search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Red sandalwood smuggling"

    திருப்பதி அருகே திருமணம் செய்த புதுமண தம்பதிகளை ஏற்றி செல்வது போல காரை அலங்கரித்து செம்மரம் கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர். #RedSandalwood
    திருமலை:

    திருப்பதி அருகே உள்ள மங்கலம் திருமலா நகரில் இருந்து சேஷாசலம் வனப்பகுதிக்கு செல்லும் மெயின்ரோட்டில் செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    திருமண அலங்காரத்துடன் பிடிபட்ட கார்

    அப்போது மணமக்களை ஏற்றி செல்வது போன்ற அலங்கரிக்கப்பட்ட கார் ஒன்று வந்தது. மார்கழி மாதம் திருமணம் எதுவும் நடக்காது.

    திருமண சீசன் முடிந்த நிலையில் அலங்காரத்துடன் சென்ற கார் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. போலீசார் காரை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்.

    அப்போது காரில் செம்மரம் கடத்துவது தெரியவந்தது. அதிலிருந்த 10 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.

    மேலும் அதனை கடத்தி வந்த சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த துரைவேலு (24), திலீப்குமார் (23), தேஜா (25), மஸ்தான் (24) ஆகியோரை கைது செய்தனர்.

    இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. திலீப்குமார் மீது கொலை வழக்கு உள்ளது. சமீபத்தில் திருப்பதியில் தொப்பி வியாபாரம் செய்து வந்தார். செம்மரம் எங்கு கடத்தி செல்லப்பட்டது. ஏஜெண்டுகள் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.  #RedSandalwood


    திருப்பதி அருகே செம்மரம் கடத்தியதாக போளூர் வாலிபர் கைது செய்யப்பட்டார். செம்மர கடத்தலில் இவரை தவிர வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவண்ணாமலை:

    திருப்பதி சேஷாசலம் வனப்பகுதி அலிபிரி பகுதியில் செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வன விலங்கு பூங்கா பகுதியில் ஒரு கார் நிற்பதை கண்ட செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அந்த காரை சுற்றி வளைக்க முயற்சி செய்தனர்.

    போலீசாரை கண்ட மர்ம நபர் காரை வேகமாக ஓட்டி சென்றார். போலீசார் அந்த காரை விரட்டி சென்றனர். காரில் இருந்த மர்ம நபர் காரை நிறுத்தி விட்டு வனப்பகுதிக்குள் தப்பி ஓடிவிட்டார். காரை பறிமுதல் செய்த போலீசார் வனப்பகுதியில் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது வனப்பகுதியில் மறைந்திருந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அந்த நபர் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலூகா மங்காபுரம் பகுதியை சேர்ந்த சுரேஷ் (35) என்பது தெரியவந்தது.

    மேலும் அந்த நபர் சபரி மலை செல்ல மாலை அணிந்து இருந்தார். போலீசார் காரை சோதனை செய்த போது காரின் பின் பகுதியில் செம்மர கட்டைகள் அடுக்கி வைத்திருந்தனர். மேலும் போலியாக தயாரிக்கப்பட்ட ஆந்திர மாநில பதிவெண் போர்டுகளும் இருந்தது. செம்மர கடத்தலில் இவரை தவிர வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆந்திராவில் இருந்து சென்னைக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள செம்மர கட்டைகளை கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். #RedSandalwood
    நகரி:

    ஆந்திர மாநிலம் நாராயணவரத்தில் இருந்து சென்னை பூந்தமல்லிக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள சந்தன கட்டைகள் லாரியில் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, ஆந்திர மாநில தனிப்படை போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு லட்சுமி நாராயணன் தலைமையில், போலீசார் செம்மர கட்டை கடத்தல் லாரியை பிடிக்க வியூகம் வகுத்தனர். இந்த நிலையில், இன்ஸ்பெக்டர் அசோக்குமார், நகரியில் கடத்தல் லாரியை போலீஸ் படையுடன் மடக்கிப் பிடித்தார்.

    செம்மர கட்டைகளுடன் வந்த இந்த லாரியின் முன்புறம் கர்நாடக மாநில வாகன பதிவு எண்ணும், பின்னால் கேரள மாநில பதிவு எண்ணும் இருந்தது. போலீசார் லாரியை நிறுத்தியதும் அதில் இருந்த 8 பேர் இறங்கி ஓடினார்கள்.

    அதில் 2 பேரை போலீசார் விரட்டிச் சென்று பிடித்தனர். அவர்களில் ஒருவர் லாரி டிரைவர். இவருடைய பெயர் பன்னி. இவர் ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்.

    போலீசாரிடம் சிக்கிய இன்னொருவர் பாலவர்தன் ரெட்டி. இவர், ஜவ்வாது மலை பகுதியில் செம்மர கட்டைகளை வெட்ட ஆட்களை ஏற்பாடு செய்பவர் என்று தெரிய வந்துள்ளது. இவர்களை இன்ஸ்பெக்டர் அசோக்குமார், நகரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனுசாமி ஆகியோர் கைது செய்தனர். ரூ.1 கோடி மதிப்புள்ள செம்மர கட்டைகளுடன் லாரி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணை நடந்து வருகிறது. #RedSandalwood

    ×