search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு
    X

    கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு

    • மூட்டையில் இருந்து கயிற்றை அவிழ்த்து பிரித்து பார்த்தபோது அதில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் அழுகிய நிலையில் கிடந்தது தெரியவந்தது.
    • இந்நிலையில் கொலையாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பெயரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    ஈரோடு:

    ஈரோடு மோளகவுண்டம் பாளையம் ஜீவானந்தம் வீதியில் செல்லும் சாக்கடையில் இருந்து நேற்று இரவு பயங்கர துர்நாற்றம் வீசியது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தனர்.

    அப்போது சாக்கடையில் ஒரு மூட்டை கிடந்தது. அதிலிருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் உடனடியாக ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தலைமையில் ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார், இன்ஸ்பெக்டர்கள் சோமசுந்தரம், தீபா, கோமதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

    பின்னர் சாக்கடையில் கிடந்த மூட்டையை வெளியே எடுத்தனர். அப்போது அந்த மூட்டை கயிற்றால் கட்டப்பட்டிருந்தது.

    மூட்டையில் இருந்து கயிற்றை அவிழ்த்து பிரித்து பார்த்தபோது அதில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் அழுகிய நிலையில் கிடந்தது தெரியவந்தது. பிணம் அழுகிய நிலையில் இருந்ததால் உடனடியாக அடையாளம் காண முடியவில்லை.

    மர்மநபர்கள் கொலை செய்துவிட்டு சாக்கு மற்றும் போர்வையால் உடலை கட்டி கொண்டுவந்து சாக்கடையில் வீசி சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    மோப்பநாய் ஜெர்ரி சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது. சிறிது தூரம் சென்று விட்டு நின்றது. இதைத்தொடர்ந்து இறந்தவரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பிணம் கிடந்த பகுதியில் ஒரு சில வீடுகள் மட்டுமே உள்ளன.

    மேலும் இருட்டாக இருப்பதால் மர்மநபர்கள் கொலை செய்த பிணத்தை கொண்டு வந்து வீசி சென்று இருக்கலாம் என்று கோணத்தில் விசாரணை நடத்தப்படுகிறது.

    எனவே ஜீவானந்தம் வீதிக்கு செல்ல வேண்டிய கரூர் ரோடு, கல்யாணசுந்தரம் வீதி உள்ளிட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான வீடியோக்களை போலீசார் பார்வையிட்டு வருகிறார்கள்.

    கொலை செய்யப் பட்டவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்ன காரணத்துக்காக கொலை செய்யப்பட்டார்? போன்ற விவரங்களை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் கொலையாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பெயரில் டவுன் டி.எஸ்.பி ஆனந்தகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சோமசுந்தரம், கோமதி, தீபா ஆகிய கொண்ட 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    மேலும் ஈரோடு. திருப்பூர், கோவை, சேலம், நாமக்கல், கரூர் போன்ற பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில் காணாமல் போனவர்கள் பற்றிய விவரங்களை சேகரித்து வருகின்றனர்.

    Next Story
    ×