என் மலர்
நீங்கள் தேடியது "அரிச்சந்திரன் வரலாறு"
- சிறுவன் மனத்தில் அந்த நாடகத்தின் மூலம் விழுந்த விதை நன்றாக வேரூன்றி விட்டது.
- காந்திஜி பின்பற்றிய உண்மை என்ற தத்துவமே.
அன்று அதிகாலையில், அந்தச் சிறுவன் யோசனையோடு அமர்ந்திருந்தான். அவன் தலையைக் கோதிவிட்ட அவன் தாய் பரிவோடு அவனிடம் கேட்டாள்:
`மோகன்! என்னப்பா தீவிர யோசனையில் ஆழ்ந்திருக்கிறாய்?`
`அம்மா! நேற்று இரவு நான் ஒரு நாடகம் பார்த்தேன். அந்த நாடகம் பார்த்ததிலிருந்து என் மனத்தில் ஏதேதோ மாறுதல்கள். நான் நாடகம் முடிந்து இரவு வீடுவந்த பிறகும் சரியாகத் தூங்கக் கூட இல்லை. அந்த நாடகத்தைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தேன். நான் ஒரு முடிவு செய்திருக்கிறேன் அம்மா!`
சிறுவனான மோகன் பெரியவர்களைப் போல் பேசுவதை எண்ணிக் கலகலவென்று நகைத்தாள் அவன் தாய்.
`நீ என்ன நாடகம் பார்த்தாய்? என்ன முடிவு செய்திருக்கிறாய்?`
`நான் பார்த்த நாடகம் உண்மையே பேசிய அரிச்சந்திர மகாராஜாவின் வரலாறு பற்றிய நாடகம். உள்ளத்தை உருக்கிய நாடகம் அம்மா அது. எத்தனை கஷ்டங்கள் வந்தன அரிச்சந்திர மகாராஜாவுக்கு! ஆனாலும் இறுதிவரை அவர் பொய் பேசவே இல்லை.
ஆசை காட்டினார்கள். வற்புறுத்தினார்கள். பயமுறுத்தினார்கள். என்றாலும் உண்மையை மட்டுமே பேசுவது என்ற விரதத்திலிருந்து அவர் மாறவே இல்லை. இனிமேல் நானும் பொய்யே பேசாமல் இருக்கப் போகிறேன். என்ன கஷ்டம் வந்தாலும் உண்மையை மட்டுமே பேசுவதாக முடிவு செய்திருக்கிறேன்!`
மோகனின் தாய் அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.
`அப்படியே நடந்துகொள். கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார்!` எனப் பாராட்டினாள்.
என்ன ஆச்சரியம்! சிறுவன் மனத்தில் அந்த நாடகத்தின் மூலம் விழுந்த விதை நன்றாக வேரூன்றி விட்டது. தான் சொன்னபடியே நடந்துகொண்டான். அவனின் சத்திய விரதத்திற்கு எத்தனை சோதனைகள் வந்தபோதும் பொய்யே பேசாதிருக்கப் பழகினான்.
பின்னாளில் `சத்திய சோதனை` எனத் தன்வரலாற்றை எழுதியபோதும் தன் பலவீனங்களை எல்லாம் மறைக்காமல் குறிப்பிட்டு எழுதினான். உலகம் அந்த நூலைப் படித்து வியந்தது.
மனிதனாக இருந்த மோகனை மகாத்மாவாக ஆக்கியது அரிச்சந்திரனின் கதைதான். அந்த மோகன்தான், மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்ற மகாத்மா காந்தி.

திருப்பூர் கிருஷ்ணன்
நோபல் பரிசு பெற்ற கவிஞர் தாகூர், காந்திஜிக்கு மகாத்மா என்ற அடைமொழி கொடுத்து முதன்முதலில் அழைத்தார். பின்னர் அந்த அடைமொழி பிரபலமாயிற்று. தாகூர் அவ்விதம் காந்தியை அழைக்கக் காரணம், காந்திஜி பின்பற்றிய உண்மை என்ற தத்துவமே.
*அரிச்சந்திரன் கதை சுவாரஸ்யமானது. விஸ்வாமித்திர முனிவர் ஏற்படுத்திய அத்தனை சங்கடங்களிலிருந்தும் அவன் இறுதியில் மீண்டான். மனைவியை அடிமையாக விற்க நேர்ந்தது. ஆனாலும் உண்மையே பேசினான். இறுதியில் அவனை வானகமும் வையகமும் போற்றியது என்கிறது அரிச்சந்திர புராணம்.
உண்மையே பேசுவது, முதலில் சோதனைகளைத் தந்தாலும் கடைசியில் அனைத்து நலங்களையும் வழங்கும் ஓர் உன்னதமான கோட்பாடு என்பதை அந்தப் புராணம் தெளிவாக்குகிறது.
பாரத தேசம் முழுமையிலும் தெரிந்த பெயர் அரிச்சந்திரன் என்பது. அரிச்சந்திரனைப் பற்றிய கதைகள் இந்தியாவின் எல்லா மொழிகளிலும் இருக்கின்றன.
அரிச்சந்திரனின் கதையைச் சொல்லும் பழந்தமிழ் நூல் ஒன்று உண்டு. ஐந்நூறுக்கும் மேற்பட்ட நேரிசை வெண்பாக்களால் ஆன அந்நூல் `அரிச்சந்திர வெண்பா` என்றே வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் முன்பெல்லாம் அரிச்சந்திரன் கதை தெருக்கூத்தாகவும் நாடகமாகவும் நடிக்கப் பட்டுக் கொண்டிருந்தது.
உண்மையே பேசிய அரிச்சந்திரனை இந்திய மக்கள் பலர் தெய்வமாகவே கும்பிடத் தொடங்கினார்கள். நம் நாட்டில் பல இடங்களில் அரிச்சந்திரனுக்கு ஆலயங்கள் உண்டு.
அந்த ஆலயங்களில் காசியில் உள்ள ஆலயம் குறிப்பிடத்தக்கது. அரிச்சந்திரன் வரலாற்றில் காசிமாநகருக்கு ஒரு முக்கிய இடம் உண்டல்லவா? அவன் தன் மனைவியை விற்றது, மயானத்தில் வேலை பார்த்தது எல்லாமே காசியில் நிகழும் சம்பவங்கள் தானே?
தமிழகத்தில் காஞ்சீபுரம், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் அரிச்சந்திர ஆலயங்கள் உள்ளன. மக்கள் அங்கெல்லாம் சென்று அரிச்சந்திரனுக்கும் அவன் மனைவி சந்திரமதிக்கும் வழிபாடு நடத்துகிறார்கள்.
புதுச்சேரி கருவடிக்குப்பம் சித்தானந்தர் சுவாமி திருக்கோயில் அருகில் சக்கரவர்த்தி அரிச்சந்திரனுக்கு ஓர் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல. தினமும் தவறாது பூஜைகளும் நடக்கின்றன.
இங்கு அரிச்சந்திரன் அரசராகவும் வெட்டியானாகவும் தன் மனைவி சந்திரமதியுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
`சத்யமேவ ஜயதே!` என்பது இந்தியாவின் குறிக்கோள் வாசகம். இந்திய தேசியச் சின்னத்தில் இந்த வாசகம்தான் பொறிக்கப் பட்டுள்ளது.
முண்டக உபநிடதத்தில் இடம்பெற்றுள்ள புகழ்பெற்ற பல மந்திரங்களில் இதுவும் ஒன்று. தமிழக அரசு `வாய்மையே வெல்லும்` என இதைத் தமிழாக்கித் தன் இலச்சினையில் பெருமையோடு பொறித்துக் கொண்டுள்ளது. இந்தக் குறிக்கோளைத்தான் மனத்தில் கொண்டு சத்தியத்தைத் தவிர வேறு எதையும் பேசுவதில்லை என விரதம் பூண்டிருந்தான் அரிச்சந்திர மன்னன்.
அந்தக் கடும் விரதத்தால், ஒரு மனிதனுக்கு வரக்கூடிய துன்பங்களில் அதிக பட்ச துன்பத்தை அனுபவித்தான். ஆனாலும் இறுதிவரை சத்தியத்தையே பேசினான்.
அரிச்சந்திரன் கதை பெரும்புகழ் பெற்று விளங்குவதைக் கண்ட நாடக ஆசிரியரான பம்மல் சம்பந்த முதலியார், அந்தக் கதைக்கு நேர் எதிர்க் கதையாக சந்திரஹரி என்றொரு நாடகத்தை எழுதினார்.
அரிச்சந்திரன் உண்மையே பேசுபவன். சந்திரஹரியோ பொய் மட்டுமே பேசுபவன். மறந்தும் உண்மை பேசாதவன்.
நாடகம் முழுவதும் ஓர் உண்மையையாவது அவனைப் பேச வைக்க நாடகப் பாத்திரங்கள் எல்லோரும் முயல்வார்கள். ஆனால் ஓர் உண்மையேனும் அவன் நாவில் வராது.
நாடகப் பாத்திரங்களின் பெயர்களையெல்லாம் அரிச்சந்திரன் நாடகத்தில் உள்ளதிலிருந்து தலைகீழாக மாற்றியிருந்தார் முதலியார்.
அரிச்சந்திரன் சந்திரஹரி ஆனதைப் போல் அவன் மனைவி சந்திரமதி, மதிச்சந்திரா ஆனாள். விஸ்வாமித்திரரை மித்திரவிசு என்றும் வசிஷ்டரை சிஷ்டவசி என்றும் மாற்றினார்.
அரிச்சந்திரன் கதைக்கு எதிராக எழுதப்பட்ட இந்த எதிர்க்கதை நாடகம் கூட, மறைமுகமாக அரிச்சந்திரனுக்கே மேலும் புகழ் சேர்த்தது.
*உண்மை பேசுபவர்களுக்கு ஒரு பெரிய சவுகரியம் உண்டு. அவர்கள் எதையும் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டிய தேவையில்லை! பொய் பேசுபவர்கள் என்ன பேசினோம் என்பதைத் தெளிவாக ஞாபகம் வைத்துக் கொண்டால்தான் தொடர்ந்த பொய்களின் மூலம் முதலில் சொன்ன பொய்யைக் காப்பாற்ற இயலும்.
பொய் பேசுபவர்களுக்கு ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. பொய்சொல்வதை ஆழ்மனம் உணர்ந்திருப்பதால் உடல் படபடக்கிறது. வியர்வை கொட்டுகிறது. மொத்தத்தில் ஆரோக்கியம் கெடுகிறது.
பழங்காலம் தொட்டே நீதிவிசாரணை நடக்கும் இடங்களில் பொய்ச் சாட்சி சொல்பவர்கள் இருந்திருக்கிறார்கள். தம் `மனுமுறை கண்ட வாசகம்` என்ற உரைநடை நூலில் பொய்ச்சாட்சி சொல்வது மகாபாவம் என்கிறார் வள்ளலார். அந்த நூலில் பல பாவங்களை அவர் பட்டியலிடுகிறார்.
`ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்` என்கிற வள்ளலார் பாடல் புகழ்பெற்றது. தருமமிகு சென்னையில் கந்தகோட்டத்தில் உறையும் கந்தவேளைக் குறித்துப் பாடப்பட்ட உயரிய பக்திப் பாடல் அது.
அந்தப் பாடலில், `உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்!` என ஓர் அடி வருகிறது.
பொய் பேசுபவர்கள் உள்ளொன்று வைத்துப் புறம் வேறொன்று பேசுபவர்கள். பொய்பேசுபவர்களுடன் உறவு பாராட்டுவது மிகுந்த ஆபத்துகளை விளைவிக்கக் கூடியது என்பதை வள்ளலார் உணர்ந்திருக்கிறார்.
இந்த வரிகளால் வள்ளலார் காலத்திலேயே உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுபவர்கள் நிறைய இருந்திருக்கிறார்கள் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.
வாய்மை என்பது ஓர் உயர்ந்த அறநெறி. அதைப் பற்றி வள்ளுவம் மிக உயர்வாகப் பேசுகிறது. (அதிகாரம் 30).
உண்மை என்பது சத்தியமே. சத்தியம் என்ற வடமொழிச் சொல்லுக்குத் தமிழில் மூன்று இணைச்சொற்கள் வழங்கப்படுகின்றன. `உண்மை, வாய்மை, மெய்ம்மை` என்பன அவை. உள்ளத்தில் சத்தியத்தோடு இருப்பது உண்மை. பேச்சில் சத்தியத்தையே பேசுவது வாய்மை. உடலால் உண்மை நெறிப்படி நடப்பது மெய்ம்மை.
பொதுவாக வாய்மை என்ற சொல்லை சத்தியத்திற்குச் சமமான சொல்லாக நாம் கொள்ளலாம்.
வாய்மை என்பது ஓர் அறம். அதாவது தர்ம நெறி. இந்த தர்ம நெறிப்படி நடந்தால் அந்த நெறி நம்மைக் காக்கும். தர்மத்திற்குச் சோதனைகள் வரலாம். ஆனால் இறுதியில் தர்மம்தான் வெல்லும்.
அதனால்தான் `சத்தியமேவ ஜயதே` என்ற கோட்பாட்டை `வாய்மையே வெல்லும்` என மொழிபெயர்த்துக் கொண்டாடுகிறோம். வாய்மை கட்டாயம் வெல்லும். இன்னும் சரியாகச் சொல்லப் போனால் வாய்மைதான் வெல்லும்.
அதில் சந்தேகமே தேவையில்லை. பொய்ம்மைக்குத் தற்காலிக வெற்றி கிட்டலாம். ஆனால் நிரந்தர வெற்றி வாய்மைக்கு மட்டுமே.
வாய்மை உள்ளிட்ட தரும நெறிகளே இறுதியில் வெல்லும் என்பதைப் புராணங்களில் மட்டுமல்ல, நடைமுறை வாழ்விலும் நாம் பரிசோதித்து உணரலாம். அதை அறியக் கொஞ்சம் பொறுமையாகக் காத்திருக்க வேண்டியிருக்கும். ஆனால் வாய்மை வெல்வது உறுதி.
பல துன்பங்கள் வந்தாலும் இறுதியில் வாய்மைதான் வெல்லும் என்ற தத்துவத்தை நடைமுறை வாழ்வில் சோதித்துப் பார்த்து வெற்றி கண்டவர்களில் முக்கியமானவர் நம் தேசப் பிதா காந்தியடிகள்.
அரிச்சந்திர புராணம் சொல்லும் வாய்மை வெல்லும் என்ற தத்துவம் நம்மாலும் பின்பற்றப் படுவதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறது.
தொடர்புக்கு: thiruppurkrishnan@gmail.com
- அரிச்சந்திரன் பொய்யே பேசாதவன் என்று சொல்வதுண்டு.
- எந்த செயலும் தர்மத்திற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
`அரிச்சந்திரன் பொய்யே பேசாதவன் என்று சொல்வதுண்டு. ஆனால் அந்த நிலையை அடைவதற்கு முன்பு அவன் சொன்ன பொய்களின் எண்ணிக்கை ஏராளம்.
மன்னனான அவன் சந்திரமதி என்ற பெண்ணை மணந்து வாழ்ந்தான். இவர்களுக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லை. இதனால் தனக்கு குழந்தை பிறந்தால் குழந்தையை வைத்து நர மேதயாகம் செய்வதாக வருண பகவானிடம் வேண்டிக் கொண்டான் அரிச்சந்திரன். (இது சாஸ்திரப்படி குற்றமாகும்).
இதன் பின் வருண பகவான் அருளால் அவனுக்கு குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பிறகு, வருண பகவான் வந்து அரிச்சந்திர மகாராஜாவிடம், 'நீ சொன்னபடி உன் குழந்தையை பலி கொடுத்து யாகம் செய்' என்றார்.
அதற்கு அரிச்சந்திரன், ''வருண பகவானே.. குழந்தைக்கு நாமகரணம் ஆகட்டும். பின் நான் அந்த யாகத்தை செய்கிறேன்'' என்றான். சில நாட்களில் குழந்தைக்கு `லோகிதாசன்' என பெயர் வைத்தான்.
அதன்பின் வருண பகவான் வந்து, ''குழந்தைக்கு பெயர் வைத்தாகி விட்டது. இப்பொழுது யாகத்தை செய்'' என்றார். ''குழந்தைக்கு பெயர் வைத்து விட்டோம். ஆனால் குழந்தை நடக்கட்டும். பின் செய்கிறேன்'' என்றான் அரிச்சந்திரன்.
குழந்தை நடக்க ஆரம்பித்ததும் அங்கு வந்த வருணனிடம், ''சத்திரிய தர்மப்படி குழந்தைக்கு பூணல் அணிவித்து வித்தை கற்றுக் கொடுக்க வேண்டும். இந்த வித்தையை ஆரம்பித்ததும் நான் குழந்தையை பலி கொடுத்து யாகம் செய்கிறேன்'' என்றான் அரிச்சந்திரன். பின் குழந்தைக்கு பூணல் போடும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு, வித்தை ஆரம்பமானது. அதேநேரம் லோகிதாசனும் வளர்ந்துவிட்டான்.
இதற்கு மேலும் வருண பகவானிடம் சாக்குப் போக்கு சொல்ல முடியாது என்பதை உணர்ந்த அரிச்சந்திரன், இதுவரை நடந்த அனைத்தும் லோகிதாசன் காதில் விழும்படி தன் மனைவியிடம் பேசினான். தன்னை பலி கொடுக்கப் போகிறார்கள் என்பதை அறிந்த லோகிதாசன் காட்டிற்குள் ஓடி விடுகிறான். அதைத்தான் அரிச்சந்திரனும் எதிர்பார்த்தான்.
வருண பகவான் அரிச்சந்திர மகாராஜாவிடம் வந்து, ''நீ அனேக பொய்களை கூறி சாக்குப் போக்கு சொல்லி என்னை ஏமாற்றி விட்டாய். உனக்கு வயிறு வலிவரட்டும்'' என சாபம் விட்டார். இதனால் வயிற்று வலியால் மிகவும் சிரமப்பட்ட அரிச்சந்திரன் வசிஷ்டரிடம், ''என்ன செய்யலாம்?'' என ஆலோசனை கேட்டான்.
அதற்கு வசிஷ்டர், ''பிறந்த குழந்தைகளை தவிர, சுவீகார புத்திரர்கள், விலை கொடுத்து வாங்கிய புத்திரர்கள் என புத்திரர்கள் என பலவகை உண்டு. எனவே யாராவது ஒரு குழந்தையை விலை கொடுத்து வாங்கி, நீ பலி கொடுத்து யாகம் செய்'' என்றார். அதன்படி பிள்ளையை விலைக்கு தருபவர்களுக்கு ஆயிரம் பசுக்கள் தருவதாக தண்டோரா போடப்பட்டது.
யாரும் மகன்களை விற்க முன் வரவில்லை. அஜிகர்த்தன் என்ற அந்தணருக்கு சுனபுச்சன், சுனச்சேபன், சுனோலாங்கூலன் என்ற மூன்று மகன்கள். தன் ஒரு மகனை விற்கலாம் என்ற எண்ணம் அவருக்கு தோன்றியது. மிக வறுமையில் பசியில் வாடிக் கொண்டிருந்தது அந்த குடும்பம்.
தன் மனைவியிடம் கலந்து ஆலோசிக்க, அவள், 'கடைசி மகன் எனக்கு வேண்டும்' என்றாள். அந்தணன் 'எனக்கு தலைமகன் வேண்டும்' என்றான். இதை வெளியில் இருந்து கேட்ட நடு மகன், ''என்னை நீங்கள் விற்கப் போகிறீர்கள். சரி.. என்னை கொடுத்து விடுங்கள். உங்கள் பிரச்சினை தீரட்டும்'' என்றான்.
அதன்படி அரிச்சந்திர மகாராஜாவுக்கு அவன் விற்கப்பட்டான். யாக ஸ்தம்பத்தில் சிறுவனை கட்டி வைத்துவிட்டு பலி கொடுப்பதற்கான யாகத்தை ஆரம்பித்தான் அரிச்சந்திரன். சிறுவன் அழ ஆரம்பித்தான்.
அப்போது விசுவாமித்திரர் அங்கு வந்தார். அவர் அந்த சிறுவனிடம், ''வருத்தப்படாதே.. வருண பகவான் மந்திரத்தை உனக்கு உபதேசிக்கிறேன். நீ இந்த ஜெபத்தை தொடர்ந்து செய். வருண பகவான் அருள் கிடைக்கும். உனக்கு மரணம் நேராது'' என்றார்.
யாகம் ஆரம்பித்தவுடன் 'யார் பலி கொடுப்பது?' என கேள்வி வந்தது. அப்போது ஆடு, மாடுகளை வெட்டும் சாமித்திரன் என்பவன் அங்கு வந்தான். அவனிடம் ஆயிரம் பொன் தருவதாகக் கூறி, சிறுவனை வெட்டும்படி கூறினர். அவன் அழுது கொண்டிருந்த சிறுவனை கண்டு, ''நீங்கள் கொடுக்கும் ஆயிரம் பொன் எனக்கு வேண்டாம். இந்த சிறுவனை வெட்டும் பாவத்தை நான் செய்ய மாட்டேன்'' எனக் கூறி கத்தியை கீழே போட்டு விட்டான்.
அப்பொழுது யார் வெட்டுகிறீர்களோ அவர்களுக்கு ஆயிரம் பொன் கொடுக்கப்படும் என அரிச்சந்திர மகாராஜா கூறினார். அதை கேட்ட சிறுவனின் தந்தை, ''நானே வெட்டு கிறேன்'' எனக்கூறி கத்தியை எடுத்துக்கொண்டு வந்தார்.
அப்பொழுது வருண பகவான் விரைந்து வந்து, ''யாகத்தை நிறுத்துங்கள். இந்த சிறுவன் என்னை துதித்ததால் நான் மகிழ்ந்தேன். யாகம் பூர்த்தியாகி விட்டது. உன் வயிற்று வலியும் தீர்ந்து விடும்'' என்றார். வசிஷ்டர், நாரதர், விசுவாமித்திரர் போன்றவரும் அங்கிருந்தனர். சிறுவன் ஸ்தம்பத்தில் இருந்து விடுவிக்கப்பட்டான்.
இப்போது சிறுவன் யாரிடம் செல்வது என்ற கேள்வி எழுந்தது. தந்தையிடம் செல்வதா? அரசனிடம் செல்வதா? அல்லது வருண பகவானிடம் செல்வதா? என்று கேள்வி எழுந்தது. அதற்கு நாரதர், ''அந்தணர் இவனைப் பெற்று எடுத்தாலும், தன் மகனை வெட்டப்போகிறார்கள் என்று தெரிந்தே விலைக்கு கொடுத்து விட்டார். எனவே அவர் இவனுக்கு தந்தையாக மாட்டார். வெட்டுவதற்காகவே சிறுவனை விலைக்கு வாங்கினார் அரசன். எனவே அரிச்சந்திர மகாராஜாவும் தந்தைக்கு சமம் அல்ல.
சாமித்திரன் சிறுவனை வெட்டாமல் விட்டான். ஜாதியில் தாழ்ந்திருத்தாலும் குணத்தால் அவனே உயர்ந்தவன். இருந்தாலும் அவனும் தகப்பனாக மாட்டான். (இந்த இடத்தில் அந்தணன் உயர்ந்த குலத்தில் பிறந்தாலும் குணத்தால் தாழ்ந்த வனாகி விட்டான் என நாரதர் கூறுகிறார்).
வருண பகவான் சிறுவன் துதி செய்ததால் அருள் புரிந்தார். அவரும் தகப்பன் ஆக மாட்டார். ஆனால் எந்த பலனும் கருதாமல் இவன் உயிர் பிழைக்க வேண்டும் என கருதி மந்திரத்தை உபதேசம் செய்த விசுவாமித்திரரே இந்த சிறுவனுக்கு தகப்பன் ஸ்தானத்தில் உள்ளவராவார். எனவே விசுவாமித்திரருடன் இவன் செல்லலாம்'' என நாரதர் கூறினார்.
தனக்கு குழந்தை வேண்டும் என்ற எண்ணத்தில் குறுக்கு வழியில் உயிர்பலி கொடுக்கலாம் என்று நினைத்ததால், பிற்காலத்தில் அரிச்சந்திரன் பலவிதமான துன்பங்களை அனுபவித்து, நாட்டை இழந்து சுடுகாட்டுக்கு செல்லும் நிலையும் உருவாகிறது. அந்தணர் குலத்தில் பிறந்தாலும் குணத்தால் தாழ்ந்தவனாகி அவமானப்பட்ட நிகழ்வும் இங்கு நடக்கிறது. எனவே எந்த செயலும் தர்மத்திற்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்பதே உண்மை.






