என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சபரிமலை"

    • மகரவிளக்கு பூஜை ஜனவரி 14-ந்தேதி நடைபெறுகிறது. அன்று மாலை மகரஜோதி தரிசனம் நடைபெறும்.
    • மகரவிளக்கு பூஜை முடிந்து ஜனவரி 20-ந்தேதி காலை 7 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு ஆண்டு மண்டல பூஜை கடந்த மாதம் (நவம்பர்) 16-ந்தேதி தொடங்கியது. அன்று முதல் ஐயப்பனுக்கு மாலையணிந்து விரதமிருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.

    இந்தநிலையில் சபரிமலையில் மண்டல பூஜை வருகிற 26-ந்தேதி நடைபெறுகிறது. அன்றையதினம் மதியம் 12 மணி முதல் 12.30 மணி வரை மண்டல பூஜை நடைபெறும் நிலையில், இரவில் மண்டல பூஜை முடிந்து கோவில் நடை சாத்தப்பட உள்ளது.

    கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் 25-ந்தேதி 50 ஆயிரம் பக்தர்களும், 26-ந்தேதி 60 ஆயிரம் பக்தர்களும் மெய்நிகர் வரிசை (ஆன்லைன் புக்கிங்) மூலமாக அனுமதிக்கப்படுகின்றனர். இந்த இரண்டு நாட்களும் 'ஸ்பாட் புக்கிங்' இருக்காது என்று முதலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அந்த 2 நாட்களும் 'ஸ்பாட் புக்கிங்' அப்படையில் 5 ஆயிரம் பேரை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மண்டல பூஜை முடிவுக்கு வர உள்ள நிலையில், மகர விளக்கு பூஜைக்காக வருகிற 30-ந்தேதி மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட உள்ளது. மகரவிளக்கு பூஜை ஜனவரி 14-ந்தேதி நடைபெறுகிறது. அன்று மாலை மகரஜோதி தரிசனம் நடைபெறும்.

    மகரவிளக்கு பூஜை முடிந்து ஜனவரி 20-ந்தேதி காலை 7 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும். வருகிற 31-ந்தேதி முதல் ஜனவரி 19-ந்தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். மகரவிளக்கு பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு கடந்த சில நாட்களாக நடந்துவந்தது.

    இந்நிலையில் மகர விளக்கு பூஜை காலத்துக்கான மெய்நிகர் வரிசை (ஆன்லைன் முன்பதிவு) முடிந்துவிட்டது. மண்டல பூஜையை முன்னிட்டு வருகிற 25 மற்றும் 26 தேதிகளில் மெய்நிகர் வரிசை மூலம் அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

    அதேபோன்று மகர விளக்கு பூஜையையொட்டி ஜனவரி 12, 13 மற்றும் 14 ஆகிய 3 நாட்களும் மெய்நிகர் வரிசை மூலம் அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும். ஆனால் எத்தனை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று மகரவிளக்கு பூஜை நெருங்கியதும் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

    சபரிமலையில் நடப்பு ஆண்டு மண்டல பூஜை காலத்தில் கடந்த 21-ந்தேதி வரை மொத்தம் 28 லட்சத்து 93 ஆயிரத்து 210 பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 4 லட்சத்து 4 ஆயிரத்து 703 பேர் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சபரிமலையில் சர்வதேச கிரீன் பீல்டு விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • 352 குடும்பங்கள் நேரடியாக பாதிக்கப்படும் என்பதால் அவர்களுக்கு மாற்று இடம் வழங்கி மறுவாழ்வுக்கு நடவடிக்கை வேண்டும்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இதனால் சபரிமலையில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டநாட்களாக எழுந்தது.

    இதையடுத்து சபரிமலையில் சர்வதேச கிரீன் பீல்டு விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விமான நிலையம் சபரிமலை, எரிமேலி தெற்கு மற்றும் மணிமாலை ஆகிய நகரங்களுக்கு இடையே அமைய உள்ளது.

    கேரள மாநிலத்தின் 5-வது சர்வதேச விமான நிலையமாக உருவாக இருக்கும் இந்த விமான நிலையம் அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அதற்கான நிலத்தை கையகப்படுத்தும் பணி விரைவில் தொடங்கப்பட இருக்கிறது.


    சபரிமலை விமான நிலைய திட்டத்துக்கு மொத்தம் 1,039.879 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது. இந்த நிலங்கள் மணிமலை மற்றும் எரிமேலி தெற்கு ஆகிய பகுதிகளில் கையகப்படுத்தப்பட உள்ளது. அங்குள்ள 352 குடும்பங்கள் நேரடியாக பாதிக்கப்படும் என்பதால் அவர்களுக்கு மாற்று இடம் வழங்கி மறுவாழ்வுக்கு நடவடிக்கை வேண்டும்.

    விமான நிலையம் அமைப்பதற்காக வெட்டப்பட வேண்டிய மரங்கள் மற்றும் மாற்றப்பட வேண்டிய வீடுகள் உள்ளிட்ட விவரங்கள் கணக்கிடப்பட்டுள்ளன. விமான நிலையம் அமைக்க மொத்தம் 3.4 லட்சம் மரங்கள் வெட்டப்படுகின்றன. அவற்றில் ரப்பர் மரங்கள் 3.3 லட்சம், தேக்கு மரங்கள் 2 ஆயிரத்து 492, காட்டுப்பலா மரங்கள் 2 ஆயிரத்து 247, பலா மரங்கள் 1131, மகோகனி மரங்கள் 828, மா மரங்கள் 184 ஆகும்.

    அது மட்டுமின்றி சில கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகளும் பாதிக்கப்படுகின்றன. அவற்றுக்கும் மாற்று ஏற்பாடு செய்யப்பட இருக்கிறது. இந்த தகவல்கள் சபரிமலை சர்வதேச கிரீன்பீல்டு விமான நிலைய திட்டம் தொடர்பாக கோட்டயம் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டிருக்கும் சமூக தாக்க மதிப்பீட்டு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×