search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Traditional Paddy"

    • பாரம்பரிய நெல் விதைப்பு திருவிழா நடந்தது.
    • மக்களுக்கு ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்யலாம்.

    காரைக்குடி

    காரைக்குடி அருகே உள்ள சேது பாஸ்கரா வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு பாரம்பரிய நெல் விதைப்புத் திருவிழா நடந்தது. கல்லூரி முதல்வர் கருணாநிதி தலைமை தாங்கினார். முன்னாள் வங்கி மேலாளர் பாரதி, முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனர். பின்னர் முதல்வர் கூறியதாவது:-

    பாரம்பரிய நெல் விதைகளான மாப்பிள்ளை சம்பா, காட்டுயானம், தில்லை நாயகம் முதலிய நெல் விதைகள் விதைப்பு செய்யப்பட்டது.மாப்பிள்ளை சம்பா, தில்லை நாயகம் 150 நாட்கள், காட்டுயானம் 180 நாட்கள் வயதுடைய பாரம்பரிய நெல் ரகங்கள் ஆகும். தில்லை நாயகம் சென்ற ஆண்டு மீட்டெடுத்த உயர் விளைச்சல் தரக்கூடிய பாரம்பரிய நெல் ரகமாகும். இது சேது பாஸ்கரா வேளாண்மைக் கல்லூரியில் புதிதாக விதைப்புச் செய்யப்பட்டுள்ளது. இந்த 3 பாரம்பரிய நெல் ரகங்களும் அதிக ஊட்டச்சத்தும், மருத்துவ குணங்களும் உடையவை. நன்கு வறட்சியை தாங்கி வளரக் கூடியவை. 1970-களில் அறிமுகப்படுத்தப்பட்ட பசுமைப் புரட்சிக்குப் பிறகு இந்தியாவில் உணவு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டது.ஆனால் ஊட்டச்சத்து பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளது.இதுபோன்ற பாரம்பரிய நெல் வகைகளை விதைத்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் மக்களுக்கு ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்யலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 5 ஏக்கர் பரப்பளவில் பாரம்பரிய நெல் ரகம் பயிரிடப்பட்டுள்ளது.
    • சாகுபடி குறித்த தொழில் நுட்பங்களையும் விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்.

    மடத்துக்குளம் :

    மடத்துக்குளம் வட்டாரம் பாப்பான்குளத்தில் மாநில அரசு விதைப்பண்ணை செயல்பட்டு வருகிறது. இந்த விதைப்பண்ணையில் நடப்பு நிதியாண்டில் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் 5 ஏக்கர் பரப்பளவில் பாரம்பரிய நெல் ரகம் பயிரிடப்பட்டுள்ளது.

    இந்த விதைப்பண்ணைக்கு திண்டுக்கல் விவசாயிகள் கண்டுணர் சுற்றுலா வந்தனர். திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டார முன்னோடி விவசாயிகள் 50 பேர் வேளாண்மை உழவர் நலத்துறையின் அட்மா திட்டத்தின் கீழ் வெளி மாவட்டத்தில் கண்டுணர் சுற்றுலா மூலம் களப் பயிற்சி பெறுவதற்காக வந்துள்ளனர்.

    பாப்பான்குளத்தில் உள்ள பாரம்பரிய நெல் வயலை பார்வையிட்ட விவசாயிகளுக்கு விதைப்பண்ணையின் மேலாளர் கோகுல் விதைப்பண்ணை அமைக்கும் நடைமுறைகள் மற்றும் விதை சான்றளிப்பு செய்வதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துக் கூறினார்.

    மேலும் பண்ணையில் பயிரிடப்பட்டுள்ள ரகங்களான கோ 51, வி.ஜி.டி. 1 மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் புதிதாக வெளியிடப்பட்டுள்ள கோ 55 ஆகிய ரகங்களின் சிறப்பியல்புகளையும் சாகுபடி குறித்த தொழில் நுட்பங்களையும் அவர் விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் வட்டார தொழில் நுட்ப மேலாளர் பிரசன்னா மற்றும் உதவி தொழில் நுட்ப மேலாளர் ஜெயசுப்பிரமணி ஆகியோர் உடன் இருந்தனர்.

    ×