search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rescue efforts"

    • நிலநடுக்கத்தில் இதுவரை 118 பேர் உயிரிழந்துள்ளனர்; பல வீடுகள் இடிந்து விழுந்தன
    • ட்சாய், ஆங்கிலத்திலும், எளிமையான சீன மொழியிலும் பதிவிட்டுள்ளார்

    நேற்று மதியம், சீனாவின் வடமேற்கு எல்லையில் கிங்காய்-திபெத் பீடபூமி (Qinghai-Tibet plateau) பிராந்தியத்தில் கான்சு-கிங்காய் (Gansu-Qinghai) எல்லைக்கருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

    ரிக்டர் அளவுகோலில் 6.2 என பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தில் தற்போது வரை 118க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்; ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். பல வீடுகள் இடிந்து விழுந்தன.

    பலர் உயிரை காத்து கொள்ள பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.

    சீன அரசு, மீட்பு பணிகளை விரைவாக துவங்கியுள்ளது. சீன அதிபர் ஜி ஜின்பிங் இடிபாடுகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கவும், பாதிக்கப்பட்டோருக்கு புகலிடம் மற்றும் உடனடி நிவாரணம் கிடைக்க ஒருங்கிணைந்த முயற்சிக்கு உத்தரவிட்டார்.

    இந்நிலையில், வடகிழக்கு பசிபிக் கடலில் உள்ள தீவு நாடான தைவான் நாட்டின் முதல் பெண் அதிபர், ட்சாய் இங்-வென் (Tsai Ing-Wen), சீனாவில் உயிரிழந்தவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். அத்துடன் சீனாவிற்கு தேவையான உதவிகளை வழங்க தைவான் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

    தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் ட்சாய் ஆங்கிலத்திலும், எளிமையான சீன மொழியிலும் இரங்கலை பதிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தனது பதிவில், "நிலநடுக்கத்தில் தங்களின் உயிருக்கு உயிரானவர்களை இழந்து வாடும் சீனர்களுக்கு எனது இதயபூர்வமான இரங்கலை தெரிவிக்கிறேன். உதவிகள் தேவைப்படும் நிலையில் உள்ள அனைவருக்கும் அனைத்து உதவிகளும் கிடைக்க பிரார்த்திக்கிறேன். விரைவில் நிலைமை சீரடையும் என நாங்கள் நம்புகிறோம். கடினமான இயற்கை பேரிடர் மீட்பு பணியில் சீனாவிற்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் வழங்க தைவான் தயாராக உள்ளது" என தெரிவித்தார்.

    சுயாட்சி பெற்ற நாடாக தன்னை தைவான் அறிவித்தாலும், சீனா அந்நாட்டின் மீது முழு உரிமை கொண்டாடி வருகிறது.

    சீனாவிற்கும் தைவானுக்கும் இடையே இது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் விஷயமாக இருந்து வரும் நிலையில், சீனா தனது உரிமையை நிலைநாட்ட தைவானின் வான்வெளியிலும், நீர்பரப்பிலும், தனது ராணுவ ஆதிக்கத்தை அதிகரித்து வந்தது.

    ஆனால், கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி விட்டு, தைவான் அதிபர் உதவிக்கரம் நீட்டுவதை அரசியல் விமர்சகர்கள் வரவேற்றுள்ளனர்.

    2008ல் சீனாவின் சிச்சுவான் பிராந்தியத்தில் (Sichuan province) ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது சுமார் 70 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். அப்போதும் தைவான், சீனாவிற்கு நேசக்கரம் நீட்டி தன் நாட்டிலிருந்து நிபுணர் குழுவை அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.

    • 17 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்
    • புவியியல் சூழல் மிகவும் சவாலாக இருந்ததாக ஐரோப்பிய நிறுவனம் தெரிவித்தது

    பெரும் மழை, கடும் பனி, மலைச்சரிவு, வெள்ளம் உள்ளிட்ட அனைத்துவிதமான பருவகால மாற்றங்களிலும் சீராக பக்தர்கள் பயணிக்கும் வகையில் கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதர்நாத் மற்றும் பத்ரிநாத் எனப்படும் நான்கு இந்து மத புனித தலங்களை இணைக்கும் வகையில் "சார் தாம்" (Char Dham) சாலைகள் அமைக்கும் திட்டத்தில் சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

    மலைமாநிலம் என அழைக்கப்படும் உத்தரகாண்ட்டில், உத்தரகாசி மாவட்டத்தில் அமைக்கப்படும் சாலை பணிகளின் தொடர்ச்சியாக எண்-134 தேசிய நெடுஞ்சாலையில் சில்க்யாரா வளைவு - பார்கோட் பகுதியில் ஒரு சுரங்கம் அமைக்கப்பட்டு வந்தது.

    கடந்த நவம்பர் 12 அன்று காலை 05:30 மணியளவில் இதன் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் சுரங்க நுழைவாயிலில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ளே பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். 17 நாட்களுக்கு பிறகு பெரும் போராட்டத்திற்கு பிறகு அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    இந்நிலையில், இந்த சுரங்கம் இடிந்து விழுவது இது முதல் முறை அல்ல என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    "இரு புறம் எதிரெதிர் திசையில் மக்கள் பயணிக்க கூடிய வகையில் அமைக்கப்பட்ட சுமார் 4.5 கிலோமீட்டர் தூரம் உள்ள இந்த சுரங்க பாதையில் இது போன்ற நிகழ்வுகள் சுமார் 20 முறை ஏற்பட்டுள்ளது. சுரங்கங்கள் அமைக்கும் பணியில் இடிந்து விழும் நிகழ்வு வழக்கமான ஒன்றுதான். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இம்முறை 41 தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். 'கேவிட்டி' என அழைக்கப்படும் இத்தகைய இடிந்து விழும் நிகழ்வுகள், சில்க்யாரா பகுதியை விட பார்கோட் பகுதியில் அதிகம் நடந்தன" என பொதுத்துறை நிறுவனமான தேசிய நெடுஞ்சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவன (NHIDCL) இயக்குனர் தெரிவித்துள்ளார்.

    இந்த சாலை பணிகளுக்கான ஒப்பந்தத்தை நவயுகா எஞ்சினியரிங் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி எனும் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்நிறுவனத்திற்கு செயல்திட்ட வடிவமைப்பை வழங்கும் பணியை ஐரோப்பிய நிறுவனமான பெர்னார்ட் க்ரூப் (Bernard Gruppe) முன்னெடுத்தது. முன்னர், இந்நிறுவனம், சுரங்கம் அமைக்கும் இடங்களின் புவியியல் சூழல், ஆவணங்களில் கொடுக்கப்பட்டிருந்ததை காட்டிலும் பெரும் சவாலாக இருந்தது என குறிப்பிட்டிருந்தது.

    ஆனால், மலைப்பகுதியில் சுரங்க சாலைகள் அமைக்கும் பணி மிகவும் சிக்கலானது என ஒப்பு கொள்ளும் கட்டிட வல்லுனர்கள், கான்க்ரீட் சாலைகளும் சுரங்கமும் கட்டுவது நிறைவடைந்தால், அதன் பிறகு அது இடிந்து விழும் சாத்தியம் மிக குறைவு என கூறுகின்றனர்.

    • பல சவால்களுக்கு இடையே போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் தொடர்கின்றன
    • பி.கே. மிஷ்ரா, சிக்கிய தொழிலாளர்களுடன் தொலைத்தொடர்பு வழியாக உரையாடினார்

    உத்தரகாண்ட் (Uttarakhand) மாநிலத்தின் உத்தரகாசி (Uttarakashi) மாவட்டத்தில் மழை, வெயில், பனி, மலைச்சரிவு என அனைத்துவிதமான இயற்கை மாறுதல்களினால் ஏற்படும் பருவகால மாற்றங்களால் தடைபடாமல் மக்கள் பயணிக்கும் வகையில் சாலைகள் அமைக்கப்படும் பணிகள் நடந்து வந்தன.

    இதன் ஒரு பகுதியாக, எண் 134 தேசிய நெடுஞ்சாலையின் (NH-134) கடைசியில் யமுனோத்ரிக்கு அருகே அவ்வாறு அமைக்கப்பட்டு வந்த ஒரு நீண்ட சாலையில் சில்க்யாரா வளைவு - பார்கோட் பகுதியில் ஒரு சுரங்கம் அமைக்கப்பட்டு வந்தது.

    கடந்த நவம்பர் 12 அன்று காலை 05:30 மணியளவில் இந்த சில்க்யாரா சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. சுரங்கத்தின் நுழைவாயிலில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் இதில் சுரங்கத்தின் உள்ளே பணியில் இருந்த 41 கட்டுமான ஊழியர்கள் சிக்கி கொண்டனர்.

    அவர்களை மீட்கும் பணியை போர்க்கால அடிப்படையில் இந்திய அரசாங்கம் முடுக்கி விட்டது.

    மீட்பு பணிக்கு உபயோகப்படுத்தப்பட்டு வந்த இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறினால் பணிகளில் சிறிது தொய்வு ஏற்பட்டது. இதன் காரணமாக ஆட்களை கொண்டு, இயந்திர உதவி இல்லாமல், துளையிட்டு மீட்கும் முயற்சி துவங்கியுள்ளது.

    இதற்கிடையே, மலைப்பகுதியில் மழைப்பொழிவு ஏற்பட கூடும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது. அங்கு ஏற்கெனவே வெப்பம் 4 டிகிரி செல்சியஸிற்கும் குறைவாக உள்ளது. இது அந்த தொழிலாளர்களின் குடும்பத்தினரை மட்டுமின்றி இந்தியர்கள் அனைவரையும் கவலை கொள்ள செய்தது.

    இந்நிலையில், உள்ளே சிக்கியுள்ள பணியாளர்களின் குடும்பத்தினருக்கு நம்பிக்கை தரும் விதமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மை செயலாளர் (principal secretary) பிரமோத் குமார் மிஷ்ரா (P.K. Mishra) இன்று அங்கு வருகை தந்தார்.


    மிஷ்ரா அங்கு நடைபெறும் மீட்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டு அங்குள்ள அதிகாரிகளிடம் அனைத்து விவரங்களையும் கேட்டறிந்தார். தொழிலாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள உணவு, மருந்து பொருட்கள், குடிநீர் உள்ளிட்ட விவரங்களை குறித்து கொண்டார்.

    அது மட்டுமின்றி, சிக்கிய தொழிலாளர்களிடம் பி.எஸ்.என்.எல். (BSNL) தரைவழி தொலைத்தொடர்பு சாதனம் வழியாக சிறிது நேரம் உரையாடினார். அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் மீட்பு நடவடிக்கைகள் விரைவாக நடைபெற்று வருவதாக கூறினார்.

    துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் சிக்கி கொண்ட தொழிலாளர்கள் அனைவரும் பத்திரமாக வெளியே வருவதை நாடே எதிர்பார்த்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • தேவாலயத்தில் ஞானஸ்னானம் எனும் சடங்கு நடைபெற்று கொண்டிருந்தது
    • இறந்த 10 பேரில் 5 பேர் பெண்கள், 2 பேர் ஆண்கள் மற்றும் 3 பேர் குழந்தைகள்

    மெக்சிகோ நாட்டின் வடக்கே உள்ள டமாலிபாஸ் (Tamaulipas) பகுதியில் உள்ள மெக்சிகோ வளைகுடாவின் கடற்கரையோர நகரம், சியுடாட் மடேரோ (Ciudad Madero). இங்கு சுமார் 2 லட்சம் பேர் வசிக்கின்றனர்.

    நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுமார் 80 பேருக்கும் மேற்பட்ட கிறித்துவ மக்கள் அங்குள்ள சான்டா க்ரூஸ் தேவாலயத்தில் வழிபாட்டிற்காக கூடியிருந்தனர். அங்கு 'ஞானஸ்னானம்' எனும் கிறித்துவ மத சடங்கு நடைபெற்று கொண்டிருந்தது.

    அப்போது எதிர்பாராதவிதமாக அந்த தேவாலயத்தின் மேற்கூரை இடிந்து கீழே விழுந்தது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்தனர்; 60-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

    இறந்த 10 பேரில் 5 பேர் பெண்கள், 2 பேர் ஆண்கள் மற்றும் 3 பேர் குழந்தைகள். காயமடந்த 60 பேரில் 23 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் 2 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

    இடிபாடுகளுக்கிடையே 80 பேர் இன்னமும் சிக்கி உள்ளதாகவும் அவர்களை பத்திரமாக மீட்க காவல்துறை மற்றும் சமூக சேவை அமைப்புகளுடன் இணைந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் டமாலிபாஸ் கவர்னர் அமெரிக்கொ வில்லாரியல் (Americo Villarreal) தனது எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

    மீட்பு நடவடிக்கைக்கு உதவ தேவைப்படும் ஹைட்ராலிக் லிஃப்ட், மரங்கள், சுட்டி உட்பட பல உபகரணங்களை தந்து உதவ கோரி சமூக வலைதளங்களில் அப்பகுதி மக்கள் பதிவிட்டு வருகின்றனர்.

    ×