search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆலமரம்"

    • ஆலமரத்தின் அடிப்பகுதி தீ பிடித்து எரிந்ததை பொதுமக்கள் பார்த்துள்ளனர்.
    • ஆலமரத்தின் பெரிய கிளை அருகில் இருந்த மின்கம்பத்தில் விழுந்தது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே கீழப்பாவூர் வடக்கு பகுதியில் 150 ஆண்டுகள் பழமையான ஆலமரம் உள்ளது. இந்நிலையில் அந்த வழியே சென்ற பொதுமக்கள் ஆலமரத்தின் அடிப்பகுதி புகையுடன் தீ பிடித்து எரிந்ததை பார்த்துள்ளனர். இது குறித்து சுரண்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நிலைய அலுவலர் ரமேஷ்,போக்குவரத்து பாலசந்தர் சிறப்பு நிலைய அலுவலர் பாலகிருஷ்ணன், வீரர்கள் மாடசாமி, சமுத்திரபாண்டி, குமார், சவரணகுமார் மற்றும் வீரர்கள் ஆலமரத்தின் மீது தண்ணீரை பீய்ச்சி தீயை அணைத்தனர். மேலும் தீ விபத்தால் ஆலமரத்தின் பெரிய கிளை ஒன்று அருகில் இருந்த மின்கம்பத்தில் விழுந்ததால் மின் வயர்கள் அறுந்து ஐந்துக்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்தது. உடனடியாக அந்தப் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு அதனை சரி செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர். கீழப்பாவூரில் பழமை வாய்ந்த ஆலமரம் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • செந்துறை அருகே நூறாண்டுகள் பழமையான ஆலமரத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தனர்
    • கிராம மக்கள் வழிபாடு நடத்தி நூதன போராட்டம்

    செந்துறை,

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ளது இரும்புலிக்குறிச்சி கிராமம். இந்த கிராமத்தின் நடுவே நூறாண்டுகள் பழமையான ஆலமரமும், அதன் அருகிலேயே கோவில் ஒன்றும் உள்ளது. நூற்றாண்டுகள் பழமையான இந்த ஆலமரத்தில் அந்த பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் வெயில் காலங்களில் இளைப்பாரி வந்தனர். இந்த ஆலமரம் இந்த ஊரின் ஒரு அடையாளமாகவும் திகழ்ந்து வந்தது.இந்த நிலையில் தற்போது இரு வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.இதனால் இந்த ஆலமரத்தை அகற்ற நெடுஞ்சாலை துறையினர் முடிவு செய்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கிராம பொதுமக்கள் சாலை விரிவாக்க பணிக்கு தேவையான இடங்கள் இருக்கும்போது ஏன் இந்த மரத்தை அகற்ற வேண்டும் என்பதோடு மரத்தை அகற்றாமல் சாலை பணியை அமைத்துக்கொள்ளுங்கள் என்று தெரிவித்தனர்.இருப்பினும் அதிகாரிகள் மரத்தை அகற்ற வேண்டும் என்று உறுதியாக கூறி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம பொதுமக்கள் ஊரின் அடையாளமாகவும், வழிப்போக்கர்கள் மற்றும் கிராம மக்களையும் வெயிலில் இருந்து காத்து வந்த பழமையான ஆலமரம் அகற்றப்படுவதற்கு கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள்.

    அதனை தொடர்ந்து கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் அரசுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அதன் ஒரு பகுதியாக 100 ஆண்டுகளுக்கு மேலாக நிழல் தந்து மக்களை காப்பாற்றிய ஆலமரத்தை தெய்வமாக வழிபட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கே இருந்த பூசாரியிடம் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பயபக்தியிடம் ஆலமரத்தை வணங்கி விபூதியிட்டு சென்றனர். மனிதன் செய்யும் தவறுக்கு மரத்திற்கு மரண தண்டனை கொடுக்க வேண்டாம் என்று அனைவரும் ஒருமித்த குரலில் கோஷமிட்டனர்.இந்த போராட்டம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரசு அதிகாரிகள் அந்த ஆலமரத்தை அகற்றாமல் சாலை விரிவாக்க பணியை மேற்கொள்ள வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஆலமரத்தின் அடிப்பகுதியை பெயர்த்து எடுத்து போதிய முன்னேற்பாடு பணிகளுடன் நட்டு வைக்கப்பட்டன.
    • ஓராண்டுக்குள் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் எம்.ஜி.எம். சாலை என்று அழைக்கப்படும் புதிய பஸ் நிலையம் சாலையில் விரிவாக்கம் பணிகள் நடந்து வந்தது. இந்த பணிக்காக சாலையோரம் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

    இந்த சாலையோரம் சுமார் 50 ஆண்டுகள் பழமையான ஆலமரம் நீண்டு வளர்ந்து இருந்தது.

    சாலை விரிவாக்கம் பணிக்காக தவிர்க்க முடியாத சூழ்நிலையில் இந்த ஆலமரத்தை வெட்டி அப்புறப்படுத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் தஞ்சை மாவட்ட நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி நிர்வாகம் ஆகியவை இந்த மரத்தை முழுவதுமாக வெட்டி அப்புறப்படுத்தாமல் மரத்தின் மேல் பகுதி மட்டும் அப்புறப்படுத்திவிட்டு அடியிலிருந்து சுமார் 7 அடி உயரம் வரை உள்ள மரத்தின் பகுதியை மட்டும் பெயர்த்து எடுத்து அதனை நட்டு பராமரிக்க முடிவு செய்யப்பட்டது.

    இதற்காக கவின்மிகு தஞ்சை இயக்கத்துடன் இணைந்து அந்த ஆலமரத்தின் அடிப்பகுதியை பெயர்த்து எடுத்து அதனை கலெக்டர் அலுவலகம் வளாகத்தில் எடுத்து போதிய முன்னேற்பாடு பணிகளுடன் நட்டு வைக்கப்பட்டன.

    இன்று வளாகத்தில் எடுத்து வைக்கப்பட்ட ஆலமரத்தை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டு தண்ணீர் ஊற்றினார்.

    பின்னர் மரத்திற்கு தண்ணீர் ஊற்றி தேவையான சத்துக்கள் அளித்து நல்ல முறையில் பராமரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    பின்னர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்ப தாவது:-

    தஞ்சை மாவட்டத்தில் வீட்டுக்கு ஒரு விருட்சம் என்ற திட்டத்தின் கீழ் ஓராண்டுக்குள் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து ஊருக்கு ஒரு வனம் திட்டத்தின் கீழ் கிராமங்கள் தோறும் குறுங்காடுகள் அமைக்கப்பட்டு வருகிறது. சாலை விரிவாக்கத்துக்காக

    தவிர்க்க முடியாத சூழ்நிலையில் மரங்களை வெட்ட நேர்ந்தால் அதற்கு பதில் 10 முதல் 20 மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும் என்பது விதிமுறையாகும். தற்போது எடுத்து வைக்கப்பட்ட ஆலமரத்தை முழுவதுமாக வெட்டி அப்புறப்படுத்த மனமில்லாமல் அதனை பெயர்த்து எடுத்து மீண்டும் நட்டு பராமரித்து வருகிறோம்.

    மரங்கள் வளர்த்தால் தூய்மையான காற்று, நிழல் கிடைக்கும். அனைவரும் அதிகளவில் மரங்கள் நட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் செந்தில்குமார், உதவி கோட்டப் பொறியாளர் கீதா, உதவி பொறியாளர் மோகனா, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், பொறியாளர் முத்துக்குமார், ஆர்.ஏ.இ ன்பெரா கன்ஸ்ட்ரக்சன் பி.ஆர்.ஒ திருமாறன், இன்ஜினியர்கள் சுடலை, கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆலமரத்தை அகற்ற அதிகாரிகள் ஜே.சி.பி.யுடன் வந்த போது அப்பகுதி மக்கள் ஏராளமானோர் மரத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • தகவல் அறிந்ததும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் அதிகாரிகள் அங்கு வந்தனர்.

    பூந்தமல்லி:

    போருர் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற மதகு மற்றும் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக கால்வாய் செல்லும் வழியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகிறது.

    இந்த நிலையில் மாங்காடு அடுத்த பரணிபுத்தூரில் மழைநீர் கால்வாய் செல்லும் பாதையில் 70 ஆண்டு பழமை வாய்ந்த ஆலமரம் இருந்தது. இதையடுத்து அந்த மரத்தை வேரோடு அகற்றி வேறு இடத்தில் நட நீர்வளத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    நேற்று காலை ஆலமரத்தை அகற்ற அதிகாரிகள் ஜே.சி.பி.யுடன் வந்த போது அப்பகுதி மக்கள் ஏராளமானோர் மரத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் அதிகாரிகள் அங்கு வந்தனர்.

    அவர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆலமரம் வேரோடு அகற்றப்பட்டு வேறு இடத்தில் நட்டி பராமரிக்கப்படும் என்று தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து ஆலமரத்தின் பெரிய கிளைகள் வெட்டி அகற்றப்பட்டது. பின்னர் ஜே.சி.பி. எந்திரங்கள் உதவியுடன் ஆலமரம் வேரோடு பிடுங்கப்பட்டு சுமார் 100 மீட்டர் தொலைவில் நடப்பட்டது. தனியார் தொண்டு நிறுவனம் உதவியுடன் நவீன தொழில்நுட்பத்துடன் ஆலமரம் நட்டு வைக்கப்பட்டது. இதனை அமைச்சர் தா.மோ. அன்பரசன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். ஆலமரம் மீண்டும நடப்பட்டதற்கு அப்பகுதி மக்கள் பாராட்டும் நன்றியும் தெரிவித்தனர்.

    இதுகுறித்து தொண்டு நிறுவனத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    ஆலமரத்தின் வேர் முழுவதும் 4 எந்திரங்களை பயன்படுத்தி முற்றிலும் அகற்றப்பட்டது. சுமார் 60 அடி உயரம் உள்ள இந்த மரத்தின் பெரிய கிளைகள் வெட்டப்பட்ட பின்னர் சுமார் 100 மீட்டர் தூரத்துக்கு எடுத்து சென்று புதிய இடத்தில் நட்டோம்.

    அதன் வேர்களை மாட்டுச்சாணம், மண்புழு உரம் மற்றும் வேரின் வளர்ச்சியை தூண்டும் உரங்களால் மூடி இடமாற்றம் செய்தோம்.

    புதிய இடத்தில் ஆலமரத்தை வைப்பதற்கு முன்பு அது ஏற்கனவே இருந்த இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட மண்ணும் உரங்களுடன் சேர்த்து வைக்கப்பட்டது. இந்த மரத்தின் வளர்ச்சியை சில மாதங்கள் கண்காணிப்போம் என்றார்.

    ×