அம்மையைப் போற்றுகிறது உண்ணாமுலையம்மன் பிள்ளைத் தமிழ்.

    பிள்ளைகளான விநாயகரும் முருகரும், சாதாரண மானுடப் பிள்ளைகளைப் போல் பாலருந்தா முலைகளைக் கொண்டவள் என்பதாலேயே உண்ணாமுலை என்று அம்பாளுக்குத் திருநாமம். இந்தத் திருநாமத்திற்கு சித்தாந்த ரீதியாகவும் வேதாந்த ரீதியாகவும் வேறு சில விளக்கங்களும் உள்ளன.

    அர்த்தநாரீஸ்வரர் என்று சிவனாருக்குப் பெருமை சேர்த்தாலும், அர்த்தநாரீஸ்வரத் தத்துவத்திற்கு அம்பிகையே காரணம். சிவந்த செஞ்சடைக் கற்றை – கருங்கூந்தல் அலை; கொன்றை மாலை – மல்லிகைப் பூமாலை; திரிசூலம் – நீலோற்பல மலர்; பவள நிறம் – பச்சை நிறம்; தண்டை – சிலம்பு; அகன்ற மார்பு – கச்சணிந்த மார்பு; இவ்வாறாக, ஆணும் பெண்ணுமாக, ஐயனும் அம்மையும் காட்சி கொடுத்தார்கள்.

    ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் எதிரிகளல்ல, போட்டியாளர்களல்ல, ஆயின் சமமானவர்கள், இணையானவர்கள், இணைந்து செயல்படவேண்டியவர்கள் என்பதை உலகுக்கு உணர்த்தினார்கள். இவ்வாறு ஐயனுக்குப் புது பெருமையை அம்பிகை சேர்த்த அந்தத் திருநாள், கார்த்திகை மாதத்துப் பவுர்ணமியும் கார்த்திகை நட்சத்திரமும் கூடிய திருநாள். இந்த நாளே திருவண்ணாமலையில் தீபத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.

    அண்ணாமலை என்னும் பெயருக்கு 'அணுக முடியாத' என்று பொருள். உண்ணாமுலை என்னும் பெயருக்கு 'உண்ணாத' என்று பொருள். ஆனால், ஐயனும் அம்மையும் அன்பினால் அணுகக்கூடியவர்களாக, ஞானம் ஊட்டுகிறவர்களாக இங்கே எழுந்தருளியிருக்கிறார்கள். மார்கழி மாதக் கடைசியில் கோவிலில் பத்து நாள் திருவிழா நடைபெறும். தை முதல் நாள் இந்தத் திருவிழா நிறைவடைந்த பின்னர், தை இரண்டாம் நாள் திருவூடல் திருவிழா நடைபெறும்.

    அம்பிகையை உதாசீனம் செய்துவிட்டு ஐயனை மட்டும் வணங்கினாரில்லையா பிருங்கி முனிவர்? அவர் அவ்வாறு செய்தபோதும் அவருக்குச் சிவனார் முக்தி வழங்கினார். அர்த்தநாரீஸ்வரர் ஆனபின்னரும் உண்மை உணராத பிருங்கிக்கு முக்தியா என்று அன்னை சினந்தாள். பிருங்கி எப்படியோ போகட்டும், ஆனால், சிவனார் அவருக்கு முக்தி கொடுக்கலாமா? தன் இருப்பிடம் புகுந்து கதவடைத்துக்கொண்டாளாம் அம்பிகை. அம்பிகை சினம் கொண்டுவிட்டாள் என்பதைத் தெரிந்துகொண்ட சிவனார், சுந்தரமுர்த்தி சுவாமிகளைத் தூது அனுப்பினாராம். அம்பிகை அதற்கும் மசியவில்லை.

    சிவனார் பாவம், தடுமாறித்தான் போனார். பக்தரையும் விடமுடியவில்லை; அம்பிகையையும் ஒதுக்கமுடியவில்லை. ஆகவே, மீண்டும் அம்பிகைக்குத் தூது அனுப்பினார். அம்பிகையின் கோபம், செல்லக் கோபம்தானே! யாரிடமும் சினம் கொள்ளாத ஜகன்மாதா ஐயனிடம் மட்டும் சினம் கொள்வாளா என்ன? சினம் தணிந்து வெளிப்பட்டாள். ஐயனுக்கு அருகில் வந்து அமர்ந்தும் கொண்டாள்.

    இதைத்தான், திருவூடல் விழாவில் மீண்டும் நடித்துக் காட்டுகிறார்கள். முதல் நாள் இரவு அம்பிகை ஊடல் கொண்டுவிடுவாள். சினத்தை எப்படித் தணிப்பது என்று எண்ணித் தணிக்கும் சிவனார், அன்றிரவு குமாரக்கோவிலில் சென்று தங்கிவிடுவார். அடுத்த நாள் காலையில் கிரிவலம் செல்வார். கிரிவலத்தின்போது, பிருங்கி முனிவருக்குக் காட்சி கொடுத்து அருள்வார். பின்னர் அம்பிகைக் கோவிலை அடைந்து ஊடலுக்கு விளக்கம் தந்து அம்பிகையை சமாதானப்படுத்துவார்.

    சின்னச் சின்ன கோபதாபங்கள் இருந்தாலும், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தும் உதவி செய்தும் வாழுகிற வாழ்க்கைத் தாத்பரியத்தை எடுத்துக்கூறும் விதமாக ஐயனும் அம்பிகையும் நடித்துக் காட்டுகிற இந்நிகழ்ச்சி நடைபெறுகிற வீதிக்கே, திருவூடல் திருவீதி என்றுதான் பெயர்.

    குறையாத பொருளாம், மாற்றறியாப் பொன்னாம் உண்ணாமுலை அம்மன் அள்ள அள்ளக் குறையாது அருளக் காத்திருக்கிறாள்; பாவப்பிணிக்கு மருந்தாம் இவளை வணங்குவோம்; வழிபடுவோம்.

    தொடர்புக்கு:- sesh2525@gmail.com

    • இந்தியாவில் ஒரு லட்சம் பேரில் வெறும் 8 பேர் மட்டுமே உறுப்பு தானம் செய்ய முன் வருகின்றனர்.
    • உடல் உறுப்பு தானம் செய்வதில் இந்தியாவில் கடந்த பல ஆண்டுகளாக தமிழகம் முதலிடம் வகித்து வருகிறது.

    தானத்தில் சிறந்தது அன்னதானம், ரத்த தானம் என்ற நிலையெல்லாம் மாறி இன்று உடல் உறுப்பு தானம் மிகவும் உயரிய தானம் என்ற நிலையை எட்டியிருக்கிறது.

    உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு உறுப்புகள் கிடைக்காமல் இறப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் உடல் உறுப்புகளை தானமாக பெறுவதற்காக 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பதிவு செய்து காத்திருக்கின்றனர்.

    இந்தியாவில் உடல் உறுப்பு தானம் குறித்து கடந்த சில ஆண்டுகளாக ஓரளவுக்கு விழிப்புணர்வு அதிகரித்து வந்தாலும் உறுப்பு தானம் செய்வோர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இந்தியாவில் ஒரு லட்சம் பேரில் வெறும் 8 பேர் மட்டுமே உறுப்பு தானம் செய்ய முன் வருகின்றனர். இதனால் போதிய அளவு உடல் உறுப்புகள் கிடைக்காமல் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உடல் உறுப்பு தானம் செய்வதில் இந்தியாவில் கடந்த பல ஆண்டுகளாக தமிழகம் முதலிடம் வகித்து வருகிறது.

    உடல் உறுப்பு தானத்தில் 2 விதமான தானம் உள்ளது. ஒன்று உயிரோடு இருக்கும் போது, மற்றொன்று இறந்த பிறகு. புற்றுநோய், ஹெபடிடிஸ், எச்.ஐ.வி. போன்ற நோய் அல்லாதவர்கள் வாழும்போதே உறுப்பு தானம் செய்ய முன் வரலாம். தானம் செய்யும் முன்பு ஏதேனும் நோய் உள்ளதா? என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

    தானம் செய்வது மிகவும் எளிது. அரசு தலைமை ஆஸ்பத்திரியை அணுகி உறுப்பு தானத்திற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அவர்கள் தரும் அட்டையை எப்போதும் உடன் இருக்குமாறு பர்சிலோ அல்லது சட்டை பையிலோ வைத்துக் கொள்ள வேண்டும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் உறுப்பு தான அட்டை பற்றி தகவல் தெரிவித்துக் கொள்வது அவசியம். உங்களின் ஆசையை அவர்கள் பூர்த்தி செய்ய இது உதவும்.

    இயற்கை மரணத்தின் போது கருவிழி, தோல், தசை நாண்கள் மற்றும் எலும்புகள் ஆகிய சில உறுப்புகள் மட்டுமே தானம் செய்ய முடியும். மற்ற உயிர்காக்கும் உறுப்புகள் பெரும்பாலும் ரத்த உறைதலால் அதிவேகமாக கெடக்கூடும் என்பதால் இவற்றை தானம் செய்வதில் சவால்கள் உள்ளன. மேலும் உறுப்புகள் 6 மணி நேரத்திற்குள் தானம் செய்யப்பட வேண்டும். கருவிழிகளை ஈரத்துணியால் பாதுகாக்க வேண்டும்.

    உயிரோடு இருந்தாலும், மூளை முற்றிலும் செயல்படாத நிலையில் இருந்தால் அது மூளைச்சாவு எனப்படுகிறது. அங்கீகரிக்கப்பட்ட நரம்பியல் நிபுணர், மருத்துவமனையின் தலைவர், நோயாளிக்கு சிகிச்சை அளித்த டாக்டர் மற்றும் இதில் சம்பந்தப்படாத மற்றொரு டாக்டர் என 4 டாக்டர்கள் கொண்ட குழு தீவிர பரிசோதனை மேற்கொண்டே குறிப்பிட்ட நபர் மூளைச்சாவு அடைந்துள்ளார் என்பதை உறுதி செய்வர். அதன்பின்னரே உறுப்பு தானம் பற்றி குடும்பத்தினரிடம் டாக்டர்கள் ஆலோசிப்பர். குடும்பத்தினர் சம்மதம் கொடுக்கும்பட்சத்தில் தான் உடல் உறுப்பு தானம் ஏற்றுக் கொள்ளப்படும்.

    மூளைச்சாவு அடைந்தவரை வென்டிலேட்டரில் வைப்பதால் உறுப்புகளுக்கு சேதம் உருவாகுவதில்லை. மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து கண், இதயம், நுரையீரல், கல்லீரல், கிட்னி, கணையம், எலும்பு, தோல் உள்ளிட்ட உறுப்புகளை தானமாக பெறலாம். இதன் மூலம் குறைந்தபட்சம் 8 பேர் முதல் அதிகபட்சமாக 12 பேருக்கு மறுவாழ்வு அளிக்க முடியும்.

    மூளைச்சாவு அடைந்தவரின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட உறுப்புகள் குறிப்பிட்ட சில மணி நேரத்துக்குள்ளாக பிறருக்கு பொருத்தப்பட வேண்டியது அவசியம். இதயம் என்றால் 6 மணி வரையிலும், நுரையீரல் என்றால் 4-6 மணி நேரம் வரையிலும், சிறுநீரகம் என்றால் 72 மணி நேரம் வரையிலும், கல்லீரல் என்றால் 24 மணி நேரம் வரையிலும் பாதுகாப்பாக வைத்திருந்து மற்றவர்களுக்கு பயன்படுத்த முடியும்.

    மூளைச்சாவு என்றால் என்ன?

    மனித உடலில் ஒவ்வொரு உறுப்புக்கும் மையப்புள்ளி மூளையில் உள்ளது. கையை நன்றாக ஆட்டுகிறோம், காலால் வேகமாக ஓடுகிறோம் என்றால் அந்த சக்தியை கொடுக்க கூடியது மூளை.

    விபத்தின் போது ஒருவருக்கு மூளையில் அடிபட்டு மூளை வேலை செய்யவில்லை என்று வைத்துக் கொள்வோம். அவரை ஆஸ்பத்திரியில் சேர்ப்பார்கள். அங்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படும். அப்போது இதயம் இயங்கிக் கொண்டு இருக்கும்.

    மூளைக்கு ரத்த ஓட்டம் போகாது. கழுத்துக்கு கீழே அனைத்து உறுப்புகளும் வேலை செய்யும். அந்த நபரை கிள்ளி பார்த்தால் அவரால் உணர முடியாது. குண்டூசியை வைத்து குத்தினாலும் தெரியாது. ஆனால் இதயம் மட்டும் ஓடிக் கொண்டே இருக்கும். இது தான் மூளைச்சாவு அடைந்தவரின் நிலையாக இருக்கும்.

    மூளைக்கு சரியாக ரத்த ஓட்டம் செல்லவில்லை என்றால் மூளை கெட்டு விடும். மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் ஒரு நிமிடம் தடைபட்டால் மயக்கம் வந்து விடும். இரண்டு நிமிடம், 3 நிமிடம் தடைபட்டால் மூளை செயல்படாமல் போகும். 4 நிமிடத்துக்கு மேல் ரத்த ஓட்டம் போகவில்லை என்றால் மூளை செயல்படாமல் போய் விடும். அது எப்படி என்றால் கெட்டியாக இருக்கும் மூளை ஜெல் போல் மாறி விடும். மூளை கெட்டுப் போய் விட்டால் அதனை திரும்ப மீட்க முடியாது.

    இதேபோல ஏதோ ஒரு காரணத்தால் இதயம் நின்று விடுகிறது. அவ்வாறு இதயம் நின்று விடுவதற்கு பெயர் கார்டியாக் அரெஸ்ட். மசாஜ் கொடுத்து இதயத்தை பழைய படி துடிக்க வைத்துவிட்டால் மூளை தப்பித்து விடும். அதற்கு நேரம் 3-ல் இருந்து 4 நிமிடம் தான். 5 நிமிடம் ஆகிவிட்டால் இதயம் செயல்படத் தொடங்கி விடும். ஆனால் மூளை வேலை செய்யாது. மூளைச்சாவு ஏற்படும் இளைஞரின் இதயம் நன்றாக இருக்கும். அதனை வேறு யாருக்காவது தானம் செய்யலாம். ஆனால் மூளையை மாற்றும் சிகிச்சை இதுவரை வரவில்லை.

    வழக்கமாக இறந்து போகிறவர்களுக்கு இதயம் நின்று விடும். வீட்டில் ஒருவருக்கு மாரடைப்பு வருகிறது. உடனே டாக்டரை கூப்பிடுகிறோம். அவர் நாடித்துடிப்பு பார்க்கிறார். ஸ்டெதஸ்கோப் வைத்து மூச்சு வருகிறதா, வயிறு மேலே, கீழே போகிறதா என்று பார்க்கிறார். வயிறு மேல், கீழ் ஏறி இறங்கவில்லை என்றால் மூச்சு இல்லை என்று அர்த்தம். தட்டி, தட்டி எழுப்புகிறார் எழுந்திருக்கவில்லை. மூளை வேலை செய்யவில்லை. சுய நினைவு இல்லை. முழுமையாக இறந்து விட்டார் என்று அர்த்தம். முழுமையாக இறந்து போனவரின் இதயத்தை மாற்ற முடியாது. உயிர்போன நபர், மூளைச்சாவு அடைந்த நபர் இது தான் வித்தியாசம்.

    விபத்தில் சிக்கிய நபர் என்ன தட்டினாலும் எழுந்திருக்க மறுக்கிறார். ஆனால் இதயத்துடிப்பு மட்டும் இருக்கிறது. மூளைச்சாவு ஏற்பட்ட இளைஞருக்கு 30 நிமிடத்துக்கு கூட இதயம் துடிக்கும். அதற்குள் ஆஸ்பத்திரிக்கு வந்து வென்டிலேட்டர் பொருத்தி செயற்கை சுவாசம் கொடுத்தால் இதயம் தொடர்ந்து துடிக்க ஆரம்பித்து விடும். ஒரு நாள், 3 நாளைக்கு கூட இதய துடிப்பு இருக்கும். ஆனால் மூளையை இழுத்து பிடிக்க முடியாது. அவ்வாறு மூளைச்சாவு அடைந்த ஒரு இளைஞனின் இதயத்தை எடுத்து மற்றொருவருக்கு தானமாக கொடுக்கலாம். அவ்வாறு தானம் செய்யப்படும் உடல் உறுப்புகள் யார், யாருக்கு என்பதை அரசு தான் முடிவு செய்யும். எனவே முடிந்தவரை உடல் உறுப்புகளை மண்ணுக்கு கொடுக்காமல், மனிதர்கள் உயிர் வாழ கொடுப்போம். மற்றவர்கள் உடலில் சேரும்போது அவர்களுக்கு மறு உயிர் கொடுக்கிறார்கள்.

    இறந்த பிறகும் உறுப்பு தானம் செய்யும் நபர்கள் வாழ்கிறார்கள். விபத்தினால் இந்தியாவில் ஆண்டுக்கு ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் உயிரிழக்கிறார்கள். அவர்களில் 20 ஆயிரம் பேர் இதயத்தை தானமாக கொடுக்க தகுதியான நிலையிலேயே இருந்து மரணிப்பார்கள். எனவே உடல் தானம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.

    இதேபோல ரத்த தானம் செய்வது மிகவும் எளிமையானது. நீங்கள் கொடுக்கும் 200 மில்லி ரத்தத்தை பிரித்து 4 பேருக்கு கொடுப்பார்கள். இப்படி 4 பேரை காப்பாற்றக்கூடிய சக்தி உங்களிடம் உள்ளது.

    ஆண்டுக்கு ஒருமுறை ரத்த தானம் கொடுங்கள். ரத்த தானம் கொடுப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது.

    ரத்த தானம் செய்வதால் பலன் பெறுவது மற்றவர் மட்டுமல்ல... நாமும்தான். உடலில் இயற்கையாகப் புதிய ரத்தம் உற்பத்தியாகும். ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு சீராக இருக்க உதவும். மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பும் குறையும். உடலில் அதிக அளவில் உள்ள இரும்புச்சத்து சமன் செய்யப்படும்.

    45 கிலோவுக்கு மேல், 18 முதல் 60 வயது வரை உள்ள அனைவரும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ரத்த தானம் செய்யலாம். ஏதேனும் தொற்றுநோய் உள்ளவர்கள், காய்ச்சலில் இருப்பவர்கள் என நோய்வாய்ப்பட்டவர்கள் செய்யக் கூடாது.18 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள், 45-க்கும் கீழ் எடை உள்ளவர்கள், ரத்தத்தில் ஹீமோ குளோபின் அளவு குறைவாக உள்ளவர்கள் செய்யக் கூடாது. ரத்தம் கொடுத்த பின்னர், பழச்சாறு, ஆரோக்கியமான பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ளலாம். ரத்தம் கொடுத்த அடுத்த 24 மணி நேரத்துக்கு கடினமான செயல்கள் எதுவும் செய்யக்கூடாது. வியர்வையை உண்டாக்கும் செயல்கள், விளையாட்டு, பணி போன்றவற்றைத் தவிர்க்கலாம்.

    தொடர்புக்கு:

    info@kghospital.com, 98422 66630

    • அமெரிக்காவை சேர்ந்த ‘ஓபன் ஏ.ஐ.’ என்ற நிறுவனம் தான் இதை உருவாக்கி இருக்கிறது.
    • தகவல் தொழில்நுட்ப உலகில் கூகுள் தேடுபொறிதான் உலக அளவில் மிகப்பெரிய ஜாம்பவனாக நிற்கிறது.

    கடவுளால் படைக்கப்பட்ட மனிதர்கள் ஆச்சரியமானவர்கள் என்றால் மனிதர்களால் படைக்கப்படும் கண்டுபிடிப்புகள் அதைவிட ஆச்சரியமானவைகளாக இருப்பது நிதர்சனமான உண்மை.

    'சாட் ஜி.பி.டி.' இது ஒரு செயற்கை நுண்ணறிவு இயங்குதளம்! அறிவியல் உலகின் அதிசயம். ஆனால் உண்மை.

    பழங்கால சினிமாவில் 'ஜீபூம்பா' என்று சொன்னவுடன் 'சொல்லுங்க பிரபு. நான் உங்கள் அடிமை' என்று சொல்லி ஒரு பூதம் வந்து நிற்குமே. அதேபோல் இந்த இயங்குதளம் உண்மையாகவே நம் முன் வந்து நிற்கிறது.

    அமெரிக்காவை சேர்ந்த 'ஓபன் ஏ.ஐ.' என்ற நிறுவனம் தான் இதை உருவாக்கி இருக்கிறது. தகவல் தொழில்நுட்ப உலகில் கூகுள் தேடுபொறிதான் உலக அளவில் மிகப்பெரிய ஜாம்பவனாக நிற்கிறது. ஆனால் இந்த 'சாட் ஜி.பி.டி.' வந்ததும் தகவல் தொழில் நுட்பம் முழுவதையும் தனது சாம்ராஜ்யத்துக்குள் அடக்கிவிட்டது என்றே சொல்ல வேண்டும்.

    இந்த செயற்கை நுண்ணறிவு தளம் மனிதர்களுக்கு மிகச்சிறந்த மதியூக மந்திரியாக இருந்து செயல்படுகிறது. இந்த வேலைக்கு யாரையாவது நியமித்தால் ரகசியங்கள் கசிந்து விடலாம். ஆனால் இந்த தளத்தை துணையாக வைத்து கொண்டு எதை வேண்டுமானாலும் செய்யலாம். எந்த ரகசியமும், எந்த சூழ்நிலையிலும் கசிய போவதில்லை. இதை வைத்து என்னதான் செய்ய முடியும்? அப்படி என்னதான் செய்கிறது? என்ன கேட்டாலும் சொல்லும்... எதை சொன்னாலும் செய்யும்...!

    ஒரு கட்டுரை தேவை, ஏதாவது ஒரு தலைப்பில் கவிதை தேவை, கேள்விகளுக்கு விடை தேவை, ஒரு பிரச்சினைக்கு தீர்வு தேவை, வரலாற்று தகவல்கள், அறிவியல் தேடல்கள்... என்று எதை கேட்டாலும் உடனே பதிலை தரும். அதுவும் ஒற்றைவரி பதிலாக இருக்காது. ஆதாரங்களுடன் அற்புதமாக செய்து தந்துவிடும்.

    மென்பொறியாளர்கள் வரி வரியாக எழுதும் கம்ப்யூட்டர் புரோகிராமில் ஏற்படும் தவறுகளை கண்டு பிடித்து திருத்துவதற்கு மணிகணக்கும் ஆகலாம். நாள் கணக்கும் ஆகலாம்.

    ஆனால் நம்ம ஆள் 'சாட் ஜி.பி.டி.'யிடம் சொன்னால் போதும். தவறு எங்கே இருக்கிறது என்பதை உடனே கண்டுபிடித்துவிடும். அதுமட்டுமல்ல. அந்த தவறை திருத்தியும் கொடுத்து விடுகிறது.

    ஒரு டிசைன் வரைய வேண்டும், ஒரு கார்ட்டூன் வரைய வேண்டும். எதுவானாலும் சரி மறுகணமே வரைந்து தருகிறது. அதுவும் நான்கைந்து மாடல்களில் தரும். தேவையானதை நாம் தேர்வு செய்து கொள்ளலாம்.

    வீட்டுப்பாடம் எழுதி கை வலிக்கிறதா? என்ன பாடம் என்பதை சொன்னால் போதும் அதுவே எழுதி தந்து விடுகிறது.

    சரி இவையெல்லாம் நாம் கேட்பது. அதைவிட்டு விட்டு 'நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்' என்று கூறினால் உடனே 'நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதை கேட்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. இதற்கு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா? நான் ஏதேனும் உங்களுக்கு உதவ வேண்டுமா? என்று கேட்கிறது! அதாவது நம்மை பற்றி புரிந்தவர்கள் நம் அன்புரிக்குரியவர்கள் நம் மீது அக்கறையுடன் உரையாடுவது போல் உரையாடுவதை பார்த்தால் உடல் புல்லரித்து விடுகிறது.

    உனக்கு விடுகதை தெரியுமா என்று பதிவிட்டால் போதும். எனக்கு தெரியும் என்று சொல்லி ஒரு விடுகதையையும் பதிவிட்டு அதற்கு பதிலையும் பதிவிடுகிறது. அதோடு நிற்காது. நான் விடுகதை சொன்னால் கேட்க விருப்பமா என்று கேட்டு நம் அனுமதியை பெற்று விடுகதையை நமக்கு சொல்லி நம்மையே ஆழம் பார்க்கிறது. கற்பனை வளம், அறிவுத்திறன் மிக்கவர்கள், பலமணி நேரம் உழைத்து செய்யும் வேலையை சில நிமிடங்களில் செய்து முடித்து தந்து விடுகிறது. ஒரு ஊரை பற்றிய தகவல்கள் கேட்டால் அந்த ஊரின் சிறப்புக்களை புகைப்பட காட்சிகளுடன் நான்கைந்து பக்கங்களுக்கு டைப் செய்து தந்து விடுகிறது. சிக்கலான கணித சமன்பாடுகளை தீர்க்க முடியாமல் மணி கணக்கில் மண்டையை பிய்த்து கொண்டிருக்க வேண்டியதில்லை. விஷயத்தை சொல்லுங்கள் மறுவிநாடியே தீர்வை தந்து விடுகிறது.

    விஞ்ஞானத்தின் வளர்ச்சியும், கண்டுபிடிப்புகளும், உலகம் போகும் போக்கையும் நினைத்தால் மலைப்பாக தெரியும். அதே நேரம் இதனால் ஏற்பட போகும் எதிர்விளைவுகள் இனம் புரியாத பயத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

    மூளைக்கு தீனி கொடுக்கும் அசகாய சாமர்த்தியத்தை ஏற்படுத்தி கொடுத்தாலும் நம் வயிற்றுக்கான பசியை அது தீர்க்குமா? என்ற கேள்வி எழுந்தால் விவசாயமும், விவசாயிகளும் மனக்கண் முன் தெரிவார்கள்.

    எது எப்படியோ மாற்றம் ஒன்றே மாறாதது என்பது போல் வல்லவனுக்கு வல்லவன் எந்த வடிவத்திலா வது உருவாகி கொண்டே இருக்கிறான்.

    ×