search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவிரியில் வெள்ளப்பெருக்கு"

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர கிராமங்களை சேர்ந்த மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். #Hogenakkal #Cauvery
    சேலம்:

    கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது.

    இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அந்த அணைகளில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டு உள்ளது.

    2 அணைகளில் இருந்தும் இன்று காலை 2 லட்சம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் மழை நீரும் சேர்ந்து வருவதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று காலை 2 லட்சத்து 6 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    ஒகேனக்கல்லில் ஐந்தருவி இருப்பதே தெரியாத அளவிற்கு தண்ணீர் செல்கிறது. மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் அதிக அளவில் செல்கிறது. மெயின் அருவி, சினிபால்ஸ் அருவி உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் கார்-வேன், பஸ்களில் ஒகேனக்கல் வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தமிழக கர்நாடக எல்லையில் உள்ள தமிழகத்தை சேர்ந்த சும்புருட்டு, புளியமரத்து கொம்பு ஆகிய கிராமங்களில் உள்ள 20-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அந்த பகுதியை சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் கிராமத்தை விட்டு வெளியே வர முடியாமல் தங்கள் படகுகளிலேயே தஞ்சம் அடைந்துள்ளனர்.

    தொடர்ந்து 2 லட்சம் கன அடிக்கு மேல் நீர்வரத்து உள்ளதால் ஒகேனக்கல், சத்திரம், இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் அங்கிருந்து பொதுமக்களை பத்திரமாக மீட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    ஒகேனக்கல்லில் இருந்து கரைபுரண்டு ஒடும் வெள்ள நீர் ஊட்டமலை வழியாக பென்னாகரம், நாகமரை, செல்லமுடி, ஏர்கோல்பட்டி, சித்திரப்பட்டி, பூச்சியூர், குருகலையனூர் ஆகிய ஆற்றங்கரையோர பகுதிகளுக்கு செல்கிறது.

    அந்த பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் சார்பில் தண்டோரா மற்றும் ஒலி பெருக்கி மூலம் தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. ஒகேனக்கல்லை அடுத்த ஊட்டமலையிலும் இன்று வெள்ளநீர் வீடுகளுக்குள் புகுந்தது. அங்கிருந்து பொதுமக்கள் அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    மேட்டூர் அணையில் 120 அடி தண்ணீர் தேக்கி வைக்கப்படும் நிலையில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளதால் பென்னாகரத்தை அடுத்த நாகமரை, நெருப்பூர், சித்திரம்பட்டி பகுதிகளில் காவிரி ஆற்றங்கரை பகுதிகளில் தண்ணீர் அதிகளவில் சாலைகளில் தேங்கி உள்ளது.

    காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து செல்வதால் நாகமரை- பண்ணவாடி செல்லும் படகு போக்குவத்து நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் நாகமரையில் இருந்து பண்ணவாடிக்கு பரிசல் இயக்குவது மிகவும் ஆபத்தான பயணம்.

    மேலும் பரிசல் மற்றும் படகில் செல்லும்போது லைப்ஜாக்கெட் எதுவும் கிடையாது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பற்ற பயணத்தை மேற்கொள்ளும் சூழ்நிலை உள்ளதால் நாகமரை- பண்ணவாடி பரிசல் போக்குவத்துக்கு மாவட்ட நிர்வாகம் தடை செய்து உள்ளது.

    நாகமரையில் இருந்து கொளத்தூருக்கு வேலைக்கு செல்பவர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் ஆகியோர் மேச்சேரி வந்து பின்பு மேட்டூர் வழியாக கொளத்தூர் சுற்றி செல்கின்றனர். இவ்வாறு சுற்றி செல்வதால் நேரம் விரையம் ஆகிறது.

    எனவே நாகமரை- பண்ணவாடிக்கு செல்ல மாற்று வழிபாதை அல்லது மாற்று போக்குவரத்து வசதி ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ஒகேனக்கலில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. நேற்று 1 லட்சத்து 70 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்த நிலையில் இன்று நீர்வரத்து மேலும் அதிகரித்து 1 லட்சத்து 75 ஆயிரம் கன அடி தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

    நேற்று அணையில் இருந்து 1 லட்சத்து 70 ஆயிரத்து 800 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று தண்ணீர் திறப்பு 1 லட்சத்து 80 ஆயிரத்து 800 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் இன்று 120.05 அடியாக இருந்தது.

    நடப்பாண்டில் மேட்டூர் அணை 2-வது முறையாக கடந்த 11-ந் தேதி 120 அடியை எட்டியது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பால் 8-வது நாளாக இன்றும் 120 அடியை தாண்டியே மேட்டூர் அணை நீர்மட்டம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் போக்கி வழியாக ஒன்றரை லட்சம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் அதன் கரையோரம் உள்ள நாகராஜன் என்பவரது வீடு நேற்று இடிந்து விழுந்தது. இந்த வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

    மேலும் அங்குள்ள பெரியார் நகர், அண்ணா நகர் பகுதி வீடுகளில் வசிக்கும் மக்களை காலி செய்யுமாறு வருவாய் துறையினர் அறிவுறுத்தினர். அதில் பலர் காலி செய்ய மறுத்ததால் 11 வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    மேட்டூரிலிருந்து எடப்பாடிக்கு செல்லும் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் 4-வது நாளாக அந்த சாலையில் போக்குவரத்து முடங்கி உள்ளது. தேவூர் அருகே உள்ள காவேரி கரையோர கிராமமான காவேரிப்பட்டி அக்ரஹாரத்தில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது. அந்த வீடுகளில் வசித்தவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

    அங்குள்ள அண்ணமார் கோவில் வளாகத்திலும் நீர் புகுந்தது. அந்த கோவிலையொட்டி உள்ள பாலம் தண்ணீரில் மூழ்கியதால் 3-வது நாளாக அந்த பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. 400 ஏக்கர் வாழை உள்பட பல்வேறு பயிர்களுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளது.

    இதனால் கல்வடங்கம், வற்றாம்பாளையம், கொடாரபாளையம், வெள்ளாளபாளையம் உள்பட பல பகுதிகளுக்கு தேவூர் வழியாக 8 கி.மீ. சுற்றி செல்கின்றனர்.

    நாமக்கல் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளான குமாரபாளையம், பள்ளி பாளையம் பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. காவிரி மற்றும் பவானி ஆறுகள் பவானி கூடுதுறையில் கலக்கிறது.

    இதன் காரணமாக தண்ணீர் அழுத்தம் ஏற்பட்டு கோம்பு பள்ளத்தின் வழியாக தண்ணீர் குமாரபாளையம் நகருக்குள் புகுந்தது. இதனால் பள்ளி பாளையம் ரோடு, அப்பன் பங்களா, பெருமாபாளையம் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பள்ளிபாளையம் புதன் சந்தை பகுதியில் உள்ள குமாரவேல், மாதேஸ்வரன், ராஜேந்திரன் ஆகியோர் வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்கி இருந்தனர். இதற்கிடையே வீட்டின் கூரையை பிரித்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த பொருட்களை திருடி சென்றதாக கூறப்படுகிறது. #Hogenakkal #Cauvery
    மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 35 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்தது. #Metturdam #Cauvery
    மேட்டூர்:

    கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கேரள மாநிலம் வயநாடு பகுதிகளிலும் மீண்டும் பலத்த மழை பெய்து வருவதால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியது.

    அணையின் பாதுகாப்பு கருதி இந்த 2 அணைகளில் இருந்தும் 1 லட்சத்து 40 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காவிரி ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

    காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல் வழியாக நேராக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக நேற்று பகல் மேட்டூர் அணை இந்த ஆண்டில் 2-வது முறையாக தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது.

    நேற்று மாலை அணைக்கு வினாடிக்கு 1 லட்சத்து 35 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இன்று காலை 1 லட்சத்து 33 ஆயிரத்து 941 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 120.20 அடியாக உயர்ந்தது.

    இதையடுத்து மேட்டூர் அணையின் 16 கண் மதகு மற்றும் அணை மின் நிலையம் வழியாக வினாடிக்கு 1 லட்சத்து 35 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இந்த தண்ணீர் காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    மேட்டூர் காவிரி கரையோரம் சாகுபடி செய்திருந்த வாழை, பருத்தி, மற்றும் மாஞ்செடிகளை மூழ்கடித்தபடி வெள்ளம் பாய்ந்தோடி செல்கிறது. அனல் மின் நிலையம் அருகே உள்ள காளியம்மன் கோவிலை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    மேட்டூர் அணை அருகே உள்ள தங்கமாபுரி பட்டணத்தில் வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. இதனால் அங்கு வசித்து வந்தவர்களை வெளியேறுமாறு வருவாய்த் துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து பலர் தங்களது வீடுகளை பூட்டி விட்டு உறவினர்களின் வீடுகளுக்கு சென்றுவிட்டனர். அப்பகுதியில் வசித்து வந்தவர்கள் அங்குள்ள நகராட்சி தொடக்கப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    மேட்டூர் 16 கண் மதகு அருகே காவிரி கரையோரத்தில் தனியாக வசித்து வந்த 70 வயது மூதாட்டியின் வீட்டை தண்ணீர் சூழ்ந்ததால் அவரை வருவாய்த் துறையினர் மீட்டனர்.

    காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவிரி கரையோரம் உள்ள கலைமகள் வீதி, இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் உள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது.

    இப்பகுதியில் வசித்து வந்த 30 குடும்பங்களை சேர்ந்த 75-க்கும் மேற்பட்டவர்கள் குமாரபாளையம் ஜே.கே.கே. நடராஜா திருமண மண்டபத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    குமாரபாளையம் இந்திரா நகரில் வசித்து வந்த 3 குடும்பங்களை சேர்ந்த 33 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வேறு இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அரசு சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    இதேபோல் பள்ளி பாளையம் காவிரி கரையோரம் உள்ள பகுதிகளில் 250-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. அங்கு வசித்து வந்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    அதிகாரிகள் தொடர்ந்து காவிரி கரையோர பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேட்டூர் அணையில் இருந்து எந்த நேரமும் கூடுதலாக தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளதால் காவிரி கரையோர பொதுமக்கள் எச்சரிக்கையாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    காவிரியில் அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி டெல்டா பகுதிகளான சேலம், ஈராடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், கடலூர், நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    காவிரி கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தண்டோரா மூலமும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

    மேட்டூர் அணையின் இடது கரையில் உள்ள வெள்ள கட்டுப்பாட்டு அறையில் பொதுப்பணித்துறை அதிகாரிகளும், ஊழியர்களும் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கர்நாடக அணைகளில் இருந்து அதிக அளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் கடந்த 2 நாட்களாக ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இன்று காலை ஒகேனக்கல்லில் 1 லட்சத்து 22 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் அருவிகள் இருந்த இடம் தெரியாமல் பாறைகளை மூழ்கடித்து தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது.

    மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் சுமார் 3 அடி உயரத்திற்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஒகேனக்கல்லில் திரும்பிய பக்கம் எல்லாம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

    காவிரி கரையேர பகுதிகளில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடந்துவிடாமல் இருப்பதற்காக அதிகாரிகள் குழுவினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஒகேனக்கல் அருகே மலைகளுக்கு இடையே காவிரி ஆற்றில் தண்ணீர் பாய்ந்தோடும் காட்சி

    வெள்ளப் பெருக்கு காரணமாக ஒகேனக்கல்லில் அருவிகளில் குளிக்கவும், பரிசல் சவாரி செய்யவும் தொடர்ந்து தடை நீடித்து வருகிறது. அருவி பக்கம் யாரும் செல்லாமல் இருப்பதற்காக வருவாய்த் துறையினரும் தீயணைப்பு துறையினரும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    ஒகேனக்கல் வரும் சுற்றுலா பயணிகள் பேவனூர் சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.

    தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. #Metturdam #Cauvery


    காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர பகுதிகளில் வசிக்கும் 108 பேர் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். #Metturdam #Cauvery
    பள்ளிப்பாளையம்:

    5 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடி நிரம்பியதையடுத்து தற்போது விநாடிக்கு 76 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

    5 ஆண்டுகளுக்கு பிறகு காவிரி ஆற்றில் வெள்ளம் வருவதை காண கரையோர பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து வேடிக்கை பார்த்து செல்கின்றனர். கரையோர பகுதியில் முன் எச்சரிக்கையாக போலீசாரும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பள்ளிப்பாளையம் காவிரி ஆற்றின் இருபுறமும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் முன்கூட்டியே பள்ளிப்பாளையத்தில் காவிரி கரையோரம் காலி செய்யப்பட்ட 200 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. அந்த வீடுகளில் இருந்த பொதுமக்கள் ஏற்கனவே வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்து சென்று விட்டனர். ஆகவே பொதுமக்கள் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை.

    பள்ளிப்பாளையம் பாவடி தெரு அருகில் காவிரி ஆற்றில் கட்டப்பட்டு உள்ள முனியப்பசாமி சிலையின் 13 அடி உயர பீடத்தை மூழ்கடித்தப்படி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதுபோல் ஆதிகேசவ பெருமாள் கோவிலை தொட்டப்படி காவிரி வெள்ளம் செல்கிறது. ஆவரங்காடு பகுதியில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தபடி சென்றது. காக்காத்திட்டுபாறை பகுதியில் உள்ள விநாயகர் கோவிலையும் வெள்ளம் சூழ்ந்தது.

    பொதுமக்கள் வழக்கமாக குளிக்கும் இடங்களான பள்ளிப்பாளையம் காவிரிப்படித்துறை, ஜனதா நகர், ஆவாரங்காடு, அக்ரஹாரம் பகுதியில் நேற்று இரவு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு பலகை நகராட்சி மற்றும் ஊராட்சி சார்பில் நடப்பட்டது. அதில், ‘‘கரையோர பகுதிகளில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ள காரணத்தினால் பொதுமக்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவே, துணி துவைக்கவோ வேண்டாம்’’ என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    குமாரபாளையம் மணிமேகலை இந்திரா நகரில் 5 வீடுகளும், கலைமகள் நகரில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளிலும் வெள்ளம் சூழ்ந்தது.

    இப்பகுதியில் உள்ள 31 குடும்பங்களை சேர்ந்த 30 ஆண்கள், 39 பெண்கள் மற்றும் 6 குழந்தைகள் சேர்த்து மொத்தம் 75 பேர் குமாரபாளையம் ஜே.கே.கே.நடராஜா நகராட்சி திருமண மண்டபத்திற்கு வருவாய்த்துறையின் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் இந்திரா நகர், மணிமேகலை தெருவில் வசித்து வரும் 6 குடும்பங்களை சேர்ந்த 8 ஆண்கள், 15 பெண்கள் மற்றும் குழந்தைகள் என 33 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு புத்தர் வீதியில் செயல்பட்டு வரும் நகராட்சி தொடக்கப் பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அரசின் சார்பாக அவர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. கலெக்டர் ஆசியா மரியம் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை நேரில் பார்வையிட்டு குறைகளை கேட்டறிந்தார்.

    ஆற்றின் 2 கரைகளையும் தழுவியபடி தண்ணீர் செல்வதால் பரமத்திவேலூர் தாலுகாவுக்கு உட்பட்ட காவிரி கரையோர பகுதிகளில் பரிசல்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசம்பாளையம், ஜேடர்பாளையம், கண்டிப்பாளையம், அய்யம்பாளையம் ஆகிய பகுதிகளில் வெள்ள அபாயம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    வெள்ளப்பெருக்கின் காரணமாக நாமக்கல் மாவட்ட காவிரி கரையோர பகுதியில் வசிக்கும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் ஆற்றில் மீன் பிடிக்க செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #Metturdam #Cauvery

    மேட்டூர் அணையில் இருந்து தொடர்ந்து கூடுதல் தண்ணீர் திறப்பால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பள்ளிபாளையத்தில் 200 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. #Metturdam #Cauvery
    மேட்டூர்:

    5 ஆண்டுகளுக்கு பின்னர் மேட்டூர் அணை நிரம்பியது. அணையின் மொத்த உயரம் 124 அடி என்றாலும், பாதுகாப்பு கருதி 120 அடி வரை தான் தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது. இந்த அணையின் மூலம் 12 மாவட்டங்களில் உள்ள 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றுவருகிறது.

    மேட்டூர் அணை நிரம்பியதால் நேற்று முன்தினம் அணையில் இருந்து வினாடிக்கு 80 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 75,170 கனஅடியாக அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் 120.40 அடியாக உயர்ந்தது. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 75 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. தொடர்ந்து இதே அளவில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    16 கண் பாலம் வழியாக வெளியேற்றப்படும் தண்ணீர் செல்லும் பாதையை ஒட்டி பயிர் செய்யப்பட்டுள்ள பருத்தி, வாழை போன்ற பயிர்கள் தண்ணீரில் மூழ்கி வருகின்றன. காவிரி கரையோர பகுதிகளில் தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

    மேட்டூர் அணை தண்ணீர் நிறைந்து கடல்போல் காட்சி அளிப்பதையும், 16 கண் பாலம் பகுதியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதையும் காண கடந்த 2 நாட்களாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது.

    இந்நிலையில் எடப்பாடி அருகே உள்ள பூலாம்பட்டியை சேர்ந்த முருகன் (வயது 55) என்ற ஓட்டல் தொழிலாளி பூலாம்பட்டி காவிரி ஆற்றில் குளிக்க இறங்கினார். அவர் 3 கிலோ மீட்டர் தூரம் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட நிலையில் ஆற்றின் நடுவே இருந்த ஒரு பாறையை பிடித்துக்கொண்டார்.

    அங்கிருந்து காப்பாற்றுங்கள் என சத்தம்போட்டார். ஆற்று வெள்ளத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த 3 பேர் சத்தம் கேட்டு, ஒரு கயிற்றை எடுத்துவீசி அவரை பத்திரமாக மீட்டனர்.

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் காவிரி ஆற்றின் இருபுறமும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் பள்ளிபாளையத்தில் காவிரி கரையோரம் உள்ள 200 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. அந்த வீடுகளில் இருந்த பொதுமக்கள் ஏற்கனவே வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றுவிட்டனர். இதனால் மக்கள் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை.

    காவிரி ஆற்றில் கட்டப்பட்டுள்ள முனியப்பசாமி சிலையின் 13 அடி உயர பீடத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதேபோல் ஆதிகேசவ பெருமாள் கோவிலை தொட்டபடி காவிரி வெள்ளம் செல்கிறது. கோவிலுக்குள் காவிரி நீர் புகுந்ததால் அங்கிருந்து மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணி நடந்தது.

    குமாரபாளையம் இந்திரா நகரில் உள்ள 5 வீடுகளுக்குள் காவிரி வெள்ளம் புகுந்தது. கரையோர பகுதியில் 39 வீடுகளில் வசித்த குடும்பத்தினர் வெளியேற்றப்பட்டு நகராட்சி திருமண மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டனர். அவர்களுக்கு வேண்டிய உணவு வசதிகளையும் செய்துகொடுத்தனர்.

    கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து பருவமழை பெய்துவருவதால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து வினாடிக்கு 80 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அனைத்து அருவிகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    ஒகேனக்கல்லுக்கு நேற்று காலை 10 மணி நிலவரப்படி வினாடிக்கு 80 ஆயிரம் கனஅடி தண்ணீர் தொடர்ந்து வந்துகொண்டு இருந்தது. இதனால் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் நேற்று 16-வது நாளாக தடை நீடித்தது.  #Metturdam #Cauvery
    ×