search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Trichy player gomathi"

    திருச்சி வீராங்கனை கோமதி மாரிமுத்து ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதை தடுக்க சதி நடப்பதாக அவரது அண்ணன் பேட்டியளித்துள்ளார்.
    திருச்சி:

    கத்தார் நாட்டில் உள்ள தோகா நகரில் கடந்த மாதம் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான பிரிவில் 800 மீட்டர் ஓட்டத்தில் இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழக வீராங்கனை கோமதி 2 நிமிடம் 2.70 விநாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கப் பதக்கம் வென்றார்.

    பெங்களூருவில் வருமான வரித்துறை அலுவலகத்தில் பணியாற்றி வரும் கோமதி திருச்சி அருகே உள்ள முடி கண்டம் கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். தங்கப்பதக்கம் வென்ற கோமதிக்கு ஏராளமான பாராட்டுக்களும், பரிசுகளும் குவிந்தன.

    தமிழக அரசு சார்பில் மற்றும் அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள், திரையுலக நட்சத்திரங்கள் சார்பில் நிதியுதவி வழங்கி பாராட்டு விழாக்களும் நடத்தப்பட்டு கோமதி கவுரவிக்கப்பட்டார். ஆசிய போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற கோமதிக்கு சொந்த ஊரான முடிகண்டத்தில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பதக்கம் வென்ற கோமதி ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று தங்கப்பதக்கம் வெல்வதே தனது லட்சியம் என்றும் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் திடீரென கோமதி மீது தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    அவர் ஆசிய தடகள போட்டியில் பங்கேற்றபோது நடத்தப்பட்ட ஊக்க மருந்து சோதனை முடிவு இப்போது வெளியாகி உள்ளது. அதில் அவர் ‘நான்ட் ரோலோன்’ என்ற தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது. இதைத்தொடர்ந்து கோமதி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளுக்கு போட்டிக்கு முன்பும், பின்பும் ஊக்க மருந்து சோதனை மேற்கொள்ளப்படும். கோமதிக்கு நடத்தப்பட்ட முதற்கட்ட ஊக்க மருந்து சோதனையில் அவர் தோல்வி அடைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அதாவது ‘ஏ’ மாதிரி ஊக்க மருந்து சோதனையில் அவர் தோல்வியை தழுவியுள்ளார். அடுத்த நிலை சோதனையான ‘பி’ மாதிரி சோதனையிலும் அவர் ஊக்க மருந்தை உட்கொண்டது உறுதி செய்யப்பட்டால் அவருக்கு வழங்கப்பட்ட தங்கப்பதக்கம் பறிக்கப்படும் நிலை உள்ளது. மேலும் அவர் 4 ஆண்டுகள் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கோமதி ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய விபரம் குறித்து அவருக்கு ஈமெயில் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஊக்க மருந்து சர்ச்சையை வீராங்கனை கோமதி திட்டவட்டமாக மறுத்துள்ளார். தனது வாழ்க்கையில் ஒரு போதும் ஊக்க மருந்தை பயன்படுத்தியது இல்லை என்ற அவர் ‘பி’ மாதிரியை சோதிக்க வேண்டும் என்றும் மேல்முறையீடு செய்துள்ளார்.

    சுப்பிரமணி

    வீராங்கனை கோமதி மீது ஊக்கமருந்து பயன்படுத்தியதாக கூறப்படும் புகார் குறித்து திருச்சியில் முடிகண்டத்தில் உள்ள அவரது அண்ணன் சுப்பிரமணியிடம் கேட்டபோது அவர் இதனை முற்றிலும் மறுத்தார். மேலும் அவர் கூறியதாவது:-

    இந்தியாவிற்கு பெருமை தேடித்தந்த எனது சகோதரி கோமதி அவ்வாறு ஊக்க மருந்தை பயன்படுத்தி இருக்க வாய்ப்பில்லை. இது பற்றி நாங்கள் அவரிடம் கேட்ட போதும் அவர் அதனை திட்டவட்டமாக மறுத்தார். நாங்கள் கிராமத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்கள்.

    கோமதி இதற்கு முன்பு பல போட்டிகளில் பங்கேற்று ஏராளமான பதக்கங்களை வென்றுள்ளார். தற்போது அடுத்த கட்ட வெற்றிக்காக தன்னை தயார்படுத்தி வருகிறார். ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று இந்தியாவிற்கு தங்கப்பதக்கம் பெற்றுத்தர வேண்டும் என்பதுதான் கோமதியின் லட்சியக்கனவு.

    இந்த நிலையில் இது போன்ற புகார்கள் கோமதியின் லட்சியத்திற்கு தடையாக அமையும். மேலும் அடுத்த கட்டமாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதை தடுக்க நடக்கும் சதியோ என்றும் எண்ண தோன்றுகிறது. ஆனாலும் ‘பி’ பரிசோதனைக்கு அவர் இந்திய தடகள கூட்டமைப்புக்கு மேல்முறையீடு செய்துள்ளார். இதில் அவர் நிச்சயம் வெற்றி பெற்று தான் ஊக்க மருந்து பயன்படுத்தவில்லை என்பதை நிரூபிப்பார்.

    அதற்குள் சிலர் இதை பெரிதாக்குவது, எங்களை மன உளைச்சல் அடைய செய்துள்ளது. எதையும் இறுதி செய்வதற்குள் தவறான தகவல்களை பரப்பக்கூடாது.

    இவ்வாறு அவர் உருக்கமாக கூறினார்.
    ஏழ்மையின் வேதனையே ஆசிய தடகள போட்டியில் சாதனை படைக்க தூண்டியதாக தங்க மங்கை கோமதி மாரிமுத்து கூறியுள்ளார். #AsianAthleticChampionships #Gomathi
    சென்னை:

    கத்தாரில் நடந்த ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார் கோமதி. தாயகம் திரும்பிய அவருக்கு பாராட்டுகள் குவிகிறது. சென்னை வேலம்மாள்பள்ளி மற்றும் மயிலாப்பூர் தமிழிவியல் நிறுவனம் சார்பில் பாராட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்ற கோமதி கூறியதாவது:-

    எனது சொந்த ஊர் திருச்சி அருகே உள்ள சிறிய கிராமம். அப்பா மாரிமுத்து கூலி வேலை செய்துவந்தார். அம்மாவுக்கும் படிக்கக்கூட தெரியாது. படிக்கும்போது ஓட்டப்பந்தயங்களில் கலந்து கொண்டு ஓடுவேன்.

    பின்னர் பயிற்சிக்காக அதிகாலை 4.30 மணிக்கு என் அப்பா அழைத்து செல்வார். கிராமத்தில் இருந்து ஏரிக்கரை வழியாக செல்லவேண்டும். மின் விளக்கு வசதி கிடையாது. பல நாள் டார்ச் வெளிச்சத்தில் தான் சென்றிருக்கிறோம். மழைக்காலங்களில் மிகவும் சிரமப்படுவோம்.

    நான் நன்றாக சாப்பிட்டு தெம்மாக ஓடவேண்டும் என்பதற்காக அப்பா பல நாள் பட்டினி கிடந்துள்ளார்.

    திருச்சி கல்லூரியில் படித்த போது மேரி எனது தோழி. இருவரும் ஓட்டப் பந்தயங்களில் ஓடுவோம். அவர் போலீஸ் வேலையில் சேர்ந்து சென்னைக்கு வந்துவிட்டார். அவர்தான் சென்னைக்கு அழைத்து வந்து பயிற்சிக்கு ஏற்பாடு செய்தார். அந்த நேரத்தில் என் தந்தையின் இழப்பு என்னை மிகவும் பாதித்தது.

    ஆனால் மேரிதான் எனக்கு ஆறுதலாகவும், ஊக்கமாகவும் இருந்தார். தொடர்ந்து பயிற்சி எடுத்தேன்.

    ஆசிய தடகள போட்டியில் ஓடியபோது கிழிந்த ஷுவை போட்டுக்கொண்டு ஓடினேன். வெற்றிபெற வேண்டும் என்ற வெறியோடு ஓடியதால் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.



    தங்கம் வென்றதும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்த நேரத்தில் என் தந்தையும் இருந்திருதால் இன்னும் சந்தோசமாக இருந்திருக்கும் தமிழகம் சார்பாக விளையாட துறை ரீதியாக எனக்கு எந்த ஆதரவும் கிடைக்கவில்லை. மாநில அரசு, விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திடம் இருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை. ஏழ்மையின் வேதனைதான் என்னை சாதிக்க தூண்டியது.

    தொடர்ந்து போராடி தமிழகம் சார்பில் விளையாடினேன். நான் வேறு மாநிலத்தில் அரசு வேலைபார்ப்பதால் தமிழகம் சார்பாக விளையாட பல பிரச்சினைகளை சந்தித்தேன். விடாமுயற்சி, தொடர் உழைப்பால் வெற்றி பெற்றுள்ளேன்.

    என்னைப்போல் பல வீராங்கனைகள் ஏழ்மையில் இருக்கிறார்கள். வெளி உலகுக்கு வராமல் விடுதிகளில் தங்கி சரியான உணவு கூட கிடைக்காமல் தவிக்கிறார்கள். அவர்களுக்கும் அரசு உதவிகள் கிடைத்தால் இன்னும் பல பெண்கள் தங்கம் வெல்வார்கள்.

    தொடர்ந்து கடும் பயிற்சி மேற்கொண்டு சிறந்த விளையாட்டு வீராங்கனை ஆக வேண்டும். குறிப்பாக பி.டி.உஷாவின் சாதனையை முறியடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஒலிம்பிக் போட்டியில் விளையாட வெளிநாடுகளுக்கு சென்று பயிற்சி எடுக்கவேண்டும். அதற்கு மத்திய, மாநில அரசுகளின் உதவி கிடைத்தால் நிச்சயம் தங்கம் வெல்வேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #AsianAthleticChampionships #Gomathi
    கத்தார் தலைநகர் தோஹாவில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு தி.மு.க.சார்பில் ரூ.10 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. #AsianAthleticChampionships #Gomathi
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கத்தார் தலைநகர் தோஹாவில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு தி.மு.க.சார்பில் ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும்.

    வெள்ளிப்பதக்கம் வென்ற ஆரோக்கிய ராஜீவுக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும்.

    இந்தியாவிற்கான 2 பேரின் சாதனைகளை மேன்மேலும் தொடர வாழ்த்துகிறோம்.



    இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    மேலும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கத்தார் தலைநகர் தோஹாவில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு முதலாவது தங்க பதக்கத்தைப் பெற்றுத் தந்தவர் தமிழகத்தைச் சேர்ந்த ஓட்டப் பந்தய வீராங்கனை கோமதி.

    திருச்சி அருகே உள்ள முடிகண்டம் என்ற கிராமத்தில் கூலித் தொழிலாளியான மறைந்த மாரிமுத்து என்பவருக்கு மகளாக பிறந்தவர். எந்தவித பொருளாதார ஆதரவும் இல்லாமல் கடுமையான உழைப்பின் மூலமாக இந்த பதக்கத்தைப் பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்திருக்கிறார்.

    தமிழக வீராங்கனை கோமதி பதக்கத்தை வென்று பெருமை சேர்த்ததை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக பாராட்டுகிறேன். மேலும் அவர் பல விருதுகளை பெற வேண்டுமென்று வாழ்த்துகிறேன். இவரை ஊக்கப்படுத்துகிற வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை சார்பாக ரூபாய் 5 லட்சம் வழங்கப்படும்.

    இவ்வாறு கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.  #AsianAthleticChampionships #Gomathi 
    ×