என் மலர்
நீங்கள் தேடியது "குடிநீர் லாரி"
- குடிநீரேற்று நிலையங்களிலும் லாரிகளில் முறைகேடாக குடிநீர் நிரப்பி வெளியே கொண்டு செல்வதால் குடிநீர் வாரியத்துக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வந்தது.
- 3 தடவை முறைகேட்டில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட லாரியின் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்.
சென்னை:
சென்னை நகர மக்களுக்கு தினமும் 107 கோடி லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. குடிநீர் இணைப்பு இல்லாத இடங்களில் சாலையோர தொட்டிகள் மற்றும் முன்பதிவு செய்யும் குடியிருப்புகள், வணிக நிறுவனங்களுக்கு 452 ஒப்பந்த லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது.
லாரிகளில் குடிநீரை கொண்டு செல்லும் போது தெருவோர தொட்டிகளில் முழுவதும் நிரப்பாமல் மீதம் உள்ள தண்ணீரை வணிக நிறுவனங்களுக்கு விற்று டிரைவர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும், இதேபோல் பணம் செலுத்தி வாங்கும் குடிநீரையும் அவர்களது தொட்டிகளில் முழுவதும் நிரப்பாமல் மீதம் எடுத்து சென்று வெளியே விற்பனை செய்வதாகவும் குடிநீர்வாரிய அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. மேலும் குடிநீரேற்று நிலையங்களிலும் லாரிகளில் முறைகேடாக குடிநீர் நிரப்பி வெளியே கொண்டு செல்வதால் குடிநீர் வாரியத்துக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வந்தது.
இதையடுத்து குடிநீர் வினியோகத்தில் முறைகேடுகளை தடுக்க தண்ணீர் எடுத்து செல்லும் லாரிகளில் ஜி.பி.எஸ்.கருவி பொருத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் குடிநீர் வழங்கும் லாரிகள் எங்கெல்லாம் செல்கின்றன என்பதை குடிநீர் வாரிய அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். லாரியின் தொட்டியில், சென்சார் பொருத்தி நீரேற்று நிலையத்தில் இருந்து எடுத்துச் செல்லும் குடிநீர் குறிப்பிட்ட பகுதி மக்களுக்கு முழுவதும் வினியோகிக்கப்படுகிறதா? என்றும் கண்காணிக்கப்படுகிறது.
இதுகுறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறும்போது, குடிநீர் வினியோகிக்கும் ஒவ்வொரு லாரிக்கும் அதன் பதிவு எண் அடிப்படையில் ஸ்மார்ட் அட்டை வழங்கப்பட்டு உள்ளது. அதில் குடிநீர் வினியோகம் தொடர்பான அனைத்து தகவல்களும் இருக்கும். தண்ணீர் வினியோகத்தில் முறைகேட்டில் ஈடுபட்டால் ஸ்மார்ட் அட்டையின் இயக்கம் தடைபடும். முதல்முறை தடைபட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். 3 தடவை முறைகேட்டில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட லாரியின் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்றனர்.
- சில பகுதிகளில் ஒருநாள் விட்டு ஒருநாள் மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
- குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் பகுதிகளுக்கு டேங்கர் லாரிகள் மூலம் குடிநீரை கட்டணமில்லாமல் வழங்க வேண்டும்.
சென்னை:
சென்னை மேற்குமாம்பலம் பகுதியில் கோடை காலம் தொடங்கும் முன்பே கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் டேங்கர் லாரி குடிநீரையே நம்பி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. டேங்கர் லாரிகளில் குடிநீரை பெறுதற்காக பொதுமக்கள் மாதம் ரூ.10 ஆயிரம் வரை செலவழிக்க வேண்டிய அவலநிலை இருப்பதாக வேதனைப்படுகின்றனர்.
மேற்கு மாம்பலம் விவேகானந்தபுரம் 1-வது தெரு, பாலகிருஷ்ண முதலி தெரு, பாலகிருஷ்ண நாயக்கர் தெரு, சீனிவாச பிள்ளை தெரு, சீனிவாச அய்யங்கார் தெரு, வேலு தெரு, கணபதி தெரு ஆகிய பகுதிகளில் உள்ள பல வீடுகளுக்கு சென்னை குடிநீர் வாரியம் சார்பில் போதிய குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரி கடந்த ஒரு மாதமாக வறண்டு கிடப்பதால், அந்த பகுதி மக்கள் தண்ணீர் லாரிகளையே நம்பியுள்ளனர்.
இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-
தி.நகர் மற்றும் மேற்கு மாம்பலம் பகுதிகளுக்கு தினமும் சுமார் 17 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்குகிறோம். சென்னைக்கு குடிநீர் வழங்குவதற்காக 150 மில்லியன் லிட்டர் குடிநீரை நெம்மேலியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் ஆலை, செம்பரம்பாக்கம் ஏரி மற்றும் வீராணம் ஏரியை சுற்றியுள்ள ஆழ்துளை கிணறுகளில் இருந்து பெறுகிறோம்.
கடந்த ஜனவரி மாதத்தில், தி.நகர் மற்றும் மேற்கு மாம்பலத்திற்கு குடிநீர் வினியோகம் செய்யும் ஆற்காடு சாலையில் உள்ள குடிநீர் குழாய் மெட்ரோ ரெயில் பணியின் போது சேதமடைந்தது. அந்த குடிநீர் குழாய் சரி செய்யப்பட்டு, குடிநீர் பிரச்சினையை சரி செய்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், 'சென்னை குடிநீர் வாரியம், சேதம் அடைந்த குழாய்களை சரி செய்தாலும், தண்ணீரின் அழுத்தம் மற்றும் அளவு ஆகியவை கணிசமாக குறைந்துள்ளது. 50 ஆண்டுகள் பழமையான குடிநீர் குழாயை பெரியதாக மாற்றுமாறு சென்னை குடிநீர் வாரியத்துக்கு கடிதம் எழுதினோம். வெறும் 35 வீடுகள் இருந்த இடத்தில், இப்போது கிட்டத்தட்ட 200 வீடுகள் உள்ளன. இதனால் தண்ணீர் போதவில்லை.
சில பகுதிகளில் ஒருநாள் விட்டு ஒருநாள் மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த பகுதி மக்கள் சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணங்களை சரியாக செலுத்துவதால், குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் பகுதிகளுக்கு டேங்கர் லாரிகள் மூலம் குடிநீரை கட்டணமில்லாமல் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.






