search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கெயில் நிறுவனம்"

    சீர்காழி அருகே கெயில் நிறுவனம் சார்பில் லாரிகளில் வந்த இரும்பு குழாய்களை இறக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி அருகே பழையபாளையம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் சார்பில் 20க்கும் மேற்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து கச்சா எண்ணெய் எடுக்கப்பட்டு வருகிறது. இங்கு எடுக்கப்படும் திரவ நிலையிலான எரிவாயு வர்த்தக நிறுவனங்களுக்கு கொண்டு செல்ல வேட்டங்குடி, எடமணல், திருநகரி ஊராட்சிகள் வழியாக தரங்கம்பாடி தாலுக்கா மேமாத்தூருக்கு 27 கிலோ மீட்டர் தொலைவுக்கு விளைநிலங்கள் வழியாக குழாய் அமைக்கும் பணி கெயில் நிறுவனத்தால் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. 

    வேம்படி கிராமத்தில் விளைநிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கும் பணி நடந்தபோது விவசாயிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் வேம்படி கிராமத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வேட்டங்குடி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் கெயில் நிறுவனம் சார்பில் லாரிகளில் கொண்டு வந்த 26 இரும்பு குழாய்களை 50-க்கும் மேற்பட்ட போலீசார் உதவியுடன் லாரியிலிருந்து இறக்கும் பணியில் அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது வேட்டங்குடியைச் சேர்ந்த நஞ்சை, புஞ்சை விவசாயிகள் சங்கத்தலைவர் வில்வநாதன், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி அங்குதன் மற்றும் விவசாயிகள் சம்பவ இடத்திற்கு வந்து இரும்பு குழாய்களை இறக்க எதிர்ப்பு தெரிவித்தனர். 

    இதையடுத்து பேச்சு வார்த்தை நடத்தி பின்னர் இது குறித்து முடிவு செய்வதாக கூறி இரும்பு குழாய்கள் இறக்கப்படாமல் லாரிகளிலேயே வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை போல் கெயில் நிறுவனமும் புயல் நிவாரணம் வழங்க கோரி மக்கள் போராட்டம் நடத்தினர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே செட்டிச்சிமிழி கிராமத்தில் கெயில் நிறுவனத்தின் கிளை அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

    இங்கு ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திடம் இருந்து பெறப்படும் எரிவாயு, வெள்ளக்குடி பகுதிக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த அலுவலகம் முன்பு நேற்று திடீரென திரண்ட பெருமாளகரம், கொடிமங்கலம், நீலனூர், மேலதிருமதிகுன்னம், அத்திசோழமங்கலம், மழையூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நிறுவனத்தின் கதவை பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஓ.என்.ஜி.சி. உள்ளிட்ட நிறுவனங்கள் நிவாரண உதவிகளை வழங்கி வரும் நிலையில், கெயில் நிறுவனம் நிவாரண உதவிகளை வழங்காததை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு மேலதிருமதிகுன்னம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் வீரையன் தலைமை தாங்கினார்.

    போராட்டத்தின்போது கெயில் நிறுவனத்தின் சார்பில் புயல் நிவாரண உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும் என கிராம மக்கள் கோ‌ஷங்களை எழுப்பினர். கிராம மக்களின் திடீர் போராட்டத்தில் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    போராட்டம் நடத்திய கிராம மக்கள் நிவாரண உதவி செய்யாவிட்டால் நிறுவனத்தின் வாசலில் சமைத்து சாப்பிட போவதாக கூறி, பாத்திரங்களையும், கியாஸ் அடுப்பையும் எடுத்து வந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கெயில் நிறுவன பொறுப்பு மேலாளர் கோடீஸ்வரன், கொரடாச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி ஆகியோர் போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது திங்கட்கிழமைக்குள் நிவாரண உதவிகள் குறித்து முடிவு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனால் போராட்டம் கைவிடப்பட்டது.

    ×