search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Public Crowd"

    • டவுன் ரதவீதிகள் உள்ளிட்ட இடங்களில் பொருட்கள் வாங்குவதற்கு பொதுமக்கள் அதிக அளவில் சென்று வருகின்றனர்.
    • 21 வகையான காய்கறிகளை கொண்ட தொகுப்பு ஒரு கிலோ ரூ.120 வரை விற்கப்பட்டது.

    நெல்லை:

    தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நெல்லை மார்க்கெட்டுகளில் காய்கறிகள், பழங்கள், கரும்பு கட்டுகள், கிழங்கு வகைகள், மஞ்சள் குலைகள் விற்பனை களைகட்டி உள்ளது.

    கடைவீதிகளில் கூட்டம்

    கடந்த 2 நாட்களாக புதுமண தம்பதிகளுக்கு பொங்கல் படி கொடுப்பதற்காக காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்கு குடும்பம் குடும்பமாக மார்க்கெட்டுகளுக்கு சென்று வருகின்றனர். இதனால் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது.

    குறிப்பாக டவுன் நயினார்குளம் மொத்த காய்கறி மார்க்கெட், பாளை காந்தி மார்க்கெட், டவுன் ரதவீதிகள் உள்ளிட்ட இடங்களில் பொருட்கள் வாங்குவதற்கு பொதுமக்கள் அதிக அளவில் சென்று வருகின்றனர். இதுதவிர பொங்கிலிட பானைகள், பனை ஓலைகள் மற்றும் பூஜைக்கான பொருட்கள் வாங்குவதற்கும் பொதுமக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    காய்கறி தொகுப்பு

    நாளை பொங்கல் என்பதால் இன்று இறுதி கட்ட விற்பனை சூடுபிடித்தது. மாநகர பகுதியில் பேட்டை, டவுன், தச்சநல்லூர், கே.டி.சி. நகர், பாளை சமாதானபுரம், மேலப்பாளையம் ரவுண்டான உள்ளிட்ட இடங்களில் மண் பானைகள், பனை ஓலைகள் மற்றும் கரும்பு கட்டுகள் விற்பனை அதிகமாக இருந்தது. அடுப்புகள், அடுப்பு கட்டிகள், வண்ணம் தீட்டப்பட்ட பானைகளின் விற்பனையும் அதிகரித்தது.

    காய்கறிகளில் முருங்கைக்காய் ஒன்று ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனையானது. 21 வகையான காய்கறிகளை கொண்ட தொகுப்பு ஒரு கிலோ ரூ.120 வரை விற்கப்பட்டது.மோட்டார் சைக்கிள்கள், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்களில் பொதுமக்கள் மொத்தம் மொத்தமாக காய்கறிகள், கரும்பு கட்டுகளை வாங்கி சென்றனர்.

    பனங்கிழங்கு வரத்து குறைவு

    மழை குறைவால் பனங்கிழங்குள் வரத்து குறைந்தது. விற்பனைக்கு வந்த கிழங்குகளும் உயரம் குறைவானதாகவே இருந்தது. 25 கிழங்குகள் கொண்ட கட்டு ரூ.100 முதல் ரூ.120 வரை விற்கப்பட்டது. கடந்த காலங்களில் 10 கிழங்குகள் கொண்ட ஒரு கட்டு ரூ.30 வரை மட்டுமே விற்கப்பட்ட நிலையில் தற்போது விலை அதிகரித்துள்ளது.

    இதேபோல் கடந்த சில நாட்களாக ஒரு மஞ்சள் குலை ரூ.5 முதல் ரூ.20 வரை விற்பனையான நிலையில் இன்று ரூ.15 முதல் ரூ.40 வரை விற்பனையானது. கரும்பு 10 எண்ணம் கொண்ட கட்டுகள் ரூ.300 ஆக இருந்த நிலையில் இன்று ரூ.400 முதல் ரூ.500 வரை விற்பனையானது.

    பயணிகள் கூட்டம் அதிகரிப்பு

    பொங்கலையொட்டி வெளியூர்களில் வசிப்பவர்கள் ஏராளமானோர் நெல்லைக்கு வந்து சேர்ந்ததால் ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதேபோல் புதிய பஸ் நிலையத்திலும் அதிக அளவு பயணிகள் காணப்பட்டனர். இதனால் பஸ்களில் கூட்டம் அலைமோதியது.

    வெளியூர்களில் இருந்து குடும்பத்துடன் வந்தவர்களை அழைத்து வருவதற்காக பெரும்பாலானோர் கார்களில் சென்றதால் பஸ் மற்றும் ரெயில் நிலைய சாலைகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. அதனை போக்குவரத்து போலீசார் சரி செய்தனர். மார்க்கெட், ஜவுளிக்கடைகள் உள்ள பகுதிகளிலும் கடுமையான போக்குவரத்து நெருக்கடி யால் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன.

    • இன்றுமுதல் மேலும் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
    • இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களிலேயே பொருட்களை வாங்க கடைவீதியில் குவிந்து வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான புத்தாடைகள், பட்டாசு, வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் பலகாரங்கள் செய்ய தேவையான பொருட்களை வாங்க கடைவீதியில் குவிந்து வருகின்றனர். குறிப்பாக பண்டிகைக்கு முதல் ஒரு வாரத்தில் இருந்து இதுபோல பொருட்கள் வாங்க மக்கள் வந்துவிடுவார்கள்.

    கடந்த சில நாட்களாகவே திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மாலை நேரங்களில் தொடங்கி இரவு வரை மழை பெய்து வருவதால் தீபாவளி விற்பனை பாதிக்கப்படுகிறது. குறிப்பாக சாலையோரங்களில் கடை வைத்திருக்கும் வியாபாரிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    இதனிடையே இன்றுமுதல் மேலும் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களிலேயே பொருட்களை வாங்க கடைவீதியில் குவிந்து வருகின்றனர்.

    இதனால் நகரின் முக்கிய சாலைகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் செல்ல முடியாமல் திணறி வருகின்றன. நடந்து செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு இடையே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. பண்டிகைக்கு குறைந்த நாட்களே உள்ள நிலையில் ஆங்காங்கு போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தாலும் மக்களின் பணம் மற்றும் உடமைகள் பறிபோய்விடுமோ என்ற அச்சமும் நிலவி வருகிறது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிக்பாக்கெட் திருடர்கள் அதிகளவில் தங்கள் கைவரிசையை காட்டுவதற்கு உலவி வருகின்றனர்.

    இதுபோன்ற சமயங்களில் திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளின் படங்களை முக்கிய சந்திப்பில் வைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். ஆனால் அதுபோன்று எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. முக்கிய சந்திப்புகளில் உயர்கோபுரங்கள் அமைத்து கண்காணிக்கப்படும்.சி.சி.டி.வி காமிராக்கள் வைத்தும் போலீசார் கண்காணிப்பு நடத்தப்படும். ஆனால் அதுபோன்று எந்த பணியும் செய்யப்படாததால் விரைவில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

    இதனிடையே தீபாவளி பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் ெதாடர்ந்து அதிகரித்து வருவதால் மாலை நேரங்களில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. பள்ளி முடிந்து வீடு திரும்பும் மாணவிகளும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நெல்லை மாவட்டத்தில் பூஜை பொருட்களை வாங்க காலை முதலே ஏராளமான பொதுமக்கள் கடைகளில் திரண்டனர்.
    • காய்கறி கடைகளிலும் பொது மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    நெல்லை:

    சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜையை யொட்டி அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுவது வழக்கம்.

    பூஜைக்கு படைக்கும் அவல், பொரி, பழங்கள் உள்ளிட்டவை விற்பனையும் அப்போது அதிகரித்து காணப்படும். நாளை சரஸ்வதி பூஜை

    கடந்த 2 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ஆண்டு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

    பொது மக்கள் கூட்டம்

    இதையொட்டி நெல்லை மாவட்டத்தில் பூஜை பொருட்களை வாங்க இன்று காலை முதலே ஏராளமான பொதுமக்கள் கடைகளில் திரண்டனர். இதனால் நெல்லை டவுன், தச்சநல்லூர், பாளை மார்க்கெட்டுகளில் பொது மக்கள் கூட்டம் களை கட்டி காணப்பட்டது.

    மேலும் பல்வேறு இடங்களில் தற்காலிக சாலையோர கடைகள் அமைக்கப்பட்டிருந்தது. அங்கும் பொது மக்கள் திரண்டனர். சரஸ்வதி பூஜையை யொட்டி இன்று பூக்களின் விலை அதிகரித்து காணப்பட்டது. நெல்லை சந்திப்பு பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,300-க்கும், பிச்சிப்பூ ரூ.1,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இதே போல் கேந்தி பூ ரூ.130, சம்மங்கி ரூ.300, அரளிப்பூ ரூ.400, ஆப்பிள் ரோஸ் ஒரு கட்டு ரூ.320, பன்னீர் ரோஸ் ரூ.250-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இதே போல் காய்கறி கடைகளிலும் பொது மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. பூஜை பொருட்களான அவல், பொரி, வாழைப்பழம் உள்ளிட்ட பொருட்களை மக்கள் போட்டி போட்டு வாங்கி சென்றனர்.

    சரஸ்வதி பூஜையை யொட்டி பொருட்களை வாங்க பொதுமக்கள் திரண்டதால் நெல்லை சந்திப்பு, எஸ்.என்.ஹைரோடு, டவுன், வண்ணார்பேட்டை, தச்சநல்லூர், பாளை மார்க்கெட், சமாதானபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

    ×