search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்நாடகாவில் கனமழை"

    • பெங்களூரில் இருந்து மண்டியாவுக்கு செல்லும் வாகனங்கள் மாகடி சாலை அல்லது பெங்களூர்-ஹாசன் நெடுஞ்சாலைக்கு திருப்பி விடப்பட்டு உள்ளன.
    • மைசூரில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் கனகாபுராவுக்கு சென்று அங்கிருந்து பெங்களூர் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளன.

    பெங்களூரு:

    தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து கர்நாடகாவில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, பெங்களூர் நகர், பெங்களூர் புறநகர், உடுப்பி, உத்தரகன்னடா, தட்சிண கன்னடா, கோலார், சிக்மகளூர், ஷிமோகா, ராம்நகர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

    தொடர்ந்து பெய்து வரும் மழையால் பல்வேறு பகுதிகளில் நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அதிகாரிகள் அனுப்பி வருகின்றனர். பெங்களூர்-மைசூர் நெடுஞ்சாலையின் பல பகுதிகளில் உள்ள சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

    நெடுஞ்சாலை மட்டுமல்லாமல் அதையொட்டி சர்வீஸ் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கும்பல்கோடு, பிடாடி, ராம்நகர், சென்னபட்ணா ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகள் முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கி விட்டன. இதனால் அந்தப் பகுதியை கடந்து வாகனங்கள் செல்ல முடியாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    பெங்களூரில் இருந்து மண்டியாவுக்கு செல்லும் வாகனங்கள் மாகடி சாலை அல்லது பெங்களூர்-ஹாசன் நெடுஞ்சாலைக்கு திருப்பி விடப்பட்டு உள்ளன. மைசூரில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் கனகாபுராவுக்கு சென்று அங்கிருந்து பெங்களூர் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளன.

    கனமழை காரணமாக பெங்களூருவின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. தொடர் மழை காரணமாக பெங்களூருவில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டது.

    காலை 8.30 மணி வரை ராமநகரில் இயல்பை விட 1039 சதவீதமும், சாம்ராஜ் நகரில் இயல்பை விட 1689 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது. சாம்ராஜ் நகரில் 7 செமீ மழையும், கொள்ளேகலில் 6 செமீ மழையும் பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி இருப்பதாலும் வெள்ளம் அதிகரித்துள்ளது. தொடர் மழையால் கடந்த 3-4 நாட்களில் சுமார் 700 வீடுகள் சேதமடைந்துள்ளன.

    ராம்நகர் மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்வர் பசவராஜ் பொம்மை பார்வையிட்டார். மேலும் கனமழையால் நகரில் உள்ள பட்ஷி ஏரி உடைப்பு ஏற்பட்டுள்ளதால் ஏற்பட்ட பயிர்கள் சேதம் குறித்து ஆய்வு செய்தார்.

    பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். பட்ஷி ஏரியின் சீரமைப்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    • கர்நாடக மாநிலம் முழுவதும் மேலும் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
    • துமகூரு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெளுத்து வாங்கி வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, நீர்நிலைகள் நிரம்பி பெருக்கெடுத்து ஓடுகிறது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. சன்னபட்னா தாலுகாவில் உள்ள திட்டமாரனஹள்ளி ஏரி உடைந்து 30-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் ஏராளமான கால்நடைகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. கடந்த 30 ஆண்டுகளில் ஹொங்கனூர் ஏரியின் கரைகள் உடைந்து தண்ணீர் வெளியேறுவது இதுவே முதல் முறையாகும்.

    அட்டா பிடாடி ஹோபாலி ஐனோரபாளையம் அருகே ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தில் தண்ணீர் ஓடி ஆபத்தான நிலையை எட்டியுள்ளது. பரசனபல்ய கிராமம் அருகே உள்ள சிக்கஹோளே என்ற இடத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், அக்கிராமத்தின் இணைப்புச் சாலை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. மத்தூரில் உள்ள ஷின்ஷா நதி ஒரு மாதத்தில் இரண்டாவது முறையாக பெருக்கெடுத்து ஓடுகிறது.

    மாண்டியா தாலுக்காவின் பல்வேறு கிராமங்களில் சுமார் 150 ஏக்கர் நிலங்கள் முற்றிலும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கர்நாடக மாநிலம் முழுவதும் மேலும் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. துமகூரு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெளுத்து வாங்கி வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, நீர்நிலைகள் நிரம்பி பெருக்கெடுத்து ஓடுகிறது.

    பா.ஜனதா மாநிலங்களவை எம்.பி.யாக இருப்பவர் நடிகர் ஜக்கேஷ். இவரது செந்த ஊர் துமகூரு மாவட்டம் மாயச்சந்திரா கிராமம் ஆகும். அவருக்கு அப்பகுதியில் சொந்தமாக வீடு உள்ளது. துமகூருவில் இதனால் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலையில் நேற்று முன்தினம் பெய்த கனமழைக்கு மாயச்சந்திரா கிராமத்தை வெள்ளம் சூழ்ந்தது. தாழ்வான பகுதியில் இருந்த வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது.

    அதுபோல் ஜக்கேசின் வீடுகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்தது. இதில் வீட்டில் இருந்த வீட்டு உபயோக பொருட்கள் சேதமானது. இதுதொடர்பான புகைப்படத்தை ஜக்கேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மழைநீர் வடிகால் பகுதியில் சிலர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடுகளை கட்டியதே வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்ததற்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

    ×