search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shruthi Hariharan"

    அர்ஜுன் மீது நடிகை சுருதி ஹரிகரன் பாலியல் புகார் கூறியுள்ள நிலையில், ‘அர்ஜுன் நல்ல மனிதர்’ என்று வழக்கு விசாரணைக்கு ஆஜரான ‘விஸ்மய’ படத்தின் இயக்குனர் அருண் வைத்தியநாதன் விளக்கம் அளித்துள்ளார். #MeToo #ArjunSarja
    நடிகர் அர்ஜுன் மீது நடிகை சுருதி ஹரிகரன் பாலியல் புகார் கூறியுள்ளார். இந்த நிலையில், போலீஸ் முன்பு விசாரணைக்கு ஆஜரான ‘விஸ்மய’ படத்தின் இயக்குனர் அருண் வைத்தியநாதன் ‘நடிகர் அர்ஜுன் நல்ல மனிதர்’ என்று கூறினார்.

    ‘விஸ்மய’ (தமிழில் ‘நிபுணன்’ என்ற பெயரில் வெளியானது) படத்தின் படப்பிடிப்பின்போது நடிகர் அர்ஜுன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை சுருதி ஹரிகரன் குற்றம்சாட்டினார். இதுகுறித்து நடிகை சுருதி ஹரிகரன் கொடுத்த புகாரின் பேரில் நடிகர் அர்ஜுன் மீது கப்பன் பார்க் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.



    இந்த நிலையில், வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜரான படத்தின் உதவி பெண் இயக்குனர் மோனிகா, நடிகை சுருதி ஹரிகரனின் உதவியாளர் கிரண் ஆகியோர் நடிகை சுருதி ஹரிகரன் கூறிய குற்றச்சாட்டுக்கு ஆதரவாக நேற்று முன்தினம் போலீசாரிடம் விளக்கம் அளித்தனர். இதன் தொடர்ச்சியாக, நேற்று நடிகை சுருதி ஹரிகரனின் தோழி யசஸ்வினி கப்பன்பார்க் போலீசார் முன்பு ஆஜரானார். அப்போது, அவர் ‘நடிகர் அர்ஜுன் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக நடிகை சுருதிஹரிகரன் என்னிடம் கூறி கண்ணீர் சிந்தினார்’ என்பன போன்ற விவரங்களை கூறியுள்ளார்.

    இதேபோல், ‘விஸ்மய’ படத்தின் இயக்குனர் அருண் வைத்தியநாதன் வழக்கு சம்பந்தமாக நேற்று போலீசார் முன்பு ஆஜரானார். அப்போது, அவர் ‘நடிகர் அர்ஜுன் மீது நடிகை சுருதி ஹரிகரன் தெரிவித்து இருக்கும் பாலியல் குற்றச்சாட்டு பற்றி தனக்கு எதுவும் தெரியாது. நடிகர் அர்ஜுன் அப்படிப்பட்ட நபர் இல்லை. அவர் நல்ல மனிதர். படப்பிடிப்பின்போது நடிகர் அர்ஜுன், நடிகை சுருதி ஹரிகரன் ஆகியோர் நன்றாக பழகினர். படப்பிடிப்புக்கு வெளியே என்ன நடந்தது? என்பது பற்றி நான் அறிந்து கொள்ளவில்லை’ என்று கூறியுள்ளார்.



    இதேபோல், படத்தின் தயாரிப்பாளர் உமேசும், ‘படப்பிடிப்பின்போது நடிகை சுருதி ஹரிகரன் கூறுவது போன்று எதுவும் நடந்ததாக தெரியவில்லை. இதுதொடர்பாக என்னிடம் எந்த புகாரும் வரவில்லை’ என்று நேற்று போலீசாரிடம் கூறினார். #MeToo #ArjunSarja #ShruthiHariharan #ArunVaidyanathan #Nibunan #Vismaya 

    ‘மீ டூ’வில் நடிகர் அர்ஜுன் மீது நடிகை சுருதிஹரிகரன் பாலியல் புகார் கூறிய நிலையில், சுருதி விளம்பரத்துக்காக பொய் சொல்வதாக அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா கண்டனம் தெரிவித்துள்ளார். #MeToo #ArjunSarja #ShruthiHariharan
    கன்னட நடிகை சுருதி ஹரிஹரன் நடிகர் அர்ஜூன் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

    இந்த புகாருக்கு அர்ஜுன் மகளும். நடிகையுமான ஐஸ்வர்யா அர்ஜுன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    எதன் அடிப்படையில் என் தந்தை மீது சுருதி பாலியல் புகார் கூறுகிறார். நானும் ஒரு நடிகைதான். எனக்கு அனுபவம் மிகக் குறைவுதான். ஆனால் படத்தில் காதல் காட்சிகள் படமாக்கப்படும்போது என்ன நடக்கும் என்பது எனக்குத் தெரியும். என் தந்தை இயக்கிய ஒரு படத்தில் நான் நடித்திருக்கிறேன்.

    காதல் காட்சிகளில் எப்படி நடிக்க வேண்டும் என்பதை உதவி இயக்குனருடன் சேர்ந்து என் தந்தை எனக்கு நடித்துக் காண்பித்தார். உதவி இயக்குனருடன் அன்று அவர் நெருக்கமாக நடித்ததால் அந்த நபர் வெளியே வந்து அர்ஜூன் என்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்று சொல்ல முடியுமா?.

    இவையெல்லாமே நடிகர், நடிகையரின் வேலையில் ஒரு பகுதியாகும். அத்தனை பேர் முன்னிலையில் என் தந்தை எப்படி அத்துமீறி இருக்க முடியும். அப்படி என் தந்தை தவறு செய்திருந்தால் படப்பிடிப்பின் போதே சொல்லியிருக்கலாமே.



    என் தந்தை இரவு விருந்துக்கு அழைத்ததாக சுருதி சொல்கிறார். அதற்கெல்லாம் என் தந்தைக்கு ஏது நேரம். அவர் பப்புக்கோ, வேறு சொகுசு விடுதிகளுக்கோ போவதே கிடையாது. விஸ்மயா படம் குறித்து என்னிடமும் என் சகோதரியிடமும் என் தந்தை பேசிக்கொண்டிருந்தபோது படத்தில் நெருக்கமான காட்சிகள் இருப்பதாக இயக்குனர் கூறியதாகச் சொன்னார்.

    மேலும் அந்தக் காட்சிகளை குறைக்குமாறு சொல்லியிருப்பதாகவும் கூறினார். சுருதி முன்வைத்துள்ள அர்த்தமற்ற புகாரால் என் தந்தை அவரை நினைத்து வருத்தப்படவில்லை. எங்களை நினைத்தும் எங்கள் மனநிலையை நினைத்தும் தான் வருந்துகிறார். பாலியல் துன்புறுத்தல் என்பது மிகவும் வலுவான வார்த்தை. சுருதி அதைப் பயன்படுத்துவதற்கு முன் யோசித்திருக்க வேண்டும்.

    ஒரு பெண்ணாக மீடூ என்னும் இயக்கத்தை நான் மதிக்கிறேன். ஆனால் சுருதி போன்றவர்கள் விளம்பரத்துக்காக பொய் புகார் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஸ்ருதிக்கு எதிராக என் தந்தை சட்டப்படி கோர்ட்டில் மான நஷ்ட வழக்கு தொடர்வார்.

    இவ்வாறு அவர் கூறினார். #MeToo #ArjunSarja #ShruthiHariharan #AishwaryaArjun

    நடிகை சுருதி ஹரிகரன் கூறியுள்ள பாலியல் புகாருக்கு, நடிகர் அர்ஜூன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் வலியுறுத்தி உள்ளார். #MeToo #ShruthiHariharan #ArjunSarja
    நடிகர் அர்ஜூன் கதாநாயகனாக நடித்த படம் ‘நிபுணன்’. இந்த படத்தில் கதாநாயகியாக பெங்களூருவை சேர்ந்த நடிகை சுருதி ஹரிகரன் நடித்தார். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது, நடிகர் அர்ஜூன் தன்னை இறுக்கமாக கட்டிப்பிடித்து பாலியல் தொந்தரவு கொடுத்தார் என்று நடிகை சுருதி ஹரிகரன் குற்றம்சாட்டி இருக்கிறார். முன்னணி நடிகரான அர்ஜூன் மீது பாலியல் புகார் எழுந்துள்ள இந்த சம்பவம், சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்த பாலியல் புகார் குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது,

    அர்ஜூன் மூத்த நடிகர் என்பதை நாம் மறக்கக்கூடாது. ஆனால் பாலியல் புகார் கூறியுள்ள அந்த பெண், இவ்வளவு நாட்கள் தனக்கு ஏற்பட்ட அவமானம், காயத்தை, தனக்குள்ளேயே புதைத்து வைத்திருந்த வலியை நாம் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. தன் மீதான பாலியல் புகாரை அர்ஜூன் புறம்தள்ளினாலும், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இது அவரது பெருந்தன்மையை காட்டும்.



    பாதிக்கப்பட்ட பெண்கள் இப்போது ‘மீ டூ’ இயக்கத்தை தொடங்கி இருக்கிறார்கள். இது அடுத்து வரும் காலத்தில் பெண்கள் மீது நடைபெறும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு முடிவு கட்டட்டும்.

    இவ்வாறு பிரகாஷ்ராஜ் கூறினார். #MeToo #ShruthiHariharan #ArjunSarja #Prakashraj

    நடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் கூறியுள்ள சுருதி ஹரிஹரன் மீது மீது சட்டப்படி கோர்ட்டில் மான நஷ்ட வழக்கு தொடர முடிவு செய்துள்ளதாக அர்ஜுன் தெரிவித்துள்ளார். #MeToo #ArjunSarja #ShruthiHariharan
    சமீப காலமாக ‘மீ டூ’ அமைப்பு மூலம் சினிமா பிரபலங்கள் பாலியல் ரீதியாக தங்களுக்கு ஏற்பட்ட தொல்லைகளை வெளி யிட்டு வருகிறார்கள்.

    கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் புகார் கூறியதையடுத்து தற்போது மற்றொரு பிரபல நடிகரான அர்ஜுன் மீது நடிகை சுருதி ஹரிகரன் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். நிபுணன் படத்தில் நடித்த போது நடிகர் அர்ஜுன் தவறாக நடந்து கொண்டதாக சுருதி ஹரிஹரன் தெரிவித்திருந்தார். 

    இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள நடிகர் அர்ஜுன் கூறியிருப்பதாவது:-

    இந்த புகாரை நான் எதிர்பார்க்கவில்லை. நான் 150 படங்களில் 60 முதல்70 கதாநாயகிகளுடன் நடித்து இருக்கிறேன். ஆனால் யாரும் என்னைப் பார்த்து கையை நீட்டி புகார் கூறியதில்லை.



    சுருதி அந்தப் படத்தில் மிகவும் விரும்பி நடித்தார். என்னுடன் பல படங்களில் நடிக்க விரும்புவதாக கூறினார். நான் முழுக்க முழுக்க தொழில் ரீதியான நடிகன். டைரக்டர் விருப்பப் படிதான் நான் அவருடன் நடித்தேன். அதை மீறி நான் நடிக்கவில்லை. இந்த புகார் பற்றி எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எப்படி புரிய வைப்பேன் என்று கவலையாக உள்ளது. சுருதியை நான் ஒரு போதும் விருந்துக்கு அழைத்தது இல்லை. எனவே என் மீது தவறான புகார் கூறிய சுருதி ஹரிகரன் மீது சட்டப்படி கோர்ட்டில் மான நஷ்ட வழக்கு தொடர முடிவு செய்துள்ளேன்.

    இந்த புகாரின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை.

    இவ்வாறு அர்ஜுன் கூறியுள்ளார். #MeToo #ArjunSarja #ShruthiHariharan

    நிபுணன் படத்தில் நடித்த போது நடிகர் அர்ஜுன் தனக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக நடிகை ஸ்ருதி ஹரிஹரன் குற்றம்சாட்டியுள்ளார். #MeToo #ShruthiHariharan #ArjunSarja
    இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா மற்றும் தமிழ் பாடகி சின்மயியைத் தொடர்ந்து ‘மீ டூ’ இயக்கம் மூலம் தினந்தோறும் பாலியல் குற்றச்சாட்டுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. திரையுலகம் உட்பட்ட பல்வேறு துறைகளில் உள்ள முக்கிய பிரமுகர்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன.

    சமீபத்தில் குறும்பட இயக்குனர் லீனா மணிமேகலை, தொலைக்காட்சி தொகுப்பாளினி ஸ்ரீரஞ்சினி உள்ளிட்டோரும் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் மீது குற்றச்சாட்டை வைத்துள்ளனர்.



    இந்த நிலையில், நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பிரபல நடிகர் அர்ஜுன் மீது பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ளார். ஸ்ருதி நிபுணன் படத்தில் அர்ஜுன் மனைவியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து ஸ்ருதி ஹரிஹரன் அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

    எனக்கு பாலியல் தொல்லைகள் நடக்கும் போதெல்லாம் உடல் ரீதியாக அங்கிருந்து வெளியேறிவிட்டேன், ஆனால் மனரீதியாக அது பயத்தை உண்டாக்கி என்னை பாதித்துவிட்டது. கடந்த 2016-ஆம் ஆண்டில் நடந்த ஒரு சம்பவத்தில் இருந்து வெளிவர நான் ரொம்பவே கஷ்டப்பட்டேன். அப்போது இரு மொழிகளில் உருவாகி வந்த ஒரு படத்தில் நான் நடித்துவந்தேன். அதில் நடிகர் அர்ஜுன் சர்ஜா தான் நாயகன். அவருடைய படங்களை பார்த்து வளர்ந்தவள் நான். அவருடன் நடிப்பது குறித்து ரொம்பவே மகிழ்ச்சியாக இருந்தேன். படப்பிடிப்பு துவங்கிய சில நாட்களுக்கு எனக்கு எதுவும் தோன்றவில்லை, அந்த படத்தில் நான் அவரது மனைவியாக நடித்தேன். 



    ஒரு நாள் படப்பிடிப்பில் நாங்கள் இருவரும் ரொமான்ஸ் செய்வது போன்ற ஒரு காட்சி இருந்தது. அதில் ஒரு நீளமான வசனத்திற்கு பிறகு நானும், அவரும் கட்டிப் பிடித்து நடிக்க வேண்டி இருந்தது. அந்த காட்சியை நாங்கள் ஒத்திகை பார்த்த போது, அர்ஜுன் திடீரென என்னை கட்டிப்பிடித்தார். என்னிடம் எதுவும் சொல்லாமல், என் அனுமதியை பெறாமல் என்னை கட்டி அணைத்து எனது பின் பகுதியில் மேலும், கீழும் அவர் கையை படறவிட்டார். என்னை மேலும் இறுக்கி அணைத்து, வேண்டுமென்றால் இந்த காட்சியை வைத்துக் கொள்ளலாமா என்று இயக்குநரிடம் கேட்டார்.

    சினிமாவில் காட்சிகள் இயல்பாக வர வேண்டும் என்பதற்காக இப்படி நடந்து கொள்வது தவறு. அவர் சினிமாவுக்காக அப்படி நடந்து கொண்டிருந்தாலும் அது தவறு தான். அவர் செய்தது எனக்கு அது பிடிக்கவில்லை, என்ன சொல்வதென்றே எனக்கு தெரியவில்லை. 

    இவ்வாறு கூறியுள்ளார். #MeToo #ShruthiHariharan #ArjunSarja



    ×