search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mumbai Gopineshwar Temple"

    • பழம்பெருமை வாய்ந்தது கோப்பினேஷ்வர் திருக்கோவில்.
    • 5 அடி உயரம், 5 அடி சுற்றளவு கொண்ட மிகப்பெரிய லிங்கம்.

    கோவில் தோற்றம்

    மும்பையில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள நகரம், தானே. மும்பையின் நன்கு வளர்ச்சி அடைந்த புறநகர் பகுதிகளில் ஒன்றாகவும் இந்த நகரம் திகழ்கிறது. இங்கே சுற்றிலும் கடைகளும், காய்கறி மண்டிகளும் சூழ்ந்த ஒரு நெருக்கடியான வீதியில் அமைந்திருக்கிறது, பழம்பெருமை வாய்ந்த கோப்பினேஷ்வர் திருக்கோவில்.

    கி.பி. 810-ம் ஆண்டு முதல் 1240-ம் ஆண்டு வரை, தானே பகுதியை ஆட்சி செய்த சில்ஹாரா வம்ச அரசர்கள், இந்தக் கோவிலை கட்டியதாக சொல்லப்படுகிறது. இந்த வம்சத்தைச் சேர்ந்த அரசர்கள், சிறந்த சிவ பக்தர்களாகவும் இருந்துள்ளனர். கி.பி. 1760-ம் ஆண்டு மராட்டிய மன்னர் சர் சுபேதார் ராமோஜி மகாதேவ் என்பவர், இந்த ஆலயத்தை விரிவாக்கம் செய்து கட்டியிருக்கிறார். அதன்பின்னர் 1879-ம் ஆண்டு பொதுமக்களால் இந்த ஆலயம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது.

    சந்தை வீதியில் நின்று பார்த்தால் இந்த ஆலயத்தை சுலபத்தில் கண்டுபிடிக்க முடியாது. ஏனெனில் ஆலயத்தின் நுழைவு வாசல், மிகவும் குறுகலான தலைவாசல் ஆகியவற்றை எளிதில் கண்டுபிடிக்க முடியாத வகையில் உள்ளது. சாதாரணமாக அந்த வீதியில் செல்லும்போது, அதுவும் ஒரு கடை என்பது போல் கடந்து சென்றுவிட வாய்ப்பிருக்கிறது. நன்றாக உற்று நோக்கும் போதுதான், அது ஒரு ஆலயம் என்பதையே நாம் உணர முடியும்.

    ஆனால் நுழைவுவாசலைக் கடந்து உள்ளே சென்றால், அந்த ஆலயத்தின் பிரமாண்டமே வேறு விதமாக நம்மை வியக்க வைக்கும். அந்த அளவுக்கு பரந்து விரிந்து காணப்படும் ஆலயங்களில் ஒன்றாக இந்த கோப்பினேஷ்வர் கோவில் திகழ்கிறது.

    கோவிலுக்குள் நுழைந்ததும் மிகப்பெரிய நந்தி நம்மை வரவேற்கிறது. அதை வணங்கிச் சென்றால், மகா மண்டபத்தை அடையலாம். ஆலயத்தில் நடைபெறும் அனைத்து பண்டிகைகளின் போதும், இந்த மண்டபத்தில்தான் சொற்பொழிகளும், நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.

    இந்த மண்டபத்தை ஒட்டி அமைந்துள்ள சில படிகளை இறங்கிச் சென்றால், இத்தல இறைவனான கோப்பினேஷ்வர், சிவலிங்க வடிவில் காட்சியளிக்கிறார். இந்த மூர்த்தி 5 அடி உயரம், 5 அடி சுற்றளவு கொண்ட மிகப்பெரிய லிங்கமாகும். கோவில் வளாகத்தை ஒட்டி மசுண்டா ஏரி இருக்கிறது.

    இந்த ஏரியில் இருந்து தானாகவே மேல் எழும்பி வந்த சிவலிங்கத்தைத்தான், இத்தல கருவறையில் சில்ஹாரா வம்ச அரசர்கள் பிரதிஷ்டை செய்ததாக தல வரலாறு கூறுகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்த சிவன் கோவில்களில் உள்ள லிங்கங்களில், இத்தல லிங்கமே பெரியது என்கிறார்கள்.

    இந்த கோவில் வளாகத்தில் சிவன் சன்னிதி தவிர, இன்னும் பல சிறுசிறு சன்னிதிகளும் இருக்கின்றன. அவற்றில் காளிகாதேவி, ராமர், சீதளாதேவி, உத்தரேஷ்வர் (காசி விசுவநாதர்), காயத்ரி தேவி, மாருதி, பிரம்மதேவர், தத்தாத்ரேயா் ஆகியோர் தனித்தனியாக சன்னிதி கொண்டுள்ளனர்.

    இந்த ஆலயத்தில் `ஷ்ரவண சோம்வார்' என்று அழைக்கப்படும் ஆடி மாத திங்கட்கிழமைகள், அனுமன் ஜெயந்தி, ராமநவமி போன்ற பண்டிகைகள் விசேஷ பூஜைகளுடன் கொண்டாடப்படுகின்றன.

     மகா சிவராத்திரி விழாதான் இங்கு நடைபெறும் விழாக்களில் வெகு விமரிசையாக நடைபெறும் முக்கியத்துவம் வாய்ந்த விழாவாகும். அந்த தினத்தில் கோவில் வெகு அழகாக அலங்கரிக்கப்படும். மகாசிவராத்திரி தினத்தில், தானே நகரமே விழாக்கோலம் பூண்டு, தங்களின் காவல் தெய்வமான கோப்பினேஷ்வரை வழிபட்டு நிற்கிறது.

    இந்த ஆலயத்தில் உள்ள சிவலிங்கத்திற்கு, பகல் 12 மணி வரை பக்தர்கள் தங்களின் கைகளாலேயே பால் அபிஷேகம் செய்யலாம். அதோடு வில்வ இலைகளும், மலர்களும் தூவி வழிபடலாம். 12 மணிக்கு மேல் பால் அபிஷேகம் செய்ய அனுமதி கிடையாது. மனதில் எந்தக் கவலை இருந்தாலும், இத்தல இறைவனை வழிபட்டால் அதில் இருந்து விடுபடலாம் என்பது பக்கதர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

    ×