search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "normal bus"

    மாதாந்திர பஸ் பாஸ் கட்டணத்தை ரூ.1300 ஆக உயர்த்தக் கூடாது என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #MKStalin #TNTransport #Bus

    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் மாதாந்திர பேருந்து பயண அட்டைக்கான கட்டணத்தை 1000 ரூபாயிலிருந்து 1300 ரூபாயாக உயர்த்த அ.தி.மு.க அரசு ஆலோசித்து வருவது கண்டனத்திற்குரியது.

    சாதாரண ஏழை, எளிய நடுத்தர மக்களின் அன்றாட பயணத்திற்கு மிகவும் பயனுள்ள இந்தப் பேருந்துப் பயண அட்டைக் கட்டணத்தை உயர்த்துவது, போக்குவரத்துக் கழகங்களுக்கு மேலும் இழப்புகளை ஏற்படுத்தி, அரசு போக்கு வரத்துக் கழகங்களை திவாலாக்கிட அ.தி.மு.க அரசு மேற்கொள்ளும் முயற்சியாகவே தெரிகிறது.

    பேருந்து வாங்குவதில் ஊழல், உதிரி பாகங்கள் வாங்குவதில் ஊழல், 2543 கோடி ரூபாய்க்கு பணிமனைகள் அடமானம் என்று முழுவதும் ஊதாரித் தனமான நிர்வாகத்தை நடத்தி வரும் அ.தி.மு.க அரசு, கட்டண உயர்வு ஒன்றே தங்களுக்குத் தெரிந்த நிர்வாகத் திறமை என்ற ரீதியில் செயல்பட்டு வருவது, அரசுப் போக்குவரத்தை மட்டுமே சார்ந்திருக்கும் நலிந்த பிரிவினரின் வாங்கும் சக்தியைப் பற்றிய உணர்வின்மையைக் காட்டுகிறது.

    2011-ல் ஆட்சிக்கு வந்தவுடன் 17.11.2011 அன்றே 50 சதவீத பேருந்துக் கட்டணத்தை உயர்த்தியதால் 2 கோடி பயணிகள் அரசுப் பேருந்துகளை பயன்படுத்தி வந்த நிலை, 1 கோடியே 80 லட்சம் பயணிகளாக குறைந்தது.

    பிறகு 19.1.2018 அன்று மேலும் 50 சதவீதம் பேருந்துக் கட்டணத்தை உயர்த்தியதால், அரசுப் பேருந்துகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 1 கோடியே 50 லட்சமாகக் குறைந்து விட்டது.

    உரிய நேரத்திற்கு வராத பேருந்துகள், ஒரே நேரத்தில் அடுத்தடுத்து செல்லும் பேருந்துகள் என்று அ.தி.மு.க அரசின் பல்வேறு நிர்வாகக் குழப்பங்களால் அரசுப் பேருந்துகளை மக்கள் பயன்படுத்துவது அ.தி.மு.க ஆட்சியில் படிப்படியாகக் குறைந்து வருவதிலிருந்து ஏழை, எளியவர்களின் போக்குவரத்து வசதிகளை அ.தி.மு.க அரசு எப்படி சீர்குலைத்து வருகிறது என்பது தெரிகிறது.



    மேலும், பேருந்துகளை நாட்டுடைமை ஆக்கிய சோ‌ஷலிச அடிப்படையைத் தகர்த்து, மீண்டும் பேருந்துகளை தனியார் வாசம் தாரை வார்த்திட வழி ஏற்படுத்திக் கொடுப்பதைப் போலவும் தெரிகிறது.

    இப்போதுகூட முதல்- அமைச்சர் கொடியசைத்து துவக்கி வைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக, புதிதாக வாங்கப்பட்ட 448 பேருந்துகள் இன்னும் இயக்கப்படாமல் “வாரண்டி” காலத்தையும் இழக்கும் அபாயத்தில் பணிமனைகளில் நின்று கொண்டிருக்கின்றன.

    ஆயிரம் ரூபாய் மாதாந்திரப் பேருந்து பயண அட்டையை 1300 ரூபாயாக உயர்த்தத்துடிக்கும் அரசு, தலா 30 லட்சம் செலவில் வாங்கப்பட்ட இந்த 448 பேருந்துகளை இயக்காமல் நிறுத்தி வைத்திருப்பது கேடு கெட்ட நிர்வாகத்திற்கு, கண்ணெதிரே காணக் கிடைத்த உதாரணமாக விளங்குகிறது.

    போக்குவரத்துக் கழகங்களைச் சீரமைக்க, கழகத்தின் சார்பில் அமைக்கப்பட்ட குழு ஒரு அறிக்கையினைத் தயார் செய்து, அதன் பரிந்துரைகளை எதிர்க் கட்சித் தலைவர் என்ற முறையில் நானே நேரில் சென்று முதல்-அமைச்சரிடம் கொடுத்தும், அந்த பரிந்துரைகளை எல்லாம் உரிய பரிசீலனைக்கு உட்படுத்தாமல் கிடப்பில் போட்டுள்ள அ.தி.மு.க அரசு, ஊழலை எப்படி செய்வது, எப்படியெல்லாம் மக்களை வதைக்கும் கட்டண உயர்வுகளை அறிவிப்பது என்ற எண்ணத்துடனேயே எப்போதும் செயல்பட்டு வருகிறது.

    ஏற்கனவே, 100 சதவீதத்திற்கும் மேல் பேருந்து கட்டணங்களை உயர்த்தி ஏழை எளிய மக்களை, அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களை, வியாபாரிகளை, வணிகர்களை, தினக்கூலித் தொழிலாளர்களை தாங்க முடியாத துயரத்திலும், சுமையிலும் ஆழ்த்தி மகிழும் ஒரு “சேடிஸ்ட்” மனப்பான்மை கொண்ட அரசாக இருப்பது மிகவும் வேதனையளிக்கிறது.

    போக்குவரத்துக் கழகங்களை லாபகரமாக இயக்குவதற்குத் தேவையான ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை எடுக்காமல், கட்டண உயர்வு மட்டுமே எங்களுக்குக் கைவந்த கலை என்று அ.தி.மு.க அரசு செயல்படுவதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஆகவே, மாதாந்திர பேருந்து பயண அட்டை கட்டணத்தை, தற்போதுள்ள 1000 ரூபாயிலிருந்து 1300 ரூபாயாக அதிகரிக்கும் முயற்சியை, அ.தி.மு.க அரசு உடனடியாக கைவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். #MKStalin #TNTransport #Bus

    மாநகர பஸ்களில் மாதாந்திர பஸ் பாஸ் கட்டணம் ரூ.1300 ஆக உயர்த்த போக்குவரத்து கழக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். #TNTransport #Bus #FuelPriceHike

    சென்னை:

    டீசல் விலை உயர்வால் மாநகர போக்குவரத்து கழகத்துக்கு கடுமையான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    கடந்த ஜனவரி மாதம் கடும் எதிர்ப்புக்கு இடையே பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது. சென்னையில் 3,200 மாநகர பஸ்கள் ஓடுகின்றன. நாள்தோறும் 40 முதல் 45 லட்சம் பயணிகள் பயணம் செய்கிறார்கள்.

    பஸ் கட்டண உயர்வுக்கு முன் மாநகர போக்குவரத்து கழகத்துக்கு நாள் ஒன்றுக்கு ரூ.2.85 கோடி வருவாய் கிடைத்தது. பஸ் கட்டணம் உயர்த்திய பின்பு எதிர்பார்த்ததை விட வருவாய் ரூ.2.3 கோடியாக குறைந்தது. கட்டணம் உயர்த்தப்பட்டதால் பயணிகள் மின்சார ரெயில், இரு சக்கர வாகனம் போன்ற மாற்று பயணங்களுக்கு மாறியதால் இந்த இழப்பு ஏற்பட்டது.

    தற்போது மெல்ல மெல்ல வருவாய் சரிவில் இருந்து மாநகர பஸ்கள் மீண்டு வருகிறது. ஷேர் ஆட்டோ கட்டண உயர்வு, பெட்ரோல் விலை உயர்வால் மீண்டும் மாநகர பஸ்களுக்கு திரும்பியுள்ளனர்.

    இதற்கிடையே மாநகர பஸ்களில் மாதாந்திர பஸ் பாஸ் கட்டணத்தை உயர்த்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது. தற்போது மாதாந்திர பாஸ் ரூ.1000-க்கும் வழங்கப்பட்டு வருகிறது.


    இது வழக்கமான பயண கட்டணத்தை விட குறைத்து வழங்கப்பட்டு வருகிறது. இதனால் நாள்தோறும் மாநகர பஸ்களில் பயணம் செய்வோர் பாஸ்களை எடுத்து பயணம் செய்கிறார்கள். இந்த பாஸ்களில் குளிர்சாதன பஸ்கள் தவிர மற்ற பஸ்களில் விருப்பம்போல் பயணம் செய்யலாம்.

    பஸ் பாஸ் வழங்கு வதாலும் மாநகர போக்கு வரத்து கழகக்துக்கு இழப்பு ஏற்படுகிறது. இதனால் பஸ் பாஸ் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. தினசரி பாஸ் ரூ.50-ஐ விட மாதாந்திர பாஸ் ரூ.1000வழங்குவதில்தான் அதிக இழப்பு ஏற்படுகிறது. இதனால் மாதாந்திர பாஸ் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    தற்போது மாதந்தோறும் 1,20,000 பேர் மாதாந்திர பாஸ் பயன்படுத்துகிறார்கள். மாதாந்திர பாஸ் கட்டணத்தை உயர்த்துவதன் மூலம் கணிசமான வருவாய் கிடைக்கும் என்பதால் மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.1000-ல் இருந்து ரூ.1,300 ஆக உயர்த்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

    இந்த யோசனைக்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மாதாந்திர பஸ் பாஸ் கட்டணத்தை உயர்த்தினால் பயணிகள் எண்ணிக்கை மேலும் குறைந்து விடும் என்று எச்சரித்துள்ளனர்.

    இதுபற்றி மாநகர போக்கு வரத்து கழக உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, “மாதாந்திர சீசன் கட்ட ணத்தை உயர்த்துவது தொடர்பாக அரசுதான் முடிவு செய்ய வேண்டும். அதுபோன்ற எந்த தகவலும் அரசிடம் இருந்து மாநகர போக்குவரத்து கழகத்துக்கு வரவில்லை என்று தெரிவித்தனர். #TNTransport #Bus #FuelPriceHike

    கட்டண உயர்வால் பயணிகள் ஷேர் ஆட்டோக்களை தவிர்த்து மீண்டும் மாநகர பஸ்களுக்கு திரும்பி உள்ளனர். #TNTransport #Bus #FuelPriceHike

    சென்னை:

    மாநகர போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் இயங்குவதாலும், ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றவும் பஸ் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டது. இதனால் பயணிகள் எண்ணிக்கை குறைந்தது. மாநகர பஸ்களில் பயணிகள் கூட்டம் இல்லாமல் சில வாரம் ஓடியது.

    பஸ் பயணிகள் இரு சக்கர வாகனங்களில் அலுவலகம் மற்றும் கல்லூரிகளுக்கு சென்றனர். பலர் ஷேர் ஆட்டோக்களுக்கும், மின்சார ரெயிலுக்கும் மாறினார்கள்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 3,200 மாநகர பஸ்கள் 800 வழித்தடங்களில் இயக்கப்பட்டன. நாள் தோறும் 35 லட்சம் பேர் பயணம் செய்தனர். கட்டண உயர்வுக்கு பின் பயணிகள் எண்ணிக்கை 20 முதல் 25 லட்சமாக குறைந்தது. சுமார் 10 லட்சம் பயணிகள் மாநகர பஸ்களை தவிர்த்து மின்சார ரெயில் மற்றும் இருசக்கர வாகனங்களை பயன்படுத்த தொடங்கினர்.

    அதன்பிறகு போக்குவரத்து கழக அதிகாரிகள் பயணிகளை கவர பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தனர். டீலக்ஸ், எக்ஸ்பிரஸ் பஸ்களை சாதாரண கட்டண பஸ்களாக மாற்றி அவற்றின் எண்ணிக்கை அதிகரித்தனர். இது தொடர்பாக டீலக்ஸ் பஸ்களில் சாதாரண கட்டணம் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டன. மேலும் குறைந்த கட்டணம் ரூ.5 என்றும் மாற்றப்பட்டது. இதன் பயனாக கடந்த 4 வாரத்தில் 80 ஆயிரம் பயணிகள் வரை மீண்டும் மாநகர பஸ்களை பயன்படுத்த தொடங்கியுள்ளதாக மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் அன்பு ஆபிரகாம் தெரிவித்தார்.

     


    அவர் மேலும் கூறுகையில், மாநகர பஸ்களில் சாதாரண கட்டணம் என ஒட்டப்பட்டு வருகிறது. குறைந்த கட்டணம் ரூ.5 என்றும் அனைத்து பஸ்களிலும் ஒட்டப்படுகிறது. எனவே மாநகர பஸ்களில் பயணிகள் எண்ணிக்கை மீண்டும் பழைய இலக்கை அடையும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

    இதற்கிடையே ஷேர் ஆட்டோக்களில் டீசல் விலை உயர்வை காரணம் காட்டி ரூ.5, ரூ.10, ரூ.15 என கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த பயணிகள் ஷேர் ஆட்டோக்களை தவிர்த்து மீண்டும் மாநகர பஸ்களுக்கு திரும்பி உள்ளனர்.

    மேலும் பெட்ரோல் விலை உயர்வால் இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தி வந்தவர்களும் மாநகர பஸ்களில் பயணம் செய்ய தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக மாநகர பஸ்களில் பயணிகள் எண்ணிக்கை மேலும் 10 ஆயிரம் பேர் வரை அதிகரித்துள்ளது.

    இதுபற்றி ஷேர் ஆட்டோவை பயன்படுத்தி வந்த பயணி ஒருவர் கூறும்போது, ‘‘முன்பு மாநகர பஸ் கட்டணமும், ஷேர் ஆட்டோ கட்டணமும் இணையாக இருந்தது. தற்போது பஸ் கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. எனவே மாநகர பஸ்சுக்கு திரும்பி விட்டேன். மாநகர பஸ்களில் டிக்கெட் கொடுக்கிறார்கள். இதனால் கேள்வி கேட்க முடியும், ஷேர் ஆட்டோக்களில் அவர்கள் கேட்பதை கொடுத்துதான் ஆக வேண்டும் என்றார்.

    மாநகர பஸ்கள் சில வழித்தடங்களில் தாமதமாக வருவதால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. குறிப்பாக வில்லிவாக்கம்-பிராட்வே வழித்தடத்தில் செல்லும் பேருந்துகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும் தாங்கள் 30 முதல் 45 நிமிடம் காத்திருக்கும் நிலை ஏற்படுவதாகவும் பயணிகள் தெரிவித்தனர்.

    சில சமயம் மாநகர பஸ்கள் ஒரே வழித்தடத்தில் அடுத்தடுத்து சேர்ந்தாற்போல் மொத்தமாக வருவதாகவும் பயணிகள் புகார் கூறினர். இதுபற்றி சம்பந்தப்பட்ட டெப்போ அதிகாரிகளிடம் கேட்டபோது, போக்குவரத்து நெரிசலால் இதுபோன்ற தாமதம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். #TNTransport #Bus #FuelPriceHike

    நீண்டதூரம் செல்லக்கூடிய பகுதிகளுக்கு கட் சர்வீஸ் பஸ்கள் கூடுதலாக இயக்குவதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். #TNtransport

    சென்னை:

    சென்னை மாநகர போக்கு வரத்து கழக பஸ்கள் 83 வழித்தடங்களில் இயக்கப்படுகிறது. தினமும் 3100 பஸ்கள் சென்னை மட்டுமின்றி புறநகர் பகுதிகளான காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கும் பஸ்கள் சென்று வருகின்றன.

    நகர பேருந்துகள் 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் சென்னை மாநகர பஸ்கள் 40 கிலோ மீட்டர் தூரமுள்ள நீண்ட தூர பகுதிகளுக்கும் சென்று வருகிறது.

    பஸ் கட்டணம் உயர்வுக்கு பிறகு மாநகர பஸ்களில் பயணிகள் கூட்டம் குறைந்தது. இதனால் எதிர்பார்த்த வருவாய் கிடைக்கவில்லை. பஸ் பயணிகள் மின்சார ரெயில்களுக்கும், ஷேர் ஆட்டோவுக்கும் மாறியதால் மாநகர போக்குவரத்து கழகத்துக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    வருவாயை பெருக்குவதற்கான முயற்சிகளில் போக்குவரத்து அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் பல்வேறு வழித் தடங்களில் நீண்ட தூரத்திற்கு மாநகர பஸ்கள் இயக்கப்பட்டன.

    கடந்த சில மாதங்களாக நீண்ட தூரம் இயக்கப்பட்ட பஸ்கள் ‘கட்சர்வீஸ்’ பஸ்களாக மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

    தியாகராயநகர்- தாம்பரம் கிழக்கு இடையே இயக்கப்பட்ட ‘5ஏ’ மாநகர பஸ் தி.நகர்-மடிப்பாக்கம் வரை கட்சர்வீஸ் ஆக மாற்றப்பட்டுள்ளது.

    அதேபோல அடையார்- தாம்பரம் மேற்கு வரை சென்ற 99 வழித்தட பஸ் தூரம் குறைக்கப்பட்டு அடையார்- சோழிங்கநல்லூர், சோழிங்க நல்லூர்- தாம்பரம் மேற்கு இடையே கட்சர்வீசாக மாற்றம் செய்து இயக்கப்படுகிறது.

    இதுபோல மேலும் பல வழித்தடங்களில் கட் சர்வீஸ் அதிகரிக்கப்பட்டு இருப்பதால் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஒரே பஸ்சில் சென்று வந்த பயணிகள் கட்சர்வீஸ் அதிகரிப்பினால் 2 பஸ் மாறி செல்ல வேண்டியுள்ளது.

    கட்சர்வீஸ் மூலம் 2 டிக்கெட் பெற்று பயணம் செய்ய வேண்டும். இதனால் கட்டணம் அதிகரித்துள்ளது என்று பயணிகள் புலம்புகின்றனர்.

    தியாகராயநகரில் இருந்து தாம்பரம் கிழக்கிற்கு டீலக்ஸ் பஸ்சில் செல்ல டிக்கெட் ரூ.35 வசூலிக்கப்படுகிறது. ஆனால் கட்சர்வீஸ் பஸ் விடப்பட்டதால் 2 பஸ்களில் ஏறி பயணம் செய்வதன் மூலம் ரூ.48 செலவாகிறது என்று பயணிகள் தெரிவிக்கின்றனர்.

    இதேபோல ஏ51 தாம்பரம் கிழக்கு- ஐகோர்ட்டு, வி51 தி.நகர்-தாம்பரம் மேற்கு ஆகிய வழித்தடங்களில் இயக்கப்பட்ட மாநகர பஸ்கள் வேளச்சேரி- தாம்பரம் இடையே கட்சர்வீசாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் டிக்கெட் கட்டணம் அதிகமானதோடு நேரமும் அதிகரிக்கிறது என்று பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

    போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளுக்கு கட் சர்வீஸ் வருவாய் அடிப்படையில் இயக்கப்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

    இதுகுறித்து மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், மக்கள் நெருக்கம் அதிகமுள்ள பகுதிகளுக்கு பரீட்சார்த்த அடிப்படையில் ‘கட்சர்வீஸ்’ அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளிடம் உள்ள வரவேற்பை பொறுத்து தொடர்ந்து செயல்படுத்துவோம் என்றனர். #TNtransport

    ×