search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உயிரிழப்பு உயர்வு"

    சீனாவில் ரசாயன உரங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழப்பு 44 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 90 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். #ChinaChemicalPlantBlast
    பீஜிங்:

    கிழக்கு சீனாவில் உள்ள ஜியாங்சு மாகாணத்துக்குட்பட்ட யான்செங் நகரில் மிகப்பெரிய தொழிற்பேட்டை ஒன்று அமைந்துள்ளது. இங்கு பயிர்களுக்கான பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் ரசாயன உரங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று பிற்பகல் வெடி விபத்து ஏற்பட்டு தீப்பிடித்தது. தொழிற்சாலையில் இருந்து வேகமாக பரவிய தீயால் அருகாமையில் உள்ள தொழிற்சாலைகளும் பலத்த சேதமடைந்தன.

    தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் தொழிற்சாலைகளுக்குள் சிக்கித் தவித்த பலரை மீட்டனர். கடுமையாக போராடி இன்று அதிகாலையில் தீயை அணைத்தனர்.

    இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மிகவும் தீவிரமான தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட பலர் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.



    அதன்பின்னர் பலத்த தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டிருந்தவர்கள், சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால்  இன்று காலை நிலவரப்படி உயிரிழப்பு 44 ஆக உயர்ந்தது. சுமார் 90 பேர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தொழிற்சாலையில் ஏற்பட்ட இந்த பெரும் வெடிவிபத்தால், அப்பகுதியில் 2.2 ரிக்டர் அளவுக்கு சமமான ஒரு நில அதிர்வு இருந்ததாக சீனாவின் பூகம்ப ஆய்வு மையம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. #ChinaChemicalPlantBlast
    பிரேசில் நாட்டில் இரும்புத்தாது சுரங்கத்தில் உள்ள அணை உடைந்த விபத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 99 ஆக அதிகரித்துள்ளது. #BrazilDamCollapse #BrazilDamDisaster
    பிரேசிலியா:

    பிரேசில் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள புருமாடின்கோ நகரம் அருகே தனியாருக்கு சொந்தமான இரும்புத்தாது சுரங்கம் உள்ளது. சுரங்கத்தின் அருகில் பயன்படுத்தப்படாமல் இருந்த ஒரு அணை கடந்த 25-ம் தேதி திடீரென உடைந்தது. அணையில் இருந்த தண்ணீரும், சேறும் சகதியுமாக பெருக்கெடுத்து வெளியேறியது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். அணை வளாகத்தில் இருந்த உணவகம் சகதியில் முழுவதும் புதைந்தது.

    இதுதவிர அணையை ஒட்டியுள்ள பகுதியில் இருந்த நிறுவனங்கள், தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளில் பெருமளவிலான சகதி  நிரம்பியதால், அவர்களின் வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்தன.



    இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சாலைகள் சேதமடைந்ததால், அப்பகுதியில் சகதியில் சிக்கிய பொதுமக்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர். பாதுகாப்பு காரணமாக அங்கு வசிக்கும் பலர் வெளியேற்றப்பட்டனர்.

    உள்ளூர் ஊடகத்தில் நேற்று மாலை வெளியான தகவலின்படி, அணை விபத்தில் உயிரிழப்பு 99 ஆக உயர்ந்துள்ளது. மேலும், தொழிலாளர்கள், ஒப்பந்ததாரர்கள், பொதுமக்கள் என 259 பேரைக் காணவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர். உயிரிழந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மற்றவர்களையும் அடையாளம் காணும் பணி நடைபெறுகிறது.

    காணாமல் போனவர்களில் பெரும்பாலானோர் சேறு சகதிக்குள் சிக்கியிருக்கலாம் என்பதால் உயிர்பிழைக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. தொடர்ந்து மீட்பு பணி நடைபெறுகிறது. அணையில் இருந்து பெருக்கெடுத்து ஓடிய சேறு சகதியுடன் கூடிய சுரங்க கழிவுநீரானது, அருகில் உள்ள பராபிபா ஆற்றில் கலந்துள்ளதால் ஆற்று நீரும் மாசடைந்துள்ளது. ஏராளமான மீன்கள் செத்து மிதக்கின்றன. #BrazilDamCollapse #BrazilDamDisaster
    மெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து தீப்பிடித்த விபத்தில், பலத்த காயமடைந்த மேலும் சிலர் உயிரிழந்ததையடுத்து, பலி எண்ணிக்கை 91 ஆக உயர்ந்துள்ளது. #MexicoFire
    மெக்சிகோ சிட்டி:

    மெக்சிகோவின் ஹிடால்கோ மாநிலத்தில் சட்டவிரோதமாக பெட்ரோல் கொண்டு செல்லப்பட்ட குழாயில் கடந்த வெள்ளிக்கிழமை கசிவு ஏற்பட்டது. அதில் இருந்து வெளியேறிய பெட்ரோலை பொதுமக்கள் கேன்கள், வாளிகள் மற்றும் பாத்திரங்களில் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென பெட்ரோல் குழாய் வெடித்து தீப்பிடித்தது. அதில் சிக்கி ஏராளமானோர் கருகினர்.

    இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஏராளமானோர் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி பலியாகினர். இதனால் உயிரிழப்பு அதிகரித்தது.

    இந்நிலையில், காயமடைந்தவர்களில் மேலும் சிலர் நேற்று உயிரிழந்தனர். இதனையடுத்து பைப்லைன் தீ விபத்தில் உயிரிழப்பு 91 ஆக உயர்ந்துள்ளது. 52 பேர் பலத்த தீக்காயங்களுடன் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மெக்சிகோவில் கடந்த ஆண்டு மட்டும் 14,894 இடங்களில் சட்டவிரோத பெட்ரோல் குழாய்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அரசு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. #MexicoFire
    கென்யாவில் ஓட்டல் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. #KenyaHotelAttack #AlShabab
    நைரோபி:

    கென்யா நாட்டு தலைநகர் நைரோபியில் அமைந்துள்ள ஓட்டலில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் சிலர் அதிரடியாக புகுந்து தாக்குதல் நடத்தினர். ஓட்டல் வளாகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பிரிந்து சென்ற அவர்கள், துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகள் வீசியும் தாக்குதல் நடத்தியதால், பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடி ஆங்காங்கே பதுங்கினர். தற்கொலைப்படை தாக்குதலும் நடத்தப்பட்டது.

    இந்த தாக்குதலில் ஓட்டல் வளாகத்தின் வெளியே நிறுத்தப்பட்ட வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. பயங்கரவாதிகள் தாக்குதலை அடுத்து, அங்கு விரைந்த போலீசார், ஓட்டலில் இருந்தவர்களை பத்திரமாக மீட்கும் பணியில் ஈடுபட்டனர். போலீசார் சுற்றி வளைத்ததும், பயங்கரவாதிகள் பதுங்கியிருந்து அவ்வப்போது தாக்குதல் நடத்தினர். அவர்களுக்கு போலீசார் பதிலடி கொடுத்தனர்.



    சுமார் 20 மணி நேரம் நடந்த இந்த சண்டை நேற்று காலை முடிவுக்கு வந்தது. இதில், அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட 14 பேர் கொல்லப்பட்டதாக முதலில் அறிவிப்பு வெளியானது. அதன்பின்னர், மீட்பு பணியை தொடங்கியபோது, மேலும் 7 உடல்கள் மீட்கப்பட்டன. இதன்மூலம் உயிரிழப்பு 21 ஆக உயர்ந்தது. தாக்குதல் நடத்திய 5 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். பலத்த காயங்களுடன் 28 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இந்த தாக்குதலுக்கு அல் ஷபாப் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்க, அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்ததற்கு பழிதீர்க்கும் வகையில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறியுள்ளது. #KenyaHotelAttack #AlShabab
    டெங்கு, பன்றி காய்ச்சலால் இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தாமதமாக சிகிச்சைக்கு வருவதால் இந்த உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார். #Dengue #SwineFlu #TNHealthSecretary
    சென்னை:

    டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் பரவி வருகிறது. காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் சுகாதாரத்துறை தீவிரமாக கண்காணித்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் டெங்கு பாதிப்பு அதிகமாக இருப்பதால் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

    சென்னை சைதாப்பேட்டை தாடண்டன் நகர் அரசு குடியிருப்பில் இன்று காலை சுகாதாரத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் டெங்கு விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டனர்.

    அரசு அலுவலகங்களில் பணியாற்றி வரும் ஊழியர்களிடத்தில் டெங்கு, பன்றி காய்ச்சல் குறித்து துண்டு பிரசுரங்கள் வீடு வீடாக வழங்கினார்கள். சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி ஆகியோர் தலைமையில் இந்தவிழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.

    பின்னர் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பன்றி காய்ச்சலை பொறுத்தவரையில் கைகழுவும் பழக்கத்தை தினமும் பின்பற்றி வந்தாலே இந்நோயை தவிர்க்கலாம். நல்ல தண்ணீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் பாதிப்பு உண்டாகிறது. நீரில் கொசுக்கள் உருவாகும் பகுதிகளை கண்டறிந்து அவற்றை முழுமையாக அப்புறப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் முழுமையாக கட்டுப்படுத்த முடியும். காய்ச்சல் வந்தால் மருத்துவரை அணுக வேண்டும். டாக்டர் பரிந்துரை இல்லாமல் மருந்து கடைகளுக்கு சென்று மருந்து வாங்கி சாப்பிடக் கூடாது.

    பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த முழுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் பன்றி காய்ச்சலால் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், தெலுங்கானா மாநிலங்களில் பன்றி காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. மக்கள் கூடும் இடங்களில் தான் இவை அதிகமாக பரவுகிறது. அதனால் கை கழுவும் பழக்கத்தை பொதுமக்கள் வழக்கமாக்கி கொள்ள வேண்டும்.

    காலை மற்றும் மாலை நேரங்களில் மனிதர்களை கடிக்கும் கருப்பு, வெள்ளை நிறங்கள் கொண்ட கொசுக்களால் டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. கொசுக்களிடம் இருந்து தற்காத்துக் கொள்ள முழு கை உடைகளை அணிய வேண்டும்.

    கர்ப்பிணிகள், முதியவர்கள், சர்க்கரை நோய் மற்றும் எடை அதிகம் உள்ளவர்கள் முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பன்றி, டெங்கு காய்ச்சல் குறித்து பீதி அடைய வேண்டாம். கவனக்குறைவாகவும் இருக்க வேண்டாம்.



    பன்றி காய்ச்சலுக்கு இதுவரையில் ஏற்கனவே 11 பேர் உயிரிழந்துள்ளனர். காரைக்குடியில் 2 பேரும், கோவை, ஈரோட்டில் இருவரும் அறிகுறியுடன் இறந்துள்ளனர். தாமதமாக சிகிச்சைக்கு வருவதால் இந்த உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளது. காய்ச்சல் வந்தவுடன் மருத்துவமனைக்கு வந்தால் இறப்பை முற்றிலும் தவிர்த்திருக்கலாம்.

    டெங்கு காய்ச்சலுக்கு இந்த வருடம் இதுவரையில் 9 பேர் உயிர் இழந்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார். #Dengue #SwineFlu #TNHealthSecretary

    ×