என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Paneer Gravy"

    • உயர்தரப் புரதத்தின் சிறந்த சைவ மூலமாக பனீர் உள்ளது.
    • 'மீன் பொளிச்சது' பாணியில், சைவப் பிரியர்களுக்காக பிரத்யேகமாக செய்யப்படுவதுதான் 'பனீர் பொளிச்சது'.

    இந்திய சைவ உணவுகளில், பனீரின் முக்கியத்துவத்தை யாராலும் மறுக்க முடியாது. புரதச்சத்தின் இருப்பிடமான இந்தப் பாலாடைக்கட்டி, பலவகை குழம்புகள் மற்றும் வறுவல்களில் சுவையைக் கூட்டுகிறது. அந்த வரிசையில் கேரளாவின் பிரபலமான 'மீன் பொளிச்சது' பாணியில், சைவப் பிரியர்களுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்படுவதுதான் 'பனீர் பொளிச்சது' என்கிற வித்யாசமான சைவ உணவு. வாழை இலையின் தனித்துவமான நறுமணம், சின்ன வெங்காயம் மற்றும் பாரம்பரிய மசாலாப் பொருட்களின் கலவையில், பனீர் மென்மையாக வேகவைக்கப்பட்டுப் பரிமாறப்படும் இந்த உணவு, சுவை மற்றும் ஆரோக்கியத்தின் சரியான கலவையாகும். 'பனீர் பொளிச்சது' செய்முறையை, பிரபல செஃப் கதிர்வேல் நமக்காக செய்து காட்டியுள்ளார். 


    மசாலா தயாரித்தல்

    * ஒரு தவாவில் தேங்காய் எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, உடைத்த உளுந்து, வெந்தயம் சேர்த்து வெடிக்க விடவும். வெடித்ததும், நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து, பொன்னிறமாக மாறாமல் ஓரளவுக்கு வேக வைக்கவும்.

    * நறுக்கிய சின்ன வெங்காயத்தைச் சேர்த்து, சீக்கிரம் வதங்க உப்பு சேர்த்து, மூடிபோட்டு 30-40 வினாடிகள் வேக வைக்கவும். சின்ன வெங்காயம் வதங்கியதும், 2 டீஸ்பூன் தண்ணீர் சேர்த்து, மசாலா பைண்டிங் கன்சிஸ்டன்சிக்கு வர நன்கு கிளறவும்.

    * இந்த நிலையில், நறுக்கிய கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். கருவேப்பிலையை முழுதாகப் போடாமல் நறுக்கிச் சேர்ப்பது நல்லது.

    * பிறகு தனியா தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து, ஒரு எலுமிச்சம்பழம் பிழிந்து மசாலாவை மீண்டும் மூடிபோட்டு 30 வினாடிகள் வேக வைக்கவும்.

    * மசாலா ரெடி ஆனதும், அடுப்பை அணைத்து, சிறிது சூடு ஆறிய பிறகு, வாசனைக்காக ஒரு சிட்டிகை சீரகப்பொடி மற்றும் காரத்துக்காக ஒரு சிட்டிகை மிளகுப் பொடி சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

    பனீர் பொளிச்சது செய்முறை

    * வாழை இலையைச் சுத்தம் செய்து, இலையின் மேல் சிறிதளவு ஏற்கனவே நாம் தயாரித்து வைத்துள்ள மசாலாவைத் தடவவும்.

    * பிறகு வாழை இலையின் மேல், 2 மி.மீ தடிமனில் நறுக்கிய பனீர் துண்டை வைத்து, அதன் இருபுறமும் மசாலாவை மீண்டும் நன்றாகத் தடவவும்.

    * மசாலா தடவிய பனீரை வாழை இலையில் வைத்துப் பொட்டலமாகச் சுற்றவும்.

    * பிறகு ஒரு தவா அல்லது தோசைக் கல்லைச் சூடாக்கி, அதில் சற்றே எண்ணெய் விட்டு, வாழை இலையால் சுற்றப்பட்ட பனீரை வேக வைக்கவும்.

    * மடிப்புப் பகுதி முதலில் கீழே இருக்கும்படி வைத்து, இலை ஒட்டிப் பிடிப்பதற்காக, மூடி போட்டு ஒரு பக்கம் 2 நிமிடங்கள் வேக வைக்கவும்.

    * பின்பு திருப்பிப் போட்டு, அடுத்த பக்கமும் 2 நிமிடங்கள் வேக வைக்கவும். இப்போது வாழை இலை கிரிஸ்பியாக மாறி பனீர் பொளிச்சது தயாராகி விடும்.

    * பனீர் பொளிச்சதைச் சூடாகப் பரிமாறவும். வாழை இலையைத் திறந்து சாப்பிடும் போது வரும் வாசம் கூடுதல் சுவையைக் கொடுக்கும். கூடவே, ஆனியன் ரிங்ஸ் மற்றும் தேவைப்பட்டால் எலுமிச்சை சாறு சேர்த்துச் சாப்பிடலாம்.


    ப்ளேட்டிங் செய்யப்பட்டுள்ள பனீர் பொளிச்சது

    ஆரோக்கிய நன்மைகள்

    * பனீர் உயர்தரப் புரதத்தின் சிறந்த சைவ மூலமாகும். தசை வளர்ச்சி, திசுக்கள் பழுது பார்த்தல் மற்றும் ஒட்டுமொத்த உடல் பராமரிப்புக்கு இது சிறந்தது. குறிப்பாக இதில் கால்சியம் நிறைந்துள்ளதால், எலும்புகள் மற்றும் பற்களுக்கு வலு சேர்க்கும். மேலும், இது பசியைக் குறைத்து, உடல் எடையைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் இதில் உள்ளதாகவும் அறியப்படுகிறது.

    * சின்ன வெங்காயத்தில் உள்ள சத்துக்கள் இதயம் மற்றும் நோயெதிர்ப்புச் சக்திக்கு நன்மை பயக்கும். இது உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பை வழங்குவதோடு, மூளையின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் நல்லது. குறிப்பாக தக்காளி சேர்க்காமல் சின்ன வெங்காயத்தை மட்டும் பயன்படுத்துவது இந்த உணவின் பாரம்பரிய முறையையும், ஆரோக்கியத்தையும் கூட்டுகிறது.

    * வாழை இலையில் சமைத்துச் சாப்பிடும்போது, அதில் உள்ள பாலிஃபீனால் என்னும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உணவில் கலந்து, அதன் மூலம் ஆரோக்கியப் பலன்கள் கிடைப்பதாக நம்பப்படுகிறது. மேலும், இலையின் வாசம் உணவுக்குச் சிறந்த நறுமணத்தையும் சுவையையும் சேர்க்கிறது.

    இந்த சுவையான மற்றும் ஆரோக்கியமான 'பனீர் பொளிச்சது' நிச்சயம் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு, குறிப்பாகக் குழந்தைகளுக்கு பிடித்தமான ஒரு உணவாக அமையும்.

    • பனீரை ஒரே மாதிரி சமைத்து போரடித்துவிட்டதா?
    • இன்று உங்கள் வீட்டில் பனீர் செய்ய திட்டமிட்டுள்ளீர்களா?

    உங்கள் வீட்டில் உள்ளோர் பனீரை விரும்பி சாப்பிடுவார்களா? இதனால் உங்கள் வீட்டில் பனீரை அடிக்கடி சமைப்பீர்களா? எப்போதும் நீங்கள் பனீரை ஒரே மாதிரி தான் சமைப்பீர்களா? பனீரை ஒரே மாதிரி சமைத்து போரடித்துவிட்டதா? இன்று உங்கள் வீட்டில் பனீர் செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அப்படியானால் இந்த முறை பனீரைக் கொண்டு குருமா செய்யுங்கள். இந்த பனீர் குருமா சப்பாத்தி, பூரி,

    நாண் போன்றவற்றுடன் சாப்பிட அற்புதமாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

    தேவையான பொருட்கள்:

    பனீர் - 300 கிராம்

    பெரிய வெங்காயம் - 2

    இஞ்சி - 1 அங்குல அளவு

    பச்சை மிளகாய் - 4

    பாதாம் -12

    முந்திரி - 12

    கசகசா - 2 டீஸ்பூன்

    சோம்பு- 1 டீஸ்பூன்

    பட்டை - 1 துண்டு

    கிராம்பு -2

    ஏலக்காய் - 1

    பிரியாணி இலை -1

    அன்னாசி பூ - 2

    தயிர் - கால் கப்

    பால் -1 கப்

    பிரஷ் கிரீம் - 1 டேபிள் ஸ்பூன்

    கசூரி மேத்தி - 1 டீஸ்பூன்

    கொத்த மல்லித்தழை (பொடிதாக)

    நறுக்கியது) -2 டேபிள் ஸ்பூன்

    நெய் - 2 டேபிள் ஸ்பூன்

    எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

    செய்முறை:

    பனீரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிகொள்ள வேண்டும். பாலை காய்ச்சி ஆற வைக்க வேண்டும். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை துண்டுகளாக நறுக்கி மிக்சியில் போட்டு அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். பாதாமை சூடான நீரில் போட்டு 4 மணி நேரம் ஊறவைத்து மேல் தோலை நீக்கிக்கொள்ள வேண்டும். முந்திரி மற்றும் கசகசாவை வெந்நீரில் போட்டு கால் மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின்னர் பாதாம், முந்திரி, கசகசா மூன்றையும் மிக்சியில் போட்டு விழுதாக அரைக்கவும்.

    அடுப்பில் வாணலியை வைத்து 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பனீரை போட்டு பொன்னிறமாக வறுக்க வேண்டும். அதை தனியாக ஒரு பிளேட்டில் எடுத்து ஆறவைக்கவும். மீண்டும் வாணலியை அடுப்பில் வைத்து மீதமிருக்கும் எண்ணெய்யை ஊற்றி சூடானதும் அதில் சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை. அன்னாசி பூ ஆகியவற்றை போட்டு தாளிக்க வேண்டும்.

    அதன் பிறகு அதில் வெங்காய விழுதைப் போட்டு பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்க வேண்டும். பின்னர் பாதாம் மற்றும்

    முந்திரி விழுதை சேர்த்து இரண்டு நிமிடங்களுக்கு வதக்க வேண்டும். இந்த கலவை நன்றாக வதங்கியவுடன் அதில் தயிர் சேர்த்து கிளறவும். பின்னர் அதில் பாலை ஊற்றி 5 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும். பின்பு அதனுடன் பனீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

    கடைசியாக அந்த கலவையில் பிரஷ் கிரீம் சேர்த்து கலக்க வேண்டும். கசூரி மேத்தி மற்றும் கொத்த மல்லி தழையை அதன் மேலே தூவி இறக்கினால் சுவையான நவாபி பனீர் தயார்.

    ×