search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "uthirakosamangai"

    • இந்த சாபத்தினால்தான் ஈசனுடைய உருவச்சிலை மரகத கல்லால் அமைந்துள்ளது என்கிறார்கள்.
    • இந்த சிலை ஒலி, ஒளி, சப்தம் தாங்காத தன்மை கொண்டது.

    உத்தரகோசமங்கை திருத்தலத்தில் ஈசன், ஈஸ்வரியை பர்வத மகளாகவும், காளியாகவும், போகும்படி சாபம்

    இட்டத்தையும் இத்திருத்தலத்தில் ஈசனோடு ஆடிய நாட்டிய போட்டியில்தான் தோல்வியுற்றதையும் எண்ணி

    மிகுந்த மனவேதனைப்பட்டு தன் கணவர் என்று பாராமல் பார்வதி உத்தரகோசமங்கை திருத்தலத்தில் "தன்னுடைய

    உருவ விக்கரகத்துக்கு பக்தர்கள் தினந்தோறும் பூ, பழம், தேங்காய், மேளதாளங்கள், இசை, சப்தம், ஒலி, ஒளியுடன்

    வழிபட்டு செல்வார்கள் ஆனால் இத்திருத்தலத்தில் ஈசனுடைய உருவ விக்கிரகத்துக்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டும்

    ஆருத்திர தரிசனம் பக்தர்கள் வழிபட்டு செல்ல வேண்டும்.

    எனவே உத்தரகோசமங்கை திருத்தலத்தில் சக்திக்குத்தான் அதிக சக்தியுண்டு" என்று ஈசனுக்கே ஈஸ்வரி சாபம் விடுத்தாளாம்.

    இந்த சாபத்தினால்தான் ஈசனுடைய உருவச்சிலை மரகத கல்லால் அமைந்துள்ளது என்கிறார்கள்.

    இந்த சிலை ஒலி, ஒளி, சப்தம் தாங்காத தன்மை கொண்டது.

    • உத்தரகோசமங்கை கோவிலில் நடராஜருக்கு தனி சன்னதி கோவில் உள்ளது.
    • என்னுடன் போட்டி நடனம் ஆடிப்பாரும் என பார்வதி தேவி சவால் விட்டாள்.

    உத்தரகோசமங்கை கோவிலில் நடராஜருக்கு தனி சன்னதி கோவில் உள்ளது.

    இக்கோவிலின் மத்தியில் இராஜகோபுரம் மிக சிறப்பாக அமைந்துள்ளது. இதைச் சுற்றி அகழியுள்ளது.

    அகழியை சுற்றிலும் தீப்பிழம்பை மலைபோல் வளர்த்துக் கொண்டு ஈசன், ஈஸ்வரி அக்கினி கோளத்தில் யாரும் அறியாமல் மூலஸ்தனத்தின் ரகசிய அறைக்குள் முதல் பெண் பார்வதி தேவிக்கு பரத நாட்டிய கலையையும், அந்தரங்க கலை முழுவதையும் கற்றுக் கொடுத்துள்ளார்.

    மற்றும் தேவ ரகசியத்தை தன்னில் பாதியாகக் கொண்ட பார்வதி தேவிக்கு சிவபெருமான் பிரணவ மந்திரத்தை உபதேசித்த இடமாகும்.

    இந்த அந்தரங்க அறையில் அம்பாள் சிலை உள்ளது. இந்த அறைக்கு யாரும் செல்ல மாட்டார்கள்.

    ஆதியில் அந்தரங்க அறையில் ஈசன் ஈஸ்வரி பரதநாட்டியம் ஆடியதற்குத்தான் ஆதி சிதம்பரம் என்ற உத்தரகோசமங்கை என்று வழங்கப்படுகிறது.

    முதலில் அறையில் ஆடிய பிறகுதான் பின்பு அம்பலத்தில் ஆடினார் என்று சொல்லப்படுகிறது.

    எனவே இந்த மரகத நடராஜர் சன்னதிக்கு தெற்குபுறமாக வாசல் அமைந்துள்ளது.

    ஈசன் ஈஸ்வரி பரதநாட்டியம் ஆடிய மரப்பலகை ஐந்தை இப்பொழுதும் காணலாம்.

    பரத நாட்டியத்தை முதல் முதலில் உத்திரகோசமங்கையில் ஆடல் அரசன் என்ற தெய்வம் சிவபெருமான் தான் அறிமுகம் செய்தார்.

    முதல் நாளில் சிவனும், பார்வதியும் "ஆனந்த தாண்டவம்" ஆடுகின்றார்கள்.

    இரண்டாவது நாள் "சந்தியா தாண்டவம்". மூன்றாவது நாள் "சம்ஹாரத் தாண்டவம்" ஆடுகின்றார்கள்.

    இந்த மூன்று நாட்களும் நடந்த நாட்டியத்திற்கு சிவபெருமான், பார்வதி ஆகியோரின் நடனம் ஒரே மாதிரியாக இருந்ததால் நடுவர்களால் சரியான தீர்ப்பு கூற முடியவில்லை.

    எனவே திருமால், பிரம்மன், இந்திரன் ஆகியோரிடம் பெரும் குழப்பம் ஏற்பட்டு விட்டது.

    நான்காவது நாள் ஊர்த்துவதாண்டவம் நடந்தது.

    ஆடவல்லான் நடராஜரின் கால் சதங்கை சப்தம் ரம்மியமாய் ஒலித்தது.

    பார்வதி, நடராஜன் ஆடும் சபையை நோக்கி நடந்தாள். நடராஜனின் அருகே சென்றாள்.

    சுவாமி ஆடல், கலை பெண்களுக்கே உரியது.

    நீர் ஆடி ஆட வல்லான் என்று பெயர் பெறுவது நல்லது அல்ல.

    என்னுடன் போட்டி நடனம் ஆடிப்பாரும் என பார்வதி தேவி சவால் விட்டாள்.

    ஈசனும் போட்டி நடனம் ஆட சம்மதித்தார். ஒருபுறம் பார்வதி, இன்னொருபுறம் சிவபெருமானான, நடராஜன் ஆட்டம் தொடங்கியது.

    இந்த போட்டி நடனத்துக்கு நாரதர் யாழை இசைத்தார்.

    மகா விஷ்ணு மத்தளம் கொட்டினார். நந்திய பெருமான் தாளமிட்டார்.

    பிரம்மா ஜதி சொல்லத் தொடங்கினார். ருத்திரன் நாதசுரம் வாசித்தார். சரஸ்வதி வீணையை மீட்டினாள்.

    வெற்றி யாருக்கு எனப் புரியாத நிலையில் திகைத்து இருந்தார்கள் தேவர்கள்.

    இந்த நாட்டியத்தில் பார்வதி சுழன்றாடினாள்.

    வெற்றி யாருக்கு என்று புரியாத நிலையில் அனைவரும் சிவதாண்டவத்தையும், பார்வதி ஆட்டத்தையும் கண்டு களித்தனர்.

    ஆட்டம் சூடு பிடித்தது. இருவரும் சுழன்று சுழன்று ஆடினர். பார்வதியின் கால் சலங்கை கழன்று கீழே விழுந்தது.

    ஆடலரசன் தன் காதிலிருந்த ஒரு குண்டலத்தை கீழே விழச் செய்தார்.

    பார்வதி கால் சதங்கையை சரி செய்து சிவபெருமானின் செயல்களைக் கூர்ந்து கவனித்தார்.

    சக்கரமாய் ஆடிவந்த சிவபெருமானின் ஒரு காலின் விரல்கள் கீழே கிடந்த குண்டலத்தை மெல்லக் கவ்வியது.

    சிவபெருமான் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்று புரியாது பார்வதி ஆடிக்கொண்டே நடப்பதைக் கவனித்தாள்.

    கூடி இருந்தவர்களுக்கு ஈசனின் இந்த செய்கை புரியவில்லை.

    புரியாத குழப்பத்திலேயே ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தனர்.

    அடுத்த கணம் நடராஜர் தன் இடது காலை அழுந்த ஊன்றி வலது காலை நாட்டியமண்டபத்துக்கு அருகில் மரங்கள் சூழ்ந்த வனம் பகுதியை நோக்கி தில்லையின் எல்லையை நோக்கி நடந்தார்.

    பின்னர் நடராஜன் தன் வலது காலை தூக்கி இடது காதை தொட்டார்.

    ஆனால் அது போன்று பார்வதிதேவி செய்ய முடியவில்லை.

    தள்ளாடி கீழே விழுந்து மயக்கம் நிலையை அடைந்து தோல்வியுற்றாள்.

    இந்த "தலம்" ஊர்த்துவ தாண்டவம் ஆடி தன்னுடன் போட்டி நடனம் ஆடிய பார்வதியை ஈசன் வென்ற "தலம்" தான் உத்திரகோசமங்கை திருத்தலமாகும்.

    இந்தப் போட்டி நடனத்திற்கு திருமால், பிரம்மன், இந்திரன் ஆகியோர்கள் நடுவர்களாக இருந்து பார்வதி தோல்வியுற்றதாகத் தீர்ப்பு வழங்கிய திருத்தலமாகும்.

    • மங்களநாதர் சன்னதியை சுற்றி வரும் போது இடது பக்க மூலையில் மகாலட்சுமியை வழிபடலாம்.
    • இத்திருத்தலத்தில் ஒன்பது தீர்த்தங்கள் உள்ளது.

    01. டெல்லியை தலைநகராகக் கொண்டு 1300 ம் ஆண்டு ஆட்சி செய்து வந்த அலாவுதீன் கில்ஜி, உத்தரகோச மங்கையில் மரகதகல் நடராஜர் சிலை இருப்பதை அறிந்து அதை கொள்ளையடிக்க முயன்றான். மங்களநாதர் அருளால் அவன் முயற்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை.

    02. இத்தலத்தில் தினமும் முதல் அமைச்சரின் அன்னத்தானத்திட்டம் நடைபெறுகிறது. ரூ. 700 நன்கொடை வழங்கினால் 50 பேருக்கு அன்னதானம் கொடுக்கலாம்.

    03. காகபுஜண்ட முனிவருக்கு கவுதம முனிவரால் ஏற்பட்ட சாபம் இத்தலத்தில்தான் நீங்கியது.

    04. சிவனடியார்கள் 60 ஆயிரம் பேர் இத்தலத்தில் தான் ஞான உபதேசம் பெற்றனர்.

    05. இத்தலத்தில் உள்ள மங்களநாதர் சன்னதி, மங்களேசுவரி சன்னதி, மரகதகல் நடராஜர் சன்னதி சகஸ்ரலிங்க சன்னதி நான்கும் தனிதனி கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், கொடி மரத்துடன் தனித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    06. நடராஜர் மரகத கல்லில் இருப்பதால் இத்தலத்தை சிலர் ரத்தின சபை என்கிறார்கள். ஆனால் உலகின் முதல் கோவில் என்பதால் இது எந்த சபைக்கும் உட்படாதது என்றும் சொல்கிறார்கள்.

    07. காரைக்கால் அம்மையாரும் இத்தலத்துக்கு வந்து ஈசனை வழிபட்டு சென்றுள்ளார்.

    08. உத்தரகோசமங்கை கோவிலின் கட்டிடக்கலை திராவிட கட்டிடக்கலையை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்டதாகும்.

    09. ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம், கிருத்திகை, சதுர்த்தி நாட்களில் இத்தலத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.

    10. சித்திரை மாதம் திருக்கல்யாண வைபவம் வைகாசி மாதம் வசந்த உற்சவம், ஆனி மாதம் சிவ உற்சவம், ஐப்பதி மாதம் அன்னாபிஷேகம், மார்கழி மாதம் திருவாதிரை விழா மாசி மாதம் சிவராத்திரி ஆகியவை இத்தலத்தில் நடைபெறும் முக்கிய விழாக்கள் ஆகும்.

    11. தினமும் இத்தலத்தில் காலை 5.30 மணிக்கு உஷத் காலம், 8 மணிக்கு கால சாந்தி, 10 மணிக்கு உச்சிக் காலம், மாலை 5 மணிக்கு சாயரட்சை, இரவு 7 மணிக்கு இரண்டாம் காலம், இரவு 8 மணிக்கு அர்த்தஜாம பூஜைகள் நடத்தப்படுகிறது.

    12. மங்களநாதருக்கு தினமும் காலை 6 மணிக்கு, மதியம் 12.30 மணிக்கு, மாலை 5.30 மணிக்கு அபிஷேகம் நடத்தப்படுகிறது.

    13. இத்தலத்தில் அதிகாலை 5 மணி முதல் மதியம் 1 மணி வரையும் பிற்பகல் 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் சாமி தரிசனம் செய்யலாம்.

    14. மரகத கல் நடராஜர் மீது சாத்தப்பட்டு எடுத்துத் தரப்படும் சந்தனத்தை வெந்நீரில் கரைத்து குடித்தால் தீராத நோய்கள் கூட தீர்ந்து விடும் என்பது நம்பிக்கை.

    15. இத்தலத்தில் மொத்தம் 11 விநாயகர்கள் உள்ளனர்.

    16. மங்களநாதர் சன்னதியை சுற்றி வரும் போது இடது பக்க மூலையில் மகாலட்சுமியை வழிபடலாம்.

    17. இத்தலத்தில் உள்ள ராஜகோபுரத்தில் சர்பேஸ்வரர் சிலை உள்ளது.

    18. உலகத்தில் முதலில் தோன்றிய கோவில் என்ற சிறப்பு உத்தரகோசமங்கை தலத்துக்கு உண்டு. இந்த ஆலயம் சிதம்பரம் கோவிலுக்கு முன்பே தோன்றியது.

    19. நடராஜர் இங்கு அறையில் ஆடிய பின்னர்தான் சிதம்பரத்தில் அம்பலத்தில் ஆடினார்.

    20. இது அம்பிகைக்கு பிரணவப்பொருள் உபதேசித்த இடம்.

    21. இங்குள்ள மங்களநாதர் லிங்க வடிவில் உள்ளார்.

    22. தலவிருட்சமான இலந்தமரம் மிகமிகத் தொன்மையானதும் இன்று வரை உயிருடன் உள்ளதும் பல அருள் தலைமுறைகளையும் முனிவர்கள் தரிசித்த தல விருட்சம் ஆகும். இந்த இலந்த மரம் 5000 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளது.

    23. வேதவியாசரும், பாராசரும் காகபுஜண்டரிஜி மிருகண்டு முனிவர்கள் பூஜித்த தலம்.

    24. உலகில் உள்ள 1087 சிவாலயங்களிலும் இருக்கும் அருட் சக்திகளைத் தன்னகத்தே கொண்டு விளங்கும் சகஸ்ரலிங்கம் இங்குள்ளது.

    25. ஆண்டுக்கு இரண்டு திருவிழா இங்கு நடத்தப்படுகிறது. ஒன்று சித்திரைத் திருவிழா, இன்னொன்று மார்கழித் திருவாதிரைத் திருவிழா.

    26. இத்திருத்தலத்தில் ஒன்பது தீர்த்தங்கள் உள்ளது.

    27. சிவபெருமானால் பரத நாட்டிய கலையை உலக மக்களுக்கு முதல் முதலில் அறிமுகம் செய்யப்பட்ட திருத்தலமாகும்.

    28. ஈசன் ஈஸ்வரி பிறந்த ஊரான உத்திரகோச மங்கையில் ஒரு முறை பக்தர்கள் வந்து மிதித்தால் சொர்க்கம் செல்லுவது நிச்சயாமாகும்.

    29. உத்தரகோசமங்கை திருத்தலமானது ஸ்ரீராமருக்கு ஈசன் சிவலிங்கம் வழங்கி சேது சமுத்திரத்தில் பாலம் போட உத்தரவு வழங்கிய இடமாகும்.

    30. இத்தலத்தில் மாணிக்கவாசகர் பாடிய பொன்னூஞ்சல் பாடலை குழந்தைகளை தாலாட்டும்போது பாடினால், குழந்தைகள் உயரமாகவும், உன்னதமாகவும் வாழ்வார்கள் என்பது பக்தர்கள் நம்பிக்கையாகும்.

    • முழுவதும் மரகத திருமேனி. ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பிலேயே பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
    • அந்த சந்தனக் காப்பிலேயே அடுத்த மார்கழி திருவாதிரை வரை நடராஜர் காட்சி தருவார்.

    இங்குள்ள நடராஜ பெருமான் ஐந்தரை அடி உயரம்.

    முழுவதும் மரகத திருமேனி. ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பிலேயே பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

    ஆண்டுக்கு ஒருமுறை திருவாதிரை அன்று மட்டுமே சந்தனம் களையப்பட்டு அபிஷேகம் நடைபெறும்.

    அதுவும் 32 வகை மூலிகைகளால் அபிஷேகம் செய்யப்படும்.

    ஆருத்ரா தினமான அன்று மட்டுமே, நடராஜரை மரகதக் கோலத்தில் கண்டுகளிக்கலாம்.

    அன்றைய தினம் அதிகாலை 3 மணிக்கு மீண்டும் சந்தனக் காப்பு செய்யப்பட்டு, நடராஜர் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

    சூரிய உதயத்திற்கு முன்பு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    அந்த சந்தனக் காப்பிலேயே அடுத்த மார்கழி திருவாதிரை வரை நடராஜர் காட்சி தருவார்.

    இப்படி பல்வேறு சிறப்புகள் கொண்ட இத்தலத்தில் காலடி எடுத்து வைத்தாலே போதும், நம்மீதான தோஷங்கள் விலகி ஓடிவிடும்.

    இத்தலம் 'ஆதி சிதம்பரம்' என்றும் அழைக்கப்படுகிறது.

    அம்பிகைக்காக இங்கு அறையில் ஆடிய திருத்தாண்டவத்தை தான் நடராஜபெருமான்,

    தில்லை அம்பலத்தில் முனிவர்களுக்காகவும், பக்தர்களுக்காகவும் ஆடுகிறார்.

    எனவே இந்த ஆலயத்தில் உள்ள நடராஜர்தான், ஆதி நடராஜர் என்றும் கூறப்படுகிறது.

    திருவாதிரை அன்று கோவிலில் அதிக கூட்டம் இருக்கும் காலை பத்து மணியில் இருந்து மரகதநடராஜரைப்பார்க்கலாம்.

    இரவு 3மணிக்கு மேல் சந்தனம் பூசிவிடுவார்கள் பிறகு அடுத்த வருடம்தான் மரகத நடராஜரை தரிசிக்க முடியும்.

    அதனால் இரவு சாமி தரிசனம் செய்யும்போது வரிசையில் அதிகநேரம் நிற்கவேண்டியதிருக்கும் கூட்டமும் கட்டுக்கடங்காமல் இருப்பதால் சில நேரம் அதிக தொலைவில் இருந்து வந்து இருப்பவர்கள் மரகத நடராஜரை பார்க்காமலே சந்தனம் பூசப்பட்ட நடராஜரை பார்த்து செல்ல வாய்ப்பு உண்டு.

    இந்த ஏமாற்றத்தை தவிர்க்க காலையில் வந்துவிட்டால் கூட்டம் சற்று குறைவாக இருக்கும் நேரத்தில் மரகத நடராஜர் தரிசனத்தை எவ்வித சிரமமும் இன்றி தரிசித்து விட்டு செல்லலாம்.

    வயதானவர்கள் குழந்தைகள் வைத்திருப்பவர்கள் காலையில் வந்து விடுவது சிறந்தது.

    மாணிக்கவாசகர் திரு வாசகத்தில் நீத்தல் வண்ணம், திருப்பொன்னூஞ்சல் பாடியது மட்டுமல்லாமல், பல்வேறு இடங்களுக்கு சென்றாலும் அங்கும் உத்தரகோசமங்கை மன்னா என்றும் பாடியுள்ளார்.

    இறைவனும், இறைவியும் பள்ளியறையில் அமர்ந்து பூஜை செய்யும்போது பள்ளியறை பாடல் திருஉத்தரகோசமங்கையில் பாடப்பெற்ற பாடலாகும்.

    சிவாலயங்கள் அனைத்திலும் பள்ளியறை பூஜை சமயம் தினந்தோறும் பாடப்பட்டுவரும் ''திருப்பொன்னூஞ்சல்'' மாணிக்கவாசகரால் இவ்வாலயத்தில் வைத்து, இயற்றிப் பாடப்பெற்ற சிறப்பையும் பெற்றது.

    மாணிக்கவாசகரால் பாடல் பெற்ற இத்தலம் அவரது திருவாசகத்தில் 38 இடங்களில் சிறப்புறப் புகழப்பட்டுள்ளது.

    • சிவத்தலங்களில் பாடல் பெற்ற முதல் தலம் இந்த தலம்தான்.
    • இதன்மூலம் இந்த தலமே தமிழ்நாட்டின் முதல் சிவாலயம் என்பதை உறுதிபடுத்துகிறது.

    தமிழ்நாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழமையான சிவாலயங்கள் இருக்கின்றன.

    இவற்றில் 276 தலங்கள் பாடல் பெற்ற தலங்கள் என்ற சிறப்பை பெற்றவை.

    இந்த பழம்பெரும் சிவத்தலங்களில் மகத்துவமும் தனித்துவமும் நிறைந்தது உத்தரகோசமங்கை எனும் திருத்தலமாகும்.

    இந்த திருத்தலம் ராமநாதபுரத்துக்கு மிக, மிக அருகில் உள்ளது.

    சிவத்தலங்களில் பாடல் பெற்ற முதல் தலம் இந்த தலம்தான்.

    இதன்மூலம் இந்த தலமே தமிழ்நாட்டின் முதல் சிவாலயம் என்பதை உறுதிபடுத்துகிறது.

    சமயக்குறவர்களில் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகர் தம் வாழ்நாளில் பெரும்பகுதியை இத்தலத்தில் கழித்தார்.

    அவர் தன் பாடலில், "சிவன் உண்பதும், உறங்குவதும் உத்தரகோசமங்கை தலத்தில்தான்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    ஓம் எனும் பிரணவ மந்திரத்தை பார்வதி தேவிக்கு சிவபெருமான் இத்தலத்தில் வைத்துதான் ரகசியமாக சொல்லி கொடுத்தார் என்பார்கள்.

    அதுபோல பார்வதிக்கு நாட்டியக்கலையை ஈசன் இங்கு ரகசியமாக சொல்லிக் கொடுத்தார் என்பார்கள்.

    'மண் தோன்றிய போதே மங்கை தோன்றியது' என்பார்கள்.

    உலகிலேயே முதலில் தோன்றிய சிவன் கோவில் இது என்று கூறப்படுகிறது.

    ஆதி காலத்தில் அதுவும் நவக்கிரகங்கள் அறியப்படாத காலத்தில் இருந்த சூரியன், சந்திரன், செவ்வாய் மட்டுமே இங்கு கிரகங்களாக உள்ளது என்பதில் இருந்தே, இந்த ஆலயம் மிக மிகப் பழமையானது என்பதை அறியலாம்.

    சிவபெருமான் பார்வதிதேவிக்கு வேதாகமங்களின் ரகசியங்களை உபதேசம் செய்த இடம் இதுவாகும். அதனால் இந்த ஊருக்கு "உத்தரகோசமங்கை" என்ற பெயர் தோன்றியது என்று சொல்கிறார்கள்.

    அதாவது உத்திரன் (ருத்திரன்) + கோசம் + மங்கை.

    மங்கைக்கு உத்திரன் உபதேசம் செய்த இடம், ஆதலால் உத்திரகோசமங்கை என்றானது என்கிறார்கள்.

    ஆனால் இத்தல பெயர் விளக்கத்துக்கு வேறொன்றும் சொல்லப்படுகிறது. உத்திரம் என்றால் உபதேசம்.

    கோசம் என்றால் ரகசியம். மங்கை என்றால் பார்வதி என்று பொருள்.

    பார்வதிதேவிக்கு ஈசன் ரகசியமாக வேதத்தை உபதேசம் செய்த இடம் என்ற அர்த்தத்தில் இத்தலம் உத்தரகோச மங்கை என்ற பெயரில் அழைக்கப்படுகிறது என்கிறார்கள்.

    இத்தல மூலவர் 'மங்களநாதர்' சுயம்புவாக, இலந்தை மரத்தடியில் தோன்றியவர்.

    அந்த இலந்தை மரமே இவ்வாலயத்தின் தலவிருட்சமாக விளங்குகிறது.

    மங்கள நாதரின் உடனுறை அம்பிகையின் திருநாமம் மங்களேஸ்வரி என்பதாகும்.

    மாணிக்கவாசகர் இத் தலத்தில் சிவலிங்க வடிவிலும், நின்ற கோலத்திலும் காட்சி தருகிறார்.

    'நீத்தல் விண்ணப்பம்' என்னும் திருவாசகப் பகுதி இத்தலத்தில் பாடப்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    திருவாசகத்தில் 38 இடங்களில் இத்தலத்தைப் போற்றிப் பாடியுள்ளார் மாணிக்கவாசகர்.

    உலகிலேயே மிகச்சிறந்த சிவ பக்தனைத்தான் திருமணம் முடிப்பேன் என்று காத்திருந்தாள் மண்டோதரி.

    இதனால் அவளுக்கு நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருந்தது.

    பின்பு இத்தல ஈசனையும், அம்பாளையும் மண்டோதரி வழிபட்டாள்.

    அதன்பிறகே ராவணனை கரம் பிடித்தாள்.

    மேலும் ராவணன் மண்டோதரி திருமணம் இத்தலத்திலேயே நடைபெற்றது என்று கூறப்படுகிறது.

    • ஆருத்ரா தரிசனம் பன்மடங்கு பலன்களையும் நலன்களையும், வாரி வழங்கும் வழிபாடாக உள்ளது.
    • கன்னிபெண்களுக்கு நல்ல இடத்தில் திருணம் கைகூடும்.

    ஆதிசிதம்பரம் என்று அழைக்கப்படுகின்ற உத்தரகோசமங்கையில் மட்டும் நான்கு தாண்டவம் முதல் தடவையாக ஆடி உள்ளார். அந்த 4 தாண்டவங்கள் வருமாறு:

    (1) ஆனந்த தாண்டவம்

    (2) சந்தியத் தாண்டவம்

    (3) சம்விஹார தாண்டவம்

    (4) ஊர்த்துவத் தாண்டவம் ஆகும்.

    அடுத்து சிவபெருமான் சிதம்பரத்தில் ஆடிய தாண்டவம் மூன்று. அவை

    (1) திரிபுரந்தர தாண்டவம்

    (2) புஜங்கத் தாண்டவம்

    (3) லலிதாத் தாண்டவம் ஆகும்.

    மார்கழி மாத திருவாதிரை தினத்தன்று ஈசனின் நடனத்தை க்காண்பது விசேஷம்.

    இந்த ஆருத்ரா தரிசனத்தைக் காண தேவலோக தேவர்கள், ஞானிகள், சித்தர்கள், முனிவர்கள் ஆகியோர் உத்தரகோசமங்கைக்கு வருவார்கள்.

    இங்கு நடனம் புரியும் நடராஜனை தரிசனம் செய்தால், இப்பிறவியல் செய்த பாவங்கள் விலகி இன்பமான வாழ்வு அமைவதுடன், சுமங்கலிப் பெண்களுக்கு சுமங்கலி பாக்கியம் கிடைக்கும்.

    கன்னிபெண்களுக்கு நல்ல இடத்தில் திருணம் கைகூடும்.

    ஆடவர்களுக்கு மனதில் தைரியமும் உடல் பலமும் கூடும்.

    ஆருத்ரா தரிசனம் பன்மடங்கு பலன்களையும் நலன்களையும், வளங்களையும் வாரி வழங்கும் வழிபாடாக உள்ளது.

    அவரது ஐந்தொழில்களை ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளால் ஆகியவற்றை உணர்த்துவதாக அமையும் பொருட்டே இத்திருத்தலத்தில் பஞ்சகிருத்திய உற்சவம் நடந்து வருகிறது.

    உத்தரகோசமங்கை ஆதிசிதம்பரம் என்றும் பூலோக கைலாயம் என்றும் பூலோக சொற்கம் என்றும் உலகத்தில் முதல் தோன்றிய கோவில் என்ற பெருமை உண்டு.

    முக்தி கிடைக்க வழி செய்யும்.

    • இலங்கையில் மண்டோதரி ஒரு மிகப்பெரிய சிவ பக்தை.
    • மாங்கல்ய தோஷத்தை நீக்குவதற்கு வேண்டி ஈசனிடம் தவம் செய்தாள்.

    இலங்கையில் மண்டோதரி ஒரு மிகப்பெரிய சிவ பக்தை. மண்டோதரிக்கு மாங்கல்ய தோஷம் ஏற்பட்டது. இதனால் நீண்ட நெடுங்காலமாக திருமணத் தடை உண்டாகியது. அவள் திருமணம் நடைபெறாமல் தடைபட்டு நின்று விட்டது.

    சிவ சக்தியின் அருள் நிறைந்து இருக்கும் இடங்களெல்லாம் அழகு நிறைந்த இடங்களாகும் என்று மண்டோதரிக்கு தெரியவந்தது. இதனால் மண்டோதரி உத்திரகோசமங்கை மங்களநாதன் திருத்தலத்திற்குச் சென்று மாங்கல்ய தோஷத்தை நீக்குவதற்கு வேண்டி ஈசனிடம் தவம் செய்தாள்.

    மங்களநாதன் மண்டோதரி முன் தோன்றி மாங்கல்ய தோஷத்தை முற்றிலும் நீக்கி விட்டார். பின்பு மண்டோதரிக்கும் ராவணனேஸ்வரனுக்கும் இனிதே திருமணம் நடைபெறுகிறது.

    மாணிக்கவாசகர் பெயர் பெற்ற தலம்

    உத்தரகோசமங்கை சிவபெருமானுக்கு ஆயிரம் சிவவேதியர்கள் சிஷ்யர்களாக இருந்தனர். அவர்களிடம் சிவபெருமான் மண்டோதரிக்கு அருள்புரிந்து வருகின்றேன் `சிவாகம நூலை' காத்துக்கொண்டு இருங்கள் என்று கூறி விட்டு இலங்கை சென்றார்.

    சிவபெருமானிடம் 1000 சீடர்களும், ராவணன் அரக்கனால் உங்களுக்குத் துன்பம் உண்டானால் என்ன செய்வோம் என்றார்கள். அதற்கு சிவபெருமான், எனக்கு துன்பம் ஒன்றும் வராது. அப்படி அவனால் துன்பம் வந்தால் இந்த தெப்பக் குளத்தில் அக்கினி தோன்றும் என்று கூறி மறைந்தார்.

    சிவபெருமான் அசோகவனத்தில் மண்டோதரிக்கு அருள் அளிப்பதற்கு வேண்டி சென்றபோது ராவணன் ஈசனடியார் என்று உணராமல் சினமடைந்து அவரைப் பின்புறம் தலையில் அடித்து விடுகிறான். அதனால் தெப்பக்குளத்தில் அக்கினி தோன்றியது.

    இது கண்ட ஆயிரம் வேதியர்களில் ஒருவர் நீங்கலாக எஞ்சிய 999 வேதியர்கள் ஈசனுக்கு ஆபத்து என்று அலறியவாறு அந்த அக்கினியில் இறங்கி விட்டனர். ஈசன் மண்டோதரிக்கு அருள் வழங்கி விட்டு உத்திரகோசமங்கை திரும்பி வந்தார்.

    ஒரே ஒரு வேதியர் மட்டும் சிவாகம நூலைக் கட்டி அணைத்து நிற்பதை கண்டார். அந்த சிவவேதியர் அக்கினி தெப்பக்குளத்தில் தீ எரிந்தது மற்ற வேதியர்கள் எல்லாம் அக்கினியில் இறங்கி விட்டார்கள் நான் ஆகமநூலை காப்பாற்றினேன் என்று ஈசனிடம் கூறினார்.

    நீ ஆகம நூலை காப்பாற்றிய உம் பக்தியை மெச்சினோம். சிவாகம நூலை தோத்திரப் பாக்களாகப் பாடி நம்மை மீண்டும் வந்து, மாணிக்கவாசகராக கி.பி.823-ம் ஆண்டு உத்திரகோசமங்கை திருத்தலத்தில் தோன்றி திருவாசகத்தை எழுதுவாய் என்று சிவபெருமான் கூறி மறைந்தார்.

    அதன்படி மீண்டும் கி.பி.823-ம் ஆண்டு உத்திரகோச மங்கை திருத்தலத்தில் மாணிக்கவாசகர் தோன்றி திருவாசகத்தை எழுதினார்.

    இலங்கையில் நடந்த போரில் ராமன் பிரம்மாஸ்திரத்தில் தெய்வீக சக்தியை அதன்கண் ஆவாஹனம் பண்ணினான். அந்த அஸ்திரத்தை ராமன் ஏவினான்.

    ராவணன் இருதயத்தை அது துளைத்தது. பிறகு அது தலையைத் தொட்டது. அவன் கரங்களை துண்டித்தார்.

    ராவணன் தரையில் விழுந்து புரண்டு உயிர்துறந்தான். அன்று நடந்த இறுதிப் போரில் குரங்கு படைகளுக்கும் அசுரப்படைகளுக்கும் கடும்போர் நடைபெற்றது. இருபடைகளிலும் பல கோடிக்கணக்கான போர் வீரர்கள் மாண்டு மடிந்தார்கள்.

    இப்படி இறந்தவர்களின் உடல்கள் மாமிச மலைபோல் குவிந்து கிடந்தது. ரத்தம் பெருகி காட்டாறுபோல ஓடியது. அந்தரத்த ஆறு கடலில் கலந்தது. மாமிசத்தையும், உதிரத்தையும் பேய்கள், பிசாசுகள், இரத்தக்காட்டேரிகள் போன்றவைகள் உண்டு செரிக்காததால் குட்டிக்கரணம் அடித்து விளையாடி கொண்டிருந்ததன.

    இறந்தவர்களின் ஆவிகள் ராமர், லட்சுமணன், சீதை ஆகியோர்களுக்கு பிரம்மஹத்தி தோஷமாகப் பற்றிக் கொண்டது. அதனால் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து குறித்த நேரத்துக்குள் ராமேஸ்வரத்தில் வழிபட வேண்டும் என்று மகரிஷிகள் அறிவுறுத்தினார்கள்.

    லிங்கம் பிரதிஷ்டை செய்வதற்கு கைலாசத்தில் இருந்து லிங்கம் கொண்டு வரும்படி ராமன் அனுமனை அனுப்பி வைத்தார். ஆனால், நெடுந்தொலையில் உள்ள கைலாசத்திலிருந்து ஆஞ்சநேயர் லிங்கம் கொண்டு வருவதற்குக் காலதாமதம் ஆகிவிட்டது.

    விபீஷணனின் வேண்டுகோளுக்கு இணங்கி மண்டோதரியின் குடிக்கோவிலான ஈசன், ஈஸ்வரி பிறந்த ஊரான உத்தரகோச மங்கை தலத்தில் மண் எடுத்து வந்து லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டால் பிரம்மஹத்தி தோஷம், உயிர்களின் ஆவி அனைத்தும் நீங்கும் என்று கூறிய அறிவுரையின்படி உத்தரகோச மங்கைக்கு வாலியின் மகன் அங்கதனை ராமர் அனுப்பினார். அங்கதன் அங்குள்ள மண்ணை எடுத்து வந்தான். சீதை சிவன் தலத்தில் உள்ள மண்ணை வைத்து லிங்கம் உருவாக்கி ராமேஸ்வரத்தில் பிரதிஷ்டை செய்து அனைவரும் வழிபட்டார்கள்.

    கைலாசம் சென்று லிங்கத்தை எடுத்து திரும்பி வந்த அனுமன் அங்கு மண் லிங்கம் பிரதிஷ்டை செய்து, பூஜைகள் செய்து இருப்பதைக் கண்டு கோபம் கொண்டு அதை தன வாலால் சுற்றி அகற்ற முயன்றான். வால் லிங்கத்திலிருந்து உருவி அனுமனுடைய முகம் தரையில் இடித்து ரத்தம் வழிந்தது. அதனால் ராமேஸ்வரத்தில் இருக்கும் அனுமன் முகம் எப்பொழுதும் சிவந்திருக்கும்.

    இந்த லிங்கத்தில் அனுமன் வாலால் உருவிய தழும்பு இப்பொழுதும் காணலாம். இந்த லிங்கத்தில் தீபாராதனை காட்டும்பொழுது லிங்கத்தின் பின்புறம் ஒளி தெரியும். உத்தரகோசமங்கை ஸ்தலத்தில் மண்ணெடுத்து உருவாக்கிய லிங்கத்திற்கு ராமலிங்கம் என்று பெயர்.

    இதன் மூலம் ராமேசுவரம் தலத்தில் உள்ள லிங்கம் உத்தரகோச மங்கையில் எடுத்து செய்யப்பட்டது என்பது உறுதியாகிறது.

    இந்த ராம லிங்கத்திற்கு பக்கத்தில் அனுமன் கொண்டு வந்த விஸ்வலிங்கத்தை ஸ்தாபித்து, அந்த லிங்கத்திற்கு காசிலிங்கம் என்று பெயரிட்டு, அதற்கே முதல் பூஜை செய்ய வேண்டும் என்று ராமர் உத்தரவிட்டாராம்.

    பின்னர் ராமர் தேவிப்பட்டனத்தில் கடலில் ஒன்பது கல்களை ஊன்றி தோஷத்தை கழித்துள்ளார். ராமேஸ்வரத்தில் இருபத்தி மூன்று தீர்த்தங்கள் உள்ளன. ராமர் ஊன்றிய ஒன்பது கற்களை விட்டு பகலில் கடல் தண்ணீர் ஓடிவிடும். மாலையில் தண்ணீரில் கற்கள் மூழ்கிவிடும்.

    எனவே தேவிபட்டணம் இருப்பதி நான்காவது தீர்த்தமாகும். இந்த ஊர் ராமநாதபுரத்தில் இருந்து வடக்கே 15 கி.மீ. தூரத்தில் உள்ளது.

    ஈசன், ஈஸ்வரி பிறந்த ஊரான உத்தரகோசமங்கை இருபத்தைந்தாவது கடைசி தீர்த்தமாகும். இந்த ஊர் ராமநாட்டில் இருந்து தெற்கு 15 கி.மீ. தொலைவில் உள்ளது. ஒரு இந்து, காசி சென்று ராமேஸ்வரம் தீர்த்தமாடி இறுதியாக கடைசி தீர்த்தம் உத்தரகோசமங்கையில் ஆடினால் காசி யாத்திரை பூர்த்தியாகி சொர்க்கத்திற்குச் செல்வதற்கு வழிவகுக்கும் என்பது ஐதீகமாகும்.

    திருஉத்தரகோசமங்கை திருக்கோவிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி அபூர்வ மரகத நடராஜர் சிலை மீது பூசப்பட்டுள்ள சந்தனக்காப்பு இன்று (சனிக்கிழமை) களையப்படுகிறது.
    வைகை என்னும் பொய்யா குலக்கொடி-வேகவதி-புலவர் நாவில் பொருந்திய பூங்கொடி இவ்வாறு அன்று வாழ்ந்த தமிழ் புலவர்களால் புகழ்ந்து பாடப்பட்டது வைகை ஆற்றின் முகத்துவாரமான ராமநாதபுரம். இங்கு மகுடமாக அமைந்திருப்பது திருஉத்தரகோசமங்கை திருத்தலம். இலக்கிய சிறப்பும், இதிகாச பெருமையும் கொண்டு விளங்கும் இந்த திருஉத்தர கோசமங்கை, தொல்காப்பிய காலத்துக்கு முந்தைய தொன்மை வாய்ந்தது.

    இந்து மத வேதங்களிலும் புராணங்களிலும் உலகில் சிவபெருமான் உறையும் முதல் திருத்தலம் இதுதான் என்று வர்ணிக்கப்படுகிறது. இதன் காரணமாக இந்தகோவில் ஆதிசிதம்பரம், பூலோக கைலாயம், சிற்றம்பலம், பொன்னம்பலம் என்றெல்லாம் புகழ்ந்து போற்றப்படுகிறது. இந்த புண்ணிய தலமான திருஉத்தரகோசமங்கை ராமநாதபுரத்தில் இருந்து தென்மேற்கே 10 மைல் தொலைவில் உள்ளது.

    உயர்ந்து நிற்கும் கோபுரம், மாட வீதிகள், மணிமண்டபங்கள், எழிற்கூடங்கள், நீண்ட நெடிய தாழ்வாரங்களுடன் கண்ணைக்கவரும் வகையில் காட்சி தருகிறது. மண்எட்டும் புகழ் பரப்பும், விண் எட்டும் கோபுர விமானம், கர்ப்ப கிரகம் அன்றைய தமிழர்களின் நுண்ணிய கலைத்திறனுக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. தமிழ் வளர்த்த சமயக்குரவர்கள் நால்வர்களில் ஒருவரான மாணிக்க வாசகர் அவருடைய தெய்வீக பாடல்களில் ‘மண் முந்தியோ மங்கை (திரு உத்தரகோசமங்கை) முந்தியோ’ என்று பாடல்களில் குறிப்பிட்டு கூறுவதில் இருந்து இந்த ஊர் பிரபஞ்சத்தின் முதல் பூபாகம் என்று உறுதிபட நம்புகிறார்கள்.

    இந்த திருத்தலத்தின் வேதகால புராண நிகழ்வுகளும், இறைவனின் திருவிளையாடல்களும் இந்த உத்தரகோசமங்கை மண்ணில்தான் நடைபெற்றுள்ளன என்று இந்து சமய ஆன்மிக அறிஞர்கள் உறுதிபட நம்புகிறார்கள்.இந்த கோவிலில் உள்ள சிவலிங்கம் சுயம்புவாக உருவானது. ராமபிரானின் மூதாதையர்களினால் உருவாக்கப்பட்ட இந்த கோவில் பகுதியில் முனிவர்களும், ரிஷிகளும் தங்கி இறைவனை வழிபட்டதாக வேத வரிகளில் காணப்படுகின்றன. இறை வழிபாட்டை துறக்காத 1000 முனிவர்கள் சிவபெருமானை துதிக்கவும், தவம் செய்யவும் இந்த இடத்தை தான் தேர்வு செய்தார்கள்.

    புராண புகழ்பெற்ற இந்த கோவிலின் தல விருட்சம் இலந்தை மரம் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர்.

    இந்த கோவிலின் நவரத்தினங்களில் ஒன்றான பச்சை மரகத கல்லினால் ஆன ஆளுயர ஆடும் திருக்கோலத்தில் உள்ள விலை மதிக்க முடியாத அபூர்வ நடராஜர் சிலை உள்ளது. தமிழர்களின் கலைத்திறனுக்கும் நுண்ணிய சிற்ப வேலைப்பாடுகளுக்கும், கட்டியம் கூறும் வகையில் கண்கவர் காட்சியளிக்கும் அபூர்வ சிலை இது. நவரத்தினங்களில் ஒன்றான பச்சைக்கல் இயல்பாகவே மென்மையானது.

    ஒளி, ஒலி அதிர்வுகளை தாங்க முடியாத தன்மை உடையது. இதன் காரணமாக மத்தளம் முழங்க மரகதம் உடைபடும் என்று சொல்வார்கள். எனவே இந்த நடராஜர் சிலையை ஒளி, ஒலி அதிர்வுகளில் இருந்து பாதுகாக்க சந்தனக்கலவையை பூசி வருகிறார்கள். வருடத்தில் ஒருநாள் அதுவும் சிவனுக்கு உகந்த நாளான திருவாதிரை நாளில் மட்டும் பக்தர்களின் தரிசனத்திற்காக சந்தனக்கவசம் களையப்படும்.

    இதன்படி ஆருத்ரா தரிசனத்தையொட்டி இன்று(சனிக்கிழமை) காலை சந்தனம் களையும் அற்புத நிகழ்ச்சி 10.30 மணிக்கு மேல் நடைபெறுகிறது. காலை 11.30 மணி முதல் அபூர்வ மரகத நடராஜருக்கு 21 வகையான அபிஷேகங்கள் நடைபெற்று சந்தனாதி தைலம் பூசப்படும். தொடர்ந்து பக்தர்களின் தரிசனத்திற்கு மரகத நடராஜர் வைக்கப்பட்டு இரவு 11.30 மணிக்கு ஆருத்ரா மகா அபிஷேகம் நடைபெறும். நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு ஆருத்ரா அன்று மீண்டும் சந்தனக்காப்பு பூசப்படும்.

    இதன் தொடர்ச்சியாக மகா தீபாராதனை நடத்தப்பட்டு அருகில் உள்ள கல்தேர் மண்டபத்தில் கூத்தர்பெருமான் எழுந்தருளும் ஆருத்ரா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த ஆருத்ரா தரிசன விழாவில் ராமநாதபுரம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய வந்து அபூர்வ மரகத நடராஜரை தரிசனம் செய்வார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் ராணி பிரம்மகிருஷ்ண ராஜராஜேஸ்வரி நாச்சியார் உத்தரவின்பேரில் திவான் பழனிவேல் பாண்டியன், சரக பொறுப்பாளர் ராமு ஆகியோர் செய்து வருகின்றனர். 
    ×