search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamil Nadu Mercantile Bank"

    • அமைச்சர் செந்தில் பாலாஜியின் நிதி பரிவர்த்தனை தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தகவல் பரவியது.
    • வருமான வரித்துறை அதிகாரிகளின் சந்தேகங்களுக்கு உரிய விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

    தூத்துக்குடி:

    இந்தியா முழுவதும் 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் 533 கிளைகள் மற்றும் 12 பிராந்திய அலுவலகங்களுடன் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் தலைமை அலுவலகம் தூத்துக்குடி வி.இ. ரோட்டில் அமைந்து உள்ளது.

    இந்நிலையில் தூத்துக்குடியில் உள்ள வங்கியின் தலைமை அலுவலகத்தில் நேற்று வருமானவரி சோதனை நடைபெற்றது. இதற்காக மதுரை, திருச்சி, சேலம், கோவை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த வருமான வரித்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் 16 பேர் 6 கார்களில் வந்தனர். அவர்கள் வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி கிருஷ்ணனிடம் விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து வங்கி தலைமை அலுவலகத்தின் 2 கட்டிடங்களிலும் உள்ள முக்கிய அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். சோதனையின் போது, வெளியாட்கள் யாரும் வங்கி தலைமை அலுவலகத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதே நேரத்தில் வங்கி பணியாளர்கள் மட்டுமே வழக்கம் போல் உரிய அடையாள அட்டையை காண்பித்து அலுவலகத்துக்கு சென்றனர்.

    நேற்று காலை 10.30 மணிக்கு தொடங்கிய வருமானவரி சோதனை இன்று காலை 6.30 மணி வரை நீடித்தது. தொடர்ந்து இரவு, பகலாக 20 மணி நேர விசாரணையை முடித்து கொண்டு வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று காலை 6.30 மணிக்கு வங்கியில் இருந்து புறப்பட்டு சென்றனர். அப்போது 5 பைகளில் முக்கிய ஆவணங்களை எடுத்து சென்றதாக தெரிகிறது.

    அமைச்சர் செந்தில் பாலாஜியின் நிதி பரிவர்த்தனை தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தகவல் பரவியது.

    ஆனால் வங்கி தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் சில பரிவர்த்தனையின் மீது சந்தேகம் ஏற்பட்டதால், இந்த சோதனை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி பங்குசந்தைக்கு அனுப்பிய கடிதம் வெளியானது. அதில் 'தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறை சட்டம் 1961 பிரிவு 285 பி.ஏ-ன் படி சட்டரீதியான விசாரணை நடந்தது.

    இந்த விசாரணைக்கு வங்கி முழுமையாக ஒத்துழைப்பு அளித்தது. வருமான வரித்துறை அதிகாரிகளின் சந்தேகங்களுக்கு உரிய விளக்கங்கள் அளிக்கப்பட்டன. தொடர்ந்து அனைத்து சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கப்படும். இதனால் வங்கியின் எந்த செயல்பாடும் பாதிக்கப்படவில்லை' என்று தெரிவித்து உள்ளது.

    • வங்கியின் 532-வது கிளை திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை யில் சி.ஆர்.எம். வசதியுடன் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது.
    • விழாவில் வங்கி ஊழியர்கள், அலுவலர்கள், வாடிக்கையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தூத்துக்குடி:

    தமிழநாடு மெர்க்கன்டைல் வங்கி பங்கு சந்தைகளில் பட்டியலிடப்பட்டதை தொடர்ந்து தொலைநோக்கு திட்டங்களை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.

    முத்துப்பேட்டை

    கிளை திறப்பு

    அதன்படி நாடு முழுவதும் வங்கி விரிவாக்க நடவடிக்கைகளில் நிர்வாகம் கவனம் செலுத்தி வருகிறது. தமிழ் நாடு மெர்க்கன்டைல் வங்கி ஏற்கனவே நாடு முழுவதும் 16 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் 531 கிளைகள், 12 மண்டல அலுவலகங்களுடன் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்று செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில் வங்கியின் 532-வது கிளை திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை யில் சி.ஆர்.எம். வசதியுடன் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது. வங்கி பொதுமேலாளர் ஜெயராமன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக முத்து பேட்டை அனைத்து முஹல்லா தலைவர் முகம்மது அலி என்ற ஜெர்மன் அலி கலந்து கொண்டு புதிய கிளையை திறந்து வைத்தார்.

    விழாவில் வங்கி ஊழியர்கள், அலுவலர்கள், வாடிக்கையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    533-வது கிளை

    இதேபோல் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 533-வது கிளை கோவை மாவட்டம் ஆவல் சின்னாம்பாளையத்தில் சி.ஆர்.எம்.வசதியுடன் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது. இதனை ஜமீன் கொட்டாம்பட்டி பஞ்சாயத்து தலைவர் பாலசுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

    நாடு முழுவதும் கிளைகள் திறக்க திட்டம்

    இதுகுறித்து வங்கி நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான எஸ்.கிருஷ்ணன் கூறுகையில், பங்கு சந்தையில் பட்டிய லிட்ட பிறகு வங்கியானது நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யும் திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. அதன்படி 532-வது கிளை முத்துப்பேட்டையிலும், 533-வது கிளை ஆவல் சின்னாம்பாளையத்திலும் திறக்கப்பட்டு உள்ளது.

    இன்னும் அதிகமான கிளை களை நாடு முழுவதும் திறக்க திட்டமிட்டு இருக்கிறோம். திறப்பு விழாவை வங்கியின் அனைத்து உடைமை தாரர்களுக்கும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.

    • மெர்க்கன்டைல் வங்கியின் 531-வது கிளை தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் அமைக்கப்பட்டு உள்ளது.
    • சிறப்பு அழைப்பாளராக ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவில் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ.கருத்தப்பாண்டியன் கலந்து கொண்டு புதிய கிளையை திறந்து வைத்தார்.

    தூத்துக்குடி:

    தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி பங்கு சந்தைகளில், தனது பங்கு பட்டியலிட்டதை தொடர்ந்து, தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, மீண்டும் நாடு முழுவதும் வங்கி விரிவாக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளது. இந்த வங்கி ஏற்கனவே 16 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் 530 கிளைகள், 12 மண்டல அலுவலகங்களுடன் செயல்பட்டு வருகிறது.

    வங்கியின் 531-வது கிளை தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. வங்கி பொதுமேலாளர் பி.சூரியராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவில் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ.கருத்தப்பாண்டியன் கலந்து கொண்டு புதிய கிளையை திறந்து வைத்தார். விழாவில் வங்கி ஊழியர்கள், அலுவலர்கள், வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.

    இதுகுறித்து வங்கி நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான எஸ்.கிருஷ்ணன் கூறியதாவது:-

    பங்குசந்தைகளில் பட்டியலிட்ட பிறகு வங்கியானது, நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யும் திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. அதன்படி, இந்த நிதியாண்டின் முதல் புதிய கிளையாக 531-வது கிளை ஏரலில் திறக்கப்பட்டு உள்ளது. இன்னும் அதிகமான கிளைகளை இந்தியா முழுவதும் திறக்க திட்டமிட்டு இருக்கிறோம். திறப்பு விழாவை வங்கியின் அனைத்து உடைமைதாரர்களுக்கும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கிருஷ்ணன் கியூ.ஆர். கோடு வசதியை தொடங்கி வைத்து பின்னர் பணம் எண்ணும் எந்திரத்தை கோவிலுக்கு வழங்கினார்.
    • நிகழ்ச்சியில் வங்கி ஊழியர்கள், அலுவலர்கள், கோவில் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    தூத்துக்குடி:

    பொதுமக்களின் வசதியை கருத்தில் கொண்டும், டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்கப்படுத்தும் விதமாகவும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நன்கொடை மற்றும் உண்டியல் காணிக்கையை விரைவு பதில் குறியீடு (கியூ.ஆர். கோடு) மூலமாக செலுத்தும் முறையினை தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி அறிமுகம் செய்தது.

    கோவில் வளாகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு வங்கியின் தலைமை நிதி அதிகாரி கிருஷ்ணன், சுப்பிரமணிய சுவாமி கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், இணை ஆணையர் கார்த்திக், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் செயல் அலுவலர் ராம சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி மண்டல மேலாளர் சுந்தரேஷ்குமார் வரவேற்றார்.

    கியூ.ஆர்.கோடு வசதி அறிமுகம்

    வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கிருஷ்ணன் கியூ.ஆர். கோடு வசதியை தொடங்கி வைத்து பின்னர் பணம் எண்ணும் எந்திரத்தை கோவிலுக்கு வழங்கினார்.

    நிகழ்ச்சியில் வங்கி ஊழியர்கள், அலுவலர்கள், கோவில் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி ஒரு தனியார் துறை வங்கியாகும். தூத்துக்குடியை தலைமை அலுவலகமாக கொண்ட இந்த வங்கி 100 ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்து வருகிறது. இந்த வங்கி தொடர்ந்து லாபம் ஈட்டி வருகிறது. மேலும் இந்த வங்கியானது இந்தியா முழுவதிலும் 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் 530 கிளைகள், 12 மண்டல அலுவலகங்களின் மூலம் சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு சேவை ஆற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

    ×