search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அயோக்யா விமர்சனம்"

    வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் - ராஷி கண்ணா நடிப்பில் வெளியாகி இருக்கும் `அயோக்யா' படத்தின் விமர்சனம்.
    தாய், தந்தையை இழந்த விஷால் தனது சிறுவயதில் ஆனந்த
    ராஜ் சொல்லைக் கேட்டு சிறிய அளவில் திருடி வருகிறார். ஒருமுறை திருட்டு வழக்கில் சிக்கும் விஷாலை, ஆனந்த்ராஜ் வந்து மீட்டுச் செல்கிறார். அதுவரை ஆனந்த்ராஜ் தான் பெரிய ஆள் என்று நினைத்துக் கொண்டிருந்த விஷால், காவல் நிலையத்திற்கு சென்று வந்த பிறகு போலீஸாக இருந்தால் யாரும் கேள்வி கேட்க முடியாது என்று போலீசாக வேண்டும் என்று நினைக்கிறார்.

    பின்னர் ஆனந்த்ராஜிடம் இருந்து விலகி, படிப்பில் கவனம் செலுத்துகிறார். 10-வது வரை படித்து பின்னர், சில தில்லுமுல்லு செய்து போலீசாகி விடுகிறார். சென்னையில் ரவுடியாக இருக்கும் பார்த்திபன், தனது 4 தம்பிகளை வைத்து கடத்தல் தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு போலீஸ் அதிகாரி ஒருவர் இடைஞ்சல் கொடுக்க, பிரச்சனை பண்ணாத போலீஸ் ஒருவரை அனுப்பும்படி பார்த்திபன், மந்திரியான சந்தானபாரதியிடம் கேட்கிறார்.



    இதையடுத்து அந்த பகுதிக்கு போலீஸ் அதிகாரியாக விஷால் செல்கிறார். விஷால், பார்த்திபன் செய்யும் தவறுகளை கண்டுகொள்ளாமல், அவர்களிடம் கையூட்டு வாங்கி நலுவுகிறார். இது நேர்மையான போலீஸ் அதிகாரியான கே.எஸ்.ரவிக்குமாருக்கு பிடிக்கவில்லை. இதனாலேயே அவர் விஷாலுக்கு மரியாதை கொடுக்க மறுக்கிறார்.

    பார்த்திபன் கொடுத்த ஒரு வீட்டில் தங்கி வரும் விஷாலுக்கு, அவர் வீட்டிற்கு அருகே தங்கியிருக்கும் ராஷி கண்ணாவுடன் காதல் ஏற்படுகிறது. இந்த நிலையில், பூஜா தேவரியா தனது தங்கையை பலாத்காரம் செய்து கொலை செய்த பார்த்திபனின் தம்பிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க நினைக்கிறார். இதனால் அவரை கடத்தி கொலை செய்ய நினைக்கின்றனர். பூஜா தேவரியாவுக்கு பதில் ராஷி கண்ணாவை பார்த்திபனின் ஆட்கள் கடத்தி செல்கின்றனர்.



    ராஷி கண்ணாவை விஷால் காப்பாற்றுகிறார். பின்னர் பார்த்திபனுக்கும், விஷாலுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது.

    கடைசியில், விஷால் தனது போக்கை மாற்றிக் கொண்டு திருந்தினாரா? பார்த்திபனின் தம்பிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    விஷால் படம் முழுக்க காக்கிச்சட்டை அணியாத போலீஸ் அதிகாரியாகவே வலம் வருகிறார். முதல் பாதி முழுவதும் அயோக்யத்தனம் கொண்ட போலீஸ் அதிகாரியாகவும், பின்னர் தனது தவறை உணர்ந்து அவர் செய்யும் தியாகம், அவர் மீதான வெறுப்பை மாற்றும்படியாக அமைகிறது. ஆக்‌ஷன் காட்சிகளில் அனல் பறக்க வைத்திருக்கிறார். ராஷி கண்ணா அழகு தேவதையாக வந்து கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.



    பார்த்திபன் வில்லத்தனத்திலும், கே.எஸ்.ரவிக்குமார் நேர்மையிலும் அனுபவ நடிப்பை வெளிப்படுத்த, எம்.எஸ்.பாஸ்கர், பூஜா தேவரியா, சோனியா அகர்வால், ஆனந்த்ராஜ் அவர்களது கதாபாத்திரங்களை மெருகேற்றியிருக்கின்றனர். யோகி பாபு காமெடியில் ஆங்காங்கு சிரிக்க வைக்கிறார்.

    தெலுங்கில் வெளியான டெம்பர் படத்தின் ரீமேக்காக உருவாகி இருக்கும் இந்த படம், இளம்பெண் ஒருவருக்கு இளைக்கப்படும் கொடுமையால் தனது அயோக்யதனத்தை மாற்றிக் கொண்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கும் கதையாக உருவாகி இருக்கிறது. தவறு செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும், சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்ற கருத்தை மையப்படுத்தி உருவாகி இருக்கிறது. வெங்கட் மோகன் இந்த படத்தின் மூலம் இயக்குநராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார். படத்தில் இடம்பெறும் வசனங்கள் மட்டும் மிகைப்படுத்தியிருப்பது போல தோன்றுகிறது.

    சாம்.சி.எஸ். இசையில் பாடல்களும், பின்னணி இசையும் அருமை. விஐ கார்த்திக்கின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.

    மொத்தத்தில் `அயோக்யா' குற்றம் குற்றமே.

    ×