search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாநகர பஸ்களில் மாதாந்திர பஸ் பாஸ் கட்டணம் ரூ.1300 ஆக உயர்கிறது
    X

    மாநகர பஸ்களில் மாதாந்திர பஸ் பாஸ் கட்டணம் ரூ.1300 ஆக உயர்கிறது

    மாநகர பஸ்களில் மாதாந்திர பஸ் பாஸ் கட்டணம் ரூ.1300 ஆக உயர்த்த போக்குவரத்து கழக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். #TNTransport #Bus #FuelPriceHike

    சென்னை:

    டீசல் விலை உயர்வால் மாநகர போக்குவரத்து கழகத்துக்கு கடுமையான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    கடந்த ஜனவரி மாதம் கடும் எதிர்ப்புக்கு இடையே பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது. சென்னையில் 3,200 மாநகர பஸ்கள் ஓடுகின்றன. நாள்தோறும் 40 முதல் 45 லட்சம் பயணிகள் பயணம் செய்கிறார்கள்.

    பஸ் கட்டண உயர்வுக்கு முன் மாநகர போக்குவரத்து கழகத்துக்கு நாள் ஒன்றுக்கு ரூ.2.85 கோடி வருவாய் கிடைத்தது. பஸ் கட்டணம் உயர்த்திய பின்பு எதிர்பார்த்ததை விட வருவாய் ரூ.2.3 கோடியாக குறைந்தது. கட்டணம் உயர்த்தப்பட்டதால் பயணிகள் மின்சார ரெயில், இரு சக்கர வாகனம் போன்ற மாற்று பயணங்களுக்கு மாறியதால் இந்த இழப்பு ஏற்பட்டது.

    தற்போது மெல்ல மெல்ல வருவாய் சரிவில் இருந்து மாநகர பஸ்கள் மீண்டு வருகிறது. ஷேர் ஆட்டோ கட்டண உயர்வு, பெட்ரோல் விலை உயர்வால் மீண்டும் மாநகர பஸ்களுக்கு திரும்பியுள்ளனர்.

    இதற்கிடையே மாநகர பஸ்களில் மாதாந்திர பஸ் பாஸ் கட்டணத்தை உயர்த்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது. தற்போது மாதாந்திர பாஸ் ரூ.1000-க்கும் வழங்கப்பட்டு வருகிறது.


    இது வழக்கமான பயண கட்டணத்தை விட குறைத்து வழங்கப்பட்டு வருகிறது. இதனால் நாள்தோறும் மாநகர பஸ்களில் பயணம் செய்வோர் பாஸ்களை எடுத்து பயணம் செய்கிறார்கள். இந்த பாஸ்களில் குளிர்சாதன பஸ்கள் தவிர மற்ற பஸ்களில் விருப்பம்போல் பயணம் செய்யலாம்.

    பஸ் பாஸ் வழங்கு வதாலும் மாநகர போக்கு வரத்து கழகக்துக்கு இழப்பு ஏற்படுகிறது. இதனால் பஸ் பாஸ் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. தினசரி பாஸ் ரூ.50-ஐ விட மாதாந்திர பாஸ் ரூ.1000வழங்குவதில்தான் அதிக இழப்பு ஏற்படுகிறது. இதனால் மாதாந்திர பாஸ் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    தற்போது மாதந்தோறும் 1,20,000 பேர் மாதாந்திர பாஸ் பயன்படுத்துகிறார்கள். மாதாந்திர பாஸ் கட்டணத்தை உயர்த்துவதன் மூலம் கணிசமான வருவாய் கிடைக்கும் என்பதால் மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.1000-ல் இருந்து ரூ.1,300 ஆக உயர்த்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

    இந்த யோசனைக்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மாதாந்திர பஸ் பாஸ் கட்டணத்தை உயர்த்தினால் பயணிகள் எண்ணிக்கை மேலும் குறைந்து விடும் என்று எச்சரித்துள்ளனர்.

    இதுபற்றி மாநகர போக்கு வரத்து கழக உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, “மாதாந்திர சீசன் கட்ட ணத்தை உயர்த்துவது தொடர்பாக அரசுதான் முடிவு செய்ய வேண்டும். அதுபோன்ற எந்த தகவலும் அரசிடம் இருந்து மாநகர போக்குவரத்து கழகத்துக்கு வரவில்லை என்று தெரிவித்தனர். #TNTransport #Bus #FuelPriceHike

    Next Story
    ×