என் மலர்
நீங்கள் தேடியது "காணும் பொங்கல்"
- மெரினா கடற்கரைக்கு பெற்றோருடன் வந்த குழந்தைகளுக்கு இந்த அடையாள பேண்ட் கட்டி விடப்பட்டது.
- மெரினா கடற்கரை அழகுபடுத்தப்பட்டு குழந்தைகள் விளையாடுவதற்காக விளையாட்டு உபகரணங்களும் அதிக அளவில் அமைக்கப்பட்டு உள்ளன.
சென்னை:
தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் நேற்று மாட்டுப் பொங்கலும் கொண்டாடப்பட்டது.
இன்று காணும் பொங்கல் தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. மெரினா கடற்கரையில் இன்று காலையில் இருந்தே பொதுமக்கள் குடும்பத்தோடு திரண்டனர்.
இதேபோன்று தமிழகம் முழுவதும் அனைத்து சுற்றுலா தலங்களிலும் பொதுமக்கள் குவிந்தனர். இதன் காரணமாக மெரினா கடற்கரை உள்ளிட்ட அனைத்து சுற்றுலா பகுதிகளுமே களைகட்டி காணப்பட்டது.
இப்படி பொழுதுபோக்கு மையங்களில் அதிக அளவில் மக்கள் கூட்டம் கூட்டமாக திரண்டதால் எந்தவித அசம்பாவிதமும் நிகழாத வண்ணம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணும் பொங்கலை கொண்டாடுவதற்காக போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர்கள் அறிவுரையின் பேரில் 16 ஆயிரம் போலீஸ் அதிகாரிகள், போலீசார் மற்றும் சுமார் 1,500 ஊர்க்காவல் படையினர் மூலம் காணும் பொங்கல் கொண்டாட்டத்தின்போது பாதுகாப்பு அளிக்க விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை முதல் காந்தி சிலை வரை 3 தற்காலிக போலீஸ் கட்டுப்பாடு அறைகள் அமைக்கப்பட்டும், உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையிலுள்ள 7 சர்வீஸ் சாலைகளின் நுழைவு வாயில்களில் போலீஸ் உதவி மையங்கள் அமைக்கப்பட்டும். அவசர மருத்துவ உதவிக்காக மருத்துவக் குழுவினருடன் 8 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் மீட்புப் பணிக்காக தீயணைப்பு வீரர்கள் அடங்கிய 2 தீயணைப்பு வாகனங்கள் ஆகியவை தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
மீட்புப்பணிக்காக மோட்டார் படகுகளில் 200-க்கும் மேற்பட்ட நீச்சல் தெரிந்த தன்னார்வலர்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.
உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையில் உள்ள மணற்பரப்பில் 13 தற்காலிக போலீஸ் கண்காணிப்பு உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு உயர் கோபுரத்திலும் 3 போலீசார் கண்காணித்தனர்.
மெரினா கடற்கரையில் 12 முக்கிய இடங்களில் கூடுதலாக 13 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, தற்காலிக கட்டுப்பாட்டு அறையில் உள்ள அகன்ற திரைகளில் கண்காணிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்கள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளதால், கடற்கரையோரம் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். குதிரைப்படையினர் மற்றும் மணற்பரப்பில் செல்லக்கூடிய ரோந்து வாகனம் மூலம் போலீசாரால் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு திருட்டு மற்றும் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் கண்காணிக்கப்பட்டது.
பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் ஒரு தற்காலிக போலீஸ் கட்டுப்பாட்டறை, 3 தற்காலிக போலீஸ் கண்காணிப்பு உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது.
கடற்கரைக்கு பெற்றோருடன் வரும் குழந்தைகள் கூட்டநெரிசலில் காணாமல் போனால் அவர்களை உடனடியாக மீட்பதற்காக சென்னை பெருநகர போலீஸ் மூலம் தயாரிக்கப்பட்ட, கைகளில் கட்டப்படும் பேண்ட், அடையாள அட்டைகள், போலீஸ் உதவி மையங்கள் மற்றும் தற்காலிக போலீஸ் கட்டுப்பாட்டு அறைகளில் வைக்கப்பட்டிருந்தது.

மெரினா கடற்கரைக்கு பெற்றோருடன் வந்த குழந்தைகளுக்கு இந்த அடையாள பேண்ட் கட்டி விடப்பட்டது.
மெரினா கடற்கரை மணற்பரப்புகளில் 4 டிரோன் கேமராக்கள் மற்றும் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை மணற்பரப்புகளில் 4 டிரோன் கேமராக்கள் என மொத்தம் 8 டிரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டன.
மதுபோதையில் வாகனம் ஓட்டி வருபவர்கள் மற்றும் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கிண்டி, அடையாறு, தரமணி, நீலாங்கரை. துரைப்பாக்கம், மதுரவாயல் பைபாஸ் சாலை, ஜி.எஸ்.டி. ரோடு மற்றும் இதர சாலைகளில் மோட்டார் சைக்கிள் பந்தயம் தடுப்பு நடவடிக்கையாக கண்காணிப்பு சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தது பைக் ரேசை தடுப்பதற்கும் போலீசார் தீவிரமாக கண்காணித்தனர்.
கிண்டி சிறுவர் பூங்கா, பிர்லா கோளரங்கம், வண்டலூர் உயிரியல் பூங்கா ஆகிய இடங்களிலும் பொதுமக்கள் காலையிலேயே தங்களது குடும்பத்தோடு திரண்டு இருந்தனர். வண்டலூர் உயிரியல் பூங்காவில் லயன் சபாரியை காண்பதற்காக நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் டிக்கெட் எடுத்தனர். இதற்காக அவர்கள் மணிக்கணக்கில் காத்திருக்க நேர்ந்தது.
பூங்காவை சுற்றி பார்ப்பதற்கான வாகனத்தை பதிவு செய்வதற்கும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
கிண்டி சிறுவர் பூங்காவிலும் வரிசையில் நின்று பொதுமக்கள் டிக்கெட்டுகளை எடுத்துக்கொண்டு பூங்காவுக்குள் நுழைந்தனர்.

கிண்டி சிறுவர் பூங்கா, வண்டலூர் உயிரியல் பூங்கா மற்றும் மெரினா கடற்கரை ஆகிய இடங்களில் சிறுவர், சிறுமிகள் தங்களது பெற்றோர்களோடு இணைந்து காணும் பொங்கலை குதூகலத்தோடு கொண்டாடி மகிழ்ந்தனர்.
மெரினா கடற்கரை இப்போது அழகுபடுத்தப்பட்டு குழந்தைகள் விளையாடுவதற்காக விளையாட்டு உபகரணங்களும் அதிக அளவில் அமைக்கப்பட்டு உள்ளன.
அனைவரையும் கவரும் வகையில் இதய வடவிலான இருக்கைகள், பளிங்கு போன்று வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கும் இருக்கைகள் ஆகியவைகளும் கடற்கரை மணல் பரப்பில் புதிதாக இடம்பெற்றுள்ளன.
இந்த இருக்கைகளில் அமர்ந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் போட்டி போட்டு கொண்டு புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்தனர்.
இதேபோன்று கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, மதுரை, திருச்சி உள்பட அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் அலைமோதினார்கள். இதைத்தொடர்ந்து அந்தந்த பகுதிகளை சேர்ந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் உத்தரவின்பேரில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.
குறிப்பாக கடற்கரைப் பகுதிகளில் பொதுமக்கள் கடலில் இறங்கி உயிரிழந்து விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு கூடுதல் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. இப்படி இன்று காணும் பொங்கல் தமிழகம் முழுவதும் மிகுந்த உற்சாகத்தோடு கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- கோட்டை, ஏலகிரி, அமிர்தியில் கடும் கூட்டம்
- காணும் பொங்கல் கோலாகலமாக நடந்தது
வேலூர்:
பொங்கல் பண்டிகை 3 நாட்களாக உற்சாகமாக கொண்டாடப்படுவது வழக்கம். தை முதல் நாளான நேற்று முன்தினம் வீடுகளில் பொங்கல் வைத்தும், மாட்டு பொங்கல் தினமான ேநற்று மாடுகளை அலங்கரித்தும் மக்கள் வழிபட்டனர்.
3-ம் நாளான இன்று காணும் பொங்கல் கொண் டாட்டம் களை கட்டியது. தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலா தலங்கள், பொழுது போக்கு மையங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக ஆர்ப்பரித்து திரண்டனர்.
வேலூர் மாவட்டத்திலும் காணும் பொங்கலை பொதுமக்கள் உற்சாகமாகக் கொண்டாடினர்.
இதையொட்டி, வேலூர் கோட்டைக்கு ஆயிரக்கணக்கான மக்கள், குழந்தைகள் வந்திருந்தனர்.
அவர்கள் கோட்டையைச் சுற்றிப்பார்த்ததுடன், அந்தப் பகுதியிலுள்ள புல்தரையில் அமர்ந்து விளையாடி மகிழ்ந்தனர். பொங்கலையொட்டி, கோட்டையிலுள்ள ஜலகண்டேஸ்வரருக்கு சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது.
மேலும், மக்கள் வருகையையொட்டி கோட்டை நுழைவு வாயில் பகுதியில் கரும்பு, தர்பூசணி, குளிர்பானக் கடைகளும், குழந்தைகளுக்கான விளையாட்டு பொம்மை கடைகளும் அமைக்கப்பட்டிருந்தன.
மேலும், அமிர்தியில் உள்ள வனப்பூங்காவுக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் வந்திருந்து காணும் பொங்கலை கொண்டாடினர். இதேபோல், கோட்டை பூங்கா,தங்கக்கோவில், உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சுற்றுலாத் தலங்கள், கோவில்களிலும் கூட்டம் அலைமோதியது.
ஏலகிரி மலையில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை முதல் தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) வரை 4 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் தங்களது குடும்பத்தினருடனும், உறவினர்களுடனும் ஏலகிரி மலை சுற்றுலா தலத்திற்கு வந்தனர்.
இங்குள்ள பல்வேறு இடங்களை கண்டு ரசித்தும், புங்கனூர் ஏரி படகுத்துறையில் படகில் சவாரி செய்தும் செல்பி எடுத்தும் உற்சாகம் அடைந்தனர்.
மேலும் இங்கு பல்வேறு பகுதிகளிலிருந்து வரவழைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் பழ வகைகள், இனிப்பு வகைகள், சாக்லேட்டுகள் போன்றவைகளை சுற்றுலா பயணிகள் வாங்கி மகிழ்ந்தனர்.
ஏலகிரி மலையில் உள்ள பல்வேறு பகுதிகளில் தனியார் பொழுதுபோக்கு கூடங்களும் அதிக அளவில் உள்ளதால் தங்களது குடும்பத்தினருடன் சென்று சாகச போட்டிகள், பறவைகள் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு கூடங்களை கண்டு ரசித்தனர்.
- வண்டலூர் உயிரியல் பூங்காவில் காலை 8 மணி முதல் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
- கிண்டி சிறுவர் பூங்காவில் இன்று காலையில் இருந்தே மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
சென்னை:
காணும் பொங்கல் கொண்டாட்டம் இன்று களை கட்டியது. தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலா தலங்கள், பொழுதுபோக்கு மையங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக ஆர்ப்பரித்து திரண்டனர்.
மெரினா கடற்கரையில் இன்று காலை 9 மணியளவில் இருந்தே மக்கள் கூட தொடங்கினர். நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகமானது. பிற்பகலில் கட்டுக்கடங்காத வகையில் மக்கள் கூட்டம் காணப்பட்டது. இதனால் திரும்பிய திசையெல்லாம் மக்கள் தலைகளாகவே காட்சி அளித்தது. மெரினா கடற்கரையில் கூட்ட நெரிசலால் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெற்று விடக்கூடாது என்பதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
மெரினாவில் மட்டும் ஆயிரக்கணக்கான மக்கள் இருந்ததால் அங்கு உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 15 இடங்களில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கோபுரங்களிலும் தலா 3 காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கடலில் இறங்கி மக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தபோதிலும் நன்கு நீச்சல் தெரிந்த 140 வீரர்கள் தயார் நிலையில் இருந்தனர். சிறுவர்-சிறுமிகள் காணாமல் போனால் கண்டுபிடிக்க வசதியாக அவர்களின் கைகளில் காவலர் பாதுகாப்பு வளையம் கட்டி விடப்பட்டது. அதில் இடம் பெற்றிருந்த உதவி எண்கள் மூலமாக மாயமான குழந்தைகள் உடனுக்குடன் மீட்கப்பட்டன. தற்காலிக உதவி மையங்கள் மூலமாக பொதுமக்களுக்கு தேவையான உதவிகள் மேற்கொள்ளப்பட்டன.
கிண்டியில் சிறுவர் பூங்காவிலும் இன்று காலையில் இருந்தே மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அங்குள்ள பாம்பு பூங்காவில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. விதவிதமான பாம்புகள் மற்றும் முதலை பண்ணையில் உள்ள முதலைகள் ஆகியவற்றையும் மக்கள் கண்டு களித்தனர்.
சிறுவர் பூங்காவில் புள்ளிமான் உள்ளிட்ட விலங்குகளையும் பல்வேறு வகையான பறவைகளையும் சிறுவர்-சிறுமிகள் குதூகலத்துடன் கண்டு களித்தனர். பூங்காவில் உள்ள ஊஞ்சல் மற்றும் விளையாட்டு உபகரணங்களில் உற்சாகத்தோடு சிறுவர், சிறுமிகள் விளையாடி மகிழ்ந்தனர். பூங்காவில் மக்கள் கூட்டம் நிரம்ப வழிந்ததை தொடர்ந்து தேவையான ஏற்பாடுகளை பூங்கா நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் காலை 8 மணி முதல் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்திய காட்டுமாடு, காண்டா மிருகம், வெளிமான், கடமான், வராக மான், புள்ளிமான், சதுப்பு நில மான், நீலமான் உள்ளிட்டவைகளுக்கு காலை 11 மணி அளவில் தாவர வகைகள் உணவாக அளிக்கப்பட்டன. இதனை பொதுமக்கள் கண்டு களிக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இந்த விலங்குகள் சிறிய சிறிய சேட்டைகளுடன் தாவரங்களை உட்கொண்டதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கண்டு ரசித்தனர்.
பிற்பகலில் யானை குளியலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. 2 மணியளவில் இரு ந்து 4 மணி வரையில் யானைகள் குளிப்பதையும் பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர். 2 பெரிய திரைகளில் பூங்காவின் செயல்பாடுகள் பற்றி விவரிக்கப்பட்டது.
பார்வையாளர்கள் குடும்பத்துடன் புகைப்படம் எடுக்க தனியான புகைப்படக்கூடம் என்று அமைக்கப்பட்டு இருந்தது. இதில் மக்கள் கூட்டம் கூட்டமாக போட்டோக்களை எடுத்து மகிழ்ந்தனர்.
பூங்காவுக்கு வந்த பொதுமக்கள் தாமதமின்றி உள்ளே செல்வதற்கு வசதியாக வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் கூடுதலாக 2 இடங்களில் நுழைவு சீட்டு வழங்கப்பட்டது.
எப்போதும் இயங்கும் 20 நுழைவு சீட்டு வழங்கும் இடத்திலும் தேவையான அளவுக்கு பணியாளர்கள் அமர்த்தப்பட்டிருந்தனர். அவசர சிகிச்கைக்காக 5 ஆம்புலன்ஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. 9 இடங்களில் மருத்துவ உதவி மையங்களில் அமைக்கப்பட்டிருந்தன. 3 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பொதுமக்கள் கடலில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. எலியட்ஸ் கடற்கரையில் சங்கமம் நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது. மாலை நேரங்களில் அங்கு அமைக்கப்பட்டு உள்ள மேடையில் கலைஞர்கள் நடத்தும் கலை நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
பொங்கலையொட்டி மக்களை கவரும் வகையிலும் யானைகள் உள்ளிட்ட வன விலங்குகளை பாதுகாப்பது தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் எலியட்ஸ் கடற்கரையில் மரத்தினாலான யானை சிற்பங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
யானை சிற்பங்களுக்காக பெரிய அளவிலான தரை மேடை அமைக்கப்பட்டிருந்தது. இதில் 7 பெரிய யானை சிற்பங்கள், 4 சிறிய யானை சிற்பங்களும் நிறுவப்பட்டுள்ளது. இந்த யானை சிற்பங்கள் இலை, தழைகளை உண்பது போலவும் காட்சி உருவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. இதனை பார்க்கும்போது காட்டுப் பகுதியில் நின்று யானைகள் சாப்பிடுவது போன்ற உணர்வு ஏற்படுகிறது. பொதுமக்களை பெரிதும் கவர்ந்து உள்ள இந்த யானை சிற்பங்கள் அருகில் நின்று போட்டோக்களை எடுப்பதற்கு மக்கள் அதிக ஆர்வம் காட்டினார்கள்.
அதன் அருகில் நின்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்பி மற்றும் போட்டோக்களை எடுத்து மகிழ்ந்தனர்.






