search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Textile Industry"

    • சென்னையில் அமைச்சா்களுடன் நடந்த பேச்சுவாா்த்தையின்போது கோரிக்கைகளை தொழில் துறையினா் முன் வைத்தனா்.
    • தமிழக அரசிடம் வைக்கப்பட்ட கோரிக்கைகள் நிறைவேறும் என்ற எதிா்பாா்ப்புடன் இருந்தோம்.

    திருப்பூர்:

    மின் கட்டணம் குறைப்பு, டிமாண்ட் கட்டணம் குறைப்பு, நிலை கட்டணத்தை பழைய கட்டணப்படி மாற்றுதல், எல்.டி.சி.டி., உச்ச நேர கட்டணங்களில் இருந்து விலக்கு அளித்தல், சூரிய ஒளி மின் உற்பத்திக்கான நெட்வொா்க் கட்டணங்களை ரத்து செய்தல், பஞ்சு,நூல் விலையை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஜவுளி தொழில் துறையினா் சாா்பில் வலியுறுத்தப்பட்டு வருகின்றன.

    இதற்காக அத்தொழில் துறையினா் வேலைநிறுத்த போராட்டத்திலும் ஈடு பட்டனா். தமிழக அரசு சாா்பில் பேச்சுவாா்த்தை நடத்த தொழில் துறையினா் வரவழைக்கப்பட்டனா். சென்னையில் அமைச்சா்களுடன் நடந்த பேச்சுவாா்த்தையின்போது கோரிக்கைகளை தொழில் துறையினா் முன் வைத்தனா்.

    பேச்சுவாா்த்தை நடந்து 2 வார காலங்கள் ஆன நிலையில் தமிழக அரசிடமிருந்து எந்தவித ஆறுதலான பதில்களும் இதுவரை கிடைக்க வில்லை. இது தொழில் துறையினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விசைத்தறி தேசிய மேம்பாடு மற்றும் ஏற்றுமதி கவுன்சில் துணைத் தலைவா் கரைப்புதூா் சக்திவேல் கூறியதாவது:-

    மின் கட்டண உயா்வு காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடியால் பெரும் பாலான தொழில் நிறுவனங்கள் உற்பத்தியை குறைத்தும், சில நிறுவனங்கள் இயங்காமலும் உள்ளன. இதே நிலை நீடித்தால் ஜவுளித் தொழில் ஒட்டுமொத்தமாக முடங்கும் அபாயம் உள்ளது. தமிழக அரசிடம் வைக்கப்பட்ட கோரிக்கைகள் நிறைவேறும் என்ற எதிா்பாா்ப்புடன் இருந்தோம். ஆனால் இதுவரை, அரசிடமிருந்து நம்பிக்கையான பதில் எதுவும் வராதது வருத்தம் அளிக்கிறது. ஜவுளித் தொழில் துறையினரை அரசு மீண்டும் அழைத்து பேச்சுவாா்த்தை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றாா்.

    • மத்திய பட்ஜெட்டில் டப் திட்டம் தொடர்பான அறிவிப்பு இல்லாதது ஏமாற்றமாக அமைந்தது.
    • டப் திட்டத்தை பொறுத்தவரை குறைந்தபட்ச முதலீடு செய்தாலும் அதற்கான மானியம் கிடைக்கும்.

    திருப்பூர்:

    நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ஜவுளித்தொழிலின் பங்களிப்பு முக்கியமானது. அதன்படி ஜவுளி ஏற்றுமதியை ஊக்குவிக்க மத்திய, மாநில அரசுகள் சலுகை திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. திருப்பூர் பின்னலாடை தொழிலை பொறுத்தவரை, பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் தொழில்நுட்ப மேம்பாட்டு திட்டம் (டப்) அமல்படுத்தப்பட்டது.

    சாய ஆலைகள்,நிட்டிங், காம்பாக்டிங், ரைசிங், பிரின்டிங், கம்ப்யூட்டர் எம்ப்ராய்டரிங் என அனைத்து வகை ஜாப் ஒர்க் பிரிவுகளும், டப் திட்டத்தில் பயனடைந்தன. அதாவது உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கத்துடன் புதிய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட எந்திரங்கள் நிறுவ 15 சதவீதம் வரை மானியம் வழங்கப்பட்டது.

    இத்திட்டம் மறுசீரமைப்பு செய்யப்பட்டு திருத்தப்பட்ட டப் திட்டமாக 2022 மார்ச் 31-ந் தேதி வரை செயல்படுத்தப்பட்டது. இத்திட்டம் உயர்த்திய மானியத்துடன் மீண்டும் செயல்படுத்தப்படுமென அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. அதை நம்பி வழக்கம் போல் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர்.

    மத்திய பட்ஜெட்டில் டப் திட்டம் தொடர்பான அறிவிப்பு இல்லாதது ஏமாற்றமாக அமைந்தது. இருப்பினும் திருத்தப்பட்ட டப் திட்டத்தை 2022 ஏப்ரல் 1 முதல் செயல்படுத்த வேண்டுமென தொழில்துறையினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். கடந்த மாதம் திருப்பூர் வந்திருந்த மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் தர்ஷனாவிடமும் இதுகுறித்து கோரிக்கை வைக்கப்பட்டது.

    உற்பத்தி சார் ஊக்குவிப்பு (பி.எல்.ஐ., 2.0) திட்டம், பின்னலாடை தொழிலுக்கு கை கொடுக்கும் என தொழில்துறையினர் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். இருப்பினும் குறைந்தபட்ச முதலீடு உச்சவரம்பு உட்பட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.இத்திட்டம் இறுதியாகாமல் இழுபறி நீடிப்பதால் டப் திட்டம் குறித்த எதிர்பார்ப்பு மென்மேலும் அதிகரித்துள்ளது.

    டப் திட்டத்தை பொறுத்தவரை குறைந்தபட்ச முதலீடு செய்தாலும் அதற்கான மானியம் கிடைக்கும். உற்பத்தியை உயர்த்தி காண்பிக்க வேண்டும் என்பது போன்ற நிபந்தனைகள் இல்லை. டப் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்ற நம்பிக்கையில் 2022 மார்ச் மாதத்திற்கு பிறகு புதிய தொழில்நுட்ப எந்திரங்களை நிறுவிய ஆயிரக்கணக்கான குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மானிய அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றன.

    புதிய முதலீடு, இயக்க செலவு என 35 சதவீதம் அளவுக்கு உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால் திருத்தப்பட்ட டப் திட்ட மானியம் கிடைத்தால் மட்டுமே ஜவுளித்தொழில்கள் புத்துயிர் பெறும். கடந்த ஆண்டில் மட்டும் கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செய்த நிறுவனங்கள் மானியத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றன.

    பி.எல்.ஐ., -2.0 திட்டத்தில் பயன்பெற முடியாதவர் டப் திட்டத்தை பயன்படுத்தும் வகையில் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என தொழில்துறையினர் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

    திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்ரமணியன் கூறுகையில், திருத்தப்பட்ட டப் திட்டத்தை 2022 ஏப்ரல் 1 முதல் செயல்படுத்த வேண்டுமென, மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களில் புதிய தொழில்நுட்பத்தை செயல்படுத்த டப் திட்டம் மிகவும் அவசியம் என மத்திய அமைச்சர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார்.

    • புதிதாக, 12 கோடி ரூபாய் மதிப்பில் இரண்டு நூற்பாலைகள் அமைக்கப்படும்.
    • ஜவுளி தொழில் முனைவோர் அமைப்புகள் பங்கேற்கும், 2 நாள் பயிலரங்கம் நடத்தப்படும்.

    திருப்பூர் :

    கைத்தறி மற்றும் துணிநூல் துறை மானியக்கோரிக்கை விவாதத்தின்போது அமைச்சர் காந்தி 22 வகை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். துணி நூல் துறைக்கு, ஐந்து அறிவிப்புகளும் கைத்தறித்துறைக்கு 17 அறிவிப்புகளும் வெளியாகியுள்ளது. அனைத்து ஜவுளி பிரிவுகளையும் ஒருங்கிணைத்து மாபெரும் ஜவுளி நகரம், பொது - தனியார் பங்களிப்புடன் சென்னையில் அமைக்கப்படும். தலா 6கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு கூட்டுறவு நூற்பாலையில், சோலார் மின் உற்பத்தி மையம் அமைக்கப்படும். புதிதாக, 12 கோடி ரூபாய் மதிப்பில் இரண்டு நூற்பாலைகள் அமைக்கப்படும்.

    சர்வதேச தொழில்நுட்ப ஜவுளி கருத்தரங்கு 60 லட்சம் ரூபாய் மதிப்பில் சென்னையில் நடத்தப்படும். இந்தியாவில் உள்ள 12 தொழில்நுட்ப ஜவுளி ஆராய்ச்சி சிறப்பு மையங்களில் கண்டறியப்பட்டுள்ள தொழில்நுட்பங்களை பகிர வசதி செய்யப்படும். அதற்காக தமிழக தொழில்நுட்ப ஜவுளி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி தொடர்பான கலந்தாய்வு நடத்தப்படும்.

    கோவையில் 27 லட்சம் ரூபாய் செலவில், ஜவுளி தொழில் முனைவோர் அமைப்புகள் பங்கேற்கும், இரண்டு நாள் பயிலரங்கம் நடத்தப்படும். தமிழகத்தில், ஜவுளித்தொழில் துவங்க ஆர்வமுள்ள தொழில் முனைவோருக்கு தொழில்நுட்பம் மற்றும் முதலீடு தொடர்பான வழிகாட்டுதல் வழங்கப்படும். அதற்காக, கைத்தறி துணிநூல் துறையின் கீழ், பிரத்யேக ஜவுளி தொழில் ஊக்குவிப்பு பிரிவு துவக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை திருப்பூர் தொழில் அமைப்பினர் வரவேற்றுள்ளனர்.

    இது குறித்து இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு (பியோ) தலைவர் சக்திவேல் கூறியதாவது:- புதிய தொழில்நுட்பங்களை பகிர்ந்துகொள்ளும் வகையில் ஆராய்ச்சி மையங்களுடன் கலந்தாய்வு ஏற்பாடு செய்துள்ளது பயனுள்ளதாக இருக்கும். தொழில்முனைவோருக்கு வழிகாட்டும் தொழில் ஊக்குவிப்பு பிரிவு துவங்குவதையும் வரவேற்கிறோம். பாரம்பரிய கைத்தறி ரகங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதால் விற்பனை அதிகரிக்கும். பலவகை அறிவிப்புகள் செயல்பாட்டுக்கு வரும் போது தமிழகத்தின் ஜவுளி மற்றும் கைத்தறி தொழில் மேம்படும் என்றார்.

    திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சுப்பிரமணியன் கூறுகையில், பின்னலாடை தொழில் உட்பட, பல்வேறு பிரிவுகளுடன் ஒருங்கிணைந்த ஜவுளி தொழில் நகரம் அமையும் போது, புதிய வேலை வாய்ப்புகளும், தொழில்களும் உருவாகும். சர்வதேச தொழில்நுட்ப கருத்தரங்கு ஒவ்வொரு தொழில் பிரிவுக்கும் பயனுள்ளதாக இருக்கும். அரசு மானிய உதவியுடன் தொழில்முனைவோர்களை உருவாக்குவதற்கு வழிகாட்ட ஜவுளித்துறை ஆணையரகத்தில் ஜவுளி மேம்பாட்டு பிரிவு துவங்குவதை வரவேற்கிறோம். கோவையில் 12 ஆராய்ச்சி மையங்கள் சார்பில் இரண்டு நாள் தொழில்நுட்ப கருத்தரங்கு நடத்துவது சிறப்பான ஏற்பாடாக இருக்கும் என்றார்.

    • வறுமையான சூழல் எங்களது குழந்தைகளுக்கும் வர வேண்டாம் என்று எண்ணம் தோன்றுகிறது.
    • வருவாய் பெற முடியாமல் பொருளாதார நெருக்கடிக்கும் ஆளாகி யுள்ளோம்

    உடுமலை :

    உடுமலை சுற்றுப்புற பகுதியில் நெசவுத்தொழில் ஏற்ற இறக்கம் இருந்தாலும் நெசவை குல தொழிலாக பாரம்பரியமாக நீண்ட காலமாக செய்து வருகின்றனர். மலையாண்டிபட்டினம் ஊராட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் நெசவு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தொழில்நுட்பத்தின் வளர்ச்சி இன்றைய ஆடை வடிவமைப்பில் இருந்தாலும் கலையும் அழகும் கைவண்ணமும் பளிச்சென கைத்தறி நெசவில் தான் வெளிப்படுகின்றது .

    ஆண்கள் மட்டுமின்றி குடும்பத்தைச் சேர்ந்த அனைத்து பெண்களும் கைவினை கலையாக நெசவுத் தொழில் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். இது குறித்து நெசவாளர் ஓருவர் கூறுகையில்: - நெசவு தொழில் 100 சதவீதம் கவனத்தோடு முழுமையாக உடல் உழைப்பை அளித்தால் மட்டுமே சேலை வடிவம் நிறைவு பெறும். ஒரு சேலைக்கு இரண்டு நாட்கள் என்றாலும் தொடர்ந்து அதே பணியாக அமரும்போது எங்களுக்கு பல்வேறு உடல் வழிகள் ஏற்படுவது உண்டு.

    ஆனால் அவ்வாறு சிரமப்பட்டு சேலையை முடித்தும் அதற்கான வருவாய் வெகு நாட்கள் கழித்து கிடைப்பதில் எங்களுக்கு பயன் இருப்பது இல்லை .குலத்தொழிலை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என நாங்கள் விரும்பினாலும் வறுமையான சூழல் எங்களது குழந்தைகளுக்கும் வர வேண்டாம் என்று எண்ணம் தோன்றுகிறது.

    பாரம்பரியத்தை கைவிடாமல் கைத்தறி நெசவை கரம் பிடித்து வரும் நெசவாளர்கள் நிலையான வருமான பெறுவதற்கு அரசு உதவ வேண்டும். தற்சமயம் ஒரு சேலைக்கான கூலி ஆயிரத்திலிருந்து 800 ரூபாயாகவும் சில சமயம் 500 ரூபாயாகவும் குறைந்துவிட்டது. நெய்த சேலைகளும் தொடர்ந்து தேங்கிக் கொண்டு வருவதால் அதற்கான வருவாய் பெற முடியாமல் பொருளாதார நெருக்கடிக்கும் ஆளாகியுள்ளோம் என்று தெரிவித்தனர்.

    • தொழில்கள் செய்வோருக்கு கூடுதல் செலவு ஏற்படும் என்பதால் கவலையடைந்துள்ளனர்.
    • ஜவுளித் தொழில் பல நெருக்கடிகளை சந்தித்து வருகிறது.

    திருப்பூர் :

    தமிழகத்தில் மின் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் செய்வோருக்கு கூடுதல் செலவு ஏற்படும் என்பதால் கவலையடைந்துள்ளனர். இதுகுறித்து லகு உத்யோக் பாரதி அமைப்பின் சோமனூர் பகுதி தலைவர் நாராயணசாமி கூறியதாவது:-

    கோவை, திருப்பூர் மாவட்டத்தில் ஜவுளித் தொழில் பல நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. ஒருபுறம் பஞ்சு விலை உயர்வு, மறுபுறம் துணிக்கு உரிய விலை கிடைப்பது இல்லை. அதிக விலை கொடுத்து நூல்களை வாங்கி துணி உற்பத்தி செய்யும் போது ஆர்டர்கள் இல்லை எனக்கூறி வியாபாரிகள் குறைந்த விலைக்கே துணிகளை கொள்முதல் செய்கின்றனர்.இதனால் மில்களில் உற்பத்தி குறைக்கப்பட்டதால் விசைத்தறிகளும் இயங்குவதில்லை. தற்போது அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயர்வால் ஒட்டு மொத்த ஜவுளி தொழிலும் முடங்கிவிடும். பல லட்சம் பேர் வேலை இழந்து தவிக்க வேண்டியது வரும். அதனால் விசைத்தறி மற்றும் ஜவுளித்தொழில் நலன் கருதி மின் கட்டண உயர்வை அரசு திரும்ப பெறவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • 10 விசைத்தறிகளை வைத்து நெசவு செய்ய 25 - 30 லட்சம் ரூபாய் வரை தேவை.
    • தமிழக அரசு 750 யூனிட் இலவச மின்சாரம் வழங்கி வருகிறது.

    பல்லடம் :

    கோவையில் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் சார்பிலான கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில், தொழில் துறையினர் பங்கேற்றனர்.அதில் பங்கேற்ற திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க செயலாளர் பாலசுப்பிரமணியம் பேசியதாவது:-

    சொந்த கட்டடம் கட்டி, குறைந்தபட்சம் 10 விசைத்தறிகளை வைத்து நெசவு செய்ய 25 - 30 லட்சம் ரூபாய் வரை தேவை. இவ்வாறு, முதலீடு செய்தாலும், 30 ஆயிரம் ரூபாய் தான் வருவாய் கிடைக்கும். இவ்வாறு குறுந்தொழிலாக உள்ள விசைத்தறி தொழிலுக்கு, தமிழக அரசு 750 யூனிட் இலவச மின்சாரம் வழங்கி வருகிறது.பண மதிப்பிழப்பு, அகமதாபாத் டையிங் பிரச்னை, ஜி.எஸ்.டி., கொரோனா ஊரடங்கு, கூலி பிரச்னை, மற்றும் நூல் விலை உயர்வு என, கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ச்சியாக பிரச்னைகளை சந்தித்து வருகிறோம். நாங்கள் கூலிக்கு நெசவு செய்பவர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.பல கட்ட போராட்டத்துக்குப் பின், கூலி உயர்வு கிடைத்தது. தற்போது போராடி பெற்ற கூலிக்கு மேல் மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. மின்கட்டணம் உயர்த்தப்பட்டால் விசைத்தறி தொழில் காணாமல் போகும் அபாயம் உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.

    • பணம் செலுத்தும்போது கிட்டத்தட்ட 8 சதவீதம் கூடுதல் தொகை செலவாகிறது‌.
    • பின்னலாடை ஏற்றுமதி துறைக்கு குறுகிய காலத்துக்கு நன்மை அளிக்கும்.

    திருப்பூர் :

    அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிவை சந்தித்துள்ளதால் பின்னலாடை நிறுவனங்கள் கடும் சரிவை சந்தித்துள்ளன என புலம்பும் உற்பத்தியாளர்கள், மூலப்பொருட்கள் வாங்க கூடுதல் விலை கொடுக்க வேண்டியுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர். இதனால் செலவீனங்களை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை வலியுறுத்தியுள்ளனர்.

    உலக அளவில் நாடுகளுக்கு இடையே வர்த்தகத்தில் அமெரிக்க டாலரே அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அனைத்து நாடுகளிலும் விலைவாசி உயர்வால் பணவீக்கம் அதிகரித்து வரும் சூழலில் இந்திய ரூபாய், ஐரோப்பிய யூனியனின் யூரோ, ஜப்பானின் யென், பிரிட்டன் பவுன்ட் உள்ளிட்ட பல நாடுகளின் பண மதிப்பு அமெரிக்க டாலருக்கு நிகராக கடுமையான சரிவை சந்தித்து வருகிறது.

    திருப்பூர் பின்னலாடைத்துறைக்கு தேவையான நிட்டிங், டையிங், காம்பேக்டிங்,லேசர் கட்டிங், பிரின்டிங் எந்திரங்கள் மற்றும் ஜிப், பட்டன் உள்ளிட்ட உப பொருட்கள் பெருமளவு சீனா, தைவான், கொரியா,சிங்கப்பூர், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் இருந்து பெருமளவு இறக்குமதி செய்யப் படுகிறது. தற்போதைய நிலையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவை சந்தித்து வருவதால், இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு அதிக பணம் செலுத்த வேண்டிய நிலைக்கு இறக்குமதியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

    திருப்பூர், பின்னலாடை ஏற்றுமதி மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.35 ஆயிரம் கோடி அளவுக்கு நம் நாட்டுக்கு அந்நிய செலாவணியை ஈட்டி தரும் நகராக விளங்குகிறது. ஆனால் பின்னலாடைத்துறையில் பஞ்சு அரவை முதல் பின்னலாடை உற்பத்தி வரை அதி நவீன எந்திரங்கள் நிறுவனங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பின்னலாடை உற்பத்தியில் 90 சதவீதத்துக்கு மேலாக எந்திரங்கள் இறக்குமதி செய்யப்பட்டவையாக உள்ளது. குறிப்பாக சீனா, தைவான் உள்ளிட்ட நாடுகளில் இருந்தே எந்திரங்கள் அதிகம் இறக்குமதியாகின்றன. மேலும் பின்னலாடைக்கான ஜிப், பட்டன் உள்ளிட்டவையும் பெருமளவு இறக்குமதி மூலமாகவே பூர்த்தியாகிறது.

    எந்திரங்கள் இறக்குமதியின் போது, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கொடுக்கும் விலை பட்டியலின்படி, எந்திரங்கள் இறக்குமதி செய்யும் நிறுவனங்கள், இங்கிருந்து மெஷின் சப்ளை செய்யும் நிறுவனத்துக்கு பணம் அனுப்புகையில் அது அமெரிக்க டாலராக அனுப்ப வேண்டும். மேலும் இறக்குமதி செய்யப்படும் எந்திரங்களுக்கு இறக்குமதி வரியும் கட்ட வேண்டும். கடந்த கொரோனா தொற்றுக்கு முன்பாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஓரளவு நிலையாக இருந்தது. உதாரணத்துக்கு தைவானில் இருந்து இரு ஆண்டுக்கு முன் இறக்குமதி செய்யப்பட்ட ஒரு எந்திரம் ரூ. 6.40 லட்சமாக இருந்தது. தற்போது அதற்கு நாம் ரூ.8 லட்சம் செலுத்த வேண்டி உள்ளது. இதனால் நிறுவனங்கள் ஒரு எந்திரத்தை புதிதாக இறக்குமதி செய்ய போடப்பட்ட பட்ஜெட் கிட்டத்தட்ட 25 சதவீதம் உயர்ந்துள்ளது.

    உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வு, யுக்ரேன் - ரஷ்ய போர்,உலகளாவிய பணவீக்கம், கச்சா எண்ணெய் விலை உயர்வால் எரிபொருள் தட்டுப்பாடு உள்ளதால், அமெரிக்காவில் க்ரேட் டிப்ரசன் வரும் என நினைப்பதால், அந்நாட்டின் மைய வங்கியான பெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை மாதந்தோறும் உயர்த்தி வருகிறது. இதன் காரணமாக கொரோனா கால கட்டத்தில் அந்நாட்டில் வட்டியில்லா கடனாக கொடுக்கப்பட்ட கடனுக்கு தற்போது வட்டி விகிதங்களை அந்நாட்டு மைய வங்கி உயர்த்தி வருவதால் உலகம் முழுவதும் அமெரிக்காவில் இருந்து செய்யப்பட்ட முதலீடுகள் அமெரிக்க டாலராக மீண்டும் அந்நாட்டுக்கே செல்வதால், டாலரின் மதிப்பு வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. இதன் தாக்கம் இந்திய பங்கு சந்தையிலும், ரூபாயிலும் சரிவை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஒருபக்கம் பின்னலாடை ஏற்றுமதியாளருக்கு லாபம்தான் என்றாலும், பின்னலாடை சார்ந்த நவீன எந்திரங்கள், ஜிப்,பட்டன் உள்ளிட்ட உப பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலையால் அதிக தொகை செலவு செய்யும் நிலைக்கு பின்னலாடைத் துறையினர் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் உள்ள நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதை காண முடிகிறது.

    இது குறித்து திருப்பூரை சேர்ந்த பின்னலாடை எந்திரங்களை இறக்குமதி செய்யும் பூபதி கூறுகையில், டாலர் சீரான நிலையில் இல்லாததால் இறக்குமதி செய்யும் எந்திரங்கள் விலை அதிகரித்துள்ளது‌. மேலும் இதற்காக அதிக மூலதனமும் தேவைப் படுவதாகவும், ஒரு எந்திரத்தை இறக்குமதி செய்ய சில மாதங்களுக்கு முன் போடப்பட்ட ஒப்பந்தம் எனில் அப்போது டாலர் குறைவாகவும் தற்போது அதிகமாகவும் உள்ளதால், சப்ளையருக்கு பணம் செலுத்தும்போது கிட்டத்தட்ட 8 சதவீதம் கூடுதல் தொகை செலவாகிறது‌.

    கடந்த 5 ஆண்டுக்கு முன்பாக டாலர் 64 ரூபாயாக இருந்தது. தற்போது 25 சதவீதம் அதிகரித்தும், கடந்த ஓராண்டில் 74 ரூபாயில் இருந்து 7.5 சதவீதம் அதிகரித்து 80 ரூபாயை எட்டியுள்ளது. இதன் காரணமாக பின்னலாடை சார்ந்த உப பொருட்களை இறக்குமதி செய்யும் ஜாப் ஒர்க் நிறுவனங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன.மேலும் டாலர் மதிப்பு ஏற்ற இறக்கத்தால் இறக்குமதியாகும் பின்னலாடை சார்ந்த உப பொருட்களுக்கு ஒப்பந்தத்தை தாண்டி அதிக தொகையை செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும், மத்திய அரசு டாலர் மதிப்பை சீராக வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்‌.

    டாலரின் ஏற்ற இறக்கம் பின்னலாடை துறையினரை எவ்விதத்தில் பாதிக்கும் என்பது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் கூறுகையில், டாலர் மதிப்பு உயர்வால் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி துறைக்கு சாதகமான சூழல் உருவாகியிருக்கிறது. அதேநேரம் இந்த நிலை நீண்ட ஆண்டு நீடிக்காது. ஏற்கனவே ஆர்டருக்கான ஆடை தயாரிப்பு பின்னலாடை ஏற்றுமதியாளர்களுக்கு சற்று கூடுதல் லாபத்தை பெற்றுத் தரும். ஆனால் புதிய ஆர்டர் வழங்கும்போது டாலர் மதிப்பு உயர்வுக்கு ஏற்ப ஏற்றுமதி ஆடை விலையை வெளிநாட்டு வர்த்தகர்கள் குறைத்து விடுவர்.

    மேலும் லேபிள், பட்டன், ஜிப் போன்ற ஏற்றுமதி ஆடைகளில் இணைக்கும் உப பொருட்களை அமெரிக்கா, சீனா, தைவான் போன்ற வெளி நாடுகளில் இருந்தே இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவால், பின்னலாடை நிறுவனங்கள், அக்சசரீஸ் இறக்குமதிக்கு அதிக தொகை செலவிட வேண்டியுள்ளது. டாலர் மதிப்பு உயர்வு, பின்னலாடை ஏற்றுமதி துறைக்கு குறுகிய காலத்துக்கு நன்மை அளிக்கும், ஆனால் நீண்ட கால நோக்கில் நஷ்டம் அடையவே வாய்ப்பு உள்ளது என்றார்.

    ×