search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thiruvenkadu Swetharanyeswarar Temple"

    • சுவேதாரண்யேஸ்வரர்- பிரம்ம வித்யாம்பிகையுடன் தேரில் எழுந்தருளினார்.
    • அன்னதானம் வழங்கப்பட்டது.

    மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காட்டில் மிகவும் பிரசித்திப்பெற்ற பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் நவக்கிரகங்களில் புதனுக்குரிய தலமாகும். இங்கு சிவன் அகோரமூர்த்தியாக அருள்பாலித்து வருகிறார்.

    சிவனின் கண்களில் இருந்து 3 பொறிகள் தோன்றி விழுந்த இடத்தில் சந்திரன், சூரியன் மற்றும் அக்கினி பெயர்களில் 3 தீர்த்தக்குளங்கள் இங்கு அமைந்துள்ளன. பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த கோவிலில் கடந்த 4-ந் தேதி இந்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளுள் ஒன்றான தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி சுவேதாரண்யேஸ்வரர்- பிரம்ம வித்யாம்பிகையுடன் தேரில் எழுந்தருளினார். காலை 9.30 மணி அளவில் தேருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வடம்பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். அப்போது எம்.எல்.ஏ.க்கள் பன்னீர்செல்வம், நிவேதா முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    இதையடுத்து திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழாவில் சீர்காழி ஒன்றியக்குழு தலைவர் கமல ஜோதி தேவேந்திரன், இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் முத்துராமன், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் துரைராஜன், ஒன்றிய கவுன்சிலர் பஞ்சு குமார், ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி நடராஜன், மாவட்ட கவுன்சிலர் ஆனந்தன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ரவி, மங்கை மடம் சிட்டி யூனியன் வங்கி மேலாளர் சரவணன், விவசாய சங்க தலைவர் வடக்குத்தோப்பு துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி முருகன் மற்றும் கிராம மக்கள் செய்து இருந்தனர். தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினின் சொந்த ஊர் திருவெண்காடு ஆகும். நேற்று தேரோட்டத்தை ஒட்டி அவருடைய வீட்டின் முன்புறம் அமைக்கப்பட்டிருந்த பந்தலில் அவரது ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதனை ஒன்றியக்குழு தலைவர் கமல ஜோதி தேவேந்திரன், தி.மு.க. ஒன்றிய அவைத் தலைவர் நெடுஞ்செழியன், துணைச் செயலாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் அன்னதானத்தை தொடங்கி வைத்தனர்.

    • பக்தர்கள் சீர்வரிசை பொருட்களை எடுத்து வந்தனர்.
    • மாலை மாற்றுதல், ஊஞ்சல் உற்சவம் ஆகியவை நடந்தது.

    மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காட்டில் சுவேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற சிவன் கோவிலான இக்கோவில் நவக்கிரகங்களில் புதனுக்கு உரிய தலமாகும்.

    இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவபெருமான் அகோரமூர்த்தியாக திருவெண்காட்டில் அருள்பாலிப்பது சிறப்பம்சமாகும். சிவபெருமான் 1008 விதமான தாண்டவங்கள் புரிந்த திருத்தலம் என்பதால் இந்த தலம் ஆதிசிதம்பரம் என்று அழைக்கப்படுகிறது.

    சிவபெருமானுடைய ஆனந்த தாண்டவத்தின் போது அவருடைய 3 கண்களில் இருந்து சிந்திய நீர்த்துளிகள் இங்கு அக்னி, சூரிய, சந்திர தீர்த்தங்களாக அமைந்துள்ளன. பல்வேறு சிறப்புகளை கொண்ட இக்கோவிலில் ஆண்டுதோறும் இந்திர திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான இந்திர திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு சுவேதாரண்யேஸ்வரர், பிரம்ம வித்யாம்பிகை திருக்கல்யாண விழா நடந்தது. இதனை முன்னிட்டு பக்தர்கள் சீர்வரிசை பொருட்களை எடுத்து வந்தனர். தொடர்ந்து மாலை மாற்றுதல், ஊஞ்சல் உற்சவம் ஆகியவை நடந்தது. பின்னர் திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டு திருக்கல்யாணம் நடந்தது. திருக்கல்யாண உற்சவத்தையொட்டி மாதவன் குழுவினரின் இன்னிசை கச்சேரி நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி முருகன், பிராமணர் சங்க நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

    • அகோரமூர்த்தி சாமிக்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
    • கொன்றை மரத்தடியில் ஐதீக நிகழ்ச்சி நடந்தது.

    முன்பு ஒரு காலத்தில் மருத்துவாசுரன் என்பவர் சிவபெருமானை வேண்டி நடுக்கடலில் தவம் இருந்தான். அவனுடைய தவத்துக்கு மெச்சிய சிவபெருமான் அவர் கேட்டபடி தனது சூலாயுதத்தை வழங்கினார். இதனை பெற்ற மருத்துவாசுரன் தேவர்கள் மற்றும் மக்களை துன்புறுத்தினான். இதை பொறுக்க முடியாமல் அவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர்.

    இதுபற்றி அறிந்து வர சிவபெருமான், நந்தியை அனுப்பினார். அப்போது நந்தியின் காது, கொம்பை தன்னுடைய சூலாயுதத்தால் அசுரன் முறித்து விட்டான். இதனால் ஏற்பட்ட காயங்களை பார்த்த சிவபெருமான் தனது 5 அகோர முகத்திலிருந்து தீப்பிளம்பாக தோன்றினார். இதனைக் கண்ட அசுரன் பயந்து சிவபெருமானிடம் சரணாகதி அடைந்தான். அவனுடைய வேண்டுகோளை ஏற்று சிவபெருமான், திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் அகோரமூர்த்தியாக தனிச்சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகிறார்.

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் இந்திர திருவிழாவின்போது மருத்துவாசுரனை வதம் செய்யும் ஐதீக நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி கோவிலில் இந்திர திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று மருத்துவாசுரனை சம்காரம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் அகோரமூர்த்தி பக்தர்கள் புடைசூழ தனது சன்னதியில் இருந்து மேளம், தாளம் முழங்க புறப்பட்டார். அப்போது முதல் மரியாதையாக சரபோஜி அக்ரஹாரம் சார்பில் கரும்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் எம்பாவை யோகநாதன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட வேத விற்பனர்கள் வேத கோஷங்கள் முழங்கிட, பட்டு சாத்தி, பன்னீர் தெளித்து வரவேற்றனர்.

    இதனைத் தொடர்ந்து உள்ளூர் மக்கள் பழங்கள், மாலை, பன்னீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வழங்கி வழிபட்டனர். பின்னர் மண்டபத்தில் அகோரமூர்த்தி சாமிக்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதனையடுத்து கொன்றை மரத்தடியில் ஐதீக நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி முருகன், விழா குழுவினர், கிராம மக்கள் செய்து இருந்தனர்.

    • இந்த கோவிலில் உள்ள குளங்களில் புனித நீராடினால் பிள்ளை பேறு கிடைக்கும்.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்..

    திருவெண்காட்டில் சுவேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள குளங்களில் புனித நீராடினால் பிள்ளை பேறு கிடைக்கும் என புராண வரலாறு கூறுகின்றன. இத்தகைய சிறப்பு பெற்ற கோவிலில் நேற்று அமாவாசையையொட்டி தீர்த்த வாரி நடந்தது.

    முன்னதான மேளம், தாளம் முழங்கிட அஸ்திரதேவர் ஊர்வலமாக குளங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு தீர்த்தவாரி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்..

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி முருகன், கோவில் அர்ச்சகர் திருஞானம் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • 3 குளங்களில் அஸ்திரதேவருக்கு தீர்த்தவாரி நடந்தது.
    • அஸ்திரதேவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.

    திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் 3 குளங்கள் உள்ளன. இந்த குளங்கள் சந்திர, சூரியன் மற்றும் அக்னி ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகின்றன. நேற்று கார்த்திகை மாத அமாவாசையையொட்டி 3 குளங்களில் அஸ்திரதேவருக்கு தீர்த்தவாரி நடந்தது.

    3 குளங்களில் எழுந்தருளிய அஸ்திரதேவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு குளங்களில் புனித நீராடி வழிபட்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி முருகன், கோவில் பேஸ்கர் திருஞானம், மேலாளர் சிவக்குமார் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • இந்த கோவிலில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை கோசாலை பராமரிக்கப்பட்டு வந்தது.
    • இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

    மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற சுவேதாரண்யேஸ்வரர் கோவில் அமைந்து உள்ளது. நவக்கிரகங்களில் ஒன்றான புதனின் பரிகார கோவிலாக இக்கோவில் விளங்குகிறது. சிவனின் ஐந்து முகங்களில் ஒன்றானது அகோர முகம். அகோர மூர்த்தியாக தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார்.

    பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோவிலில் கோசாலை அமைக்க வேண்டும் என்று பக்தர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் தமிழக முதல்-அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.

    இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவில் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கோவில்களில் கோசாலை அமைத்து தினந்தோறும் பால் கறந்து அபிஷேகம் செய்ய வேண்டும் என்பது ஐதீகம். அதன் காரணமாகவே பல்வேறு கோவில்களில் கோசலைகள் உள்ளன. இந்த கோவிலில் 1000-க்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்கள் குத்தகைதாரர் மூலம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் கிடைக்கும் வைக்கோல்களை கொண்டு கோசாலை அமைத்து அதில் பசு மாடுகளை பராமரிக்கலாம். தற்போது பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக பசு மாடுகளை கோவிலுக்கு வழங்கி வருகின்றனர்.

    கோவிலின் உள்பகுதியில் கோசாலை அமைப்பதற்கான போதுமான இட வசதி உள்ளது. இந்த கோவிலில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை கோசாலை பராமரிக்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    எனவே இந்த கோவிலில் கோசாலை அமைத்து அதன் மூலம் கிடைக்கும் பாலை தினந்தோறும் சுவாமிக்கு அபிஷேகம் செய்யவும், அதிகாலையில் கோமாதா பூஜை செய்யவும் ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு பக்தர்கள் தெரிவித்தனர்.

    • ஆனிமாத பிறப்பையொட்டி 3 குளங்களில் அஸ்திர தேவருக்கு தீர்த்தவாரி நடந்தது.
    • இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினார்கள்.

    மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காட்டில் பிரசித்தி பெற்ற சுவேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சிவபெருமானின் 3 கண்களில் இருந்து 3 பொறிகள் தோன்றி விழுந்த இடத்தில் சந்திரன், அக்னி மற்றும் சூரியன் என்ற பெயர்களில் குழந்தை உருவானதாக புராண வரலாறுகள் கூறுகின்றன.

    இந்த குளங்களில் நீராடி சிவனை வழிபட்டால் குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. இத்தகைய சிறப்பு பெற்ற இந்த கோவிலில் நேற்று ஆனிமாத பிறப்பையொட்டி 3 குளங்களில் அஸ்திர தேவருக்கு தீர்த்தவாரி நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினார்கள்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி முருகன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    ×