search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர்கள் தடை"

    திருவாரூர் தொகுதியில் அமைச்சர்கள் கஜா புயல் நிவாரண ஆய்வு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி சத்தியபிரத சாகு கூறினார். #Tiruvarurconstituency
    சென்னை:

    திருவாரூர் தொகுதிக்கு வருகிற 28-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    இதையடுத்து அத்தொகுதியில் தேர்தல் நடத்தைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன.

    இது தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரத சாகு கூறியதாவது:-

    திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளதால் அங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் நடத்தைகளை அமல்படுத்தி தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டு இருக்கிறது.



    கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக அமைச்சர்கள் புயல் நிவாரண ஆய்வுகள் நடத்த முடியாது. அதற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

    அனுமதி இல்லாமல் திருவாரூர் தொகுதிக்குள் நுழையும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

    புயல் சம்பந்தமாக அரசு ஏற்கனவே அறிவித்துள்ள நிவாரண நிதி, பொருட்கள் ஆகியவற்றை வழங்க எந்த தடையும் இல்லை. ஆனால் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக அரசியல் கட்சிகளிடமிருந்து புகார்கள் வந்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். விதி மீறி செயல்படும் எந்தவொரு செயலும் தடுக்கப்படும்.

    தேர்தல் ஆணைய சட்ட விதிகளின்படிதான் திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் காலியாக உள்ள 19 தொகுதிகளுக்கு கோர்ட்டின் உத்தரவுகளை தேர்தல் ஆணையம் கவனத்தில் கொண்டு இருக்கிறது.

    19 தொகுதி தேர்தல் தொடர்பாக அடிக்கடி ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணைய உத்தரவுக்காக காத்து இருக்கிறோம்.

    திருவாரூர் இடைத்தேர்தலுக்கான வாக்கு எந்திரங்கள், 303 வாக்குசாவடி மையங்கள் தயார் நிலையில் உள்ளன. வெளிப்படையான, சுமூகமான வாக்குப்பதிவு நடைபெற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. வாக்காளர்கள் தங்களது வாக்குகளை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும்.

    இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், பொருட்கள் கொடுப்பது போன்றவற்றை தடுக்க தீவிர கண்காணிப்பு செய்யப்படுகிறது. மேலும் வருமான வரித்துறை அதிகாரிகள், மத்திய அதிகாரிகள், பண விநியோகத்தை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். இது கண்காணிப்பு பணிக்கு மேலும் வலுசேர்க்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Tiruvarurconstituency
    ×