search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Parents"

    • பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைக்கும் இருக்கை ஒதுக்க வேண்டும் என டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது.
    • தனது முந்தைய பரிந்துரைகளில் திருத்தம் செய்து, ஒழுங்குமுறை ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

    புதுடெல்லி:

    விமானப் பயணத்தின் போது குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் அமர இயலாமல் போனது குறித்து பயணிகள் பலர் புகார் தெரிவித்தனர்.

    இந்நிலையில், விமானப் பயணத்தின்போது 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் அருகிலேயே இருக்கைகளை ஒதுக்கவேண்டும் என விமான நிறுவனங்களுக்கு மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

    விமானப் பயணத்தின்போது குழந்தைகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களில் ஒருவரேனும் உடனிருப்பதை உறுதிசெய்யவும் இந்த உத்தரவு வழிவகை செய்கிறது.

    தனது முந்தைய பரிந்துரைகளில் திருத்தம் செய்து, ஒழுங்குமுறை ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

    • காலம் சென்ற பின்பு கடமைகளை செய்வது இயலாத காரியம்.
    • தன்னம்பிக்கையை சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும்.

    பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளை மதிப்பீடு செய்யாதீர்கள். ஏன் என்றால் நீங்கள் ஆசிரியர் அல்ல. நீங்கள் பெற்றோர்கள். நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் பிள்ளைகளுக்கு தன்னம்பிக்கையை சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும். குறை சொல்லுதல் சொல்லிக் கொடுத்து குழந்தைகளை வளர்க்க வேண்டாம். அவர்கள் தானாக வளருவார்கள்.

    கடிகாரம் ஓடினாலும், ஓடாவிட்டாலும் நாட்கள் நகர்ந்துகொண்டு தான் இருக்கும். அதனால் காலம் சென்ற பின்பு கடமைகளை செய்வது இயலாத காரியம். இவ்வாறாக ஒரு பழமொழி சொல்வார்கள். `கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்யாதே'

    மாணவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட நேரத்தையும், ஆயுளையும் கண்ணியமாக செய்து முடித்து விட வேண்டும். அப்போது வெற்றி தேடி வரும். இவை அனைத்தும் வரும் போது மிகுந்த நன்றி உணர்வுள்ளவர்களாய் இருக்க வேண்டும்.

    இந்த பிரபஞ்சம் மாணவர்களுக்காக எல்லாவற்றையும் தயார் செய்து வைத்து விடும். அகிலம் என்னும் இந்த அண்டத்தில் மாணவர்கள் திறன் நிறைந்த மாணவர்களாக வளர மிகுந்த ஆற்றலும், அறிவும், ஞானமும், தொடர்ச்சியான, செய்முறையும், படித்தலும், எழுதுதலும், பேசுதலும், கேட்டலும், அனைத்து மொழித்திறன் களையும் கொண்டிருக்க வேண்டும். மேலும் உடல் நலமும், சத்தான உணவு முறையும், நேர்மறையான சிந்தனையும், சமுதாயத்தின் மிகச் சிறந்த பண்புகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

    இயற்கை சூழலோடு இணைந்த பள்ளிக்கூடம், அதனோடு இயற்கை அன்னையை போன்ற அன்பான பாகுபாடின்றி அனைத்து மாணவர்களையும் தங்கள் பிள்ளைகள் போன்று அரவணைக்கும் அறிவும் ஞானமும் நிறைந்த ஆசிரியர்கள் உள்ளனர்.

    உள்ளத்தில் எழும் அனைத்து ஐயங்களுக்கும் அறிவு பூர்வமாக சிறப்பாக விடை கண்டு உங்களிடம் மறைந்து கிடக்கும் திறன்களைத் தொடர்ச்சியாக கண்காணித்து கண்டறிந்து தனித்திறமை கொண்ட ஆசிரியர்கள் உதவியோடு வளர்க்க வேண்டும்.

    ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்

    உயிரினும் ஓம்பப் படும்

    என்று பொது மறை நூலில் ஒழுக்கம் உடையவர்களுக்கு ஒழுக்கமே எல்லோர்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால் உயிரை விட சிறந்ததாக போற்றப்படும் என வள்ளுவர் சொல்கிறார்.

    முதல் ஒழுக்கத்தை கற்றுத் தருவது பள்ளிக்கூடம். இங்கு சிறப்பான, மேன்மையான, பண்பான ஒழுக்கத்தை காத்து கொள்ளுங்கள். அதனால் தான் உங்களை இங்கு அனுப்பியிருக்கிறார்கள்.

    • மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து கல்வி உதவித்தொகை தொடர்பாக எந்தவொரு அதிகாரியும் தங்கள் கைப்பேசிகளுக்கு தொடர்பு கொள்ள மாட்டார்கள்.
    • யாரும் இது போன்று பேசுபவர்களின் வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம்.

    சென்னை:

    பள்ளிக்கல்வித்துறை, சைபர் குற்றப்பிரிவு இணைந்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து கல்வி உதவித்தொகை தொடர்பாக எந்தவொரு அதிகாரியும் தங்கள் கைப்பேசிகளுக்கு தொடர்பு கொள்ள மாட்டார்கள்.

    ஆனால் சைபர் குற்றவாளிகள் கரூர் மாவட்டத்தில் மாணவ-மாணவிகள் பலரிடம் கல்வித்துறை அதிகாரிகள் என்று என்று கூறி வாட்ஸ்அப் செயலி மூலம் 'கியூஆர்' குறியீட்டை அனுப்பி அதை ஸ்கேன் செய்யும்போது பணம் பறித்து உள்ளனர். எனவே யாரும் இது போன்று பேசுபவர்களின் வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பல்வேறு கிராமங்களில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவர்கள் மாநில நெடுஞ்சாலையை கடந்து செல்கின்றனர்.
    • நெடுஞ்சாலையை ஒட்டி பள்ளி அமைந்துள்ளதால் காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவர்கள் ரோட்டை கடக்க சிரமப்படுகின்றனர்.

    உடுமலை:

    உடுமலை பொள்ளாச்சி - தாராபுரம் மாநில நெடுஞ்சாலையை ஒட்டி கொங்கல்நகரம் அரசு உயர்நிலைப்பள்ளி, சோமவாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உட்பட பள்ளிகள் அமைந்துள்ளது.பல்வேறு கிராமங்களில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவர்கள் மாநில நெடுஞ்சாலையை கடந்து செல்கின்றனர்.

    அப்போது ரோட்டில் வேகமாக வரும் வாகனங்களால் மாணவர்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறுகிறது. இப்பிரச்சினைக்கு தீர்வாக பள்ளி மாணவ, மாணவிகள் ரோட்டை கடக்கும் இடத்தில் டிவைடர்கள் வைக்க வலியுறுத்தப்பட்டது. அதன்படி சில ஆண்டுகளுக்கு முன், சோமவாரப்பட்டியில், மாநில நெடுஞ்சாலையில் டிவைடர் வைக்கப்பட்டது. சில மாதங்களில் அங்கிருந்து அகற்றப்பட்ட டிவைடர் மீண்டும் வைக்கப்படவில்லை.

    இதே போல் கொங்கல்நகரம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு பொட்டையம்பாளையம், லிங்கம்மாவூர், புதூர் உட்பட பல்வேறு கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் வருகின்றனர்.நெடுஞ்சாலையை ஒட்டி பள்ளி அமைந்துள்ளதால் காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவர்கள் ரோட்டை கடக்க சிரமப்படுகின்றனர். எனவே குடிமங்கலம் போலீசார், பள்ளிகள் அமைந்துள்ள பகுதிகளில் மாணவர்கள் பாதுகாப்புக்காக மாநில நெடுஞ்சாலையில் டிவைடர் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

    • எண்ணிக்கையில் சுமார் 18,000 பேர் மட்டுமே உள்ளனர்
    • 16லிருந்து 20 வயது முடிவதற்குள் மகளை திருமணம் செய்து கொடுக்கின்றனர்

    ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடு பல்கேரியா. இதன் தலைநகர் சோஃபியா.

    இந்நாட்டில் எண்ணிக்கையில் சுமார் 18 ஆயிரம் பேரை கொண்ட கலாய்ழி ரோமா (Kalaidzhi Roma) எனும் இனத்தவர் வசிக்கின்றனர்.

    இவர்களிடையே ஒரு விசித்திரமான பழக்கம் நிலவுகிறது.

    இந்த இனத்தவர்கள் தங்கள் இன இள வயது திருமணமாகாத பெண்கள், பிற ஆண்களுடன் 'டேட்டிங்' அல்லது காதல் போன்ற அந்த பருவத்திற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை ஆதரிப்பதில்லை. மேலும் இவர்கள் இனத்தை சேர்ந்தவர்களை ஐரோப்பிய ஒன்றியத்தில் பலர் தங்களுடன் இணைத்து கொள்ள தயங்குகின்றனர். அதனால் இவர்கள் சமுதாயத்தில் அன்னியப்படுத்தப்பட்டு விட்டதாகவும் உணர்கிறார்கள்.

    எனவே, இவர்கள் திருமண சம்பந்தத்தையும் பிற இனத்தவர்களுடன் செய்து கொள்வதில்லை.

    தங்கள் இன பெண்களை 16லிருந்து 20 வயதிற்குள் தங்கள் இனத்திலேயே உள்ள ஆண் மணமகனுக்கு திருமணம் செய்து கொடுத்து விட விரும்புகிறார்கள்.

    இதற்காக வருடாவருடம் ஒரு குறிப்பிட்ட நாளில் ஸ்டாரா ஜகோரா (Stara Zagora) எனும் பகுதியில் அந்த பெண்கள் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு பெற்றோருடன் அழைத்து வரப்படுகின்றனர். அவர்களை தேர்வு செய்ய அங்கு அதே இனத்து ஆண்கள் தங்கள் பெற்றோருடன் வருகின்றனர்.

    இளைஞர்கள் தங்களுக்கு பிடித்த பெண்ணை தேர்வு செய்தவுடன் அப்பெண்ணின் பெற்றோரின் சம்மதத்தை கேட்கின்ற சம்பிரதாயம் நடைபெறுகிறது.

    தங்கள் பெண்ணை மணமுடித்து கொடுப்பதற்கு ஈடாக அப்பெண்ணின் பெற்றோர் கேட்கும் தொகையை அவர்களிடம் அந்த இளைஞன் கொடுத்து திருமண பந்தத்தை ஏற்படுத்தி கொள்கிறார். இதற்கென இந்த இளைஞர்கள் தங்களின் வாழ்வில் சிறு வயதிலிருந்தே சேமிக்க தொடங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    மணப்பெண்ணின் தோற்றம், உருவம், மணமகனின் வளமை போன்ற அம்சங்களை பொறுத்து பெண்ணின் பெற்றோர் பெறும் தொகை நிர்ணயிக்கப்படுகிறது. அனேக பெண்கள் பள்ளி படிப்பை முடிப்பதற்கு கூட பெற்றோர் விடுவதில்லை.

    "ஜிப்சி பிரைட் மார்கெட்" என வட்டார மொழியில் அழைக்கப்படும் இந்த பழக்கத்தை குறித்தும், அம்மக்களின் வாழ்வை குறித்தும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

    • குழந்தையின் மனதில் குதூகலம் ஏற்படும் விதமாக பேச வேண்டும்.
    • பள்ளியைப் பற்றிய நேர்மறையான பிம்பத்தை உண்டாக்க வேண்டும்.

    "நீ அடம்பிடிச்சா உன்னை பள்ளிக்கூடத்தில் சேர்த்துடுவேன்", "சாப்பிடாம இருந்தா டீச்சர்கிட்ட உன்னை அடிக்க சொல்லுவேன்" என்று சேட்டை செய்யும் பிள்ளைகளை பயமுறுத்தும் பெற்றோர்கள் பலர் இருக்கிறார்கள். அந்த சமயத்தில் அதைக்கேட்டு குழந்தை அமைதியானாலும், பள்ளி மற்றும் ஆசிரியர்கள் மீது அவர்கள் மனதுக்குள் வெறுப்பு மற்றும் பய உணர்வு உண்டாகும். இதனால் பள்ளி செல்வதற்கு அடம் பிடிப்பார்கள். இத்தகைய குழந்தைகளை எவ்வாறு கையாள்வது என்று பார்ப்போம்.

    முதலில் குழந்தைகள் மனதில் பள்ளியைப் பற்றிய நேர்மறையான பிம்பத்தை உண்டாக்க வேண்டும். ''பாப்பா! நீ பள்ளிக்கூடத்துக்குப் போகப் போகிறாய், அங்கு உனக்கு நிறைய நண்பர்கள் கிடைப்பாங்க. அவர்களுடன் மகிழ்ச்சியாக விளையாடலாம். நிறைய புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம்'' என குழந்தையின் மனதில் குதூகலம் ஏற்படும் விதமாக பேச வேண்டும்.

    உங்களுக்குத் தெரிந்தவர்களுடைய குழந்தைகளும் அதே பள்ளியில்தான் இப்போது படிக்கிறார்கள் என்றால், அவர்களை சந்திப்பது போல் உங்கள் குழந்தையை அந்தப் பள்ளிக்கு அழைத்துச் செல்லலாம். இவ்வாறு அடிக்கடி செய்வதன் மூலம் உங்கள் குழந்தைக்கு பள்ளியின் சூழல் பழகி இருக்கும். புதிய இடம் போல தோன்றாது.

    உங்கள் குழந்தைக்கு பிடித்த புத்தகப்பை, அழகான புத்தகங்கள், கலர் பென்சில், தண்ணீர் பாட்டில் ஆகியவற்றை உடன் அழைத்து சென்று வாங்குங்கள். அவர்களுக்கானதை அவர்களே தேர்ந்தெடுக்கும்போது உற்சாகமாக பள்ளிக்கு செல்வார்கள்.

    இரவில் தூங்கச் செல்வது, காலையில் கண் விழிப்பது, காலைக் கடன்களை முடிப்பது போன்றவற்றை குறிப்பிட்ட நேரத்துக்குள் செய்யுமாறு பழக்கப்படுத்த வேண்டும். காலை உணவை நிதானமாக சாப்பிட்டு விட்டு பள்ளிக்குச் செல்வதே நல்லது. நீங்கள் வேலைக்குச் செல்லும் பெற்றோர் என்றால் குழந்தையை அவசரப்படுத்தாமல், நீங்களும் பதற்றமடையாமல், நேரத்தை அதற்கேற்றபடி முன்பே திட்டமிட்டு செயல்பட வேண்டும். முழு நேர பள்ளி என்றால், குழந்தைக்குப் பிடித்தமான உணவுகளை மதிய உணவாக கொடுத்து அனுப்புங்கள்.

    நீங்கள் வேலைக்குச் செல்பவர் என்றால், பள்ளி நேரம் முடிந்த பிறகு குழந்தையை யார் வீட்டுக்கு அழைத்து வருவது? என்பது குறித்து தெளிவாக முடிவு செய்யுங்கள். மழலையர் பாதுகாப்பகத்தில் உங்கள் குழந்தையை விடுவதென்றாலும், அதற்கு தேவையான விஷயங்களையும் முன்பே திட்டமிடுங்கள். பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த பின்பு குழந்தைகளை அவர்களுக்கு பிடித்தமான விளையாட்டில் ஈடுபடுவதற்கு உற்சாகப்படுத்துங்கள். பிறகு வீட்டுப் பாடங்களை செய்யச் சொல்லுங்கள். பெற்றோர்-ஆசிரியர் சந்திப்புகளில் தவறாமல் கலந்துகொள்ளுங்கள்.

    அப்போதுதான் குழந்தையின் கற்றல் சார்ந்த நடவடிக்கைகள் உங்கள் கவனத்திற்கு வரும். ஒருவேளை உங்கள் குழந்தை இதற்கு முன்பு மழலையர் பள்ளி சென்று பழகி இருந்தாலும், இப்போதைய பள்ளி நேரம் அதிகம் என்பதால் இயல்பாகவே அவர்களுக்கு பள்ளியைப் பற்றிய பயமும், பதற்றமும் ஏற்படும். அடம் பிடிக்காமல் பள்ளிக்கு சென்று வந்தாலும் திடீரென்று சில நாட்கள் முரண்டு பிடிப்பார்கள். அத்தகைய நேரங்களில் பதற்றமடையாமல், அவர்களை மென்மையாக அணுகி பள்ளிக்கு அனுப்ப முயற்சி செய்யுங்கள்.

    • குழந்தைகள் எப்படி இருந்தாலும் அழகுதான்.
    • குண்டாக இருக்கும் குழந்தை ஆரோக்கியமான குழந்தை என்று கணக்கில் எடுத்துக்கொள்ள கூடாது.

    குழந்தைகள் குண்டாக இருந்தால் அதை அழகு என்றும் 'ஆரோக்கியமான குழந்தை' என்றும் சொல்லும் பெற்றோர்கள் பலர். குழந்தைகள் எப்படி இருந்தாலும் அழகுதான். ஆனால், குண்டாக இருக்கும் குழந்தை ஆரோக்கியமான குழந்தை என்று கணக்கில் எடுத்துக்கொள்ள கூடாது. பெரியவர்கள் குண்டாக இருந்தால், அந்த எடையை குறைக்க என்ன செய்யலாம் எனச் சிந்திக்கிறோமோ அதே சிந்தனைகள் குழந்தைகள் உடல்நலத்திலும்இருக்க வேண்டும்.

    உடல் உழைப்பின்மை, மரபியல், தவறான உணவுப் பழக்கம், அதிகமான துரித உணவுகளை உண்பது, ஹார்மோன் பிரச்சனை, அதிக நேரம் டிவி பார்க்கும் குழந்தைகள், வீடியோ கேம்ஸ், கம்ப்யூட்டரில் கேம்ஸ் விளையாடும் குழந்தைகளுக்கு உடல் பருமன் அதிகமாக இருக்கும்.

    குழந்தையின் உடல் எடை குறைய கொள்ளு சுண்டல், கொள்ளு சூப் அல்லது துவையல் கொடம்புளி தண்ணீர், ஃபிளாக்ஸ் விதைகளை மோரில் கலந்து கொடுக்கலாம். குழந்தையின் உடல் எடை குறைய வெள்ளரிக்காய் சாலட், கிரீன் டீ 2 கப் குடிப்பது, திராட்சை ஜூஸ் ஒரு டம்ளர், போதுமான தண்ணீர் காலை எழுந்ததும் குடிப்பது, ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு டீஸ்பூன் தேன் கலந்த தண்ணீரை அருந்தும் பழக்கத்தை குழந்தைகளுக்கு பெற்றோர் ஏற்படுத்த வேண்டும்.

    உடல் பருமனான குழந்தைகளை மருத்துவரின் பரிந்துரையின்றி டயட்டில் வைக்க கூடாது, ஏனெனில் டயட் அவர்களின் வளர்ச்சிக்கு போதுமான ஆற்றல்களை வழங்காது.

    எடையை குறைக்க வேண்டும் என்பதை விட நல்ல ஆரோக்கிய உணவில் கவனம் செலுத்தினாலே படிப்படியாக உடல் எடையை கட்டுக்குள் வைக்கலாம்.

    பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு குறிப்பிட்ட நேரத்தில் ஆரோக்கியமான திண்பண்டங்களை கொடுக்க வேண்டும்.

    குறைவான ஊட்டச்சத்து மதிப்பை கொண்டுள்ள உணவுகளை அவர்களுக்கு கொடுப்பதை தவிர்த்து, காய்கறி மற்றும் பழங்களை அவர்கள் உணவும் சேர்ப்பதை உறுதி செய்ய வேண்டும்.

    தினமும் காய்கறிகள், பழங்களும் தினமும் சாப்பிட வேண்டும். இவ்வாறு செய்து வர குழந்தையின் உடல் எடையை மிக எளிதாகவே குறைத்துவிட முடியும்.

    குழந்தைகளிடம் உடற்பயிற்சி அல்லது உடல் செயல்பாடுகளை ஊக்குவிக்க வேண்டும். நடைப்பயிற்சி, சைக்கிளிங், சுறுசுறுப்பான விளையாட்டுகள் போன்ற உடல் செயல்பாடுகளில் அவர்கள் பங்கேற்பதை ஊக்குவிக்க குடும்ப உறுப்பினர்களும் அவர்களுடன் நேரம் செலவழிக்க வேண்டும்.

    குறிப்பாக அதிக எடை கொண்ட குழந்தைகளை தனிமைப்படுத்தாமல் இருக்க வேண்டும், இது மனச்சோர்வு மற்றும் தனிமைக்கு வழிவகுக்கும் என்றும் கூறப்படுகிறது.

    • அன்றாடம் நல்ல முன் மாதிரிகள் குழந்தைகளின் கண் எதிரே தேவை
    • சிந்திப்போம் முயன்று வருங்கால சந்ததியினரை நல்வழி படுத்துவோம்.

    மறைத்தும் ஒளித்தும் செல்போனை பயன்படுத்தி வேண்டாத பல குப்பைகளை மண்டையில் இறக்கி வாழ்க்கையை அழித்துக் கொள்ளும் இளம் பிராயத்தினர் ஏராளம். பெற்றோர்கள் இதனை கடுமையாக போராடி ஜெயிக்கத் தான் வேண்டும். நல்ல முன் மாதிரிகள் தேவை. பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் விட சிறந்த முன் மாதிரிகள் யார் இருக்க முடியும். எனவே அவசியமின்றி செல்போனில் மூழ்குவதனை பெற்றோர்கள் தவிர்த்தாலே போதும். பிள்ளைகளை கட்டுப்பாட்டிற்குள் நம்மால் கொண்டு வர முடியும். இவ்வளவு நேரம் விளையாட்டு, இவ்வளவு நேரம் செல்போன் என எதனையும் முறையாக வரையறுத்து அதனை பழக்கப்படுத்த வேண்டும். இதைச் செய்யாதே எனக் கூறும் பொழுது இதனைச் செய் என்ற மாற்று வழியையும் காட்ட வேண்டும். சாப்பிடும் பொழுது செல்போனை பயன்படுத்தக் கூடாது. உணவில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.

    அன்றாடம் நல்ல முன் மாதிரிகள் குழந்தைகளின் கண் எதிரே தேவை. நல்ல பழக்க வழக்கங்கள் தேவை. இவைகள் இல்லாத பொழுது மனிதன் மனம் போன போக்கில் போய் கொடூர தவறுகள் செய்பவனாகிறான். தேவையா? சிந்திப்போம் முயன்று வருங்கால சந்ததியினரை நல்வழி படுத்துவோம்.

    ஆம், நாம் தானே இதனை சரி செய்தாக வேண்டும். கீழ்கண்ட முறைகளை முயற்சி செய்து பார்ப்போம். முதலில் குழந்தைகள் திருந்த வேண்டும் என்றால் அவர்களுக்கு காலையில் எழுந்தவுடன் ஒரு கிளாஸ் நீர் அருந்துகின்றார்களா?

    * செல்போனை பார்க்காமல் இருக்கின்றார்களா?

    * 20 நிமிடம் உடற்பயிற்சி செய்கின்றார்களா?

    * 20 நிமிடம் மூச்சுப் பயிற்சி செய்கின்றார்களா?

    * அன்றைய நாளின் வேலைகளை குறிப்பெடுத்து செய்கின்றார்களா?

    * காலையில் குளிக்கின்றார்களா?

    * காலை உணவினை தவறாது எடுத்துக் கொள்கின்றார்களா?

    * உண்மையில் நீங்கள் சிறந்த பெற்றோர்தான். வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி என்று சொல்லிக் கொடுத்திருக்கிறீர்களா?

    * குறிக்கோள் இருக்க வேண்டும்.

    * உயர்வான, பண்பான குறிக்கோள்கள் வேண்டும்.

    * கடினமாய் உழைக்க வேண்டும்.

    * செய்யும் வேலையினை, படிக்கும் படிப்பினை விரும்பி செய்ய வேண்டும்.

    * படிப்பு, விளையாட்டு, பொழுது போக்கு, நண்பர்கள் இவைகளை முறைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

    * தகுதியானவர்களிடம் இருந்து அறிவுரை பெற வேண்டும்.

    * உடல் நலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

    * அவர்களின் மூலதனம் அவர்களின் மூளைதான். இது தெரிந்தால் அவர்கள் மனம் கண்ட கேளிக்கைகளில் மூழ்காது.

    ரத்த உறவுகளை கொல்லும் குடும்ப உறுப்பினர்கள், பாலியல் தொல்லையால் சிறுமிகளை நாசமாக்கும் சிறுவர்கள் என பயங்கரமான செய்திகளை அன்றாடம் கேள்வி படுகின்றோமே இவை அனைத்துமே மனம், புத்தி இவைகளின் கோணல்கள்தான் காரணமாகின்றன. இப்படி ஒரு வாழ்க்கை தேவையா? இது கண்டிப்பாய் ஒரு மனிதனுக்கு நிம்மதி தராது. மாற்றுவோம். அவரவரால் ஆன முயற்சியினை செய்து மாற்றுவோம். இளைய சமுதாயத்தினரின் மன நலத்தினை ஆரோக்கியமாக மாற்றுவோம். இது இல்லாமல் உடல் நலம் மட்டுமே என்பது ஓட்டை பானையில் அமிர்தம் ஊற்றுவதற்கு சமம். எனவே முயற்சிப்போம்! மாற்றுவோம்!!

    • குழந்தைகள் நாம் இயக்கும் வெறும் இயந்திரமல்ல.
    • பெற்றோரும் குழந்தைகளை மதிப்புடன் நடத்த வேண்டியது அவசியம்.

    குழந்தைகளை அடித்து வளர்க்க வேண்டும், தவறு செய்யும் குழந்தைகளை கடுமையான முறையில் கண்டிக்க வேண்டும் என்பது தவறான வழிமுறை. குழந்தைகளின் மனநிலையைப் புரிந்துகொண்டு அதற்கேற்ற முறையில், அவர்களது தவறுகளைச் சுட்டிக்காட்ட வேண்டும்.

    குழந்தைகள் நாம் இயக்கும் வெறும் இயந்திரமல்ல. அதனால் அவர்களை பெற்றோரும் மதிப்புடன் நடத்த வேண்டியது அவசியம். குழந்தைகளை எதிர்காலத்தில் நல்ல மனிதர்களாக உருவாக்க, அவர்களுடைய ஒத்துழைப்பு மிகவும் அவசியம். அவர்களுடைய மனநிலையை புரிந்துகொண்டு, எது சரி? எது தவறு? என்பதை சரியான முறையில் சொல்ல வேண்டும்.

    குழந்தைகளின் தேவைகள் என்னவென்று புரிந்துகொண்டு, அவர்களை சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும். அதே நேரத்தில் குழந்தைகளின் தேவைகள் நியாயமானது அல்ல என்பதைப் புரிந்து கொண்ட பெற்றோர், அதை அவர்களிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

    'இந்த விஷயத்தை செய்யாதே' என்று உத்தரவு போடுவதைவிட, அந்தச் செயல் ஏன் தவறானது என்பதை அவர்களுக்குப் புரியவைக்க வேண்டும். இதையெல்லாம் உனக்கு சொல்லிப் புரிய வைக்க முடியாது என்று தப்பிப்பது ஆரோக்கியமான அணுகுமுறை அல்ல. உனக்கு காய்ச்சலாக இருக்கிறது. அதனால், ஐஸ்க்ரீம் இப்போது சாப்பிட வேண்டாம். காய்ச்சல் குணமானவுடன் ஐஸ்க்ரீம் நானே வாங்கித் தருகிறேன். சரியா? என்பதுபோல் அவர்களுக்குப் புரிய வையுங்கள். அதுதான் சரியான வழிமுறை.

    குழந்தைகளுக்கு அவர்களுடைய பெற்றோர்தான் முதல் நாயகர்கள். பெற்றோருடைய நடவடிக்கைகள் மற்றும் அவர்கள் அமைத்து கொடுக்கும் சூழலில் இருந்தே குழந்தைகள் பல புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்கிறார்கள். இதனால் தாய், தந்தை இருவருமே குழந்தைகளுக்கு நல்ல முன்மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும்.

    குழந்தைகளின் குறைகளைச் சுட்டிக் காட்டும் முன்னர் அவர்கள் செய்கிற நல்ல விஷயங்களை முதலில் பாராட்டும் பழக்கத்தைப் பின்பற்ற வேண்டும். மனதாரப் பாராட்டுவதன் மூலம் குழந்தைகளுடைய மனநிலை மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் இருக்கும்.

    குழந்தைகளின் எதிர்காலத்துக்குத் தேவையான கல்வி, விளையாட்டு போன்ற பலவற்றையும் உருவாக்கிக் கொடுப்பதோடு நற்பண்புகள் நிறைந்த நல்ல மனிதனாக வளர்க்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது. எனவே, குழந்தைகளின் மனநிலை அறிந்து செயல்பட வேண்டும்.

    'பெற்றோர் தங்கள் குழந்தைகளைத் திருத்தி நல்வழிப்படுத்த வேண்டும் என்பதற்காகவும், அவர்களுடைய எதிர்காலம் நன்றாக அமைய வேண்டும் என்பதற்காகவும் சில சமயங்களில் கடுமையான முறையில் நடந்துகொள்கிறார்கள்.

    • குழந்தைகளின் கேள்விகளுக்கு பெரியவர்கள் நிதானமாக பதில் அளிக்க வேண்டும்.
    • குழந்தைகளுக்கு எழும் பல சந்தேகங்களுக்கான தீர்வுகளை எளிதாக புரிய வைக்க முடியும்.

    குழந்தைகள் எல்லாவற்றையும் விளக்கமாகத் தெரிந்துகொள்ள விரும்புவார்கள். அனைத்தையும் அறிந்துகொள்ளும் ஆர்வம் அவர்களிடம் அதிகமாக இருக்கும். அதனால் தொடர்ந்து கேள்விகள் கேட்டுக்கொண்டே இருப்பார்கள். குழந்தைகள் கேட்கும் சில கேள்விகளுக்கு பெற்றோரிடமும், பெரியவர்களிடமும் பதில்கள் இருக்காது. அதை சமாளிப்பதற்காக பலர் குழந்தைகளை கேள்வி கேட்க விடாமல் அடக்கி விடுவார்கள்.

    இது தவறான அணுகுமுறை என்று உளவியலாளர்கள் தெரிவிக்கிறார்கள். குழந்தைகளின் கேள்விகளுக்கு பெரியவர்கள் நிதானமாக பதில் அளிக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் தயக்கம் இல்லாமல் கேள்விகள் கேட்டு, தங்களது ஆளுமைப் பண்பை வளர்த்துக் கொள்வார்கள். பெற்றோர் பதில் அளிக்கத் தயங்கும் சில கேள்விகளை குழந்தைகள் கேட்கும்போது, அவற்றை எவ்வாறு எதிர்கொள்வது என்பதைப் பற்றி இங்கே பார்ப்போம்.

    பிறப்பு மற்றும் இறப்பு: குழந்தைகள் அடிக்கடி பெற்றோரிடம் கேட்பது, "நான் எப்படி பிறந்தேன்? அல்லது ஒருவர் இறந்தால் என்ன நடக்கும்?" என்பதுதான். இந்த கேள்விகளை பல பெற்றோர்கள் தவிர்க்க நினைப்பார்கள். ஆனால், குழந்தைகளுக்கு கட்டாயம் தெரிய வேண்டிய வாழ்வியல் விஷயங்களில் இதுவும் ஒன்று. பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு பிறப்பு மற்றும் இறப்பு பற்றிய கருத்தைப் புரிந்து கொள்ள உதவும் ஒரு அணுகுமுறையை ஏற்படுத்த வேண்டும். பிறப்பும், இறப்பும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் மற்றும் அடிப்படை வாழ்க்கை சுழற்சி என்பதை அவர்கள் புரிந்துக்கொள்ளும் வகையில் தெரியப்படுத்த வேண்டும்.

    உடற்கூறியல்: அறிமுகமானவர்கள் மற்றும் பிற பாலினத்தவர்களுடன் தொடர்பு கொள்ளும்போது, அவர்களின் உயரம், எடை, நிறம் போன்றவற்றில் உள்ள வேறுபாடுகள் குறித்த கேள்விகளை குழந்தைகள் அடிக்கடி கேட்பார்கள். இதற்கு விளக்கப் படங்கள், கதைகள் மற்றும் குழந்தைகளின் வயதுக்கு ஏற்ற திரைப்படங்களைப் பயன்படுத்தி, பாலினம் பற்றிய கருத்தை எளிமையாகவும், அறிவியல் ரீதியாகவும் தெரிவிக்கலாம். இந்த வகையில், குழந்தைகளுக்கு எழும் பல சந்தேகங்களுக்கான தீர்வுகளை எளிதாக புரிய வைக்க முடியும்.

    மதம்: குழந்தைகளுக்கு அதிக சந்தேகம் எழும் விஷயம் கடவுள், மதம், சம்பிரதாயங்கள் பற்றியதுதான். இது சார்ந்த கேள்விகளுக்கு பதிலளிப்பது பல பெற்றோருக்கு சவாலானதாக இருக்கும். இந்தியா போன்ற பன்முக கலாசாரம் கொண்ட நாட்டில், குழந்தைகளுக்கு பல்வேறு மத பின்னணியைச் சேர்ந்த நண்பர்கள் இருப்பார்கள். அவர்களை சமமாக பாவிக்கும் வகையில், கதை சொல்லி புரியவைக்கலாம். அடிப்படை மத நூல்கள் மூலம் ஒவ்வொரு மதத்தின் தனித்துவத்தைப் பற்றி பெற்றோர்கள், குழந்தைகளுக்கு கற்பிக்கலாம். இருப்பினும், இதில் 'மனிதநேயம்' என்பதைத்தான் முதலில் போதிக்க வேண்டும். குழந்தைகள் அனைவரையும் சமமாகவும், அன்புடனும், மரியாதையுடனும் நடத்த வேண்டும் என்பதை கற்பிப்பது அவசியம்.

    நிதி: வளர்ச்சியின் ஆரம்பத்தில், குழந்தைகள் பல்வேறு சமூகப் பின்னணியில் உள்ள நபர்களைச் சந்திக்கின்றனர். சாலையில் யாசகம் கேட்கும் நபர்கள் முதல் செல்வந்தர்கள் வரை, பலவிதமான பொருளாதார சூழலில் வாழும் நபர்களை பார்க்கிறார்கள். இது தொடர்பாக அவர்கள் கேள்வி கேட்கும்போது, யாரையும் ஏற்றத்தாழ்வுடன் அணுகாமல், சமநிலை நோக்குடன் அணுகச் செய்யும் வகையில், பதில் அளிக்க வேண்டும்.

    • குழந்தைகள் சாப்பிடுவதற்கு அடம் பிடிக்க பல உளவியல் காரணங்கள் உள்ளன.
    • அம்மாக்களுக்கு பெரிய சவாலான விஷயம் என்னவென்றால் குழந்தைகளை சாப்பிட வைப்பதுதான்.

    வீட்டில் இருக்கும் அம்மாக்களுக்கு பெரிய சவாலான விஷயம் என்னவென்றால் குழந்தைகளை சாப்பிட வைப்பதுதான் புதுப்புது ரெசிபிக்களை விதம் விதமாக செய்து கொடுத்தாலும் குழந்தைகளிடம் இருந்து வரும் பதில் என்னவோ வேண்டாம் என்பது தான். குழந்தைகள் சாப்பிடுவதற்கு அடம் பிடிக்க பல உளவியல் காரணங்கள் உள்ளன. அவற்றை சரி செய்ய சில வழிகள் உள்ளன. எந்த உணவையும் குழந்தைகளுக்கு தகுந்த முறையில் தகுந்த சுவையில் கொடுத்தால் கட்டாயம் அடம் பிடிக்கும் குழந்தைகளை கூட சமர்த்தாக உண்ண வைக்க முடியும்.

    * குழந்தைகள் தேவையற்ற நொறுக்கு தீனியை அடிக்கடி உண்பதால் வயிறு நிரம்பிய உணர்வை பெறுகின்றனர். இதனால் உணவு சாப்பிட்ட மறுக்கின்றனர். ஆதலால் நொறுக்கு தீனியின் பக்கம் கவனம் செலுத்தாத வகையில் பார்த்து கொள்ள வேண்டும்.

    * குழந்தைகளுக்கு எந்த நேரத்தில் பசி எடுக்கிறது என்பதை உணர்ந்து அதற்கேற்ப அவர்களுக்கு உணவு வழங்க வேண்டும். பசி எடுககம் நேரத்தில் உணவு கொடுத்தால் முழுமையாக சாப்பிடுவார்கள்.

    * குழந்தைகளுக்கு பிடித்த உணவு அளிப்பது மட்டுமல்ல குழந்தைகளை கவரும் வகையில் பல நிறங்களிலும் வடிவங்களிலும் சாப்பிடும் தட்டுகள் இருக்கின்றன. அதில் உணவு வழங்கினால் சாப்பிடும் ஆர்வம் மேலோங்கும்.

    * குழந்தைகள் தங்களுக்கு பிடித்த உணவை வெறுக்கிளார்கள் என்றால் அதற்கு பல காரணங்கள் இருக்கும். வயிற்றில் ஏதேனும் தொந்தரவு இருந்தாலும் உணவு உண்ண முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகக்கூடும். எனவே அதற்கான காரணத்தை கண்டறிய வேண்டும்

    * உடலுழைப்பு ஏதுமின்றி வீட்டிற்குள்ளேயே குழந்தைகளை அடைத்து வைக்காமல் களைத்து போகும் வரை குழந்தைகளை ஓடி, ஆடி விளையாட ஆனுமதியுங்கள். உடல் களைத்து போனால் தானாக பசி எடுத்து உணவை ஆர்வமாக உண்ணுவார்கள்.

    * உணவை எப்போதும் ஒரே மாதிரியாக வழங்கினால் குழந்தைகளுக்கு அதன் மேல் வெறுப்புதான் உண்டாகும். அதனால் கொடுக்கும் உணவை புதுமையாகவும், அவர்களுக்கு. பிடித்த வகையில் அழகுபடுத்தியும் வழங்கலாம்.

    * எப்போதும் அவர்களிடம் ஓரே மாதிரியாக அன்பு காட்டுங்கள். உணவு ஊட்டும் போது மட்டும் கொஞ்சி பேசாதீர்க்ள். ஏனென்றால் அந்த கரிசன நேரத்தை நீட்டித்து கொள்ள நீண்ட நேரம் எடுத்து கொள்வார்கள்.

    * குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்ணுங்கள். இடையிடையே அந்த உணவின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் சிறு சிறு விஷயங்களையோ கதைகளையோ குழந்தைகளுக்கு கூறிக்கொண்டே உணவு கொடுங்கள். இது குழந்தைகளுக்க குடும்பத்தின் மீதான அன்பை அதிகரிக்கும். கதை கேட்கும் ஆர்வத்தில் உணவையும் முழுமையாக உண்பார்கள். தவிர குழந்தைகளுக்கு மொபைல், டிவி பழக்கத்தை குறைத்து நல்ல உறக்கத்தை கொடுக்க வேண்டும். அது செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும்.

    * இது போன்று சிறுசிறு யுத்திகளை கையாண்டாலே குழந்தைகளை சாப்பிட வைப்பது வெகு சுலபம்.

    • வளரிளம் பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும்.
    • வீட்டில் பிள்ளைகளுக்கு ஒழுக்கத்தைக் கற்றுத் தர வேண்டும்.

    பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்வது அவசியமான ஒன்றாகிவிட்ட இச்சூழலில், மிகவும் சவாலான ஒரு விஷயம் உண்டென்றால் அது டீன் ஏஜ் பிள்ளைகளை சமாளிப்பதுதான். தனிமைக்குடித்தனங்களால் ஏற்பட்டு விட்ட பெரியவர்களின் வெற்றிடம் பிள்ளைகளை அதிகம் தனிமைப்படுத்திவிடுகிறது.

    கவர்ந்திழுக்கும் டிஜிட்டல் உலகமோ பல வலைகளை விரித்து வைத்து, அவர்களை விழுங்க காத்திருக்கிறது. இவற்றில் இருந்தெல்லாம் நம் டீன் ஏஜ் பிள்ளைகளை பார்த்துக் கொள்வது எப்படி? பக்குவமாக கையாள்வது எப்படி? என்பது பற்றி பார்க்கலாம்.

    ''டீன் ஏஜ் பிள்ளைகளை கையாள்வது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல. ஆனால், கற்றுக் கொள்ளக் கூடிய ஒரு கலை. வளரிளம் பருவம் என்பது இரண்டும்கெட்டான் பருவம். சிறுவயது வரை ஆண் பிள்ளைகளும் பெண் பிள்ளைகளும் ஒருவருக்கொருவர் எலியும் பூனையுமாக இருப்பார்கள். வளரிளம் பருவத்தில் ஆண் பெண் இருபாலருக்கும் எதிர்பாலினத்தின் மீது ஈர்ப்பு வர ஆரம்பிக்கும். அது அந்த வயதிற்கான உயிரியல் இயல்பு.

    இதன் காரணமாக அந்த வயதில் நன்றாக உடுத்திக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். தன்னிடம் இருக்கும் ஆடைகள் துவங்கி, தான் வைத்திருக்கும் சின்னச்சின்னப் பொருட்கள் கூட உயர்ந்ததாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள்.

    தனக்கென்று ஒரு அறை இருக்க வேண்டும் தன்னுடைய அறையை இப்படி இப்படியெல்லாம் வைத்துக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் சிந்திக்க ஆரம்பிப்பார்கள். அப்போதுதான் தன் நண்பர்கள் தன்னிடம் மரியாதையாக இருப்பார்கள் என்று நினைக்கக் கூடிய வயது அது.

    உடல்ரீதியான உணர்வு ரீதியான குழப்பங்கள், அச்சங்கள், கேள்விகள் எல்லாம் அவர்களுக்குள் அப்போது உச்சகட்டத்தில் இருக்கும்.

    அதுமட்டுமில்லாமல் அந்த வயதில் தான் அவர்கள் தன் சுயமரியாதைக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பிப்பார்கள். மற்றவர்கள் தனக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்றும் ஆசைப்படுவார்கள். அதிலும் அம்மாவிடம் பிள்ளைகள் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள்.படிப்பு, வேலை மற்றும் எதிர்காலம் குறித்தும் அவர்களுக்கு பயமும் குழப்பமும் இருக்கும்.

    இதனால் டீன் ஏஜ் காலத்தில் படிப்பு என்பதே பிள்ளைகளுக்கு மன அழுத்தம் தருவதாக இருக்கிறது. நிறைய படிக்க, எழுத வேண்டி இருக்கிறது. அத்துடன் நிறைய வேலை பளு (ப்ராஜெக்ட்ஸ், அசைன்மென்ட்ஸ்), புத்தக சுமை என கூடுதல் தொல்லைகள் வேறு. டீன் ஏஜ் என்பது அவர்களின் வாழ்வை சரியாக கட்டமைப்பதற்கான காலகட்டம். எனவே, இந்த வயதில் சரியான வளர்ப்பு முறை என்பது அவசியம்.

    வளரிளம் பிள்ளைகளை கண்காணிக்கவும் வேண்டும். அதே சமயம் அவர்கள் எதிர்பார்க்கும் சில சுதந்திரங்களை வழங்கவும் வேண்டும். பள்ளி விட்டு வந்ததும் டியூஷன் போன்ற வகுப்புகளுக்குச் செல்வார்கள். அவர்கள் எந்த நேரத்திற்கு எந்த வகுப்பிற்குச் செல்கிறார்கள். எத்தனை மணிக்கு அது முடியும் என்ற அடிப்படைத் தகவல்கள் பெற்றோருக்குத் தெரிந்திருக்க வேண்டும். சரியான நேரத்திற்கு போய் சரியான நேரத்திற்கு வீடு திரும்புகிறார்களா என கண்காணிக்க வேண்டும்.

    எப்போது பார்த்தாலும் வெளியே உணவுகளை வாங்கித் தராமல் எளிமையான உணவாக இருந்தாலும் வீட்டிலேயே சுவையாக செய்து தர வேண்டும். அதை அவர்கள் சாப்பிடுகிறார்களா என பார்க்க வேண்டும். ஜங் ஃபுட் எனப்படும் உணவு வகைகள் அவர்களின் உணர்வுகளை மாற்றி அமைக்கும். பிராய்லர் கோழிக்கறியும் கொடுக்காதீர்கள்.

    பிள்ளைகள் நம்மிடம் அன்பான பார்வை, ஸ்கின் டச் இதையெல்லாம் எதிர்பார்ப்பார்கள். இதுவும் பாசத்தை வெளிப்படுத்தும் ஒரு வகை. அவர்களிள் கைகளைப் பிடித்துக் கொண்டு அவர்கள் கண்களை பார்த்து புன்னகையுடன் இன்று பள்ளியில் என்ன நடந்தது என கேட்கலாம். தலையை தடவிக்கொடுக்கலாம். தோள்களை தட்டிக் கொடுக்கலாம். அந்த அன்பு மிகுந்த நிமிடங்களுக்காக அவர்கள் காத்திருப்பார்கள். தங்கள் உணர்வுகளை உங்களிடம் கொட்டுவதற்காக அவர்கள் உங்கள் வரவை எதிர்பார்க்க ஆரம்பிப்பார்கள்.

    முக்கியமாக எந்நேரமும் தொலைக்காட்சி மற்றும் அலைபேசி என மூழ்க விடாமல், உறவினர்களுடன் பழக விட வேண்டும். நம் உறவினர்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும. பக்கத்து அக்கத்து மனிதர்களுடன் பழக விட வேண்டும். அப்போது தான் இயல்பான குணங்கள் வளரும். மற்ற பிள்ளைகளுடன் விளையாட விட வேண்டும்.

    ஏதாவது விளையாட்டு வகுப்புகளில் சேர்த்து விடலாம். இதனால் அவர்களுக்கு உடல்நலம் குறித்த கவனம் வரும். மனம் வேறு சிந்தனைகளில் சிதறாது. காலையில் சீக்கிரம் எழ வேண்டும், சரியான உணவுப்பழக்கத்தைப் பின்பற்ற வேண்டும் என விளையாட்டானது ஒழுக்கத்தைக் கற்றுத் தரும் ஒரு விஷயமாகவும் இருக்கும்.

    அதேபோல் விளையாட்டில் தோற்றுப் போனால் ஏற்றுக் கொள்ளும் தன்மையும் ஏற்படும். வெற்றி, தோல்வி எல்லாம் வாழ்க்கையில் சகஜம் என்பதை உணர ஆரம்பிப்பார்கள். விளையாட்டினால் மனம் உற்சாகமடையும். இந்த வயதில் அடிக்கடி ஏற்படும் கோபம் குறையும். யதார்த்தமாக மற்றவர்களுடன் பழகக் கற்றுக் கொள்வார்கள்.

    பள்ளிகளில் ஒழுக்கத்திற்கான வகுப்புகள் எல்லாம் பெரும்பாலும் தற்போது நடத்தப் பெறுவதில்லை. அதனால் நாம்தான் வீட்டில் பிள்ளைகளுக்கு ஒழுக்கத்தைக் கற்றுத் தர வேண்டும். நாம் ஒரு சமூகத்தில் வாழ்கிறோம். எனவே, இந்த சமூகம் பற்றிய பொறுப்பு கலந்த உணர்வு இருக்க வேண்டும். இந்த சமூகம் முழுக்க பல நூறு கண்கள் நம்மை கண்காணித்துக் கொண்டே இருக்கும் என்பதை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.

    திட்டிக் கொண்டிராமல், புலம்பாமல் அன்பாக அரவணைத்து உங்கள் அக்கறையை அவர்களுக்கு உணர்த்துங்கள். அதிகமாக நாம் அவர்களை பழித்துக் கொண்டே வந்தோமானால் நம்மை பழி வாங்குவதாக நினைத்து அவர்களே அவர்களை கஷ்டப்படுத்திக் கொள்வார்கள். ஒரு விஷயத்தைப் பேசி பேசி சண்டையிடாதீர்கள்.

    எல்லோரிடமும் அவர்களை பற்றி குறைக் கூறிக் கொண்டிருக்காதீர்கள். சதா நாம் அவர்களை குறை சொல்லிக் கொண்டே இருந்தால் ஒரு சில பிள்ளைகள் தங்கள் உடலில் பிளேடால் அறுத்துக் கொள்வது போன்று தங்களை தாங்களே வருத்திக் கொள்வார்கள். சரியான அரவணைப்பு இல்லாதபோது வெளியுலகிலும் அதாவது பள்ளி, கல்லூரிகளிலும் ஏதாவது பிரச்னை ஏற்படும்போது தற்கொலை போன்ற விபரீதமான முடிவெடுப்பார்கள்.

    பிள்ளைகளாக இருந்தாலும் அவர்கள் சொல்வதையும் காது கொடுத்துக் கேளுங்கள். அதை அவர்கள் மிகவும் விரும்புவார்கள். அவர்கள் சொல்லும் விஷயம் சரியாக இருக்கும் பட்சத்தில் அதனை ஏற்றுக் கொள்ளுங்கள். நம் பிள்ளைகளாகவே இருந்தாலும் அவர்களும் ஒரு உயிர். இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு உயிரும் மதிப்பு மிக்கது. எனவே, அவர்களின் வார்த்தைகளும் சரியாக இருக்கும் பட்சத்தில் மதிப்புக் கொடுங்கள். அது மிகவும் அவசியம்.

    ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்? கோபப்படுகிறார்கள்? வாதிடுகிறார்கள் என அவர்களின் பிரச்னைகளை உற்றுக் கவனித்து அலசி ஆராய்ந்து பாருங்கள். பாக்கெட் மணி என்ற பெயரில் நிறைய பணத்தை அவர்கள் கைகளில் புழங்க விடாதீர்கள்.

    நாம் வீட்டில் இல்லாமல், அவர்களை பார்த்துக்கொள்ளாமல் வேலைக்குப் போகிறோம் என்ற குற்றவுணர்வின் காரணமாக அவர்கள் கேட்டதெல்லாம் வாங்கி தருவது கேட்கும் போதெல்லாம் பணத்தை அள்ளித் தருவது எல்லாம் வேண்டாம். அவர்களின் எதிர்காலத்திற்காகத்தான் வேலைக்குப் போகிறோம் என்பதை அவர்களுக்குப் புரிய வையுங்கள்.

    அவர்களின் நண்பர்கள், தோழிகள் யார்? யார்? என தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். முடிந்தால் அவர்களின் பின்புலத்தையும் தெரிந்து கொள்ளுங்கள். ஏனெனில் தீய சகவாசம் அவர்களை எந்த தீய எல்லைக்கும் கொண்டு விட்டுவிடும். சில வீடுகளில் அதிகப் பாசம் காட்டுகிறேன் என்று அதிகமாக பொத்தி பொத்தி வைப்பார்கள். நாய்க்குட்டியை எந்நேரமும் தடவிக் கொடுப்பது போல செய்வார்கள். அதுவும் தவறு. அது அவர்களை சோம்பேறியாக்கலாம். கோழைகளாக்கலாம். அதனால் அவர்களையும் சில பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள செய்ய வேண்டும்.

    வீடு என்பது நிம்மதியான விஷயம். எங்கு சென்றாலும் என் அப்பா அம்மாவை நோக்கி, வீடு நோக்கி நேரத்திற்கு நான் சென்று விட வேண்டும் என்று நினைக்கும் அளவிற்கு வீட்டை உற்சாகமாக வைத்திருங்கள். குழந்தைகளை வாரம் அல்லது மாதத்திற்கு ஒருமுறை வெளியே அழைத்துச் செல்லலாம். பிள்ளைகளின் முன் பெற்றவர்கள் சண்டையிடாதீர்கள். கோபதாபங்கள் இருந்தாலும் பிள்ளைகளின் முன் கடுமையான வார்த்தைகள், விவாதங்கள் வேண்டாம். அதேபோல் அந்தரங்கமும் அப்படித்தான்.

    எல்லாவற்றிற்கும் மேல் அவர்கள் மீது நம்பிக்கை வையுங்கள். கண்காணிப்பது வேறு. நம்பிக்கை இன்மை வேறு. அவர்கள் செய்யும் எல்லா விஷயத்தையும் சந்தேகக்கண் கொண்டு பார்க்காதீர்கள். அதே சமயம் அவர்களை கவனித்துக் கொண்டும் இருங்கள். விட்டுப்

    பிடியுங்கள். பட்டுப்புழு வண்ணத்துப்பூச்சியாவது அழகான ரகசியமான ஒரு செயல்.

    அது போல் பல பல மாற்றங்கள் அவர்கள் மனதிலும் உடலிலும் ஏற்படும் இந்த காலகட்டம் மிக அழகானது. ஆச்சரியமானது. அவர்களை நாம் இந்த சமயத்தில் அழகாக அனுசரனையாக பார்த்துக் கொள்வது மிகவும் அவசியமானது. அவர்கள் நம் பிள்ளைகள் தானே. அவர்களை நாம் நேசிக்காமல் வேறு யார் நேசிப்பார்கள்.

    பெற்றவர்களாகிய நாம் அவர்களின் சின்ன சின்ன தவறுகளை நாம் பொறுத்துக் கொள்ளா விட்டால் யார் பொறுப்பார்கள். அந்த தவறுகளில் இருந்தும் அவர்களை மீட்டெடுக்க வேண்டியதும் நம் பொறுப்புதானே. நாமும் இந்த வயதைக் கடந்து வந்திருப்போம். நாமும் சில தவறுகளை புரிந்திருப்போம் அதனை உணர்ந்து அவர்கள் மீது நம்பிக்கை வைத்து அன்பு செலுத்துங்கள். உங்கள் நம்பிக்கையை காப்பாற்றுவார்கள்!''

    ×