search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "S Ve Shekar"

    பெண் பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறாக பேசியது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் எஸ்.வி.சேகர் எழும்பூர் கோர்ட்டில் இன்று ஆஜரானார். #SVeShekar
    சென்னை:

    பா.ஜனதா கட்சி பிரமுகரும், காமெடி நடிகருமான எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறாக வெளியிட்டிருந்த கருத்து கடும் எதிர்ப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக பத்திரிகையாளர்கள் அளித்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் எஸ்.வி.சேகர் மீது வழக்கு பதிவு செய்தனர். ஆனால் அவரை கைது செய்வதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதே நேரத்தில் எஸ்.வி.சேகர் இந்த வழக்கில் முன்ஜாமீன் பெறுவதற்காக கோர்ட்டை நாடினார்.

    ஆனால் கோர்ட்டு முன் ஜாமீன் அளிக்கவில்லை. சாதாரண நபர்கள் மீது இதுபோன்ற வழக்குகளில் என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறதோ? அதே நடவடிக்கையை எஸ்.வி.சேகர் மீது எடுக்கலாம் என்று கோர்ட்டு பரிந்துரைத்தது. இருப்பினும் எஸ்.வி.சேகரை போலீசார் கைது செய்யவில்லை.

    இதற்கிடையே எஸ்.வி. சேகர் மீது சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகில் உள்ள அல்லிகுளம் எழும்பூர் கோர்ட்டில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டால் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்ய வேண்டியதில்லை என்று சட்டம் சொல்கிறது.

    இதன் காரணமாகவே மத்திய குற்றப்பிரிவு போலீசார் எஸ்.வி.சேகரை கைது செய்யாமல் அவர் மீது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். இதனை தொடர்ந்து எஸ்.வி.சேகர் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று எழும்பூர் கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதன்படி எஸ்.வி.சேகர் இன்று காலை 10 மணி அளவில் எழும்பூர் கோர்ட்டில் ஆஜர் ஆனார். இதற்காக சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகில் உள்ள அல்லி குளம் கோர்ட்டு வளாகம் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டிருந்தது.



    கோர்ட்டு வளாகத்தில் 3 வாயில்களிலும் ஏராளமான போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். துணை கமி‌ஷனர் சரவணன் தலைமையில் கோர்ட்டு வளாகம் முழுவதிலும் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    எஸ்.வி.சேகர், கோர்ட்டில் ஆஜராவதை படம் பிடிப்பதற்காக ஏராளமான பத்திரிகையாளர்கள் திரண்டிருந்தனர். இவர்கள் அனைவரும் கோர்ட்டு வளாகத்தினுள் அனுமதிக்கப்படாமல் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.

    எஸ்.வி.சேகர் காரில் கோர்ட்டு வளாகத்தில் நுழைந்ததும், பத்திரிகையாளர்களும் படம் எடுப்பதற்காக முண்டியடித்தனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் லேசான மோதல் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பத்திரிகையாளர்கள் போலீஸ் எதிர்ப்பை தாண்டி முண்டியடித்துக் கொண்டு உள்ளே சென்றனர்.

    எஸ்.வி.சேகருடன் காரில் போலீஸ்காரர் ஒருவரும் பாதுகாப்புக்காக உடன் வந்தார். காரில் இருந்து இறங்கியதும் எஸ்.வி.சேகரை சூழ்ந்து கொண்ட போலீசார் அவரை சுற்றி அரண் போல நின்றனர். பலத்த பாதுகாப்புடன் கோர்ட்டுக்குள் எஸ்.வி.சேகர் ஆஜராவதற்காக அழைத்துச் செல்லப்பட்டார். எஸ்.வி. சேகருக்கு வரலாறு காணாத வகையில் போலீசார் பாதுகாப்பு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. #SVeShekar

    சட்டசபையில் எஸ்.வி.சேகரை கைது செய்யாதது ஏன் என்பது பற்றிய விவாதத்தின்போது சபாநாயகர் பேச அனுமதிக்காததால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். #DMK #MKStalin #TNassembly
    சென்னை:

    சட்டசபையில் இன்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து நடிகர் எஸ்.வி.சேகரை இதுவரை கைது செய்யாதது ஏன்? என்று ஒரு பிரச்சினையை கிளப்பினார். அப்போது நடந்த விவாதம் வருமாறு:-

    மு.க.ஸ்டாலின்: முன்னாள் எம்.எல்.ஏ. நடிகர் எஸ்.வி.சேகர் பெண் பத்திரிகையாளரை தரக்குறைவாக பேசியதற்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    சபாநாயகர்: நான் அரசிடம் இதுபற்றி விசாரித்தேன். இந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. இதில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு 20-ந்தேதி அவர் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே அதுபற்றி விவாதிக்க வேண்டாம்.

    ஸ்டாலின்: எஸ்.வி.சேகர் போலீஸ் துணையுடன் சுதந்திரமாக நடமாடி வருகிறார்.



    சபாநாயகர்: இது எதிர்க்கட்சி தலைவருக்கு தெரியாதது அல்ல. நீதிமன்ற நடவடிக்கையில் இருப்பதை நாம் இங்கு விவாதிப்பது சரியாக இருக்காது.

    ஸ்டாலின்: நீதிமன்ற நடவடிக்கை பற்றி நான் பேச விரும்பவில்லை, அதற்குள் போக விரும்பவில்லை. காவல்துறை ஏன் கைது செய்யவில்லை என்று கேட்கிறேன்.

    சபாநாயகர்: நீதிமன்றத்திற்கு 20-ந்தேதி வருமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    ஸ்டாலின்: ஏற்கனவே நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை போலீஸ் ஏன் நிறைவேற்றவில்லை.

    சபாநாயகர்: நீங்கள் திரும்ப திரும்ப இதுபற்றி விவாதித்து வருகிறீர்கள். நீதிமன்ற உத்தரவு இருப்பதால் அவையில் இதை விவாதிப்பது சரியாக இருக்காது. 20-ந்தேதி வரை பொறுத்திருந்து அதன்பிறகு இதுபற்றி பேசலாம்.

    ஸ்டாலின்: போலீஸ் ஏன் அவரை கைது செய்யவில்லை என்பதைத்தான் கேட்கிறேன்.

    (சபாநாயகர் தொடர்ந்து அவருக்கு பேச அனுமதி மறுத்ததால் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் எழுந்து நின்றனர். அவர்களை ஸ்டாலின் உட்கார வைத்தார்).

    சபாநாயகர்:- இந்த வி‌ஷயத்தில் நீதிமன்றம் உத்தரவு கொடுக்கவில்லை என்றால் உங்களை பேச அனுமதித்து இருப்பேன்.

    ஸ்டாலின்:- இந்த வழக்கு ஏப்ரல் மாதம் முதல் நடந்து வருகிறது. ஏன் அவரை இதுவரை கைது செய்யவில்லை. அவரை போலீஸ் கைது செய்யாததால்தான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

    சபாநாயகர்:- இந்த வி‌ஷயத்தை இங்கு இப்போது பேச அனுமதித்தால் நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாகிவிடுவோம். வேறு வி‌ஷயம் இருந்தால் பேசுங்கள் அனுமதிக்கிறேன். இந்த வி‌ஷயம் குறித்து விவாதிக்க வேண்டாம்.

    சபாநாயகர் பேச அனுமதி அளிக்காததால் மு.க.ஸ்டாலின் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். அவரைத் தொடர்ந்து தி.மு.க.வினரும் வெளிநடப்பு செய்தனர்.

    இந்த விவாதம் நடந்து கொண்டு இருந்தபோதும், தி.மு.க. வெளிநடப்பு செய்த போதும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவையில் இருந்து விவாதங்களை கவனித்துக் கொண்டு இருந்தார்.

    சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான எஸ்.வி.சேகர் பத்திரிகை துறையில் பணிபுரிந்து கொண்டிருக்கக்கூடிய பெண் ஊழியர்களை தரங்கெட்ட வகையில் சில விமர்சனங்களை செய்திருக்கிறார். அதை முகநூலில் அவருடைய பெயரிலேயே பதிவு செய்திருக்கிறார்.

    இதுகுறித்து பத்திரிகையாளர்கள் மாநகர காவல் துறையை சந்தித்து கடந்த ஏப்ரல் 20-ந்தேதி அவர் மீது புகார் கொடுத்திருக்கிறார்கள். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவரை கைது செய்வதற்கான முயற்சிகளில் காவல்துறை ஈடுபட்டிருக்கிறது.

    ஆனால் அதை எதிர்த்து எஸ்.வி.சேகர் முன்ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். முன் ஜாமீன் வழங்க முடியாது என்று அவரது மனுவை உயர்நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்திருக்கிறது.

    அவர் தலைமைச் செயலாளரின் உறவினர் என்பதால் அவரை இதுவரை கைது செய்யவில்லை. போலீஸ் பாதுகாவலுடன் சென்று சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க தேர்தலில் ஓட்டு போட்டு இருக்கிறார். பல்வேறு பொது நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்று இருக்கிறார்.

    ஆனால் இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை. சபையில் இதுபற்றி பிரச்சினை கிளப்பியபோது இது நீதிமன்ற நடைமுறையில் இருப்பதாக கூறி சபாநாயகர் பேச அனுமதிக்கவில்லை. எனவே அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாங்கள் வெளிநடப்பு செய்தோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #DMK #MKStalin #TNassembly #SVeShekar

    போலீசாருக்கே சவால் விடும் எஸ்.வி. சேகரை கைது செய்யாவிட்டால், அனைத்துக் கட்சிகளையும் ஒன்று திரட்டி பெரும் போராட்டத்தை நடத்த நேரிடும் என்று கி.வீரமணி கூறியுள்ளார்.
    சென்னை:

    திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பா.ஜ.க. பிரமுகர் எஸ்.வி.சேகர் ஊடகத் துறைகளைச் சேர்ந்த பெண்களை இழிவுபடுத்தி, கொச்சைப்படுத்தி சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார். பெண்கள் மட்டுமல்ல, அனைவரும் கடுமையான வகையில் கண்டனத்தை தெரிவித்து, வழக்குத் தொடுக்கப்பட்ட நிலையில் அவர்மீது, வழக்கு தொடரப்பட்டு உள்ளது. அவரது முன்ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

    இந்த சூழ்நிலையில், அவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், எஸ்.வி.சேகர் ஒரு விழா நிகழ்ச்சியில் பங்கு கொண்டதையும், தனக்கு வணக்கம் தெரிவித்ததையும் ஒப்புக்கொண்டுள்ளார். இதைவிடக் கொடுமை என்னவென்றால், நான் சென்னையில் தான் இருக்கிறேன். காவல்துறை முடிந்தால் கைது செய்து பார்க்கட்டும் என்று சவால் விடுத்துள்ளார்.

    காவல்துறை எஸ்.வி.சேகர் விஷயத்தில் கைகட்டிக் கொண்டு இருப்பது ஏன்?. யாருடைய கட்டளையால் இந்த நிலை?. தமிழக அரசின் தலைமைச் செயலாளரே பின்னணியில் இருக்கிறார் என்ற கருத்துப் பரவலாக இருக்கிறதே. உடனே, சவால் விடும் எஸ்.வி. சேகரை கைது செய்யாவிட்டால், அனைத்துக் கட்சிகளையும் ஒன்று திரட்டி பெரும் போராட்டத்தை நடத்த நேரிடும் என்று எச்சரிக்கின்றோம்.

    இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார். #tamilnews
    ×