search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pasuram-27"

    • பகைவர்களை வெற்றிகொள்ளும் பராக்கிரமம்மிக்க கோவிந்தா!
    • உத்திரகோசமங்கையில் எழுந்தருளி இருக்கும் சிவனே!

    திருப்பாவை

    பாடல்

    கூடாரை வெல்லுஞ்சீர்க் கோவிந்தா! உன்தன்னை

    பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்;

    நாடு புகழும் பரிசினால் நன்றாக,

    சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே

    பாடகமே யென்றனைய பல்கலனும் யாம் அணிவோம்;

    ஆடை உடுப்போம்; அதன்பின்னே பாற்சோறு

    மூடநெய் பெய்து முழங்கை வழிவார

    கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.

    விளக்கம்:

    பகைவர்களை வெற்றிகொள்ளும் பராக்கிரமம்மிக்க கோவிந்தா! உன்னை வாயாரப்பாடி அருள் பெறவந்தோம். எங்கள் நோன்புக்கு மகிழ்ந்து ஏதாவது பரிசு கொடுக்க விரும்புவாயானால் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறோம். நாட்டு மக்கள் புகழும்படியாக வளையல்களையும், காதில் அணியும் தோடுகள் மற்றும் பெண்கள் கால்களில் அணியும் சிலம்புகள், மேலும் பல அணிகலன்களையும் வழங்க வேண்டும். நோன்பு முடிந்த பிறகு நாங்கள் எல்லா அணிகலன்களையும், புத்தாடைகளையும் அணிந்து கொள்வோம். அதன்பிறகு பால் சோற்றில் நெய்யினை ஊற்றி அந்த நெய் முழங்கை வரை வழியும்படியாக கூடியிருந்து சாப்பிட்டு அனைவரும் மகிழ்ந்திருப்போம்.

    திருவெம்பாவை

    பாடல்

    அதுபழச் சுவையென அமுதென அறிதற்

    கரிதென எளிதென அமரரும் அறியார்

    இதுஅவன் திருவுரு இவன் அவன் எனவே

    எங்களை ஆண்டுகொண் டிங்கெழுந் தருளும்

    மதுவளர் பொழில்திரு வுத்தர கோச

    மங்கையுள் ளாய்திருப் பெருந்துறை மன்னா எதுஎமைப் பணிகொளு மாறது கேட்போம்

    எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே

    விளக்கம்

    திருப்பெருந்துறை மன்னனே! சிவானந்தம் எப்படி இருக்கும்? அது பழச்சுவை போன்றது என்றும், அமுதத்தை போன்றது என்றும், அறிந்துகொள்ள எளிமையானது என்றும் சிவனடியார்கள் கூறுகிறார்கள். ஆனால் அதை தேவர்கள் கூட அறிய மாட்டார்கள். இப்படித்தான் நீ இருப்பாய். இதுதான் நான் என்று சொல்லும்படி எங்களுக்கு கருணையுடன் உணர்த்தினாய். தேன் நிறைந்த பூக்களை உடைய சோலைகள் சூழ்ந்த உத்திரகோசமங்கையில் எழுந்தருளி இருக்கும் சிவனே! நீ எங்களுக்கு இடும் கட்டளைகளை கூறினால் அதை ஏற்று நடப்போம். எம்பெருமானே பள்ளி எழுந்தருள்வாயாக!

    • கூடாரைவல்லி என்பது மிக அற்புதமான நாள்.
    • திருப்பாவை நோன்பு கிட்டத்தட்ட நிறைவேறும் நாள்.

    மார்கழி மாதத்தில் கூடாரைவல்லி என்பது மிக அற்புதமான நாள். திருப்பாவையின் 27-வது பாசுரம், "கூடாரை வெல்லும் சீர்கோவிந்தா" என்ற பாசுரம். திருப்பாவை நோன்பு கிட்டத்தட்ட நிறைவேறும் நாள் என்று இதைச் சொல்லுவார்கள். குறையொன்றுமில்லாத கோவிந்தனை வழிபடுகின்றபொழுது ஒவ்வொருவர் மனக்குறையும் தீர்ந்துவிடும் என்பதால், அன்று புத்தாடை அணிந்து, ஆண்டாள் புடவை எடுத்து வைத்து, ஆண்டாள் படத்துக்கு பூமாலை சூட்டி, வணங்குவார்கள்.

    ஸ்ரீவில்லிபுத்தூரில் கருவறை முன் அர்த்த மண்டபத்தில், ஸ்ரீஆண்டாள் நாச்சியார் சிறப்பு அலங்காரத்தோடு காட்சி தருவார். ஒருமுறை ராமானுஜர் ஆண்டாள் கோரிக்கையைநிறை வேற்றுகின்ற வண்ணம், நூறு அண்டா வெண்ணெயும் நூறு அண்டா அக்கார அடிசிலும், மதுரை திருமாலிருஞ்சோலை அழகருக்கு சமர்ப்பித்தார். ஸ்ரீவில்லிபுத்தூரில் கூடாரைவல்லி அன்று 108 பாத்திரத்தில் வெண்ணெயும் அக்கார அடிசிலும் நிவேதனம் ஆகும்.

    நாம் அன்று வெண்ணெயும் அக்கார அடிசிலும் (பாலில் நெய்விட்டு செய்த சர்க்கரைப் பொங்கல்) வைத்து ஆண்டாளை வணங்க நம்முடைய மனோரதம் நிறைவேறும். பெண்களுக்கு நல்ல வரன் அமையும். கூடாரைவல்லி நாளில் பெருமாள் கோயிலுக்குச் சென்று, துளசி மாலை அணிவித்து வணங்குவதன் மூலமாக சகல சவுபாக்கியங்களும் பெறலாம்.

    ×