search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "NOTA Review"

    ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா - மெஹ்ரீன் பிர்சாடா நடிப்பில் வெளியாகி இருக்கும் `நோட்டா' படத்தின் விமர்சனம். #NOTAReview #VijayDevarakonda #MehreenPirzada
    தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கிறார் நாசர். அவரது மகன் விஜய் தேவரகொண்டா, அரசியலில் ஈடுபாடு இல்லாமல் வெளிநாட்டில் வீடியோ கேம் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.

    சிறு வயதிலேயே தாயை இழந்த விஜய் தேவரகொண்டா, ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்தநாளுக்கு, இந்தியா வந்து தனது அம்மா பெயரில் இருக்கும் ஆசிரமத்திற்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த ஆசிரமத்தை சத்யராஜ் நிர்வகித்து வருகிறார். அவரது மகளான மெஹ்ரின் பிர்சாடா பத்திரிகை ஒன்றில் நிருபராக இருக்கிறார்.



    இப்படி இருக்க, தனது பிறந்தநாளுக்காக இந்தியா வரும் விஜய் தேவரகொண்டா, தனது பிறந்தநாளை கருணாகரன் மற்றும் யாஷிகா ஆனந்துடன் கொண்டாடி வருகிறார். இந்த நிலையில், நாசர் அழைப்பின் பேரில் அவசரமாக அழைத்துச் செல்லப்படும் விஜய் தேவரகொண்டா இரவோடு இரவாக தமிழகத்தின் புதிய முதல்வராக அறிவிக்கப்படுகிறார்.

    நாசர் சம்பந்தப்பட்ட வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதால், ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள எண்ணிய நாசர், சாமியார் ஒருவரின் அறிவுறுத்தலின் பேரில் தனது மகனையே முதலமைச்சராக்குகிறார். நீதிமன்றத்தில் வழக்கு முடியும் வரை விஜய் தேவரகொண்டா வெளியில் வரவேண்டாம் என்றும் நாசர் அறிவுறுத்துகிறார்.

    இந்த நிலையில், நாசருக்கு எதிராக அந்த வழக்கின் பின்னணி திரும்ப, அவர் சிறையில் அடைக்கப்படுகிறார். நாசர் கைது செய்யப்படுவதால், தமிழ்நாட்டில் கலவரம் மூள்கிறது. அந்த கலவரத்தில் உயிரிழப்புகளும் ஏற்டுகிறது. இந்த நிலையில், செய்வதறியாது தவிக்கும் விஜய், மக்களை சந்திக்க வெளியில் வருகிறார்.



    அப்போது பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. அதில் ஆக்ரோஷமாக பேசும் விஜய், கலவரத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கிறார். அவரது ஆக்ரோஷமான உத்தரவு அவருக்கு ரவுடி முதலமைச்சர் என்ற பெயரை வாங்கிக் கொடுக்கிறது. எதிர்கட்சி தலைவரின் மகளான சஞ்சனா நடராஜன், கல்லூரியில் படிக்கும் போதே விஜய் ரவுடி தான் என்று பிரசாரம் செய்து, அவருக்கு எதிராக சில சதிதிட்டங்களையும் தீட்டுகிறார்.

    இதற்கிடையே ஜாமீனில் வெளியில் வரும் நாசர், குண்டுவெடிப்பில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். வேண்டா வெறுப்பாக அரசியலில் நுழைந்து தற்போது மக்களுக்காக உழைக்க வேண்டும், நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டும் என்ற எண்ணத்தில் அரசியலில் கவனம் செலுத்துகிறார் விஜய். அவரை பதவியில் இருந்து நீக்கிவிட்டு, டம்மியான ஒருவரை பதவியில் உட்கார வைக்க நாசர் முடிவு செய்கிறார். ஒருகட்டத்தில் இது அப்பா, மகன் அரசியல் சண்டையாக மாறுகிறது.



    கடைசியில், அப்பா, மகனுக்கு இடையே நடந்த அரசியல் போரில் யார் வெற்றி பெற்றார்? தனக்கு எதிராக வந்த சூழ்ச்சிகளை விஜய் தேவரகொண்டா முறியடித்தாரா? முதலமைச்சராக நீடித்தாரா? தனது பழைய வாழ்க்கைக்கே திரும்பினாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    தெலுங்கில் முன்னணி நாயகனாக வலம் வரும் விஜய் தேவரகொண்டா, தமிழில் அறிமுகமாகும் முதல் படத்திலேயே நல்ல அடித்தளத்தை அமைத்திருக்கிறார் என்று சொல்லலாம். முதலமைச்சர் பதவி பற்றி எந்த அனுபவமுமின்றி வேண்டா வெறுப்பாக அதில் உட்காரும் அவர், தனக்கு எதிராக வரும் சிக்கல்களை எதிர்நோக்கும் காட்சிகளிலும், தமிழ் வசனங்களை பேசும் போதும் சிறப்பாக நடித்து ஸ்கோர் செய்திருக்கிறார்.

    மெஹ்ரீன் பிர்சாடாவுக்கு சொல்லும்படியாக பெரிய கதாபாத்திரம் இல்லை என்றாலும், கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். மற்றொரு நாயகியான சஞ்சனா நடராஜன் அரசியல் களத்தில் தீயை பற்றவைக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.



    படத்திற்கு முக்கிய பலம் சத்யராஜ் மற்றும் நாசரின் நடிப்பு. சத்யராஜ் அவரது உண்மையான தோற்றத்தில் வந்து ரசிக்க வைக்கிறார். படத்தின் ஓட்டத்திற்கும், திருப்புமுனைக்கும் நாசர் முக்கிய பங்காற்றுகிறார். அவரது கதாபாத்திரத்தை மெருகேற்றியிருக்கிறார். கருணாகரன் ஒரு சில காட்சிகளில் வருகிறார்.

    பொதுவாக அரசியல் சம்பந்தப்பட்ட கதைகளை எடுக்க ஒரு துணிச்சல் வேண்டும். அனைவரும் அரசியல் சம்பந்தப்பட்ட கதைகளை கையில் எடுப்பதில்லை. அப்படி கையில் எடுத்தவர்கள் அனைவரும் வெற்றி பெற்றவர்கள் என்றும் கூறமுடியாது. அந்த வகையில் தைரியமாக அரசியல் கதையை இயக்கியுள்ள ஆனந்த் சங்கருக்கு பாராட்டுக்கள். படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாகவும், இரண்டாவது பாதி கொஞ்சம் நீளமாகவும் இருக்கிறது. திரைக்கதையில் இரண்டாவது பாதியின் நீளத்தை குறைத்திருக்கலாம்.

    சாம்.சி.எஸ் பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். பாடல்களும் கேட்கும் ரகம் தான். சந்தான கிருஷ்ணன் ரவிச்சந்திரனின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது.

    மொத்தத்தில் `நோட்டா' ஒருமுறை வாக்களிக்கலாம். #NOTAReview #VijayDevarakonda #MehreenPirzada

    ×