search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "water lorry"

    லாரி மற்றும் குடிநீர் கேன் உற்பத்தியாளர் ஸ்டிரைக் காரணமாக ஓட்டல் மற்றும் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. #WaterCan #DrinkingWater

    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சட்ட விரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை தடுக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வணிக நோக்கில் சட்டவிரோதமாக நிலத்தடிநீர் உறிஞ்சப்படுவதை தடை செய்வதுடன், வணிக நோக்கத்தில் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுப்பதை முறைப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

    இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும், இந்த தடையை நீக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    அவர்களது கோரிக்கை ஏற்கப்படாததால் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் நேற்று முன்தினம் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

    இன்று 3-வது நாளாக அவர்களது போராட்டம் தொடர்கிறது. இதனால் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தண்ணீர் தட்டுப்பாடு அபாயம் உருவாகி உள்ளது.

    இதற்கிடையே நிலத்தடிநீர் எடுக்க விதிக்கப்பட்ட நிபந்தனைகளை எதிர்த்து தமிழகம் முழுவதும் குடிநீர் கேன் உற்பத்தியாளர்களும் நேற்று மாலை முதல் உற்பத்தியை நிறுத்தி போராட்டத்தில் குதித்தனர்.

    சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் சுமார் 650 குடிநீர் கேன் உற்பத்தி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.


    திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 350 நிறுவனங்கள் உள்ளன. நாள் ஒன்றுக்கு 5 லட்சம் குடிநீர் கேன் மாவட்டம் முழுவதும் சப்ளை செய்யப்பட்டு வந்தது.

    வேலை நிறுத்தம் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் குடிநீர் கேன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ரூ,. 25-க்கு விற்கப்பட்ட தண்ணீர் கேன் தற்போது ரூ. 90 முதல் ரூ. 100 வரை விற்கப்படுகிறது.

    தண்ணீர் லாரி உரிமையாளர்ளை தொடர்ந்து, குடிநீர் கேன் உற்பத்தியாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளதாக தமிழ்நாடு முழுவதும் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.

    தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க பொது மக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் நீர் நிரப்பம் நிலையங்களில் இருந்து இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை லாரிகளில் தண்ணீர் பெற்றுக் கொள்ளலாம் என்று குடிநீர் வாரியம் அறிவித்தது. இருப்பினும் சென்னை புறநகர் பகுதிகளில் இப்போதே தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

    திருவள்ளூர் மாவட்டத் தில் பூந்தமல்லி, செந்நீர் குப்பம், செங்குன்றம், அத்திப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் குடிநீர் லாரிகள் நிலத்தடி நீரை உறிஞ்சி வட சென்னை, தி.நகர், வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டல்கள், மருத்துவமனைகள், உணவு விடுதிகளுக்கு வினியோகித்து வந்தன.

    தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக தற்போது அந்த இடங்களுக்கு தண்ணீர் சப்ளை முழுவதும் பாதிக்கப்பட்டு உள்ளது.

    திருவேற்காடு, நூம்பல், அயனம்பாக்கம், வானகரம் பகுதிகளில் உள்ள தனியார் தொழிற்சாலைகள், ஓட்டல்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

    தண்ணீர் இல்லாததால் ஓட்டல்கள், தொழிற் சாலைகள் மூடப்படும் அபாயத்தில் உள்ளது.

    இதேபோல காஞ்சீபுரம் மாவட்டத்தில் கேளம்பாக்கம், படூர், வாணியஞ்சாவடி, மேலக் கோட்டையூர், ஏகாட்டூர், தாழம்பூர், சிறுசேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்பு, விடுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது. சிறுசேரி தொழிற்பூங்கா பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் போதுமான தண்ணீர் இல்லாததால் உற்பத்தி பாதிக்கப்பட்டு இருக்கிறது. சில தொழில் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அளித்து கம்பெனியை மூடி உள்ளதாகவும் தெரிகிறது.

    குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் போராட்டத்தால் கடைகளுக்கு தண்ணீர் கேன் அனுப்புவது முற்றிலும் நிறுத்தப்பட்டு உள்ளன.

    இதனால் பொது மக்களுக்கு குடிநீர் கேன் சப்ளை போதிய அளவு கிடைக்கவில்லை. பெரும்பாலான வீடுகளில் குடிநீர் கேன் பயன்படுத்தி வருவதால் அவர்கள் தண்ணீர் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

    பல இடங்களில் தண்ணீர் கேன் விலை பலமடங்கு உயர்த்தி விற்கப்படுகிறது.

    சென்னை தி.நகர், கிண்டி, வேளச்சேரி, ஓ.எம்.ஆர்., பகுதியில் உள்ள ஓட்டல்கள் தண்ணீர் இல்லாமல் மூடப்பட்டுள்ளன.

    இது தொடர்பாக கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் முரளி சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    குடிநீர் என்பது பொது மக்களின் அத்தியாவசிய அடிப்படை தேவைகளில் ஒன்று. வேலை நிறுத்தத்தால் பொது மக்கள் மட்டுமின்றி சிறு குறு நிறுவன முதலாளி கள் முதல் சாதாரண தொழி லாளர்கள் வரை பாதிக்கப் பட்டுள்ளனர்.

    2013-ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணை செல்லும் என்ற உத்தரவே வேலை நிறுத்தத்துக்கு காரணம். மதுபான ஆலை, குளிர்பான ஆலை, தோல் ஆலைகளுடன் குடிநீர் ஆலை களை ஒப்பிடக் கூடாது.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    லாரி உரிமையாளர்கள், குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் போராட்டம் மேலும் நீடிக்கும் பட்சத்தில் குடிநீர் தட்டுப்பாடு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனை எதிர் கொள்ள குடிநீர் வாரிய அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். #WaterCan #DrinkingWater

    காலாப்பட்டில் செயல்படும் தனியார் தொழிற்சாலைக்கு அனுமதியின்றி தண்ணீர் ஏற்றி வந்த லாரியை பொதுமக்கள் சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சேதராப்பட்டு:

    காலாப்பட்டில் செயல்படும் தனியார் தொழிற்சாலைகள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக நிலத்தடி நீரை எடுப்பதாகவும், இங்கிருந்து வெளியிடங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுவதாகவும் கவர்னருக்கு புகார் வந்தது.

    எனவே, கவர்னர் கிரண்பேடி அந்த தொழிற்சாலைகளில் ஆய்வு மேற்கொண்டார். அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக தண்ணீர் எடுக்க தடை விதிக்கப்பட்டது.

    இதனால், தொழிற்சாலை தேவைக்காக வெளியில் இருந்து டேங்கர் லாரி மூலம் தண்ணீர் கொண்டு வருகின்றனர். இதற்கு உரிய அனுமதி பெறவில்லை.

    இந்த நிலையில் இன்று வெளியிடத்தில் இருந்து டேங்கர் லாரி மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. பிள்ளைச்சாவடியில் லாரி வந்த போது பொதுமக்கள் அந்த லாரியை மறித்து சிறை பிடித்தனர்.

    எங்களுக்கே போதிய குடிநீர் இல்லை. தொழிற்சாலைகளுக்கு எப்படி தண்ணீர் கொண்டு செல்லலாம்? எனக்கூறி அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் இதுபற்றி காலாப்பட்டு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சப்- இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் நேரடியாக வந்து விசாரணை நடத்தினார். குடிநீர் கொண்டு வர எந்த அனுமதியும் அவர்களிடம் இல்லை.

    எனவே, லாரி உரிமையாளர் சந்திரசேகர் மீது வழக்குபதிவு செய்தார். மேலும் லாரியை பறிமுதல் செய்து காராமணிக்குப்பம் நிலத்தடி நீர் ஆதாரமையத்துக்கு அனுப்பி வைத்தார்.

    ×