search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Organize 3 squads"

    • கொலை செய்யப்பட்ட வாலிபர் காங்கேயம் அடுத்த மேட்டுக்காட்டு வலசு பகுதியை சேர்ந்த அஜித்குமார்(23) என்பதுதெரிய வந்தது.
    • அஜித்குமாரை காணவில்லை என அவர்களது பெற்றோர் நல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் கல்லம்பாளையம் நொய்யல் ஆற்றங்கரை ஓரம் உள்ள காட்டுப் பகுதியில் துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்கு சோதனை செய்தபோது காட்டுப்பகுதியில் பயன்படுத்தப்படாத கட்டிடத்தின் உள்ளே அழுகிய நிலையில் வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். கை, கால்கள் கட்டப்பட்டு கத்தியால் குத்தியதில் ரத்தம் வெளியேறிய நிலையில் இறந்து கிடந்தார். அருகில் மது பாட்டில்கள் கிடந்தது.

    இதையடுத்து உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அப்போது கொலை செய்யப்பட்ட வாலிபர் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த மேட்டுக்காட்டு வலசு பகுதியை சேர்ந்த அஜித்குமார்(23) என்பதும் இவர் ராக்கியாபாளையம் பகுதியில் தங்கியிருந்து பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அஜித்குமாரை காணவில்லை என அவர்களது பெற்றோர் நல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். அவர்கள் கொடுத்த அங்க அடையாளத்தின் படி ஆய்வு செய்தபோதுதான் கொலை செய்யப்பட்டது அஜித்குமார் என தெரியவந்துள்ளது. இந்த கொலை தொடர்பாக மூன்று தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். நண்பர்களுடன் மது குடிக்க சென்றபோது அங்கு தகராறு ஏற்பட்டு கொலை நடந்ததா? அல்லது கொடுக்கல் வாங்கலில் கொலை நடந்துள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விசாரணையின் போதுகொலை செய்யப்பட்ட அஜித்குமார் மீது போக்சோ வழக்கு இருப்பது தெரியவந்துள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காங்கேயம் பகுதியில் உள்ள இரண்டு வயது குழந்தையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான புகாரின் பேரில் அஜித்குமாரை போக்சோ வழக்கில் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்த அஜித்குமார் திருப்பூர் ராக்கியாபாளையம் பகுதியில் தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்துள்ளார்.

     இதனிடையே சிறையில் தன்னுடன் தங்கி இருந்த நண்பர்கள் திருப்பூர் வந்திருப்பதாகவும், அவர்களை பார்த்துவிட்டு வருவதாக வீட்டில் உள்ளவர்களிடம் அஜித் குமார் கூறி சென்றுள்ளார். எனவே சிறையில் இருந்து வெளியே வந்த அஜித்குமாரின் நண்பர்கள் யார் யார்? அவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? எதற்காக அஜித்குமாரை பார்க்க வந்துள்ளனர்என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. கோவை சிறைக்கு சென்றுள்ள தனிப்படை போலீசார் சிறையில் இருந்து சமீபத்தில் வெளியே வந்த நபர்கள் யார் யார் என்பது குறித்த பட்டியலை தயார் செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்தநிலையில் கொலை சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மூட்டையில் இருந்து கயிற்றை அவிழ்த்து பிரித்து பார்த்தபோது அதில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் அழுகிய நிலையில் கிடந்தது தெரியவந்தது.
    • இந்நிலையில் கொலையாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பெயரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    ஈரோடு:

    ஈரோடு மோளகவுண்டம் பாளையம் ஜீவானந்தம் வீதியில் செல்லும் சாக்கடையில் இருந்து நேற்று இரவு பயங்கர துர்நாற்றம் வீசியது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தனர்.

    அப்போது சாக்கடையில் ஒரு மூட்டை கிடந்தது. அதிலிருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் உடனடியாக ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தலைமையில் ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார், இன்ஸ்பெக்டர்கள் சோமசுந்தரம், தீபா, கோமதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

    பின்னர் சாக்கடையில் கிடந்த மூட்டையை வெளியே எடுத்தனர். அப்போது அந்த மூட்டை கயிற்றால் கட்டப்பட்டிருந்தது.

    மூட்டையில் இருந்து கயிற்றை அவிழ்த்து பிரித்து பார்த்தபோது அதில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் அழுகிய நிலையில் கிடந்தது தெரியவந்தது. பிணம் அழுகிய நிலையில் இருந்ததால் உடனடியாக அடையாளம் காண முடியவில்லை.

    மர்மநபர்கள் கொலை செய்துவிட்டு சாக்கு மற்றும் போர்வையால் உடலை கட்டி கொண்டுவந்து சாக்கடையில் வீசி சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    மோப்பநாய் ஜெர்ரி சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது. சிறிது தூரம் சென்று விட்டு நின்றது. இதைத்தொடர்ந்து இறந்தவரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பிணம் கிடந்த பகுதியில் ஒரு சில வீடுகள் மட்டுமே உள்ளன.

    மேலும் இருட்டாக இருப்பதால் மர்மநபர்கள் கொலை செய்த பிணத்தை கொண்டு வந்து வீசி சென்று இருக்கலாம் என்று கோணத்தில் விசாரணை நடத்தப்படுகிறது.

    எனவே ஜீவானந்தம் வீதிக்கு செல்ல வேண்டிய கரூர் ரோடு, கல்யாணசுந்தரம் வீதி உள்ளிட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான வீடியோக்களை போலீசார் பார்வையிட்டு வருகிறார்கள்.

    கொலை செய்யப் பட்டவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்ன காரணத்துக்காக கொலை செய்யப்பட்டார்? போன்ற விவரங்களை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் கொலையாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பெயரில் டவுன் டி.எஸ்.பி ஆனந்தகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சோமசுந்தரம், கோமதி, தீபா ஆகிய கொண்ட 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    மேலும் ஈரோடு. திருப்பூர், கோவை, சேலம், நாமக்கல், கரூர் போன்ற பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில் காணாமல் போனவர்கள் பற்றிய விவரங்களை சேகரித்து வருகின்றனர்.

    ×