என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்திதேசாய்"

    கேரளாவுக்கு மீண்டும் வந்து கொரில்லா பாணியில் சபரிமலை சென்று ஐயப்பனை தரிசிப்பேன் என்று திருப்பி அனுப்பப்பட்ட திருப்திதேசாய் ஆவேசமாக கூறி உள்ளார். #TruptiDesai #Sabarimala
    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு சபரிமலை கோவில் ஆச்சாரத்திற்கு எதிரானது என்று கூறி ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கோர்ட்டு உத்தரவுப்படி சபரிமலை வரும் இளம்பெண்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியும் வருகிறார்கள்.

    இந்த நிலையில் மராட்டிய மாநிலம் புனேவில் செயல்பட்டு வரும் பூமாதா பிரிகேட் அமைப்பைச் சேர்ந்த பெண்ணீய ஆர்வலர் திருப்திதேசாய் சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசிக்கப்போவதாக அறிவித்தார்.

    அதன்படி, நேற்று திருப்திதேசாய் 6 இளம்பெண்களுடன் மும்பையில் இருந்து விமானம் மூலம் கொச்சி வந்தார். திருப்திதேசாய் வருவதை அறிந்த ஐயப்ப பக்தர்கள் நேற்று அதிகாலையிலேயே கொச்சி விமான நிலையம் முன்பு திரண்டனர்.

    திருப்திதேசாய் வந்த விமானம் அதிகாலை 4.40 மணிக்கு கொச்சி வந்ததும், அவரை விமான நிலையத்தில் இருந்து வெளியே வர விடாமல் சிறை பிடித்து போராட்டம் நடத்தினர்.

    போராட்டக்காரர்களுடன் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தியும், சுமூக நிலை ஏற்படவில்லை. திருப்திதேசாயை ஓட்டலுக்கு அழைத்துச்செல்ல கார் டிரைவர்களும் முன் வரவில்லை. இதனால் அதிகாலை 4.40 மணி முதல் இரவு 9.40 மணி வரை 17 மணி நேரம் விமான நிலையத்திலேயே தவித்த திருப்திதேசாயை திரும்பிச் செல்லும்படி போலீசார் கேட்டுக் கொண்டனர்.



    சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் அவர், திரும்பிச் செல்ல வேண்டும் என்ற போலீசாரின் வேண்டுகோளை ஏற்று திருப்திதேசாய் திரும்பிச் சென்றார். இது குறித்து திருப்திதேசாய் அளித்த பேட்டி வருமாறு:-

    சபரிமலை ஐயப்பனை தரிசிக்க நான் வருவதை முன்கூட்டியே அறிந்த போராட்டக்காரர்கள் பயந்து விட்டனர். எனவேதான் என்னை விமான நிலையத்தை விட்டு வெளியே வர விடாமல் போராட்டம் நடத்தினர்.

    இந்த போராட்டத்தை கண்டு நான் பின்வாங்க மாட்டேன். மீண்டும் கேரளா வருவேன். அப்போது கொரில்லா பாணியில் சபரிமலை சென்று ஐயப்பனை தரிசிப்பேன். இதில் மாற்று கருத்துக்கு இடமில்லை.

    கேரள போலீசார் என்னிடம் கனிவாக நடந்து கொண்டனர். அவர்களின் பணி பாராட்டுக்குரியது. சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்றும் எனவே நான், திரும்பிச் செல்ல வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.

    எனது வருகையால் இங்கு சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படக்கூடாது. வன்முறைக்கு நான், காரணமாகி விடக் கூடாது. எனவேதான் போலீசாரின் வேண்டுகோளை ஏற்று இப்போது திரும்பிச் செல்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே விமான நிலையத்தில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக ஐயப்ப பக்தர்கள் 250 பேர் மீது நெடும்பாச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  #TruptiDesai #Sabarimala


    மண்டல பூஜையின்போது 6 இளம்பெண்களுடன் சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்யப்போவதாக பூமாதா அமைப்பின் தலைவரும், பெண் உரிமைக்காக போராடி வருபவருமான திருப்திதேசாய் அறிவித்து உள்ளார். #Sabarimala #SabarimalaTemple #TruptiDesai
    திருவனந்தபுரம்:

    பிரசித்திபெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை அமல்படுத்த கேரள அரசு தீவிரமாக உள்ளது.

    அதேசமயம் சபரிமலை ஐதீகத்தை மீறி இளம்பெண்களை சபரிமலையில் அனுமதிக்கமாட்டோம் என்று கேரளாவில் ஐயப்ப பக்தர்கள் மற்றும் இந்து அமைப்பினர் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.

    கடந்த ஐப்பசி மாத பூஜை மற்றும் திருவிதாங்கூர் மன்னர் சித்திரை ஆட்டத் திருநாள் பிறந்தநாளின் போது சபரிமலை கோவில் நடை திறந்தபோது சபரிமலை சன்னிதானத்திற்கு செல்ல முயன்ற இளம்பெண்களை தடுத்து நிறுத்தி பக்தர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

    ஐயப்ப பக்தர்கள் கடும் எதிர்ப்பு காரணமாக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறிய பிறகும் இளம்பெண்கள் யாரும் சபரிமலையில் தரிசனம் செய்ய முடியாத நிலையே உள்ளது.



    இந்த நிலையில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜைக்காக சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் நடை நாளை (16-ந்தேதி) மாலை 5 மணிக்கு திறக்கப்பட உள்ளது. தொடர்ந்து 41 நாட்கள் கோவில் நடை திறந்து இருக்கும். மண்டல பூஜை காலத்தில் இளம்பெண்கள் சாமி தரிசனத்திற்கு வர வாய்ப்பு உள்ளதால் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க மாநில அரசு ஏற்பாடுகளை செய்துள்ளது.

    இந்த நிலையில் புனேயை சேர்ந்த பூமாதா அமைப்பின் தலைவரும், பெண் உரிமைக்காக போராடி வருபவருமான திருப்திதேசாய் மண்டல பூஜையின்போது 6 இளம்பெண்களுடன் சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்யப்போவதாக அறிவித்து உள்ளார். அவரது அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பும் கிளம்பி உள்ளதால் மீண்டும் சபரிமலை விவகாரத்தில் பதட்டமான சூழ்நிலை உருவாகி உள்ளது.

    வடமாநிலங்களில் உள்ள சில கோவில்களில் பெண்கள் சாமி தரிசனம் செய்ய தடை உள்ளது. இந்த தடையை எதிர்த்து திருப்தி தேசாய் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகிறார். இந்த நிலையில் தான் சபரிமலைக்கு செல்வேன் என்று அவர் அறிவித்து உள்ளார்.

    இதுதொடர்பாக திருப்தி தேசாய் டுவிட்டரில் தனது கருத்தை பதிவு செய்து உள்ளார். அதில் சபரிமலை செல்லும் தனக்கு உரிய பாதுகாப்பு கேட்டு கேரள முதல்வர், போலீஸ் டி.ஜி.பி.க்கு கடிதம் எழுதி உள்ளதாக கூறி உள்ளார். இதுதொடர்பாக திருப்தி தேசாய் கூறியிருப்பதாவது:-

    சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் 6 இளம்பெண்களுடன் சென்று வருகிற 17-ந்தேதி காலை 7 மணிக்கு சாமி தரிசனம் செய்ய திட்டமிட்டு உள்ளேன். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி கோவிலுக்குள் நுழைவோம். இதற்காக 16-ந்தேதி (நாளை) விமானம் மூலம் நான் 6 இளம்பெண்களுடன் கேரளா செல்கிறேன். நாங்கள் விமானநிலையத்தில் இருந்து சபரிமலை சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பும் வரை உரிய பாதுகாப்பை கேரள அரசு எங்களுக்கு வழங்க வேண்டும்.

    நாங்கள் கோட்டயத்தில் பாதுகாப்பாக ஓட்டலிலோ, கேரள அரசு விருந்தினர் மாளிகையிலோ தங்க ஏற்பாடு செய்துதர வேண்டும். எனக்கு மிரட்டல்கள் அதிகம் இருப்பதால் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். எத்தனை மிரட்டல்கள் வந்தாலும் நாங்கள் சாமி தரிசனம் செய்யாமல் திரும்பமாட்டோம். ஜனநாயக நாட்டில் ஒரு குடிமகனுக்கு இருக்கும் உரிமைக்காக போராடத்தான் நான் சபரிமலை செல்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    சபரிமலையில் இளம்பெண்களை தரிசனத்திற்கு அனுமதிக்கக்கூடாது என்று ஐயப்ப தர்மசேனா அமைப்பின் தலைவர் ராகுல் ஈஸ்வர் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகிறார். திருப்திதேசாயின் சபரிமலை வருகை தொடர்பான அறிவிப்புக்கு ராகுல்ஈஸ்வர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    சபரிமலையில் ஐதீகத்தை மீறி இளம்பெண்கள் சாமி தரிசனம் செய்ய ஒருபோதும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். என்ன விலை கொடுத்தாவது அதை தடுப்போம். திருப்திதேசாய்யை சாமி தரிசனம் செய்யவிட மாட்டோம். எங்கள் பிணத்தை தாண்டிதான் இளம்பெண்கள் சபரிமலைக்கு செல்ல முடியும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இளம்பெண்களுடன் திருப்திதேசாய் சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளதால் மீண்டும் பதட்டமான சூழ்நிலை உருவாகி உள்ளது.  #Sabarimala #SabarimalaTemple  #TruptiDesai


    ×