search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tribal students"

    • ஆதி திராவிடர்-பழங்குடியினர் மாணவர்கள் ஓட்டல் மேனேஜ்மெண்ட் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
    • இந்த தகவலை ராமநாதபுரம் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    சென்னை தரமணியில் இன்ஸ்டிடியூட் ஆப் ஓட்டல் மேனேஜ்மெண்ட் கேட்டரிங் டெக்னாலஜி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஐ.எஸ்.ஓ. தரச்சான்று பெற்ற இந்த நிறுவனம் மத்திய அரசின் சுற்றுலாத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தன்னாட்சி நிறுவனமாகும்.

    சர்வதேச அங்கீகாரம் பெற்ற இந்த நிறுவனத்துடன் பிரான்ஸ் நாட்டில் உள்ள கேட்டரிங் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. ஓட்டல் மேனேஜ்மெண்ட்டில் கடந்த ஆண்டு மனிதவள மேம்பாட்டு மையத்தில் 2-ம் இடம் பெற்றுள்ளது.

    இவ்வாறு பல சிறப்புகளை பெற்ற இந்த நிறுவனத்தில் 12-ம் வகுப்பு முடித்த ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு ஓட்டல் மேலாண்மை நிர்வாகம் 3 வருட முழுநேர பட்டப்படிப்பு, 1½ ஆண்டு முழுநேர உணவு தயாரிப்பு பட்டய படிப்பு, மேலும் 10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு 1½ ஆண்டு உணவு தயாரிப்பு மற்றும் பதனிடுதல் கைவினைஞர் உணவு மற்றும் பான சேவையில் கைவினைத்திறன் படிப்பு, பேக்கரி மற்றும் மிட்டாய் துறையில் பட்டயப்படிப்பு, முன் அலுவலக செயல்பாட்டில் பட்டயப்படிப்பு, ஹவுஸ் கீப்பிங் பட்டயப்படிப்பு, உணவு முறை மற்றும் உணவு சேவை முதுகலை பட்டயப்படிப்பு, விடுதி செயல்பாடு மற்றும் நிர்வாகத்தில் முதுகலை பட்டயப்படிப்பில் விண்ணப்பிக்கலாம்.

    படித்து முடித்தவுடன் நட்சத்திர விடுதிகள், விமானம், கப்பல் நிறுவனம், சேவை நிறுவனங்கள் மற்றும் உயர்தர உணவகங்களில் வேலை வாய்ப்பு பெற்றுத்தரப்படும்.

    இந்த பயிற்சியில் சேர ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். 10, 12-ம் வகுப்பில் 45 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இந்த படிப்பிற்கான செலவுகளை தாட்கோ ஏற்றுக்கொள்ளும். ஆரம்ப கால ஊதியமாக ரூ.25 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை பெறலாம். www.tahdco.com என்ற இணையதளம் மூலமாக இந்த திட்டத்தில் பதிவு செய்து விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன் தெரிவித்துள்ளார்.

    • அடிப்படை கல்வி கற்க வேண்டுமென மலைப்பகுதி மக்களும் ஆர்வம் காட்டுகின்றனர்.
    • பள்ளி கட்டடம் தொலைதூரத்தில் இருப்பதால் அதை பயன்படுத்த முடியாமல் குழந்தைகள் வீட்டு திண்ணைகளில் அமர்ந்து பாடம் படிக்கின்றனர்.

    உடுமலை

    ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை, அமராவதி வனச்சரகத்தில் 18 மலை வாழ் கிராமங்கள் உள்ளன. கிராமத்தை சேர்ந்த குழந்தைகளின் கல்விக்காக குருமலை, குழிப்பட்டி, மாவடப்பு, தளிஞ்சி, கோடந்தூரில் அரசு துவக்க பள்ளி தலா ஒன்று உள்ளது.

    தளிஞ்சி மற்றும் கோடந்தூர் பகுதிகளில் பள்ளி கட்டமைப்புகள் முறையாக உள்ளது. குருமலையில் குடியிருப்பிலிருந்து பள்ளி கட்டடம் தொலைதூரத்தில் இருப்பதால் அதை பயன்படுத்த முடியாமல் குழந்தைகள் வீட்டு திண்ணைகளில் அமர்ந்து பாடம் படிக்கின்றனர். குழிப்பட்டியில் பாதுகாப்பு இல்லாத இடிந்து விழும் நிலையில் உள்ள வகுப்பறையில் அமர்ந்து அச்சத்துடன் படிக்க வேண்டிய நிலை நீண்ட காலமாக உள்ளது.

    வனப்பகுதியில் உள்ள குழந்தைகளில் கல்வி மற்றும் எதிர்காலத்துக்கான அஸ்திவாரமாக கருதப்படும், துவக்கப்பள்ளிகளின் அவல நிலையை மாற்ற வேண்டும் என அப்பகுதியினர் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

    கடந்த கல்வியாண்டில் குருமலை, குழிப்பட்டியில் புதிய பள்ளி கட்டடம் கட்டுவதற்கான அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இருப்பினும் கட்டுமான பணிகள் துவக்கப்படவில்லை. மலைப்பகுதி பள்ளிகளில் இப்போது மாணவர்களின் எண்ணிக்கையும் சராசரியாக உயர்ந்து வருவதால் கட்டடம் அடிப்படையாகவும் அவசிய தேவையாகவும் உள்ளது. அடிப்படை கல்வி கற்க வேண்டுமென மலைப்பகுதி மக்களும் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் அதற்கான வசதிகளை மேம்படுத்துவதில் அரசுத்துறைகள் அலட்சியமாக செயல்படுகிறது.

    புதிய கல்வியாண்டில் தரமுள்ள, பாதுகாப்பான சூழலில் தங்களின் குழந்தைகள் படிக்க உள்ளனர் என எதிர்பார்த்து மலைப்பகுதி பெற்றோர் ஏமாற்றத்தில் உள்ளனர். இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், குருமலை, குழிப்பட்டி பகுதிகளில் பள்ளி கட்டடம் கட்டுவதற்கான நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்னும் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. தற்போது மாவடப்பு பகுதிகளிலும் கட்டடம் கட்டுவதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதற்கும் நிதிஒதுக்கீடு வரவில்லை என்றனர்.

    • முதுமலை புலிகள் சரணாலயத்தில் பல்லுயிரின பாதுகாப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது.
    • மாணவர்களிடம் களிமண்களை கொடுத்த வனத்துறை அதிகாரிகள், வனவிலங்குகளின் உருவத்தை வடிவமைக்கும்படி கூறினர்.

    மேட்டுப்பாளையம்,

    நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் சரணாலயம் உள்ளது. இங்கு உள்ள மசினகுடி, யானைப்பாடி ஆகிய காட்டுப்பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.

    இவர்களில் பலர் வனத்துறையில் வனவராக வேலை பார்த்து வருகின்றனர். இன்னும் சிலர் தெப்பக்காடு யானைகள் புத்துணர்வு முகாமில் பாகன்களாக உள்ளனர்.

    இதுதவிர வனவிலங்கு வேட்டை தடுப்பு, தீ பரவல் தடுப்பு மற்றும் பல்லுயிரின பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு குழுக்களில் பழங்குடியின மக்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

    முதுமலை புலிகள் சரணாலயத்தில் பல்லுயிரின பாதுகாப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதனையொட்டி பழங்குடியின மாணவர்களை அடர்வனத்திற்குள் சுற்றுலா அழைத்து செல்ல வனத்துறையினர் திட்டமிட்டனர்.

    அதன்படி மசினகுடி, ஆனைப்பட்டியை சேர்ந்த 40 பழங்குடியின மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, நேற்று அவர்கள் யானை சவாரி மூலம் புலிகள் காப்பகத்தில் உள்ள அடர்வனத்திற்குள் அழைத்து செல்லப்பட்டனர்.

    10 கி.மீ சுற்றளவுக்கு சென்ற மாணவ-மாணவிகள், காட்டுப்பகுதியில் சுற்றித்திரியும் மான்கள், யானை உள்பட பல்வேறு வனவிலங்குகளை நேரடியாக கண்டு களித்து உற்சாகம் அடைந்தனர்.

    இதனை தொடர்ந்து மீண்டும் அவர்கள் சரணாலய அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.

    அங்கு அவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. பின்னர், மாணவ-மாணவிகளின் சுவாரசியத்தை அதிகரிக்கும் வகையில் பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டது.இதன் ஒருபகுதியாக மாணவர்களிடம் களிமண்களை கொடுத்த வனத்துறை அதிகாரிகள், வனவிலங்குகளின் உருவத்தை வடிவமைக்கும்படி கூறினர்.

    அப்போது மாணவ- மாணவிகள் ஆர்வத்துடன் பாம்பு, பறவைகள் ஆகியவற்றின் உருவங்களை களிமண்ணால் வடிவமைத்து அசத்தினார்கள். மேட்டுப்பாளையம் முதுமலை புலிகள் சரணாலயத்தில் முதல்முறையாக பழங்குடியின மாணவ- மாணவிகள் யானை சவாரி மூலம் காட்டை சுற்றிப்பார்த்த சம்பவம், அந்த பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×