என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செங்குன்றம் விபத்து"

    காரனோடையில் கண்டெய்னர் லாரி மோதி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தை கண்டித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
    செங்குன்றம்:

    சோழவரத்தை அடுத்த நெற்குன்றம் பள்ள சூரப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 42). கூலி தொழிலாளி. இவர் நேற்று இரவு காரனோடை பஜாரில் வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    அப்போது அந்த சாலையில் வந்த கனரக வாகனமான கண்டெய்னர் லாரி அதி வேகமாக வந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே ஏழுமலை பரிதாபமாக உயிர் இழந்தார்.

    இந்த விபத்து கனரக வாகனம் நகருக்குள் வந்ததால் ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்த அப்பகுதி மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தேசிய நெடுஞ்சாலையில் செல்லக்கூடிய லாரி நகருக்குள் அனுமதிக்கப்பட்டதை கண்டித்து 100-க்கும் மேற்பட்டவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து சோழவரம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். கனரக வாகனங்களை இனி அனுமதிக்க மாட்டோம் என்று உறுதி அளித்ததால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

    ஆனாலும் ஒரு மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற சாலை மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்படுகிறது.
    செங்குன்றம் அருகே விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செங்குன்றம்:

    இன்று காலை புழல்- அம்பத்தூர் சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்று கொண்டிருந்தன.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார், தாறுமாறாக ஓடி 2 மோட்டார் சைக்கிள்கள் மீது மோதி நின்றது. இதில் மோட்டார் சைக்கிள்களில் இருந்தவர்கள் கீழே விழுந்தனர்.

    எதிர்பாராமல் நடந்த இந்த விபத்தில் ஒரு மோட்டார் சைக்கிளில் இருந்த 2 பேரும், மற்றொரு மோட்டார் சைக்கிளில் இருந்த ஒருவரும் படுகாயம் அடைந்தனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு அடைந்தது.

    தகவல் அறிந்ததும் செங்குன்றம் போலீசார் அங்கு சென்று போக்குவரத்தை சரி செய்தனர். விபத்தில் காயம் அடைந்தவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

    அவருடைய பெயர் ராஜா (45). இவர் தனது மகன் பிரவீண்குமாரை (14) செங்குன்றத்தில் உள்ள ஒரு பள்ளியில் விடுவதற்காக தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்தபோது தாறுமாறாக ஓடிய கார் மோதி பலியாகி விட்டார்.

    மாணவர் பிரவீண்குமார் பலத்த காயத்துடன் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்து இந்த விபத்தில் சிக்கியவர் புருசோத்தமன் (46). அம்பத்தூரைச் சேர்ந்த இவரும் படுகாயம் அடைந்து ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகிறார்.

    காரை தாறுமாறாக ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் முருகன் (39) கைது செய்யப்பட்டார். மேலும் விசாரணை நடந்து வருகிறது.

    ×