search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thiruvidanthai"

    திருமணம் தாமதம் ஆவதற்கு தனிப்பட்ட முறையில் சில காரணங்கள் இருக்கலாம். திருமண தடையை நீக்கும் அற்புதமான தலமாக திருவிடந்தை நித்திய கல்யாணப்பெருமாள் ஆலயம் திகழ்கிறது.
    திருமணம் தள்ளிக்கொண்டே சென்றால் பெற்றோர்களுக்கு மட்டுமின்றி இளம்பெண்களும், வாலிபர்களும் மன வேதனைக்கும் குமுறல்களுக்கும் உள்ளாவார்கள். திருமணம் தாமதம் ஆவதற்கு தனிப்பட்ட முறையில் சில காரணங்கள் இருக்கலாம். ஜோதிட ரீதியாக சில காரணங்கள் இருக்கலாம்.

    எந்த காரணமாக இருந்தாலும் சரி அதற்கு தீர்வு காண்பதை பொறுத்து தான் திருமணம் யோகம் உடனே கைக்கூடி வரும். அந்த யோகத்தை தரும் அற்புதமான தலமாக திருவிடந்தை நித்திய கல்யாணப்பெருமாள் ஆலயம் திகழ்ந்து கொண்டிருக்கிறது.

    மூலவரின் பெயர் நித்திய கல்யாணப்பெருமாள் என்பதால் அதற்கேற்ப அவரை நம்பிக்கையோடு நாடி வரும் பக்தர்களுக்கு உடனே திருமணம் கைக்கூடுகிறது. இதற்கு பரிகார பூஜை கைக்கொடுக்கிறது. இந்த பரிகார பூஜையை எப்படி செய்ய வேண்டும் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.

    திருமணம் ஆகாத ஆண் அல்லது பெண் தங்களது பெற்றோர் அல்லது உறவினர்களுடன் இந்த ஆலயத்திற்கு வரவேண்டும். கிழக்கு கடற்கரை சாலையில் மெயின் ரோட்டு ஓரத்திலேயே இந்த ஆலயத்திற்கான அலங்கார வளைவு உள்ளது. அந்த ஆர்ச் அருகில் கல்யாண தீர்த்தம் இருக்கிறது. அந்த தீர்த்தத்தில் திருமண தடையால் வருந்துபவர்கள் நீராட வேண்டும். புனித நீராட இயலாதவர்கள் அந்த தீர்த்தத்தை எடுத்து தலையிலாவது தெளித்துகொள்ள வேண்டும்.

    பிறகு தேங்காய், பழம், பூ, கற்கண்டு, வெற்றிலைபாக்கு, ஊதுப்பத்தி ஆகியவை கொண்ட அர்ச்சனை தட்டை வாங்கிக்கொள்ள வேண்டும். இதையடுத்து இரண்டு மாலைகள் வாங்க வேண்டும். ரோஜா மாலையாக இருந்தால் நல்லது. இந்த மாலை வாங்கும்போது துலுக்கசாமந்தி மற்றும் தழைகள் இல்லாத மாலையாக பார்த்து வாங்கவேண்டும். இவற்றை எடுத்துக்கொண்டு ஆலயத்திற்குள் சென்று திருமண பரிகார பூஜை செய்ய வேண்டும் என்று சொல்லி அர்ச்சகரிடம் கொடுக்க வேண்டும்.

    அப்போது கோத்திரம், குலம், பெயர், நட்சத்திரம், ராசி போன்றவற்றை அர்ச்சகரிடம் தெளிவாக தெரிவிக்கவேண்டும். அர்ச்சகர் அந்த மாலைகளை தாயாருக்கு அணிவித்து பரிகாரம் செய்யப்படவேண்டியவரின் பெயரில் அர்ச்சனை செய்வார். பிறகு இரண்டு மாலைகளில் ஒரு மாலையை மட்டும் எடுத்து வந்து தருவார்.
    அதை திருமணத்துக்கு உரியவர் தானே தனது கழுத்தில் போட்டுக்கொள்ள வேண்டும். பிறகு ஆலயத்தை 9 முறை சுற்றி வரவேண்டும். பிரகாரத்தை வலம் வரும்போது விரைவில் தனக்கு நல்ல இடத்தில் திருமணம் கைக்கூட வேண்டும் நித்திய கல்யாணப்பெருமாளிடம் மனமுருக வேண்டிகொள்ள வேண்டும்.

    9 தடவை பிரகாரத்தை சுற்றி முடித்ததும், கொடிமரம் அருகில் வந்து சாஷ்டாங்மாக விழுந்து வழிபட வேண்டும். பிறகு அந்த மாலையை தானே கழற்றி எடுக்கவேண்டும். அதை ஒரு பைக்குள் பத்திரமாக வைத்து வீட்டிற்கு எடுத்து செல்ல வேண்டும். வீட்டில் அந்த மாலையை பூஜை அறை விசாலமாக இருந்தால் அங்கே வைத்துவிடலாம். அல்லது சுற்றில் அணியில் அடித்து அதில் தொங்கவிட்டுவிடலாம்.



    தினமும் பூஜை அறையில் விளக்கேற்றி சாமிக்கும்பிடும் போது குலதெய்வத்தை வணங்கிவிட்டு நித்தியகல்யாணப்பெருமாளையும் மனத்திற்குள் நினைத்து வழிபட வேண்டும். அந்த பெருமாளின் அருளால் நிச்சயம் விரைவில் திருமணம் கைக்கூடிவிடும். குறிப்பிட்ட காலத்திற்குள் சிறப்பாக திருமணம் நடைபெறும். பல்லாயிரக்கணக்கானவர்கள் வாழ்வில் இது நடந்து உள்ளது.

    அந்த நம்பிக்கையில் தான் இன்றும் தினம்தினம் ஏராளமான இளைஞர்களும், இளம்பெண்களும் திருமண பரிகாரத்தை செய்ய இந்த ஆலயத்திற்கு படையெடுத்து வந்தபடி உள்ளனர். மற்றொருபுறம் இந்த தலத்திற்கு வந்து பரிகாரம் செய்ததால் திருமணம் நடைபெற்ற தம்பதியர்களும் நன்றி செலுத்துவதற்காக வந்திருந்து வழிபடுவதை காணமுடிகிறது.

    திருமணம் நடைபெற்ற பிறகு மீண்டும் இத்தலத்திற்கு வரவேண்டும். அப்போது கழுத்தில் அணிந்து 9 தடவை சுற்றிய மாலையையும் வீட்டில் இருந்து மறக்காமல் எடுத்து வரவேண்டும். அர்ச்சனை தட்டுடன் இரண்டு மாலைகளை வாங்கி செல்ல வேண்டும். அர்ச்சகர் அந்த மாலைகளை பெருமாள் காலடியில் வைத்து பூஜை செய்து தருவார்.

    அதில் ஒரு மாலையை மணமகனும், மற்றொரு மாலையை மணமகளும் அணிந்து கொண்டு ஆலயத்தை ஒரு தடவை சுற்றி வந்து வழிபாடு செய்ய வேண்டும். காய்ந்துபோன பழைய மாலையை ஆலயத்தின் பின்புறம் உள்ள தலவிருட்சமான புன்னை மரத்தில் கட்டிவிட வேண்டும். அல்லது மரத்தின் கீழ் வைத்தாலே போதுமானது.

    இத்துடன் பரிகாரப்பூஜை நிறைவு பெறும். மனம் முழுவதும் நித்திய கல்யாணப்பெருமாளுக்கு நன்றி கூறி ஆலயத்தில் இருந்து விடைபெற வேண்டும்.
    திருவிடந்தையில் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் இன்று காலை கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தையில் நித்ய கல்யாண பெருமாள் கோவில் உள்ளது.

    இது 108 வைணவ கோவில்களில் 62-வது கோவிலாகும். இங்கு ஆதிவராக பெருமாள், அகிலவல்லி தாயாருடன் நித்ய கல்யாண பெருமாள், கோமளவல்லி தாயார் உற்சவர் என பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.

    திருமண தடை நீக்கம் மற்றும் ராகு, கேது தோ‌ஷங்களின் பரிகார கோவிலாகவும் இது விளங்குகிறது. இந்து சமய அறநிலையத் துறை மற்றும் மத்திய தொல்லியல்துறை இணைந்து இந்த கோவிலை நிர்வாகம் செய்து வருகின்றனர்.

    கோவிலில் புதிதாக கொடிமரம் அமைத்து கடந்த மூன்று ஆண்டுகளாக திருப்பணிகள் நடந்து வந்தது. பணிகள் முழுவதும் முடிந்து இன்று (வியாழக்கிழமை) கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையொட்டி பிரதிஷ்டை, யாகம், வாஸ்து சாந்தி, அஷ்டபந்தனம் சாற்றுதல் வழிபாடுகள் தொடங்கி நடந்தது. காலை 9.45 மணியளவில் வேதபுஷ் பன்னர்கள் கோபுர கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.



    விழாவில் இந்து சமய அற நிலையத்துறை ஆணையர் அசோக்குமார், காஞ்சிபுரம் மாவட்ட எம்.பி மரகதம், குமரவேல், இந்து அறநிலையத்துறை ஆணையர் ஆர்.ஜெயா வேலூர் ஆணையர் அசோக்குமார் கலந்து கொண்டனர்.

    கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, பஸ் வசதி செய்யப்பட்டு இருந்தது.
    திருவிடந்தை ஸ்ரீ நித்ய கல்யாணப் பெருமாள் ஆலயத்தில் சிற்ப அதிசயங்கள் ஏராளமாக உள்ளன. கோவில் முழுக்க தூண்களில் விதவிதமான சிற்பங்களை பார்க்கலாம்.
    திருவிடந்தை ஆலயத்தில் சிற்ப அதிசயங்கள் ஏராளமாக உள்ளன. கோவில் முழுக்க தூண்களில் விதவிதமான சிற்பங்களை பார்க்கலாம். ஒவ்வொரு சிற்பமும் ஒவ்வொரு கதையை பின்னணியாக கொண்டுள்ளது.

    கருவறையில் மூலவர் நித்தய கல்யாணப்பெருமாளின் நின்ற கோலம் பார்ப்பவர்களை அசரவைக்கிறது. கருவறையில் வராகர் கிழக்கு திசையை நோக்கியபடி நிற்கிறார். அவரது உயரம் சுமார் 6 அடி உயரத்துக்கு பிரமாண்டமாக உள்ளது.

    வராகர் இடதுகாலை மடித்து அதை ஆதிசேஷன் தலைமீது ஊன்றியபடி உள்ளார். அவரது வலது கால்மட்டும் தான் தரையில் ஊன்றியபடி இருக்கிறது. மடிக்கப்பட்ட இடது கால் தொடைமீது லட்சுமியை அமர்த்தி இடுப்பில் தாங்கி பிடித்தப்படி உள்ளார். வராகரின் வலது கை லட்சுமியின் கால்களை லாவகமாக பிடித்தப்படி உள்ளது.

    வராகர் தனது திருமுகத்தை லட்சுமியை பார்த்தப்படி உள்ளார். இந்த அருட்கோலம் 108 திவ்ய தேசங்களில் எங்கும் இல்லாதது. இதனால் அந்த கல் சிலையை பக்தர்கள் ஒவ்வொருவரும் அச்சரியத்துடன் பார்த்து செல்கிறார்கள்

    வராகரின் இடது காலை ஏந்தியபடி இருக்கும் ஆதிசேஷன் தனது மனைவியுடன் இருக்கிறார். இதுவும் வேறு எந்த தளத்திலும் பார்க்க முடியாத சிறப்பு அம்சமாகும்.

    மூலவர் தாயாராக அமர்ந்து இருக்கும் லட்சுமிக்கு அகிலவல்லி நாச்சியார் என்று பெயர் ஆகும். அனைத்து சக்திகளையும் கொண்டதாக தாயார் கருதப்படுவது மற்றொரு சிறப்பு அம்சமாகும்.
    திருவிடந்தை பெருமாளை தரிசனம் செய்தால் திருப்பதி பெருமாளை தரிசனம் செய்வதற்குச் சமம் என்று கூறலாம். அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
    திருமங்கையாழ்வார், ஸ்ரீ நித்ய கல்யாணப் பெருமாளை பத்துப் பாடல்களால் மங்களாசாசனம் செய்துள்ளார். அது மட்டுமல்ல, திருப்பதி திருமலைக்கு ஆழ்வார் சென்றபோது கூட, அவருக்கு இந்த திருவிடந்தை பெருமாளின் நினைவு தான்.

    திருப்பதி குளக்கரையில், அருள்பாலிக்கும் வராகரைப் பார்த்ததும், ஏத்துவார்தம் மனத்துளான் இடவெந்தை மேவிய எம்பிரான் என்று இந்தப் பெருமாள் நினைவாகத்தான் பாடினார் திருமங்கையார். அதனால், திருவிடந்தை பெருமாளை தரிசனம் செய்தால் திருப்பதி பெருமாளை தரிசனம் செய்வதற்குச் சமம் என்று கூறலாம்.

    108 திருப்பதிகளில் பெருமாள் வராகமூர்த்தியாக தம்பதி சமேதராக ஆதிசேஷன், பெருமாள் திருவடியைத் தாங்கி தரிசனம் தரும் திருப்பதியும் இது மட்டும் தான். உற்சவர் பெருமாளுக்கும், தாயாருக்கும் தாடையில் திருஷ்டிப் பொட்டு இயற்கையாகவே அமைந்துள்ளதால் அவர்களை வணங்கினால் இதுநாள் வரை உங்களுக்கு ஏற்பட்ட திருஷ்டிகளும் பறந்துவிடும்.

    தினசரி காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோவில் திறந்து இருக்கும்.
    திருமணம் கைகூடும் திருத்தலம், திருமண பிரார்த்தனை தலம் என்றெல்லாம் புகழ் பெற்றுள்ள திருவிடந்தை கோவிலின் மூர்த்தி, தலம், தீர்த்தம் சிறப்புகளை அறிந்து கொள்ளலாம்.
    மூலவர் பெருமாள் - ஆதிவராகம் பெருமாள் (6.5 அடி உயரம்)
    மூலவர் தாயார் - அகிலவல்லி நாச்சியார் (பூமிதேவி அம்சம்)
    கோலம் - நின்றகோலம், கிழக்கே திருமுகமண்டலம், தேவியை இடக்கரத்தில் கொண்டு ஒரு திருவடியை பூமியிலும், மறு திருவடியை ஆதிசேஷன் தம்பதியர் முடியிலும் வைத்துக் கொண்டு தேவியை மூலமாக உலகோர்க்கு சரம சுலோகத்தை உபதேசிக்கின்ற திருக்கோலம்.
    உற்சவர்- நித்யகல்யாணப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி
    தனிக்கோவில் தாயார் - கோமளவல்லித் தாயார்
    விமானம் - கல்யாண தீர்த்தம், வராக தீர்த்தம், ரங்கநாத தீர்த்தம்

    தல புஷ்பம் - கஸ்தூரி
    தல விருட்சம் - புன்னை மரம்
    பிரத்தியட்சம் - பலி என்கிற அசுர மன்னன்,
     மார்க்கண்டேயர், காலவ மகரிஷி
    மங்களாசாசனம் - திருமங்கை ஆழ்வார் (10 பாடல்கள்)
    ஆகமம் - வைகானஸம்
    விசேஷ பிரசாதம் - தயிர்சாதம்

    தீர்த்தங்கள் சிறப்பு

    திருவிடந்தை தலத்தில் தீர்த்தங்களும் விசேஷமானவை. சித்திரை மாதத்தில் கல்யாண தீர்த்தத்தில் நீராடி, பெருமாளை சேவித்தால் பாவங்கள் அழியும். மார்கழியில் ரங்கநாதர தீர்த்தத் தில் நீராடி பெருமாளை சேவித்தால் நினைத்தது நடக்கும். மாசி மாதம் வராக தீர்த்தத்தில் நீராடி பெருமாளை சேவித்தால் மோட்சம் கிட்டும். இது, ஆதிவராகப் பெருமாள், பலி மன்னனுக்கு வழங்கிய அருள்வாக்கு.

    இங்கு ஆதிசேஷன் தம்பதி சமேதராக ஆதிவராகரின் திருவடியை தாங்கி சேவை செய்கிறார். ஆகவே, இப்பெருமாளை தரிசித்து வழிபடுபவர்களுக்கு ராகு, கேது தோஷங்கள் நீங்கி, கல்யாண வரம் கைகூடும். உற்சவர் நித்ய கல்யாணப் பெருமாள், கோமவளவல்லித் தாயார் இருவருக்கும் இயற்கையிலே தாடையில் திருஷ்டிப் பொட்டு இருப்பதால், இங்கு வந்து மனமுருகி வேண்டுபவர்களின் திருஷ்டிகள் நீங்கும் என்பது ஐதீகம்.

    கோவில்களில் திருவிழாக்களும், வழிபாடுகளும் வழி வழியாக நடைபெற்று வருகின்றன. தற்காலம் போல பொழுது போக்கு வசதிகள் இல்லாத நிலையில் கோவில்களில் மாதந்தோறும் ஒவ்வொரு திருநட்சத்திர நாளன்று விழாக்கள் கொண்டாடப்பட்டன. நாள்தோறும் செய்யப்படும் வழிபாட்டிற்கு நித்திய பூஜைகள் என்று பெயர். திருவிழாக்கள் போன்ற நாட்களில் செய்யப்படும் வழிபாடு நைமீதிகம் எனப்படும். இக்கோவிலில் வைகானச ஆகம முறைப்படி வழிபாடுகள் நடத்தப் பெறுகின்றன.

    நித்திய பூஜைகள்

    அலங்காரப் பிரியனான மகாவிஷ்ணுவிற்கு பொதுவாக நித்திய பூஜைகள் மிகவும் விரிவாக நடத்தப்படுகின்றன. திருவிடந்தை இறைவனும் அதற்கு விதிவிலக்கல்ல. திருவிடந்தை திருத்தலத்தில் திருமஞ்சன அபிஷேகம் காலை 7 மணி அளவில் நடைபெறும். பின்னர் பூஜையும், திருஆராதனையும் செய்யப்படும். உச்சிக்கால பூஜை மதியம் 12 மணிக்கு நடைபெற்ற பின்னர் கோவில் மூடப்படும். சாயரட்சை அல்லது மாலை பூஜை 6 மணியளவில் நடைபெறும். அர்த்தஜாமம் பூஜை இரவு 8 மணியளவில் நடத்தப்பட்டு அன்ன நைவேதியம் செய்யப்படும். இவ்வாறு நாள்தோறும் நான்கு கால பூஜை இங்கு நடைபெறுகின்றது.
     
    சிறப்பு வழிபாடுகள்

    திருவிடந்தையில் மாதந்தோறும் சிறப்பான வழிபாடுகள் செய்யப்படுகின்றன. தமிழ் மாதங்களில் முதல் மாதமான சித்திரை மாதம் தொடங்கி இறுதியான பங்குனி மாதம் முடிய 12 மாதமும் விழாக்கள் நடைபெறுகின்றன.

    சித்திரை மாதம்

    சித்திரை மாதம் நடத்தப்படும் பெரும் விழா பிரம்மோச்சவம் எனப்படும். இது சித்ரா பவுர்ணமி அன்று தொடங்கி 10 நாட்கள் நடத்தப்படும். இத்திருநாள் அன்று சுற்றியுள்ள இடங்களிலிருந்து ஏராளமான மக்கள் கலந்து கொள்வார்கள். விழாவின் தொடக்கமாக முதல்நாள் இரவு மண்ணெடுத்து பாலிகை தெளித்து விழா தொடங்கும். திருவிழாவின் முதல் நாள் அன்று இதனை எடுத்து வந்து கொடி மரத்தின் அருகில் வைத்து கொடியேற்றம் செய்யப்படும். கொடியேற்றம் செய்யப்பட்ட உடன் பத்து நாட்களுக்கு காலை, மாலை இருநேரமும் இறைவன் திருவீதி உலாவும் நடைபெறும்.
    மகாவிஷ்ணு உலகம் உய்ய எடுத்த அவதாரங்களில் மூன்றாவது அவதாரம் வராக அவதாரம் ஆகும். வராகர் திருவிடந்தையில் எழுந்தருளிய வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    மகாவிஷ்ணு உலகம் உய்ய எடுத்த அவதாரங்களில் மூன்றாவது அவதாரம் வராக அவதாரம் ஆகும். திருவிடந்தையில் எழுந்தருளியுள்ள இறைவன் வராகமூர்த்தி. திருமலை-திருப்பதியிலும், நாமக்கல் லிலும், மகாபலிபுரத்திலும், விஷ்ணு வராக அவதாரம் சதபத பிராமணத்தில்தான் முதன் முதலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இறைவன் மூஷ்ணன் என்ற பன்றிவடிவம் கொண்டு பூமியினைத் தாங்கியதாக இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    வேதகாலத்திற்குப் பிற்பட்ட மற்றொரு நூலான தைத்தரிய ஆரண்யத்தில் இறைவன் கருப்பு நிற பன்றி உருவத்துடன் 100 கரங்களுடனும் புவியினைத் தூக்கியதாகக் கூறப்பட்டுள்ளது. இதிகாசங்களில் ஒன்றான ராமாயணத்திலும் வராக உருவில் இறைவன் எழுந்தருளியமைப் பற்றி அறியப்படுகின்றது.

    விஷ்ணு புராணம், லிங்க புராணம், கருட புராணம் ஆகிய புராணங்கள் கடலிலிருந்து பூமியினை பிரம்மா வெளிக்கொண்டு வந்ததாகவும் இவரே மகாவிஷ்ணு என்றும் குறிப்பிடுகின்றன.

    பண்டைய காலத்தில் திருவிடந்தைக்கு வாமகவீபுரி எனப்பெயர் வழங்கப்பட்டது. அக்காலத்தில் மேகநாதன் என்ற அசுரன் இருந்தான். அவனது மகன் பலிச்சக்கரவர்த்தி.

    இந்த பலிச்சக்கரவர்த்தி உலகினைத் தர்ம சாஸ்திரத்தின்படி, முறையாக ஆட்சிபுரிந்து வந்தான். இவனது நண்பர்களான மாலி, மால்யவன், சுமாலி ஆகிய மூவரும் தேவர்களுக்கு எதிரான போரில் தோல்வியடைந்து பலிச்சக்கரவர்த்தியிடம் சென்று அடைக்கலம் புகுந்தனர். தனது நண்பர்களுக்காக பலிச்சக்கரவர்த்தி தேவர்களுக்கு எதிராக போரிட நேரிட்டது. இதனால் ஏற்பட்ட பாவத்தினைப் போக்க பலிச்சக்கரவர்த்தி திருவிடந்தையில் தவம் புரிந்தான்.

    மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து பலியின் முன்பு தோன்றி அவனுக்கு வேண்டிய வரம்களை அளித்தார். இவ்வூரின் அழகில் மயங்கிய இறைவன் திருவிடந்தையிலேயே தங்கி விட்டார். திருவிடந்தையில் மூலவர் தன் திருநாமத்திலேயே நித்ய கல்யாணப் பெயரைக் கொண்டுள்ளதால், திருமணத் தடை நீங்கும் என்பது ஐதீகம். மன்னன் ஒருவனுக்கு பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கவே திருவிடந்தையில் பெருமாள் எழுந்தருளினார் என்கிறது ஒரு புராணக் கதை.

    மேகநாதன் என்ற மன்னனின் மகன் பலி திரேதா யுகத்தில் சிறப்பாக அரசாட்சி புரிந்து வந்தான். அவனது படைகள் எட்டுத்திக்கும் சென்று ஜெய பேரிகை கொட்டும் வல்லமை பெற்றவை. மாலி, மால்யவான், சுமாலி ஆகிய அரக்கர்கள், தேவர்களைப் போரிட்டு வெல்ல விரும்புவதாகவும், அதற்கு உதவி புரியமாறும் அவனை வேண்டினர். பலி மறுத்துவிட்டான்.

    அரக்கர்கள் தேவர்களுடன் போரிட்டுத் தோற்றுத் திரும்பினர். பின்னர் பலியிடமே மீண்டும் வந்து உதவி கேட்டனர். இம்முறை இதற்குச் சம்மதித்த பலி வெற்றிக் கனியைப் பறித்து அரக்கர்களுக்கு அளித்தான். தேவர்களுடன் போரிட்ட காரணத்தினால் பலிக்கு பிரம்மஹத்தி தோஷம் பீடித்தது.

    இத்தோஷம் நீங்கத் தற்போது உள்ள திருவிடந்தையில் தவமிருந்தான். தவத்தினை மெச்சிய விஷ்ணு, வராக ரூபத்தில் காட்சி கொடுத்தார். பலியின் தோஷம் நீங்க அவனது விருப்பத்தை அடுத்து பெருமாள் திருவிடந்தையிலேயே தங்கி விட்டார்.

    இந்நிலையில் முனிவரொருவரும், அவரது பெண்ணும் சொர்க்கம் அடையத் தவம் இருந்தனர். இதில் முனிவரின் பெண் முதலில் சொர்க்கம் அடையத் தகுதி பெற்றார். அவர் திருமணமாகாத பெண் என்பதால் சொர்க்கம் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.

    நாரதர் பூலோகத்தில் இருந்த முனி புங்கவர்களிடம் அப்பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வேண்டினார். காலவ ரிஷி என்ற முனிவர் அவளை மணந்து கொண்டார். அவர்களுக்கு 360 பெண் குழந்தைகள் பிறந்தன. அவர்களுக்குத் திருமண வயது வந்த பின் முனிவர் நாராயணனையே அப்பெண்களை மணக்குமாறு வேண்டினார். நாராயணன் ஒரு அழகிய இளைஞன் வடிவத்தில் பூலோகம் வந்தார்.

    அந்த இளைஞன் ஒரு நாளைக்கு ஒரு பெண் வீதம் 360 நாட்களும் பிரம்மசாரியாகவே வந்து அப்பெண்களை மணம் புரிந்தான். கடைசி நாளன்று அவர்கள் அனைவரையும் ஒன்றாக்கி அப்பெண்ணிற்கு அகில வல்லி நாச்சியார் என பெயரிட்டு தன் சுயரூபமாக வராக ரூபத்தைக் காட்டினார். இந்த பெண்களில் முதல் பெண்ணின் பெயர் கோமளவல்லி. இவருக்கு இத்திருத்தலத்தில் தனிச் சன்னதி உள்ளது.

    தினமும் கல்யாணம் பண்ணிக்கொண்டதால் திருவிடந்தையில் இப்பெருமாளுக்கு நித்ய கல்யாண பெருமாள் என்பது திருநாமம். 108 திவ்ய தேசங்களுள் இத்திவ்ய தேசத்தில் மட்டுமே ஆண்டின் 365 நாட்களிலும் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.

    வராக பெருமாள் தனது ஒரு திருவடியை பூமியில் ஊன்றி நிற்கிறார். இடது காலை மடக்கி ஆதிசேஷன் தலைமீது வைத்து, அத்தொடையில் அகிலவல்லித் தாயாரைத் தாங்கி வராக மூர்த்தியாக இத்திருத்தலத்தில் காட்சி அளிக்கிறார். இப்பெருமாளை வணங்கினால் திருஷ்டி தோஷம், ராகு-கேது தோஷம், சுக்ர தோஷம், திருமணத் தடை ஆகி யவை நீங்கும் என்பது ஐதீகம்.

    இவ்வூர் இறைவன், அசுரனின் தலைவான, பலிச் சக்கரவர்த்திக்கும், கால்வரிஷிக்கும், மார்க்கண்டேயருக்கும், அருள்பாலித்தார் என்பது திருத்தலப்புராணமாகும்.
    ×