என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம்"

    • திருப்பூர் பின்னலாடைத்துறையின் பங்கு 49 சதவீதமாகும்.
    • அடுத்த ஆண்டுகளில் இந்த மேல்நோக்கிய வளர்ச்சியை தக்க வைப்போம்.

    திருப்பூர்:

    இந்தியாவின் ஆயத்த ஆடை வர்த்தகம் தொடர்ந்து ஏறுமுகத்தில் பயணித்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் முந்தைய ஆண்டை விட வர்த்தகம் உயர்ந்து வந்த நிலையில், கடந்த 2024-25-ம் நிதியாண்டு ஏற்றுமதியில் 10 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்தியாவில் கடந்த நிதியாண்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி ரூ.1 லட்சத்து 36 ஆயிரம் கோடியாகும். இதில் திருப்பூர் பின்னலாடைத்துறையின் பங்கு 49 சதவீதமாகும்.

    திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது 20 சதவீதம் வளர்ச்சியை எட்டியுள்ளது. இந்த சாதனை, பின்னலாடை துறையின் நீடித்த வேகத்தையும், இந்திய நிட்வேர் மற்றும் ஆடைகளுக்கான வலுவான உலகளாவிய தேவையை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

    இதுகுறித்து ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.) துணை தலைவர் சக்திவேல் கூறியதாவது:-

    இந்திய ஆயத்த ஆடையின் சீரான, நிலையான வளர்ச்சி மாதந்தோறும் திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகத்தின் மீதான நம்பிக்கை பிரதிபலிப்பதாக இருந்தது. குறிப்பாக ஆயத்த ஆடை வர்த்தகத்தில் இந்த ஆண்டு திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி 15 முதல் 20 சதவீதம் வளர்ச்சியை எட்டும் என்று கடந்த ஜனவரி மாதம் நான் தெரிவித்தேன்.

    அதபோல் கடந்த ஆண்டை விட திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் 20 சதவீதம் வளர்ச்சியை எட்டியுள்ளது. நாம் எதிர்பார்த்தது போல் ரூ.40 ஆயிரம் கோடி என்ற இலக்கை அடைந்து சாதனை படைத்தது மகிழ்ச்சியை அளிக்கிறது. பின்னலாடை ஏற்றுமதியின் வளர்ச்சி என்பது திருப்பூர் உற்பத்தியாளர்களுக்கு மிகவும் ஊக்கமளிக்கும். ஏற்றுமதியாளர்களின் உலகளாவிய போட்டித்தன்மையை எடுத்துக்காட்டுகிறது. அடுத்த ஆண்டுகளில் இந்த மேல்நோக்கிய வளர்ச்சியை தக்க வைப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    முந்தைய ஆண்டைவிட, கடந்த நிதியாண்டின் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் குறைந்தபட்சம் 15 சதவீதம் வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் 20 சதவீதம் வளர்ச்சியை எட்டியுள்ளது. ரூ.40 ஆயிரம் கோடியை எட்டுவோம் என்று நம்பினோம். அதை நோக்கியே எங்களின் பயணம் இருந்தது. அதன்படி கடந்த நிதியாண்டு வர்த்தகம் ரூ.40 ஆயிரம் கோடியை எட்டியது மகிழ்ச்சியளிக்கிறது. 2030-ம் ஆண்டுக்குள் ரூ.1 லட்சம் கோடி என்ற இலக்குடன் பயணித்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக இறக்குமதி நாடுகளில் பொருளாதார சிக்கன நடவடிக்கை துவங்கியுள்ளது.
    • திருப்பூரை பொறுத்தவரை நூல், பஞ்சுவிலை உட்பட அனைத்து விஷயத்திலும் சாதகமான சூழல் உள்ளது.

    திருப்பூர் :

    கொரோனா ஊரடங்கு காலத்தில் உலகமே நிதி நெருக்கடியில் திணறிய போதும் திருப்பூர் ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு வர்த்தகம் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பியது. ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக இறக்குமதி நாடுகளில் பொருளாதார சிக்கன நடவடிக்கை துவங்கியுள்ளது. இதனால் ஏற்றுமதி வர்த்தகம் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளது.திருப்பூரை பொறுத்தவரை நூல், பஞ்சுவிலை உட்பட அனைத்து விஷயத்திலும் சாதகமான சூழல் உள்ளது. உள்நாட்டு வர்த்தகமும் பிசியாகியுள்ளது. இருப்பினும் ஏற்றுமதி ஆர்டர் குறைந்ததால் ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்கள் சோர்வடைந்துள்ளன.

    ஏற்றுமதி ஆடை உற்பத்தி பாதிப்பால் நூற்பாலைகளும் உற்பத்தியை குறைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. சர்வதேச சந்தைகளில் நிலவும் மந்தநிலையால் ஏற்றுமதி வர்த்தகத்தில் உள்ள பாதிப்புகள், அதற்கு தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் தலையிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்க (டீமா) தலைவர் முத்துரத்தினம் கூறுகையில், திருப்பூரின் தொழில் நிலவரம் குறித்து மத்திய, மாநில அரசுக்கு எடுத்துரைக்க வேண்டும்.ஏற்றுமதி ஆர்டர் பெறுவதில் நிலவும் பிரச்சினையை தெரிவித்து, தகுந்த உதவிகளை கேட்டுப்பெற வேண்டும். அதற்காக ஜூன் மாதம் முதல் வாரத்தில் அனைத்து தொழில் அமைப்புகளுடன் கலந்தாலோசிக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.

    ×