search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PonRadhakrishnan"

    தமிழகத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் உள்ளது என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #PonRadhakrishnan

    சென்னை:

    மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சென்னையில் இன்று நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார் அவர் கூறியதாவது:-

    தூத்துக்குடியில் பயங்கரவாதிகள் தங்களை மூளைச்சலவை செய்ததாக மக்கள் கூறி இருக்கிறார்கள். இங்குள்ள தி.மு.க. உள்ளிட்ட கட்சி தலைவர்களின் மூளை டிரைகிளீனருக்கா போய்விட்டது? மக்களுக்கு அவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

    முந்தைய காலங்களில் மத்திய ஆட்சியை கேள்வி கேட்டது உண்டா? மாநில அரசு செயல்பட தவறும் போது மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    பயங்கரவாதிகளுக்கு சமூக விரோதிகள் என்ற கவுரவம் வேண்டாம். தமிழகத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக நான் வெளிப்படையாகவே சொல்லி வருகிறேன்.

    அவர்கள் ஒட்டுமொத்த தமிழகத்தின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது மாநில அரசின் கடமை. நடவடிக்கை எடுக்க ஆரம்பித்து இருக்கிறார்கள் மகிழ்ச்சி. தேவைப்பட்டால் பயங்கரவாதிகள் மீது மத்திய அரசே நடவடிக்கை எடுக்கும்.


    சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டம் சென்னையில் இருந்து மேற்கு மாவட்டங்களுக்கு வளர்ச்சியை கொடுப்பது. இந்த திட்டம் சேலம், கோவையை தாண்டி இருக்கும் மக்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

    இந்த திட்டத்தை எதிர்ப்பதற்கான அடிப்படை நோக்கம் என்பது தமிழகத்தில் தொழிற்சாலைகள் மூடப்பட வேண்டும். தொழிலாளர்கள் வேலை இழக்க வேண்டும். புது தொழிற்சாலைகள் வரக்கூடாது என்ற எண்ணம் தான்.

    தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் 60 சதவீதம் மேற்கு மாவட்டங்களில் உள்ளது. அந்த மாவட்ட மக்களின் முயற்சியில் இந்த திட்டம் வருகிறது. அதை கெடுக்கும் வகையில் செயல்படுகிறார்கள்.

    சில திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற முடியும். சில திட்டங்கள் தாமதமாகலாம். கன்னியாகுமரியில் நாலு வழிச்சாலைக்கு 2003-ல் திட்டமிடப்பட்டது. ஆனால் இப்போதுதான் செயல்படுத்தப்படுகிறது.

    மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் கிடப்பில் கிடப்பதற்கு யார் காரணம்? இதைப்பற்றி தி.மு.க.வோ மற்ற கட்சிகளோ பேசுகிறதா? நான் அந்த துறை பொறுப்பில் இருந்தபோது பிரச்சினைகளை அறிந்து மீண்டும் பணிகளை தொடங்கும் நிலைக்கு கொண்டு வந்தேன்.

    பா.ஜனதா ஆளும் மாநிலத்தில் 2 தொகுதிகளில் தோற்றதால் கட்சி செல்வாக்கை இழந்து விட்டதாக கூறுவது தவறு. இதுதான் ஜனநாயகத்தை பா.ஜனதா எப்படி கடை பிடிக்கிறது என்பதற்கு அடையாளம். மற்ற மாநிலங்களில் இடைத்தேர்தல் எப்படி நடக்கிறது?

    வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் எத்தனை கட்சிகள், எத்தனை வியூகங்கள் அமைத்தாலும் கடந்த தேர்தலைவிட கூடுதலான இடங்களை பெற்று மீண்டும் மோடி பிரதமராக வருவார்.

    இவ்வாறு அவர் கூறினார். #PonRadhakrishnan

    நீட் தேர்வுக்கு மகனை கேரளாவுக்கு அழைத்து சென்ற போது மாரடைப்பால் இறந்த திருத்துறைப்பூண்டி கிருஷ்ணசாமி குடும்பத்துக்கு பொன்.ராதாகிருஷ்ணன் நிதியுதவி வழங்கினார். #neetexam

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே விளக்குடி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி.

    இவர் தனது மகன் கஸ்தூரி மகாலிங்கத்தை நீட் தேர்வு எழுதுவதற்காக எர்ணாகுளத்துக்கு அழைத்து சென்றார். அங்கு விடுதியில் தங்கியிருந்த கிருஷ்ணசாமிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு பலியானார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், நேற்று திருத்துறைப்பூண்டி விளக்குடி கிராமத்துக்கு சென்றார்.

    நீட் தேர்வால் மாரடைப் பால் பலியான கிருஷ்ணசாமி குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவர் ஆறுதல் கூறினார்.

    கிருஷ்ணசாமியின் மனைவி பாரதி மகாதேவி, மகன் கஸ்தூரி மகாலிங்கம், மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து தனது சொந்த நிதியில் இருந்து ரூ. 1 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.

    முன்னதாக மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணன் திருவாரூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சென்னை- சேலம் வழி பசுமை சாலை திட்டத்தை வேண்டுமென்றே பல இயக்கங்கள் எதிர்த்து வருகின்றன. இவர்கள் தமிழகத்தின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பவர்கள். இவர்களை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். சென்னை- சேலம் சாலை திட்டம் தமிழகத்துக்கு கிடைத்த வரப்பிரசாதம்.

    தி.முக. ஆட்சி காலத்தில் இதுபோல் புதிய திட்டங்கள் எதுவும் கொண்டு வரவில்லை. இதனால் இந்த திட்டத்தை எதிர்க்கும் தி.மு.க.வினர் தமிழகத்தின் வளர்ச்சியை பற்றி கவலைப்படாமல் உள்ளனர்.

    முல்லை பெரியாறு அணை பிரச்சினையில் 142 அடியை மோடி அரசு உறுதி செய்திருக்கிறது. காவிரி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக ஆணையம் செயல்பட கர்நாடகா தனது பிரதி நிதிகளை அனுப்பாமல் உள்ளது. இதனால் தான் ஆணையம் செயல்பாடு முழுமை பெறாமல் உள்ளது. தி.மு.க. செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் தனது கூட்டணி கட்சியினருடன் பேசி கர்நாடகாவில் இருந்து பிரதிநிதியை அனுப்ப சொல்ல வேண்டும். ஆணையம் அமைந்தால் தான் காவிரி நீரை பெறமுடியும்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews #neetexam

    பெரம்பலூர் வழியாக ரெயில் போக்குவரத்து தொடங்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணன் தெரிவித்தார்.
    பெரம்பலூர்:

    சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் விபத்துகளை தவிர்க்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் ரூ.13 கோடியில் தரைவழி மேம்பாலம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று மாலை நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கினார். மருதராஜா எம்.பி. முன்னிலை வகித்தார். தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்ட இயக்குனர் சங்கரசுப்ரமணியன் வரவேற்றார். விழாவில் மத்திய கப்பல் போக்குவரத்து மற்றும் நிதித்துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    உலகிலேயே அதிக அளவிலான சாலை வசதி இந்தியாவில் உள்ளது. இந்தியாவில் போக்குவரத்திற்காக 53 லட்சம் கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் தேசிய நெடுஞ்சாலை துறையின் கட்டுப்பாட்டில் ஒரு லட்சம் கிலோ மீட்டர் நீள சாலைகள் உள்ளன. இது மொத்த நீளத்தில் 2 சதவீதம் மட்டுமே ஆகும். ஆனால் இந்த சாலைமூலம் சுமார் 80 சதவீதம் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து நடைபெற்று வருகின்றன.

    பாரத பிரதமர் நரேந்திரமோடி பிரதமராக பதவி ஏற்றவுடன், உலக தரத்தில் இந்தியாவில் சாலைகள் அமைக்க வேண்டும் என்றும், தேசிய நெடுஞ்சாலைகளின் நீளத்தையும், தரத்தையும் 2 மடங்காக உயர்த்த வேண்டும். அதே நேரத்தில் சாலை விபத்துகளை குறைக்கவும் உத்தரவிட்டார்.

    முந்தைய ஆட்சியில் நாள் ஒன்றுக்கு ஒற்றை இலக்கு கி.மீ. தூரத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டன. தற்போது நாள் ஒன்றுக்கு 28 கி.மீ. நீளத்திற்கு சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த இலக்கு நாள் ஒன்றுக்கு 40 கி.மீ. அளவை எட்டுவதற்காக பாடுபட்டு வருகிறோம். இந்தியாவிலேயே அதிகம் விபத்துகள் தமிழகத்தில் நடக்கின்றன. நாடு முழுவதும் ஆண்டுக்கு 5 லட்சம் விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதில் ஒன்றரை லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். உடல் உறுப்புகள் செயல் இழந்தவர்களின் எண்ணிக்கை பல லட்சங்களை எட்டும்.

    தமிழ்நாட்டில் சென்னை-கன்னியாகுமரி வரை கிழக்கு கடற்கரை சாலையை மேம்படுத்தி தேசிய நெடுஞ்சாலையாக உயர்த்திட தமிழக அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. 70 ஆண்டுகளில் மேற்கொள்ளப்படாத சாலைப்பணிகள் கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 78 பகுதிகளில் அதிக சாலை விபத்துகள் நடப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டில் 11 இடங்களில் ஒன்றாக சிறுவாச்சூர் பகுதி கண்டறியப்பட்டுள்ளது. இப்பகுதியில் கடந்த 3 ஆண்டுகளில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 22 பேர் காயம் அடைந்துள்ளனர். வழக்குப்பதிவு செய்யாமல் இன்னும் பலர் உயிரிழந்திருக்க கூடும்.

    உயிரிழப்புகளை தவிர்க்க இங்கு தரைவழி மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இப்பணிகள் பிப்ரவரி 2019-ல் நிறைவடையும். பிரதமர் நரேந்திரமோடி தமிழ்நாட்டிற்கு முன்னுரிமை அளித்து தமிழக வளர்ச்சிக்காக, தமிழக மக்களின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை வழங்கி வருகிறார். ஒவ்வொரு எம்.பி.க்கும் குறைந்தபட்சம் ஒரு திட்டம் சென்றடைய வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

    பெரம்பலூர் வழியாக நாமக்கல்லுக்கு ரெயில் போக்குவரத்து தொடங்க பெரம்பலூர் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து மத்திய ரெயில்வே அமைச்சகத்திற்கும், மத்திய மந்திரியிடமும் பெரம்பலூர் வழியாக ரெயில் போக்கு வரத்து தொடங்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் பேசினார். இதனைத்தொடர்ந்து பொன்.ராதாகிருஷ்ணன் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். விழாவில் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, ஸ்ரீராமகிருஷ்ணா கல்விக்குழுமத்தின் தலைவர் சிவசுப்ரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தேசிய நெடுஞ்சாலை ஆணைய முதுநிலை மேலாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.  
    ×