என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "World Athletics Championships"

    • 10 முறை தொடர்ந்து சாம்பியன் பட்டம் வென்ற அமெரிக்காவை வீழ்த்தியது.
    • 4x400மீ தொடர் ஒட்டத்தில் முதன்முறையாக ஆப்பிரிக்கா நாடு தங்கம் வென்றது.

    ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 4x400மீ தொடர் ஓட்டம் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆப்பிரிக்க நாடானா போட்ஸ்வானா தங்கப்பதக்கம் வென்றது.

    4x400மீ பந்தயத்தில் முதன்முறையாக தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளது. அதுவும் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி ஆப்பிரிக்க நாடு தங்கப்பதக்கம் வெல்லுவதும் இதுவே முதன்முறை. இந்த வரலாற்று வெற்றியை கொண்டா அந்நாட்டு அதபர் டுமா போகா செப்டம்பர் 29ஆம் தேதி பொதுவிடுமுறை என அறிவித்துள்ளார்.

    நேற்று போட்ஸ்வானாவின் லீக் பெகெம்பிலோ எப்பி, லெட்சில் டெபோகோ, பயபோ என்டோரி, புசாங் கொலன் கெபிநாட்ஷிபி ஆகியோர் சாதனைப் படைத்தார். கடந்த 10 முறை சாம்பியன்ஷின் வென்ற அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளியது. தென்ஆப்பிரிக்கா அணி 3ஆவது இடம் பிடித்தது.

    • 41 வீராங்கனைகள் பந்தயத்தில் முழுவதுமாக கடந்தனர்.
    • 8 வீராங்கனைகள் பாதியில் விலகியும், தகுதி நீக்கமும் செய்யப்பட்டனர்.

    டோக்கியோ:

    20-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.

    போட்டியின் 8-வது நாளான இன்று காலை பெண்களுக்கான 20 கிலோ மீட்டர் தூர நடைப்பந்தயம் நடைபெற்றது. இதில் 49 பேர் பங்கேற்றனர்.

    ஸ்பெயின் வீராங்கனை மரியா பெரேஸ் தங்கம் வென்றார். அவர் பந்தய தூரத்தை 1 மணி 25.54 நிமிடத்தில் கடந்தார். மெக்சிகோவை சேர்ந்த அலெக்னா கோன் சாலஸ் 1 மணி 26.06 நிமிடத்தில் கடந்து வெள்ளிப்பதக்கமும், நானாகோ புஜி (ஜப்பான்) 1 மணி 26.18 நிமிடத்தில் கடந்து வெண்கல பதக்கமும் பெற்றனர்.

    41 வீராங்கனைகள் பந்தயத்தில் முழுவதுமாக கடந்தனர். 8 வீராங்கனைகள் பாதியில் விலகியும், தகுதி நீக்கமும் செய்யப்பட்டனர்.

    ஆண்களுக்கான 20 கிலோ மீட்டர் நடைபந்தயத்தில் பிரேசில் வீரர் கெயோ பான்பிம் தங்கம் வென்றார். அவர் பந்தய தூரத்தை 1 மணி 18.35 நிமிடத்தில் கடந்தார்.

    சீனாவை சேர்ந்த ஹார்வோவாங் 1 மணி 18.43 நிமிடத்தில் கடந்து வெள்ளி பதக்கமும், பால் மெக்ராத் (ஸ்பெயின்) 1 மணி 18.45 நிமிடத்தில் கடந்து வெண்கல பதக்கமும் பெற்றனர்.

    • இந்தியா சார்பில் நடப்பு சாம்பியன் நீரஜ் சோப்ரா, சச்சின் யாதவ் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
    • இந்தியாவின் சச்சின் யாதவ் 86.27 புள்ளிகள் பெற்று 4-வது இடத்திலும் நீரஜ் சோப்ரா 84.03 புள்ளிகள் பெற்று 8-வது இடத்தை பெற்றனர்.

    டோக்கியோ:

    20-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா சார்பில் நடப்பு சாம்பியன் நீரஜ் சோப்ரா, சச்சின் யாதவ் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

    நீரஜ் சோப்ரா ஒலிம்பிக் போட்டிகளில் 2021-ம் ஆண்டு (டோக்கியோ ஒலிம்பிக்ஸ்) தங்கப் பதக்கமும், 2024-ம் ஆண்டு (பாரிஸ் ஒலிம்பிக்ஸ்) வெள்ளிப் பதக்கமும் வென்றிருந்தார். உலக தடகள சாம்பியன்ஷிப்பில் 2022-ல் வெள்ளியும், 2023-ல் தங்கமும் வென்றிருந்தார். இதனால் அவர் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது.

    இந்த இறுதிப்போட்டியில் ஒலிம்பிக் சாம்பியனான அர்ஷத் நதீம் (பாகிஸ்தான்) உலகின் முதல் நிலை வீரரான ஜூலியன் வெப்பர் (ஜெர்மனி), ஆண்டர்சன் பீட்டர்ஸ் (கிரேனடா), ஜேக்கப் வட்லெஜ் (செக்குடியரசு) ஜூலியஸ் (கென்யா) ஆகியோர் நீரஜ் சோப்ராவுக்கு கடும் போட்டியாளர்களாக இருந்தார்கள்.

    இறுதிப்போட்டி 6 த்ரோ முறையில் நடைபெற்றது. இதில் முதல் 3 த்ரோ முடிவில் இந்தியாவின் சச்சின் யாதவ் 86.27 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் இருந்தார். இதுவே இவரது சிறப்பான த்ரோ ஆகும். மற்றொரு இந்திய வீரரான நீரஜ் சோப்ரா யாரும் எதிர்பார்க்காத வகையில் 8-வது இடத்தில் இருந்தார். முதல் 3 இடங்களில் வால்காட் 87.83, பீட்டர்ஸ் 87.38, தாம்சன் 86.6 ஆகியோர் இருந்தார்.

    இதனை தொடர்ந்து நடந்து மீதமுள்ள 3 த்ரோ வீசப்பட்டது. இதன் முடிவில் வால்காட் (டிரினிடாடியன்) 88.16 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கத்தை வென்றார். இந்த த்ரோ இந்த சீசனின் சிறந்த த்ரோ ஆகும். பீட்டர்ஸ் (கிரேனடா) 87.38 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கத்தை வென்றார். தாம்சன் (அமெரிக்கா) 86.67 புள்ளிகள் பெற்று வெண்கல பதக்கத்தை வென்றார்.

    இந்தியாவின் சச்சின் யாதவ் 86.27 புள்ளிகள் பெற்று 4-வது இடத்திலும் நீரஜ் சோப்ரா 84.03 புள்ளிகள் பெற்று 8-வது இடத்தை பிடித்தனர்.

    • நடைபந்தயத்தில் பங்கேற்ற இந்திய வீரர், சந்தீப் குமார் 2 மணி 39.15 நிமிடத்தில் கடந்து 23-வது இடத்தை பிடித்தார்.
    • பெண்கள் பிரிவில் இந்திய வீராங்கனை பிரியங்கா 24-வது இடத்தை பிடித்தார்.

    டோக்கியோ:

    20-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று காலை தொடங்கியது.

    ஆண்களுக்கான 35 கிலோ மீட்டர் நடைபந்தயம் முதலில் நடைபெற்றது. இதில் கனடா வீரர் டன்பி தங்கம் வென்றார். அவர் 2 மணி 28.22 நிமிட நேரத்தில் பந்தய தூரத்தை கடந்தார்.

    பிரேசிலை சேர்ந்த போன்பாம் வெள்ளிப்பதக்கமும் (2 மணி 28.55 நிமிடம்) ஜப்பான் வீரர், கட்சுகி வெண்கல பதக்கமும் (2 மணி 29.16 நிமிடம்) பெற்றனர். இதில் பங்கேற்றுள்ள இந்திய வீரர், சந்தீப் குமார் 2 மணி 39.15 நிமிடத்தில் கடந்து 23-வது இடத்தை பிடித்தார்.

    பெண்களுக்கான 35 கிலோ மீட்டர் தூர நடை பந்தயத்தில் ஸ்பெயின் வீராங்கனை மரியா பெரெஸ் 2 மணி 39.01 நிமிடத்தில் கடந்து தங்கம் வென்றார்.

    இத்தாலியை சேர்ந்த பால் மிசானோ வெள்ளியும் (2 மணி 42.24 நிமிடம்), ஈக்வடார் வீராங்கனை மிலேனா டோரஸ் வெண்கலமும் (2 மணி 42.44 நிமிடம்) பெற்றனர்.

    இந்திய வீராங்கனை பிரியங்கா 24-வது இடத்தை பிடித்தார். அவர் பந்தய தூரத்தை 3 மணி 5.58 நிமிடங்களில் கடந்தார்.

    • தமிழ்நாட்டில் இருந்து டிரிபிள் ஜம்ப் வீரர் பிரவீன் சித்ரவேல் இதில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.
    • நீரஜ் சோப்ரா பங்கேற்கும் ஈட்டி எறிதல் போட்டியின் தகுதி சுற்று 17-ந் தேதியும், இறுதிப்போட்டி 18-ந் தேதியும் நடக்கிறது.

    டோக்கியோ:

    20-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நாளை (13-ந் தேதி ) தொடங்குகிறது. வருகிற 21-ந் தேதி வரை 6 நாட்கள் இந்த போட்டி நடைபெறுகிறது.

    இதில் 198 நாடுகளை சேர்ந்த 2202 வீரர் வீராங்க னைகள் கலந்து கொள்கிறார்கள். 49 பிரிவுகளில் பந்தயம் நடத்தப்படுகிறது. வழக்கம்போல் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    19 பேர் கொண்ட இந்திய அணி உலக தடகள சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கிறது. வரலாற்றில் முதல்முறையாக ஈட்டி எறிதலில் 4 இந்தியா்கள் கலந்து கொள்கிறார்கள் .

    இதில் நீரஜ் சோப்ரா மீது தான் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. 27 வயதான அவர் 2022 உலக தடகள சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் பெற்றார். கடந்த 2023-ம் ஆண்டு அங்கேரியில் நடந்த உலக சாம்பியன்ஷிப்பில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்.

    அவர் இந்த முறையும் தங்கம் வெல்வாரா ? என்று ஆவலுடன் எதிா்பாா்க்கப்படுகிறது. ஒலிம்பிக் சாம்பியனும், பாகிஸ்தான் வீரருமான அர்சத் நதீம் உள்ளிட்ட வீரர்கள் அவருக்கு கடும் சவாலாக இருப்பார்கள். நீரஜ் சோப்ரா பங்கேற்கும் ஈட்டி எறிதல் போட்டியின் தகுதி சுற்று 17-ந் தேதியும், இறுதிப்போட்டி 18-ந் தேதியும் நடக்கிறது.

    தமிழ்நாட்டில் இருந்து டிரிபிள் ஜம்ப் வீரர் பிரவீன் சித்ரவேல் இதில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். உலக தடகள சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கும் இந்திய அணி வருமாறு-

    ஆண்கள்: நீரஜ் சோப்ரா, சச்சின் யாதவ், யஷ்வீா் சிங், ரோகித் யாதவ் (ஈட்டி எறிதல்), முரளி ஸ்ரீசங்கா் (நீளம் தாண்டுதல்), குல்வீா் சிங் (5,000 மற்றும் 10,000 மீட்டர் ஓட்டம்), பிரவீன் சித்ரவேல், அப்துல்லா அபூபக்கா் ( டிரிபிள் ஜம்ப்), சா்வேஷ் அனில் குஷோ் (உயரம் தாண்டுதல்), அனிமேஷ் குஜுா் (200 மீட்டர்), தேஜாஸ் சிா்சே (110 மீ தடை தாண்டுதல்), சொ்வின் செபாஸ்டியன் (20 கி.மீ. நடைப் பந்தயம்), ராம் பாபு, சந்தீப் குமாா் (35 கி.மீ. நடைப் பந்தயம்).

    பெண்கள்: பாருல் , அங்கிதா தியானி (3,000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ்), அன்னு ராணி (ஈட்டி எறிதல்), பிரியங்கா கோசு வாமி (35 கி.மீ. நடைப்பந்த யம்), பூஜா (800 மீட்டர் , 1,500 மீட்டர்).

    • சென்னையில் நடைபெற்ற போட்டியில் 200 மீட்டரை 20.63 வினாடிகளில் கடந்து சாதனை.
    • டோக்கியோவில் நடைபெறும் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் கலந்து கொள்ள தகுதி.

    சென்னையில் நடைபெற்ற மாநிலங்களுக்கு இடையிலான 200 மீ ஓட்டப் பந்தய போட்டியில் சத்தீஷ்கரை சேர்ந்த 22 வயதான அனிமேஷ் குஜுர் 20.63 வினாடிகளில் கடந்து சாதனைப் படைத்தார்.

    இதன்மூலம் அடுத்த மாதம் 13 முதல் 21ஆம் தேதி வரை டோக்கியோவில் நடைபெற இருக்கும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க தகுதிப் பெற்றுள்ளார். உலக தடகள சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க தகுதிப் பெற்ற இந்தியாவைச் சேர்ந்த முதல் இந்திய தடகள வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    இவர் ஏற்கனவே 100 மீ (10.18 வினாடிகள்), 200 மீ (20.32 வினாடிகள்) போட்டிகளில் சாதனைப் படைத்துள்ளார்.

    • நீரஜ் சோப்ரா தலைமையில் 28 பேர் கொண்ட இந்திய அணி இந்த போட்டியில் பங்கேற்கிறது.
    • ஆசிய சாதனையாளரான குண்டு எறிதல் வீரர் தஜிந்தர் பால்சிங் தூர் காயத்தில் இருந்து மீளாததால் அணியில் இடம்பெறவில்லை.

    புதுடெல்லி:

    19-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் வருகிற 19-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியை, இந்திய தடகள சம்மேளனம் நேற்று அறிவித்தது. ஒலிம்பிக் சாம்பியனான ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தலைமையில் 28 பேர் கொண்ட இந்திய அணி இந்த போட்டியில் பங்கேற்கிறது.

    ஆசிய சாதனையாளரான குண்டு எறிதல் வீரர் தஜிந்தர் பால்சிங் தூர் காயத்தில் இருந்து மீளாததால் அணியில் இடம்பெறவில்லை. தேசிய சாதனை படைத்த நீளம் தாண்டுதல் வீரர் தேஜஸ்வின் சங்கர், 800 மீட்டர் ஓட்டப்பந்தய வீராங்கனை சந்தா, 20 கிலோ மீட்டர் தூர நடைப்பந்தய வீராங்கனை பிரியங்கா கோஸ்வாமி ஆகியோர் ஆசிய விளையாட்டு போட்டியில் (செப்டம்பர் 23-ந் தேதி முதல் அக்டோபர் 8-ந் தேதி வரை) கவனம் செலுத்தும் பொருட்டு இந்த போட்டியில் இருந்து விலகி இருக்கின்றனர். தமிழக வீரர்களான சந்தோஷ்குமார், பிரவீன் சித்ரவேல், ஜெஸ்வின் ஆல்ட்ரின், ராஜேஷ் ஆகியோருக்கு இடம் கிடைத்துள்ளது.

    உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணி வருமாறு:-

    பெண்கள்: ஜோதி யர்ராஜி (100 மீட்டர் தடை ஓட்டம்), பாருல் சவுத்ரி (3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ்), ஷைலி சிங் (நீளம் தாண்டுதல்), அன்னு ராணி (ஈட்டி எறிதல்) பாவ்னா ஜாட் (20 கிலோ மீட்டர் நடைபந்தயம்).

    ஆண்கள்: கிரிஷன் குமார் (800 மீட்டர் ஓட்டம்), அஜய்குமார் சரோஜ் (1,500 மீட்டர் ஓட்டம்), சந்தோஷ் குமார் (400 மீட்டர் தடைஓட்டம்), அவினாஷ் சாப்லே (3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ்), சர்வேஷ் அனில் குஷாரே (உயரம் தாண்டுதல்), ஜெஸ்வின் ஆல்ட்ரின் (நீளம் தாண்டுதல்), ஸ்ரீசங்கர் (நீளம் தாண்டுதல்), பிரவீன் சித்ரவேல், அப்துல்லா அபூபக்கர், எல்தோஸ் பால் (மூவரும் டிரிபிள் ஜம்ப்), நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல்), டி.பி.மானு (ஈட்டி எறிதல்), கிஷோர் குமார் (ஈட்டி எறிதல்), ஆகாஷ்தீப் சிங், விகாஷ் சிங், பரம்ஜீத் சிங் (மூவரும் 20 கிலோ மீட்டர் நடைபந்தயம்), ராம் பாபூ (35 கிலோ மீட்டர் நடைபந்தயம்), அமோஜ் ஜேக்கப், முகமது அஜ்மல், முகமது அனாஸ், ராஜேஷ், அனில் ராஜலிங்கம், மிஜோ சாக்கோ குரியன் (6 பேரும் 400 மீட்டர் தொடர் ஓட்டம்).

    • 100மீ தடைதாண்டி ஓட்டம் போட்டியில் ஜோதியால் 29-வது இடத்தையே பிடிக்க முடிந்தது
    • ஆண்களுக்கான 800மீ ஓட்டத்தில் கிருஷ்ணன் குமார் சோபிக்க தவறினார்

    உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரி நாட்டின் தலைநகர் புதாபெஸ்ட்டில் நடைபெற்று வருகிறது. நேற்று பெண்களுக்கான 100மீ தடைதாண்டி ஓட்டம் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் ஜோதி யர்ராஜி கலந்து கொண்டார்.

    ஆனால் அவர் பந்தய தூரத்தை 13.05 வினாடிகளில் கடந்து, அவருடைய தகுதிச்சுற்று பிரிவில் (ஹீட்) ஏழாவது இடம் பிடித்ததால் அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்தார். ஜோதியின் தேசிய சாதனையாக 12.78 வினாடி உள்ளது. இந்த இலக்கைக் கூட அவரால் எட்ட முடியவில்லை.

    ஒவ்வொரு பிரிவிலும் (ஹீட்) இருந்து முதல் நான்கு பேர் அரையிறுதிக்கு தகுதி பெறுவார்கள். அதன்பின் வேகமாக பந்தய தூரத்தை கடந்த மேலும் 4 பேர் (அனைத்து பிரிவிலும் இருந்து மொத்தமாக) அரையிறுதிக்கு தகுதி பெறுவார்கள். ஒட்டுமொத்தமாக ஜோதியால் 29-வது இடத்தையே பெற முடிந்தது.

    ஆண்களுக்கான 800மீ ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர் கிருஷ்ணன் குமார், அவருடைய பிரிவில் (ஹீட்) 7-வது இடத்தை பிடித்து அரையிறுதி வாய்ப்பை இழந்தார். அவர் பந்தய தூரத்தை ஒரு நிமிடம் 50.36 வினாடிகளில் கடந்தார். அவருடைய சிறந்த ஓட்டம் ஒரு நிமிடம் 45.88 வினாடியாகும். ஒவ்வொரு ஹீட்டிலும் இருந்து முதல் மூன்று இடங்களை பிடிப்பவர்கள் அரையிறுதிக்கு முன்னேறுவார்கள். மேலும், வேகமாக ஓடிய மூன்று பேர் தேர்வு செய்யப்படுவாரக்ள்.

    ஆசிய சாம்பியனான ஜோதி யர்ராஜி குறைந்தபட்சம் அரையிறுதிக்காவது முன்னேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தகுதி சுற்றோடு வெளியேறும் நிலை ஏற்பட்டது. கடந்த மாதம் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்று சாதனைப் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தொடக்க நாளான கடந்த சனிக்கிழமை 3000மீ ஸ்டீபிள்சேஸ் போட்டியில் அவினாஷ் சப்ளே இறுதி போட்டிக்கான வாய்ப்பை இழந்தார்.

    ஏற்கனவே, 20கி.மீ. ஆண்கள் நடைபயணம், ஆண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டம், பெண்களுக்கான நீளம் தாண்டுதல், ஆண்களுக்கனா டிரிபிள் ஜம்ப், 400மீ தடைதாண்டி ஓட்டம் ஆகியவற்றில் இந்திய வீரர்கள்- வீராங்கனைகள் சோபிக்க தவறினர்.

    • கடந்த ஆண்டு நடந்த உலக போட்டியில் 2-வது இடம் பிடித்த ஜமைக்கா வீராங்கனை ஷெரிகா ஜாக்சன் (10.72 வினாடி) மீண்டும் வெள்ளிப்பதக்கம் பெற்றார்.
    • 23 வயதான ஷாகாரி ரிச்சர்ட்சன் தனது முதல் உலக சாம்பியன்ஷிப் போட்டியிலேயே தங்கப்பதக்கத்தை உச்சி முகர்ந்துள்ளார்.

    புடாபெஸ்ட்:

    19-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்து வருகிறது. இதில் உலகின் அதிவேக பெண்மணி யார்? என்பதை தீர்மானிக்கும் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் 3-வது நாளான நேற்று முன்தினம் இரவு அரங்கேறியது. இறுதிப்போட்டியில் 9 வீராங்கனைகள் மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்தனர்.

    இதில் கடைசி ஓடுபாதையில் இருந்து ஓட தொடங்கிய அமெரிக்க வீராங்கனை ஷாகாரி ரிச்சர்ட்சன் முதலில் சற்று பின்தங்கி இருந்தாலும் கடைசி கட்டத்தில் அபாரமாக செயல்பட்டு அனைவரையும் பின்னுக்கு தள்ளி 10.65 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார்.

    கடந்த ஆண்டு நடந்த உலக போட்டியில் 2-வது இடம் பிடித்த ஜமைக்கா வீராங்கனை ஷெரிகா ஜாக்சன் (10.72 வினாடி) மீண்டும் வெள்ளிப்பதக்கம் பெற்றார். நடப்பு சாம்பியனும், 5 முறை தங்கப்பதக்கம் வென்று ஆதிக்கம் செலுத்தியவருமான மற்றொரு ஜமைக்கா வீராங்கனை 36 வயது ஷெல்லி ஆன் பிரேசர் பிரைஸ் 10.77 வினாடியில் இலக்கை எட்டி வெண்கலப்பதக்கத்தை தனதாக்கினார்.

    23 வயதான ஷாகாரி ரிச்சர்ட்சன் தனது முதல் உலக சாம்பியன்ஷிப் போட்டியிலேயே தங்கப்பதக்கத்தை உச்சி முகர்ந்துள்ளார்.

    2021-ம் ஆண்டு டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டிக்கான அமெரிக்க தகுதி சுற்றில் வெற்றி கண்ட ஷாகாரி ரிச்சர்ட்சன் போதைப்பொருள் பயன்படுத்தியது கண்டறியப்பட்டதால் ஒரு மாதம் தடையுடன் அந்த ஒலிம்பிக்கையும் தவறவிட வேண்டியதானது. அத்துடன் அவர் கடந்த ஆண்டு (2022) நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெறவில்லை.

    நடப்பு உலக தடகள சாம்பியன்ஷிப்பில் 100 மீட்டர் ஓட்டத்தில் அமெரிக்க வீரர் நோவா லைல்ஸ் ஏற்கனவே வாகை சூடியிருந்தார். பெண்கள் பிரிவில் ஷாகாரி ரிச்சர்ட்சன் வெற்றியின் மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப் 100 மீட்டர் ஓட்டத்தில் இரு பிரிவிலும் அமெரிக்கா 2017-ம் ஆண்டுக்கு பிறகு முழுமையாக கோலோச்சியுள்ளது.

    ஷாகாரி ரிச்சர்ட்சன் கூறுகையில், 'எனது முதலாவது பெரிய சர்வதேச போட்டியிலேயே தங்கப்பதக்கம் வென்று இருப்பதால் இதனை நிச்சயமாக ஒரு நல்ல தொடக்கம் என்றே சொல்வேன். இதில் எனது சிறந்த திறன் வெளிப்பட்டது. நான் முன்பை விட நல்ல நிலையை எட்டி இருக்கிறேன். இன்னும் சிறப்பாக செயல்பட முயற்சி செய்வேன்' என்றார்.

    • உலக தடகள சாம்பியன்ஷிப்பில் நீளம் தாண்டுதலில் தமிழக வீரர் ஜெஸ்வின் ஆல்ட்ரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
    • 5-வது நாளான நேற்று ஆண்களுக்கான நீளம் தாண்டுதலின் தகுதி சுற்றில் இந்தியாவின் ஜெஸ்வின் ஆல்ட்ரின், முரளி ஸ்ரீசங்கர் உள்பட மொத்தம் 37 பேர் களம் இறங்கினர்.

    19-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்து வருகிறது. இதில் 200 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    5-வது நாளான நேற்று ஆண்களுக்கான நீளம் தாண்டுதலின் தகுதி சுற்றில் இந்தியாவின் ஜெஸ்வின் ஆல்ட்ரின், முரளி ஸ்ரீசங்கர் உள்பட மொத்தம் 37 பேர் களம் இறங்கினர். இதில் ஜெஸ்வின் ஆல்ட்ரின் தனது முதல் முயற்சியில் 8 மீட்டர் நீளம் தாண்டினார். அடுத்த இரு முயற்சியில் 'பவுல்' செய்தார். என்றாலும் 12 பேர் கொண்ட இறுதிப்போட்டிக்கு 12-வது வீரராக தகுதி பெற்றார். நடப்பு தொடரில் இறுதிப்போட்டியை எட்டிய முதல் இந்தியர் இவர் தான். தூத்துக்குடி மாவட்டம் முதலுரைச் சேர்ந்த 21 வயதான ஜெஸ்வின் ஆல்ட்ரின் கடந்த மார்ச் மாதம் தேசிய சாதனையாக 8.42 மீட்டர் நீளம் தாண்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    மற்றொரு இந்திய வீரர் ஸ்ரீசங்கர் 3 வாய்ப்புகளில் முறையே 7.74 மீட்டர், 7.66 மீ., 6.70 மீ. நீளம் தாண்டி 22-வது இடத்துக்கு தள்ளப்பட்டு தகுதி சுற்றோடு நடையை கட்டினார். ஸ்ரீசங்கர் பல போட்டிகளில் 8 மீட்டர் தூரத்தை எளிதில் கடந்திருக்கிறார். ஆனால் இந்த போட்டியில் அவர் 8 மீட்டரை நெருங்காதது ஆச்சரியம் அளித்தது. அவர் கடந்த ஆண்டு உலக தடகளத்தில் இறுதிசுற்றில் கால்பதித்திருந்தது நினைவிருக்கலாம். ஜமைக்காவின் வெய்ன் பினோக் 8.54 மீட்டர் நீளம் தாண்டி தகுதி சுற்றில் முதலிடத்தை பிடித்தார். பதக்கமேடையில் ஏறுவது யார் என்பதை நிர்ணயிக்கும் 12 பேர் இடையிலான இறுதிப்போட்டி இன்று நடக்கிறது.

    பெண்களுக்கான ஈட்டி எறிதலின் தகுதி சுற்றில் மொத்தம் 34 வீராங்கனைகள் தங்களது திறமையை காட்டினர். இதில் இந்திய வீராங்கனை அன்னு ராணி 57.05 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து 19-வது இடத்தை பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை பறிகொடுத்தார். முந்தைய இரு உலக தடகள போட்டியில் இறுதிசுற்றை எட்டியிருந்த 30 வயதானஅன்னு ராணி இந்த முறை தனது சிறந்த செயல்பாட்டை கூட (63.24 மீட்டர்) நெருங்க முடியாத சோகத்துடன் வெளியேறினார்.

    முன்னதாக பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்தில் இந்தியாவின் யர்ராஜி ஜோதி 13.05 வினாடிகளில் இலக்கை கடந்து தகுதி சுற்றோடு பின்வாங்கினார்.

    நேற்று முன்தினம் இரவு நடந்த ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் ஒலிம்பிக் சாம்பியன் இத்தாலி வீரர் கியான்மார்கோ தம்பேரி, அமெரிக்காவின் ஜூவான் ஹாரிசன் இருவரும் அதிகபட்சமாக தலா 2.36 மீட்டர் உயரம் தாண்டி சமநிலையில் இருந்தனர். 2.38 மீட்டர் உயரத்தை தொடுவதற்கு எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

    இருவரும் சமநிலை வகித்தாலும் ஹாரிசன் 2.36 மீட்டர் உயரத்தை தனது 2-வது முயற்சியில் தான் எட்டினார். ஆனால் தம்பேரி தனது முதல் வாய்ப்பிலேயே அதை தாண்டினார். அதன் அடிப்படையில் தம்பேரி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அவர் உலக தடகளத்தில் ருசித்த முதல் தங்கப்பதக்கம் இதுவாகும். ஹாரிசனுக்கு வெள்ளிப்பதக்கமும், கத்தாரின் முதாஷ் பார்ஷிமுக்கு (2.33 மீட்டர்) வெண்கலப்பதக்கமும் கிடைத்தது.

    பெண்களுக்கான வட்டு எறிதலில் அமெரிக்க வீராங்கனை லாலாகா தசாகா 69.49 மீட்டர் தொலைவுக்கு வட்டுவை வீசி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். தனிப்பட்ட முறையில் அவரது சிறந்த செயல்பாடு இதுவாகும். இதற்கு முன்பு 65.56 மீட்டர் தூரம் வட்டு எறிந்ததே அதிகபட்சமாக இருந்தது. மகுடம் சூடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஒலிம்பிக் சாம்பியனும், மற்றொரு அமெரிக்க வீராங்கனையுமான வலரி அல்மான் 69.23 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று.

    23 வயதான தசாகா கூறுகையில், 'கடந்த இரு உலக தடகள சாம்பியன்ஷிப்பில் கடைசி இடத்துக்கு (12-வது) தள்ளப்பட்டேன். 12-ல் இருந்து இப்போது முதலிடத்துக்கு வந்திருப்பதை நம்ப முடியவில்லை. நான் ஒரு தங்கப்பதக்கத்தை வென்று விட்டேன். இது நிஜமா என்றே என்னால் நம்ப முடியவில்லை' என்று கூறி சிலாகித்தார்.

    • இரண்டு முறை தவறு செய்த ஆல்டிரின் 3-வது முறையாக சோபிக்கவில்லை
    • ஸ்ரீசங்கர் இறுதிச் சுற்றுக்கு முன்னேற முடியாமல் ஏமாற்றம் அடைந்தார்

    உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரியில் உள்ள புதாபெஸ்டில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற நீளம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் ஜேஸ்வின் ஆல்டிரின் ஏமாற்றம் அடைந்தார்.

    தகுதிச்சுற்றில் 8 மீ தாண்டி கடைசி வீரராக (12-வது நபர்) இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார். இறுதி சுற்றில் மூன்று முறை தாண்ட வேண்டும். இதில் சிறந்த தாண்டுதல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அதனடிப்படையில் முதல் 8 பேர் அடுத்த சுற்றில் பங்கேற்க வேண்டும்.

    ஜேஸ்வின் ஆல்டிரின் முதல் இரண்டு முறை தாண்டும்போது Fouling ஆனது. 3-வது முறையாக அவரால் 7.77 மீட்டர் மட்டுமே தாண்ட முடிந்தது. இது முதல் 8 இடத்திற்குள் வருவதற்கு போதுமானது அல்ல. கடந்த மார்ச் மாதம் 8.42 மீ தூரம் தாண்டி சாதனைப் படைத்திருந்தார் என்து குறிப்பிடத்தக்கது.

    ஆல்டிரின் உடன் ஸ்ரீசங்கரும் நீளம் தாண்டுதல் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார். ஆனால், 7.74 மீ தாண்டி இறுதி சுற்றுக்கான வாய்ப்பை இழந்தார்.

    முன்னதாக, ராம் பாபூ 35 கி.மீ. நடை போட்டியில் 37-வது இடத்தையே பிடிததார். அவர் பந்தய தூரத்தை 2 மணி நேரம் 39 நிமிடம் 07 வினாடிகளில் கடந்தார். அவரது தேசிய சாதனை 2:29:56 ஆகும்.

    • பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 87.82 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து 2ம் இடம் பிடித்தார்.
    • இந்திய வீரர் கிஷோர் ஜெனா 84.77 மீ. தூரம் ஈட்டியை வீசி, 5ம் இடம் பிடித்தார்.

    உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரின் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

    2வது வாய்ப்பில் 88.17 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து அபாரமாக வென்றுள்ளார் நீரஜ் சோப்ரா.

    உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை நீரஜ் சோப்ரா படைத்துள்ளார்.

    இந்திய வீரர் கிஷோர் ஜெனா 84.77 மீ. தூரம் ஈட்டியை வீசி, 5ம் இடம் பிடித்தார்.

    மற்றொரு இந்திய வீரர் டி.பி.மானு 83.72 மீட்டருடன் 6ம் இடம் பிடித்தார்.

    பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 87.82 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து 2ம் இடம் பிடித்தார்.

    ×