search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TN Fishermens Arrested"

    • ராமேசுவரம் அருகே பாம்பன் தெற்கு துறைமுகத்தில் இருந்து சுமார் 90-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு புறப்பட்டனர்.
    • கைதான மீனவர்களும் அவர்கள் பயன்படுத்திய 2 டோலர் படகுகளும் கடற்படையினரால் தாழ்வுபாடு கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டன.

    புதுக்கோட்டை:

    தமிழகத்தின் ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் கச்சத்தீவு அருகே சென்று மீன்பிடித்து வருவது வழக்கம். அவ்வாறு மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து அட்டூழியத்தில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது. இதேபோல் இலங்கை கடற்கொள்ளையர்களாலும் தமிழக மீனவர்கள் அவ்வபோது தாக்குதலுக்கு ஆளாகின்றனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 12 பேரை கடந்த 13-ம் தேதி இலங்கை கடற்படை கைது செய்தது. இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாடு மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

    இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அருகே பாம்பன் தெற்கு துறைமுகத்தில் இருந்து சுமார் 90-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு புறப்பட்டனர். நடுக்கடலில் தலைமன்னாருக்கும், தனுஷ்கோடிக்கும் இடையே தாழ்வுபாடு கடற்கரை பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் அவர்களை வழிமறித்தனர்.

    பின்பு எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 2 விசைப்படகையும், அதில் இருந்த மீனவர்கள் விஜயகுமார், ஆரோக்கியம், யோகம், பிச்சை, இன்னாசி, ஸ்வீடன் உள்ளிட்ட 18 பேரையும் கைது செய்தனர். இதை தொடர்ந்து 18 மீனவர்களிடமும் நடுக்கடலில் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. கைதான மீனவர்களும் அவர்கள் பயன்படுத்திய 2 டோலர் படகுகளும் கடற்படையினரால் தாழ்வுபாடு கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டன. அதன்பின்னர் கைதான 18 மீனவர்கள், மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

    இதை தொடர்ந்து மீனவர்கள் 18 பேரும் இன்று மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்கள். கடந்த ஒரு வாரத்தில் புதுக்கோட்டை, நாகை, ராமநாதபுரம் உள்ளிட்ட 3 மாவட்டத்தை சேர்ந்த 40 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×