search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Flood In Cauvery River"

    மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 35 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்தது. #Metturdam #Cauvery
    மேட்டூர்:

    கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கேரள மாநிலம் வயநாடு பகுதிகளிலும் மீண்டும் பலத்த மழை பெய்து வருவதால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியது.

    அணையின் பாதுகாப்பு கருதி இந்த 2 அணைகளில் இருந்தும் 1 லட்சத்து 40 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காவிரி ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

    காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல் வழியாக நேராக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக நேற்று பகல் மேட்டூர் அணை இந்த ஆண்டில் 2-வது முறையாக தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது.

    நேற்று மாலை அணைக்கு வினாடிக்கு 1 லட்சத்து 35 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இன்று காலை 1 லட்சத்து 33 ஆயிரத்து 941 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 120.20 அடியாக உயர்ந்தது.

    இதையடுத்து மேட்டூர் அணையின் 16 கண் மதகு மற்றும் அணை மின் நிலையம் வழியாக வினாடிக்கு 1 லட்சத்து 35 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இந்த தண்ணீர் காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    மேட்டூர் காவிரி கரையோரம் சாகுபடி செய்திருந்த வாழை, பருத்தி, மற்றும் மாஞ்செடிகளை மூழ்கடித்தபடி வெள்ளம் பாய்ந்தோடி செல்கிறது. அனல் மின் நிலையம் அருகே உள்ள காளியம்மன் கோவிலை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    மேட்டூர் அணை அருகே உள்ள தங்கமாபுரி பட்டணத்தில் வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. இதனால் அங்கு வசித்து வந்தவர்களை வெளியேறுமாறு வருவாய்த் துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து பலர் தங்களது வீடுகளை பூட்டி விட்டு உறவினர்களின் வீடுகளுக்கு சென்றுவிட்டனர். அப்பகுதியில் வசித்து வந்தவர்கள் அங்குள்ள நகராட்சி தொடக்கப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    மேட்டூர் 16 கண் மதகு அருகே காவிரி கரையோரத்தில் தனியாக வசித்து வந்த 70 வயது மூதாட்டியின் வீட்டை தண்ணீர் சூழ்ந்ததால் அவரை வருவாய்த் துறையினர் மீட்டனர்.

    காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவிரி கரையோரம் உள்ள கலைமகள் வீதி, இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் உள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது.

    இப்பகுதியில் வசித்து வந்த 30 குடும்பங்களை சேர்ந்த 75-க்கும் மேற்பட்டவர்கள் குமாரபாளையம் ஜே.கே.கே. நடராஜா திருமண மண்டபத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    குமாரபாளையம் இந்திரா நகரில் வசித்து வந்த 3 குடும்பங்களை சேர்ந்த 33 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வேறு இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அரசு சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    இதேபோல் பள்ளி பாளையம் காவிரி கரையோரம் உள்ள பகுதிகளில் 250-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. அங்கு வசித்து வந்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    அதிகாரிகள் தொடர்ந்து காவிரி கரையோர பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேட்டூர் அணையில் இருந்து எந்த நேரமும் கூடுதலாக தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளதால் காவிரி கரையோர பொதுமக்கள் எச்சரிக்கையாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    காவிரியில் அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி டெல்டா பகுதிகளான சேலம், ஈராடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், கடலூர், நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    காவிரி கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தண்டோரா மூலமும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

    மேட்டூர் அணையின் இடது கரையில் உள்ள வெள்ள கட்டுப்பாட்டு அறையில் பொதுப்பணித்துறை அதிகாரிகளும், ஊழியர்களும் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கர்நாடக அணைகளில் இருந்து அதிக அளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் கடந்த 2 நாட்களாக ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இன்று காலை ஒகேனக்கல்லில் 1 லட்சத்து 22 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் அருவிகள் இருந்த இடம் தெரியாமல் பாறைகளை மூழ்கடித்து தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது.

    மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் சுமார் 3 அடி உயரத்திற்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஒகேனக்கல்லில் திரும்பிய பக்கம் எல்லாம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

    காவிரி கரையேர பகுதிகளில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடந்துவிடாமல் இருப்பதற்காக அதிகாரிகள் குழுவினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஒகேனக்கல் அருகே மலைகளுக்கு இடையே காவிரி ஆற்றில் தண்ணீர் பாய்ந்தோடும் காட்சி

    வெள்ளப் பெருக்கு காரணமாக ஒகேனக்கல்லில் அருவிகளில் குளிக்கவும், பரிசல் சவாரி செய்யவும் தொடர்ந்து தடை நீடித்து வருகிறது. அருவி பக்கம் யாரும் செல்லாமல் இருப்பதற்காக வருவாய்த் துறையினரும் தீயணைப்பு துறையினரும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    ஒகேனக்கல் வரும் சுற்றுலா பயணிகள் பேவனூர் சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.

    தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. #Metturdam #Cauvery


    காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர பகுதிகளில் வசிக்கும் 108 பேர் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். #Metturdam #Cauvery
    பள்ளிப்பாளையம்:

    5 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடி நிரம்பியதையடுத்து தற்போது விநாடிக்கு 76 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

    5 ஆண்டுகளுக்கு பிறகு காவிரி ஆற்றில் வெள்ளம் வருவதை காண கரையோர பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து வேடிக்கை பார்த்து செல்கின்றனர். கரையோர பகுதியில் முன் எச்சரிக்கையாக போலீசாரும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பள்ளிப்பாளையம் காவிரி ஆற்றின் இருபுறமும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் முன்கூட்டியே பள்ளிப்பாளையத்தில் காவிரி கரையோரம் காலி செய்யப்பட்ட 200 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. அந்த வீடுகளில் இருந்த பொதுமக்கள் ஏற்கனவே வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்து சென்று விட்டனர். ஆகவே பொதுமக்கள் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை.

    பள்ளிப்பாளையம் பாவடி தெரு அருகில் காவிரி ஆற்றில் கட்டப்பட்டு உள்ள முனியப்பசாமி சிலையின் 13 அடி உயர பீடத்தை மூழ்கடித்தப்படி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதுபோல் ஆதிகேசவ பெருமாள் கோவிலை தொட்டப்படி காவிரி வெள்ளம் செல்கிறது. ஆவரங்காடு பகுதியில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தபடி சென்றது. காக்காத்திட்டுபாறை பகுதியில் உள்ள விநாயகர் கோவிலையும் வெள்ளம் சூழ்ந்தது.

    பொதுமக்கள் வழக்கமாக குளிக்கும் இடங்களான பள்ளிப்பாளையம் காவிரிப்படித்துறை, ஜனதா நகர், ஆவாரங்காடு, அக்ரஹாரம் பகுதியில் நேற்று இரவு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு பலகை நகராட்சி மற்றும் ஊராட்சி சார்பில் நடப்பட்டது. அதில், ‘‘கரையோர பகுதிகளில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ள காரணத்தினால் பொதுமக்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவே, துணி துவைக்கவோ வேண்டாம்’’ என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    குமாரபாளையம் மணிமேகலை இந்திரா நகரில் 5 வீடுகளும், கலைமகள் நகரில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளிலும் வெள்ளம் சூழ்ந்தது.

    இப்பகுதியில் உள்ள 31 குடும்பங்களை சேர்ந்த 30 ஆண்கள், 39 பெண்கள் மற்றும் 6 குழந்தைகள் சேர்த்து மொத்தம் 75 பேர் குமாரபாளையம் ஜே.கே.கே.நடராஜா நகராட்சி திருமண மண்டபத்திற்கு வருவாய்த்துறையின் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் இந்திரா நகர், மணிமேகலை தெருவில் வசித்து வரும் 6 குடும்பங்களை சேர்ந்த 8 ஆண்கள், 15 பெண்கள் மற்றும் குழந்தைகள் என 33 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு புத்தர் வீதியில் செயல்பட்டு வரும் நகராட்சி தொடக்கப் பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அரசின் சார்பாக அவர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. கலெக்டர் ஆசியா மரியம் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை நேரில் பார்வையிட்டு குறைகளை கேட்டறிந்தார்.

    ஆற்றின் 2 கரைகளையும் தழுவியபடி தண்ணீர் செல்வதால் பரமத்திவேலூர் தாலுகாவுக்கு உட்பட்ட காவிரி கரையோர பகுதிகளில் பரிசல்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசம்பாளையம், ஜேடர்பாளையம், கண்டிப்பாளையம், அய்யம்பாளையம் ஆகிய பகுதிகளில் வெள்ள அபாயம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    வெள்ளப்பெருக்கின் காரணமாக நாமக்கல் மாவட்ட காவிரி கரையோர பகுதியில் வசிக்கும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் ஆற்றில் மீன் பிடிக்க செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #Metturdam #Cauvery

    ×