என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ooty heavy rain"

    • சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் தண்ணீரில் மாட்டிக்கொண்டன.
    • தொடர்ந்து மழை வெள்ளம் பல பகுதிகளில் வடியாததால் பொதுமக்கள் பாதிப்படைந்தனர்.

    ஊட்டி:

    தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அவற்றை ஒட்டிய பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இதனால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

    இதன்படி நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை மிதமான காலநிலை நிலவிய நிலையில் மதியத்திற்கு பிறகு கனமழை கொட்டி தீர்த்தது.

    மதியம் 12 மணிக்கு தொடங்கிய கனமழை 2 மணி வரை கொட்டியது. ஊட்டியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

    இந்த மழையால் மத்திய பஸ் நிலையம், அரசு தாவரவியல் பூங்கா, தலைகுந்தா, பிங்கர்போஸ்ட் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கி சாலை முழுவதும் காட்டாற்று வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடியது.

    அதேபோல் ரெயில் நிலைய பாலத்தில் தண்ணீர் தேங்கி நின்றதால் சுற்றுலா பயணிகள் படகு இல்லம் செல்ல முடியாமல் மாற்றுப்பாதையில் சென்றனர்.

    ரெயில் நிலைய காவல் நிலையத்தை மழைநீர் சூழ்ந்தது. இதனால் அங்கு பணியில் இருந்த காவலர்கள் வெளியேறினர். ரெயில்வே பாலத்தில் பஸ்கள் மற்றும் ஒரு சில கார்கள் தண்ணீரில் தத்தளித்தபடி சென்றன.

    ரெயில் நிலைய வளாகத்தில் உள்ள வாகன நிறுத்தத்தில் தண்ணீர் தேங்கி நின்றதால் குளம் போல் காட்சியளித்தது. அந்த பகுதியில் இருந்து வெளியேறிய மழைநீர் சாலையே தெரியாத அளவிற்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    மேலும் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் தண்ணீரில் மாட்டிக்கொண்டன. இதனால் சுற்றுலாப் பயணிகள் வாகனங்களை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. தொடர்ந்து மழை வெள்ளம் பல பகுதிகளில் வடியாததால் பொதுமக்கள் பாதிப்படைந்தனர்.

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடந்து வருகிறது. நேற்று கொட்டிய மழையையும் பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் குடைபிடித்த படி மலர் கண்காட்சியை கண்டு ரசித்தனர்.

    ஊட்டியில் பலத்த மழை பெய்ததால் அறுவடைக்கு தயாராக இருந்த வாழைத்தார்கள் சேற்றில் விழுந்து நாசம் அடைந்தன.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் 2-வது நாளாக நேற்றும் கனமழை வெளுத்து வாங்கியது. உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமான ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா, பைக்காரா நீர் வீழ்ச்சி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்தகிரி ஆகிய பகுதிகளில் விடியவிடிய கனமழை பெய்தது. இதனால் கடுங்குளிர் நிலவி வருகிறது. அடர்ந்த மேக மூட்டமும் நிலவுவதால் வாகனங்கள் முகப்பு விளக்கை ஒளிர விட்டபடி சென்றன. பள்ளி, கல்லூரி மாற்றும் வேலைக்கு செல்வோர் கம்பளி ஆடை அணிந்து சென்றனர். பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    நொண்டிமேடு, குன்னூர், பர்லியார் ஆகிய பகுதிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் குன்னூர் பகுதி நிலச்சரிவு ஏற்படும் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரம் அதிகமாக உள்ளதால் இந்த பகுதி மக்கள் நிலச்சரிவு அபாயத்தில் தூக்கத்தை தொலைத்து விடியவிடிய அச்சத்தில் இரவை கழித்தனர். இதில் பலியார் பகுதி ஏற்கனவே நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியாகும். குன்னூர் சாலைகள் மழைவெள்ளத்தால் அரிப்பு ஏற்பட்டுள்ளது. சாலையோரங்களின் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் கூறினர். தொடர்ந்து 3 நாட்கள் கனமழை நீடிக்கும் என்பதால் மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் வாழை விவசாயம் முக்கியப்பங்கு வகிக்கிறது. விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் கதளி, நேந்திரன், பூவன், செவ்வாழை மற்றும் பிற வாழை ரகங்களை பயிரிட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. மழை காரணமாக மேட்டுப்பாளையம் அருகே யுள்ள வெள்ளிப்பாளையம், வச்சினம்பாளையம், சிறுமுகை, லிங்காபுரம், பாலப்பட்டி, வேடர்காலனி ஆகிய பகுதிகளில் உள்ள வாழைத்தோட்டங்களில் உள்ள வாழைகள் பாதியில் முறிந்து நாசம் அடைந்தன. அறுவடைக்கு தயாராக இருந்த வாழைத்தார்கள் சேற்றில் விழுந்து நாசம் அடைந்தன.

    இந்த சூறாவளிக்காற்றில் 50 ஆயிரம் வாழைகள் நாசம் அடைந்திருக்கும் என்று தெரிகிறது.

    ஊட்டியில் இன்று காலை இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்ததால் படகுசவாரி ஒத்தி வைக்கப்பட்டது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் இன்று காலை ஊட்டி படகு இல்லத்தில் படகுபோட்டி நடத்த ஏற்பாடுகள் நடைபெற்றன. படகுசவாரியில் பங்கேற்ற போட்டியாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

    போட்டி நடத்த முயன்றபோது திடீரென இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சூறாவளியுடன் பேய் மழை பெய்ததால் படகுசவாரி ஒத்தி வைக்கப்பட்டது. தொட்டபெட்டா சிகரம் அடர்ந்த பனியால் மூடப்பட்டதால் சுற்றுலா பயணிகள் அதனை காணமுடியாமல் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

    பலத்த மழை வெளுத்து வாங்கியதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

    ×